திரு வெண்துறை




திரு வெண்துறை
(வண்டுதுறை)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

     மக்கள் வழக்கில் "வண்டுதுறை" என உள்ளது.

      மன்னார்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவு.  மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் வீராக்கி என்ற இடத்தில் இறங்கி இத்திருத்தலத்தை அடையலாம்.

     மன்னார்குடி - வீராக்கி செல்லும் நகரப் பேருந்துகள், மன்னார்குடி - சேந்தங்குடி செல்லும் நகரப் பேருந்துகள் வண்டுதுறை வழியாகச் செல்கின்றன.


இறைவர்          : மதுவனேசுவரர், பிரமரேசுவரர், பிரமபுரீசர், வெண்துறைநாதர்.

இறைவியார்      : சத்யதாயதாக்ஷி, பிரஹதாம்பாள்வேல்நெடுங்கண்ணி.

தல மரம்           : வில்வம்.

தீர்த்தம்            : பிரம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - ஆதியன் ஆதிரையன்.

     திருக்கோயில் வரலாறு: திருக்கயிலை முனிவர்களில் பெருமை மிக்கவரான பிருங்கி முனிவர் சிவபெருமானைத் தவிர வேறு தெய்வத்தை வணங்குதல் கூடாது என்ற வைராக்கியத்துடன் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அதையறிந்த சத்தி அம்முனிவரைத் திருத்துவதற்காக அம்முனிவரின் உடலில் சக்தியாக உள்ள உதிரம், சதை முதலிய கூறுகளை அகலச் செய்தாள். கால் தள்ளாடியதால் நிற்க முடியாத அந்நிலையிலும் பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபட்டார். இரக்கம் கோண்ட சிவபெருமான் முனிவருக்கு இன்னொரு காலைத் தந்து உதவினார். சக்தியும் சிவனை வேண்டி அவரது திருமேனியில் இடது பாகத்தைப் பெற்றார். அர்த்தநாரீசுவரர் ஆன சிவனும் சக்தியும் பிரித்தற்கரியவர் என்ற உணமையை உணராமல் பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து அர்த்தநாரீசுவரர் திருமேனியில் ஒரு பாதியைத் துளைத்துக் கொண்டு சிவபெருமானை மட்டுமே வணங்கினார். உமையம்மை சிவனின்றி சக்தியில்லை, சக்தியின்றி சிவனில்லை - இவ்விரண்டையும் பிரித்துப் பார்த்தல் கூடாது என்ற உண்மையை முனிவருக்கு உணர்த்தி வண்டு உருவில் ஒரு சதுர்யுகம் எங்களை இணைத்து வழிபட்டுப் பாவம் நீங்குக என்றருள முனிவரும் உணமை உணர்ந்து அவ்வாறே இருவரையும் இவ்வாலயத்தில் வழிபட்டுப் பாவம் நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது.

         பிரம்மனுக்கு படைப்புத் தொழிலில் தடை ஏற்பட்டபொழுது இங்கு உமையொருபாகனாகிய சிவபெருமானை வழிபட்டு ஆணையும், பெண்ணையும் தடையின்றிப் படைக்கும் ஆற்றல் பெற்றான் என்று கூறப்படுகிறது.

         சிவனும் சக்தியும் பிரித்தற்கரியவர் என்ற உணமையை உணராத மகாவிஷ்ணு மகப்பேறு வேண்டி சிவபெருமானை மட்டும் வழிபட்டு அழகிய மன்மதனை மகனாகப் பெற்றார். இதனால் கோபம் கொண்ட சக்தி மன்மதன் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் எரிந்து அழியுமாறு சாபமிட்டார். தவறை உணர்ந்த மகாவிஷ்ணு இவ்வாலயத்தில் விநாயகர், சோமஸ்கந்தர் ஆகியோரை வழிபட சக்தி சினம் தணிந்து இறக்கும் மன்மதன் மீண்டும் பிழைத்தெழுவான் என்று வரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

         ஆலய அமைப்பு: பெரிய கோபுரம் உள்ள கிழக்கு நுழைவு வாயிலும், கோபுரம் இல்லாத மேற்கு நுழைவு வாயிலும் கொண்டு ஒரு பெரிய மதிற்சுவருடன் இவ்வாலயம் விளங்குகிறது. கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி மண்டபம் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கணபதி சந்நிதியும், வடமேற்கு மூலையில் முருகப்பெருமானின் சந்நிதியும் உள்ளது. கருவறை முன் உள்ள நடு மண்டபத்தில் விநாயகரும், ஒரு நந்தியும், வடபுறம் தெற்குப் பார்த்த தனி சந்நிதியில் சோமஸ்கந்தர், நடராஜர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் உள்ளனர். இறைவி வேல்நெடுங்கண்ணி அம்மைக்கு தனி விமானத்துடன் தெற்குப் பார்த்த தனி சந்நிதி உள்ளது.

         இறைவன், இறைவி ஆகிய இருவரின் சந்நிதிகளையும் இணைக்கும்படி கருங்கல்லால் கட்டப்பெற்ற வேலைப்பாடு மிக்க தூண்களுடன் கூடிய அழகிய வெளி மண்டபம் உள்ளது. மண்டபத் தூண்களில் தேவார மூவர், பிருங்கி முனிவர் ஆகியோரின் திருஉருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தூணில் நான்கு யுகங்களைக் கண்ட ஆஞ்சநேயரும் உள்ளார். கருவறை கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் காணப்படுகின்றனர். கிழக்கு வெளிப் பிரகாரத்திலுள்ள மண்டபத்தில் பைரவர், விசுவநாதர், விசாலாட்சி, சம்பந்தர், சனீஸ்வரன், சூரியன், சந்திரன் ஆகியோரைக் காணலாம். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிட்சாடணர் உருவச்சிலை பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்றாகும்.

         அர்த்தநாரீசுவரர் திருமேனி சிறப்பானது. மாதொருபாகனின் வாகனத்தை உற்று நோக்கினால் இறைவன் உருவம் உள்ள பகுதியில் ரிஷப வாகனமாகவும், இறைவியின் உருவம் உள்ள பகுதியில் சிம்ம வாகனமாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.

         ஆலயத்தின் உள்ளே தலமரமான வில்வம் உள்ளது. ஆலய தீர்த்தம் பிரம தீர்த்தம் ஆலயத்திற்கு வெளியே வடகிழக்கில் உள்ளது.

         காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "தேன்கூட்டிப் போய் வண்டு உறை தடமும் பூம்பொழிலும் சூழ்ந்து அமர் ஆய் வெண்துறை மாசிலாமணியே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 574
நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,
         நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,
         பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,
உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்
         ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
         திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

         பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

         இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

திருக்காறாயில் -      நீரானே (தி.2 ப.15) - இந்தளம்.

திருத்தேவூர் -         1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம். -
                                 2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி.

திருநெல்லிக்கா -      அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம்.

திருக்கைச்சினம் -     தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம்.

திருத்தெங்கூர் -        புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக்காந்தாரம்.

திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம்.

திருக்கோட்டூர் -       நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.


பாடல் எண் : 575
மற்றுஅவ்வூர் தொழுதுஏத்தி மகிழ்ந்து பாடி,
         மால்அயனுக்கு அரியபிரான் மருவும் தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடி,
         பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறிஉள் ளிட்ட
         கனகமதில் திருக்களரும், கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும் சென்று போற்றித்
         திருமறைக்காட்டுஅதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.

         பொழிப்புரை : திருவெண்துறை என்ற நகரத்தை வணங்கிப் போற்றி மகிழ்ந்து பதிகம்பாடி, நான்முகன் திருமால் இவர்களுக்கு அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று போற்றிப் பதிகங்களும் பாடிப் பரவும் தொண்டர் கூட்டம் அருகில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண்டலை நீள்நெறி முதலான திருப்பதிகளும், பொன்மதிலை உடைய திருக்களரும், பகைவரின் வேள்வியை அழித்த இறைவர் எழுந்தருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி, அதுபொழுதே திருமறைக்காடு என்ற பதியின் அருகே சேர்ந்தனர்.

         குறிப்புரை : திருவெண்துறையில் அருளிய பதிகம், `ஆதியன்' (தி.3 ப.61) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும் `மருவும் தானம் பற்பலவும்' என்பது குன்றியூர், திருச்சிற்றேமம், மணலி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.



         3.  061     திருவெண்துறை           பண் - பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆரழகன்,
பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்,
போதுஇய லும்முடிமேல் புன லோடுஅர வம்புனைந்த
வேதியன், மாதிமையால் விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் ஆதிமூர்த்தியானவர் . திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர் . நெருப்பைக் கையிலேந்தித் திருநடனம் புரியும் பேரழகர் . தம் திருமேனியின் ஒரு பாகமாகக் உமாதேவியை ஏற்று மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவர் . கொன்றை முதலிய மலர்களை அணிந்த முடிமேல் , கங்கையையும் பாம்பையும் அணிந்தவராய் , வேதங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமானார் மிக்க அன்புடன் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்பதாகும் .


பாடல் எண் : 2
காலனை ஓர்உதையில் உயிர் வீடுசெய் வார்கழலான்,
பாலொடு நெய்தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன்,
மாலை மதியொடுநீர் அர வம்புனை வார்சடையான்,
வேல்அன கண்ணியொடும் விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : மார்க்கண்டேயர் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உயிர்விடும்படி செய்த சிவபெருமான் வாரால் கட்டிய வீரக்கழலையணிந்தவன் . பால் , நெய் , தயிர் முதலியவற்றால் திருமுழுக்காட்டப்பட்டுப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்துப் புரிந்தவன் . மாலை நேர சந்திரனொடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்த விரிந்த சடையுடையவன் . வேல்போன்ற கண்களையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 3
படைநவில் வெண்மழுவான், பல பூதப் படையுடையான்,
கடைநவில் மும்மதிலும் எரி ஊட்டிய கண்ணுதலான்,
உடைநவி லும்புலித்தோல் உடை ஆடையி னான்,கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் தூய மழுப்படை உடையவர் . பலவகையான பூதகணங்களைப் படைவீரர்களாகக் கொண்டுள்ளவர் . பாவங்களைச் செய்து வந்த மூன்று மதில்களையும் எரியுண்ணும்படி செய்த நெற்றிக் கண்ணையுடையவர் . புலித்தோலாடை அணிந்தவர் . விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாக உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .


பாடல் எண் : 4
பண்அமர் வீணையினான், பர விப்பணி தொண்டர்கள்தம்
எண்அமர் சிந்தையினான், இமை யோர்க்கும் அறிவரியான்,
பெண்அமர் கூறுஉடையான், பிர மன்தலை யில்பலியான்,
விண்ணவர் தம்பெருமான், விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய பாடலை மீட்டுபவர் . தம்மைப் போற்றி வணங்குகின்ற தொண்டர்களின் சிந்தையில் எழுந்தருளியிருப்பவர் . தேவர்களால் அறிவதற்கு அரியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றவர் . தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 5
பார்இய லும்பலியான், படி யார்க்கும் அறிவரியான்,
சீர்இய லும்மலையாள் ஒரு பாகமும் சேரவைத்தான்,
போர்இய லும்புரமூன்று உடன் பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான், விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் உலகத்தார் செய்யும் பூசைகளைத் தான் ஏற்பவன் . தன் தன்மையை உலக மாந்தர்களின் சிற்றறிவால் அறிவதற்கு அரியவனாய் விளங்குபவன் . புகழ்மிக்க உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . போர் செய்யும் தன்மையுடைய முப்புரங்களுடன் பொன்மயமான மேருமலையே வில்லாகக் கொண்டு தன் வலிமையைக் காட்டிப் போர் செய்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

  
பாடல் எண் : 6
ஊழிக ளாய்,உலகாய், ஒரு வர்க்கும் உணர்வரியான்,
போழ்இள வெண்மதியும் புன லும்அணி புன்சடையான்,
யாழின் மொழிஉமையாள் வெருவ எழில் வெண்மருப்பின்
வேழம் உரித்தபிரான், விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும் உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும் , ஒருவர்க்கும் உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான் . பிளவுபட்ட வெண்ணிறச் சந்திரனையும் , கங்கையையும் அணிந்த சடையுடையவன் . யாழ் போன்று இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண் தந்தமுடைய யானையின் தோலை உரித்தவன் . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 7
கன்றிய காலனையும் உரு ளக்கனல் வாய்அலறிப்
பொன்றமுன் நின்றபிரான், பொடி ஆடிய மேனியினான்,
சென்றுஇமை யோர்பரவும் திகழ் சேவடி யான்,புலன்கள்
வென்றவன் எம்இறைவன் விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன் . திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன் . தேவர்களெல்லாம் சென்று போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன் . ஞானிகள் புலன்களை வெல்லும்படி செய்பவன் . எம் தலைவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 8
கரம்இரு பத்தினாலும் கடு வன்சின மாய்எடுத்த
சிரம்ஒரு பத்தும்உடை அரக் கன்வலி செற்றுஉகந்தான்,
பரவவல் லார்வினைகள் அறுப் பான்,ஒரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான், விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : பத்துத் தலைகளையுடைய அரக்கனான இராவணன் , தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவனது வலிமையை சிவபெருமான் அழித்தான் . அவன் தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவன் . தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
கோல மலர்அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும்
சீலம் அறிவரிதாய்த் திகழ்ந்து ஓங்கிய செந்தழலான்,
மூலம் அதுஆகிநின்றான், முதிர் புன்சடை வெண்பிறையான்,
வேலை விடமிடற்றான், விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று கருநிறமுடைய திருமாலும் , தனது தன்மையை அறிதற்கு அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல் ஓங்கி நின்றவன் சிவபெருமான் . அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்கி நின்றான் . முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்தவன் . கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 10
நக்குஉரு ஆயவரும் துவர் ஆடை நயந்துடையாம்
பொக்கர்கள் தம்உரைகள் அவை பொய்என, எம்இறைவன்
திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி ரான், கனகம்
மிக்குஉயர் சோதியவன், விரும் பும்மிடம் வெண்துறையே.

         பொழிப்புரை : ஆடையணியா உடம்புடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றி ஏதும் கூறாது , தோன்றி நின்று அழியும் தன்மையுடைய உலகப் பொருள்கள் பற்றிக் கூறும் உரைகளைப் பொருளெனக் கொள்ளற்க . எம் தலைவனான சிவபெருமான் எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன் . தேவர்கட்கெல்லாம் தலைவன் . பொன் போன்று மிக்குயர்ந்த சோதியாய் விளங்குபவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 11
திண்அம ரும்புரிசைத் திரு வெண்துறை மேயவனைத்
தண்அம ரும்பொழில்சூழ் தரு சண்பையர் தம்தலைவன்
எண்அமர் பல்கலையான், இசை ஞானசம் பந்தன்சொன்ன
பண்அமர் பாடல்வல்லார் வினை ஆயின பற்றுஅறுமே.

         பொழிப்புரை : உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி , குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த தலைவனான , பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும் .

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...