திருக்குறள் வாழ்வு இது தானா




"குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை" என்பது பதினாறு தொகுதிகளாக மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

குன்றக்குடி அடிகளார் என்பது, இப்போது உள்ள உள்ளவரை அல்ல. இவருக்கு முன் வாழ்ந்திருந்த அருளாளரைக் குறிக்கும். அவரை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கு வாய்ப்பில்லை. நல்லவரைத் தான் இந்த தமிழுலகம் போற்றிக் கொள்ளுவது இல்லையே! விரைவில் மறந்து விடுமே! சரி, விடயத்திற்கு வருகின்றேன்.

நான் குறித்த நூல் தொகுப்பில், முதல் நூலுக்குத் தாம் வழங்கியுள்ள அணிந்துரையில், சிலம்பொலி செல்லப்பனார் குறிப்பிட்டு உள்ளதை அப்படியே இங்கே தருகின்றேன்.

"உலகில் இன்று இல்லெனிலும் உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் எல்லாம் புகழ் உருவாய் என்றென்றும் நிலைத்து இருப்பவர் குன்றக்குடி அடிகளார். ...... "வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலள்" என்று கண்ணகியை இங்கோவடிகள் குறிப்பது போல, மடங்களின் தளத்தை விடுத்து மண்ணில் கால் வைத்து அறியா ஆதீனத் தலைவர்கள் பலரும் உள்ள இக் காலத்தில், கல்லிலும், முள்ளிலும், மேட்டிலும், கழனியிலும், புழதியிலும் மக்களடு மக்களாய் ஒன்றிப் பழகியும், மக்கள் நலப் பணி ஆற்றியும் வந்த ஆதீனத் தலைவர் குன்றக்குடி அடிகளார் ஒருவரே எனில் அது மிகையன்று."

"உங்களுடைய பத்தியும் முத்தியும் யருக்கு வேண்டும்? உங்களுடைய சாத்திரங்கள் என்ன சொல்லுகின்றன என்பது பற்றி யாருக்குக் கவலை? என்னுடைய நாட்டு மக்களை உயர்த்துவதற்காக நான் ஆயிரம் முறை வேண்டுமானாலும் நரகத்துக்குச் செல்லத் தயார்.... நான் யாருடைய ஊழியனும் அல்லன். தன் முத்தியைப் பற்றி நினையாது பிறருக்கு உதவி புரிந்து பணி செய்பவனுக்கே நான் பணியாள்" என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு.  மக்களுக்கு உதவுதலே மெய்யான முத்தி என்பதை இது விளக்குகின்றது".

"ஏசு, தன்னால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களிடம், "தாழ்ந்த நிலையில் உள்ள என் உடன் பிறந்தார்களாகிய மக்களில் ஒருவருக்கு நீங்கள் எதைக் கொடுக்கிறீர்களோ அதை எனக்கே கொடுக்கிறீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகின்றேன்" என்றார். அதேபோல, அவரால் ஏற்கப்படாதவர்களிடம், "மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள என் உடன் பிறந்தவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்யாது இருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாது இருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகின்றேன்" என்றார். எனின், ஏழைக்குக் காட்டும் அன்பே, இறைவனுக்குச் செலுத்தும் அன்பு என்பது விவிலியக் கருத்து ஆகின்றது"

--------------------------------------------------------------------------------------------------------

-----இங்கே, எனது (கன்னியப்பன்) கருத்தாக, திருமூலர் திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடலைக் காட்டக் கடமைப்பட்டு உள்ளேன்.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா,
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.

பகவன் - இறைவன். படமாடக் கோயில் - கொடியுடன் விளங்குகின்ற இயங்காத கோயில்.

நடமாடக் கோயில் நம்பர் - இயங்குகின்ற அடியவர்கள்.

இதன் பொருள் வருமாறு ---

கொடித் துகில் ஆடுகின்ற இயங்காத கோயிலினுள் எழுந்தருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால், அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் இதயக் கோயிலினுள் எழுந்தருளி இருக்கின்ற சிவனுக்குச் சேராது.  அப்படி அளிக்கப்பட்ட பொருள் கோயிலிலேயே இருந்துவிடும். ஆனால், எங்கும் இயங்கும் உடம்பாகிய கோயிலினுள் எழுந்தருளி இருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை கொடுத்தால், அது நடமாடுகின்ற அடியவர்களின் இதயத்தில் உள்ள அந்தச் சிவனுக்கு ஆவதுடன்,  கொடித் துகில் ஆடுகின்ற இயங்காத கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற சிவனுக்கும் போய்ச் சேர்வதாகும்.

உயிர்களுக்குச் செய்யும் உதவி, இறைவனுக்கும் சென்று சாரும் என்பது கருத்து.-----

---------------------------------------------------------------------------------------------------------
  
சிலம்பொலியார் மேலும் தொடர்கின்றார்....

"இத்தகைய கொள்கைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே நம் அடிகளார். அடிகளார் திருக்குறளை அற நூலாக மட்டும் காண்பதோடு  நின்றுவிடக் கூடாது. அதை வாழ்வியல் நூலாகக் கொண்டு, வள்ளுவர் வழியில் நடந்தால் வையகம் தழைத்தோங்கும் என வலியுறுத்தி வந்தவர். "இன்னமும் திருக்குறளுக்கு உரை எழுதிக் கொண்டு இருக்கின்றோம். அல்லது விவாதங்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றோம். ஆனால், திருக்குள் நெறியை வாழ்வியல் நெறியாக்கச் சமுதாயம் முயலவில்லை" என வேதனைப்படுகிறார்"

இத்தோடு சிலம்பொலியார் தந்த கருத்து முற்றுப் பெறுகின்றது.

இதே நூலில், தற்போதுள்ள குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தெரிவித்துள்ள கருத்தையும் அப்படியே தருகின்றேன்.

"சீனத்தில் கன்பூசியஸ், கிரேக்கத்தில் சாக்கரடீசு, பிரெஞ்சு தேசத்தில் ரூசோ, சோவியத்தில் மார்க்சியம் புரட்சியை - மாற்றத்தை விளைவித்ததைப் போலத் தமிழ் மண்ணில், தமிழ் நிலத்தில் திருவள்ளுவப் பெருமானின் சிந்தனைகள் ஏன் புரட்சியை, மாற்றத்தைத் தோற்றுவிக்கவில்லை? என்ற நியாயமான வினாவினை மகாசந்நிதானம் (மகா சந்நிதானம் என்பது அவருக்கு முந்தைய அடிகளாரை) எழுப்புகின்றார்கள். சிந்தனையைக் கிளறும் இந்த ஆழமான வினாவிற்கு அற்புதமான விடையையும் தருகின்றார்கள்.  "தமிழ் நிலத்தை, தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் அருளாளர்களாக இருந்தார்கள். "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்று புறநானூறு பாடும். "உயிர் எலாம் உறவதோர் உடம்பும் ஆயினான்" என்று கம்பன் தசரதனைப் பாடுவான். முடி ஆட்சிக் காலத்தில் மன்னன் உடம்பாகவும், மக்கள் உடம்பை இயக்குகின்ற உயிராகவும் வாழுகின்ற ஆட்சி முறை இருந்த்து. புறாவிற்காகத் தன் தசையை அறுத்த சிபிச் சக்கரவர்த்தியும், கன்றை இழந்த பசுவிற்காகத் தன் மகனைத் தேர்க் காலில் இட்ட மனுநீதிச் சோழனும், அநீதி இழைக்கப்பட்ட அபலைக் பெண்ணிற்காக உயிர் நீத்த பாண்டியன் நெடுஞ்செழியனும், கொழுகொம்பு இன்றி வாடிய முல்லைக்குத் தேர் ஈந்த பாரி வள்ளலும், தண்தமிழுக்குத் தன் தலையை ஈந்த குமண வள்ளலும் போன்ற அருளாளர்கள் ஆண்டமையால் உயிர்க்குலம் துன்பத்தைச் சந்திக்கவில்லை. நலம் செய்யாத அரசுகள் வாய்த்தபோதிலும் அவை மனிதகுலத்திற்குத் தீங்கு இழைக்கவில்லை. நலம் செய்யாததோடு தீங்கு இழைக்கும் அரசுகளை நோக்கித் தான் புரட்சிகள் தோன்றும். ............  பரிமேலழகர் காலம் முதல்..... பாட்டுக்குப் பொருள் வரையும் உரையாசிரியர்களாக வளர்ந்து விட்டோம். திருக்குறள் நெறிக்கு எழுத்தில் உரை கூறுகின்றோம். வாழும் வாழ்க்கையில் உரைசெய்யத் தவறிவிட்டோம். திருவள்ளுவரை வழிபாட்டுக்கு உரிய பொருளாக மாற்றிவிட்டோம். வழிகாட்டுப் பொருளாக ஏற்கத் தவறிவிட்டோம்"

இனி, அடியவனது (கன்னியப்பன்) கருத்து.....

அருளாளர்கள் அரிதாகி விட்டார்கள். அருளாளர்கள் வரைந்த அருள் நூல்களைக் கற்று, வாய் கிழியப் பேசி, காசு பண்ணும் வித்தகர்கள் மலிந்து விட்டார்கள்.  அருளை மறந்து, பொருளையே கருதும் மறவர்கள் மலிந்து விட்டார்கள்.

விளைவு, மழை பொய்த்தது. வளம் குன்றியது. 

"வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா யாக்கை பொறுத்த நிலம்" என்னும் திருவள்ளுவ நாயானாரின் வாக்கு உறுதியானது. புகழைக் கருதாமல், பொருளைக் கருதுபவர்கள் மலிந்தனர்.

ஆறுகளை, நதிகளை இறைவியாக எண்ணி, காவிரித் தாய் என்றும், கங்கா தேவி என்றும் வழிபடக் கற்றுக் கொண்டோம். "கங்கையில் புனிதமாய காவிரி" என்று ஆண்டாள் நாச்சியார் பாடினார். "ஆடுவார் பாவர் தீர்க்கும் காவிரி" என்றார் சுந்தரர். தென்திசையில் கங்கை என்னும் திருக்கெடிலம்" என்றார் தெய்வச் சேக்கிழார்.

புனிதமான நதிகளாகவா வைத்து இருக்கின்றோம். அத்தனை அழுக்கு நீரையும் அச்சமின்றி விடுகின்றோமே. தாய் பொறுத்துக் கொள்வாள் என்றா?

"ஆற்றுப் பெருக்கு அற்று அடி சுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டும்" என்றாரே ஔவையார்.

ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டிய தாயை, அவளுடைய அடிவயிறு வரையிலும் சுரண்டி வைத்து இருக்கின்றோமே?

பாலாறு என்று ஒரு ஆறு தொண்டை நாட்டில் உள்ளதை அறிவோம். அந்த ஆற்றின் பெருமையை, அது எப்படி இருந்தது என்பதைப் பெரியபுராணம் பின்வருமாறு பாடும்.

"பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல்,
மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்து கை வருட,
வெள்ள நீரிரு மருங்கு கால் வழிமிதந்து ஏறிப்
பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி".

இதன் பொழிப்புரை ---

சிறுபிள்ளை தனது கையால் தடவப் பெருகும் பாலைச் சொரியும் மார்பகங்களை உடைய தாய் போல, உழவர்கள் வேனில் காலத்து வேளாண்மை செய்யும் பருவக் காலத்து, மணல் திடர்களைக் கைகளால் பிசைந்து தோண்டி ஒழுங்கு செய்திட, அவ் வாய்க்கால் வழி வரும் வெள்ள நீர், அதன் இரு மருங்கும் வழிக்கொண்டு, பள்ளமான பண்ணை வயல்களில் உள்ள பருத்த மடை வரம்புகளை உடைக்கும்.

இன்று எந்த ஆறாவது இந்த நிலையில் உள்ளதா?  

நுனிக் கொம்பர் ஏறி விட்டோம். உயிர்க்கு இறுதி உறுதி.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...