நன்மை கருதி பொய் சொல்லலாம்

 

 

நன்மை கருதி பொய் சொல்லலாம்

----

 

     திருக்குறளில், "வாய்மை" என்னும் அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "குற்றத்தின் நீங்கிய நன்மையைப் பிறர்க்குத் தருவதாகில், சொல்லுகின்ற பொய்யும் மேய்யே" என்கின்றார் நாயனார்.

 

     குற்றத்தில் இருந்து நீங்கிய நன்மையை "அறம்" என்றார். கேட்டையாவது, மரணத்தையாவது அடைய நின்ற ஓர் உயிருக்கு, சொற்களின் பொய்ம்மையால், அந்தக் கேட்டிலிருந்தும், மரண தண்டத்தில் இருந்தும் நீக்கி, நன்மையை அடையச் செய்தல் "அறம்" ஆகும்.

 

     தீமையைத் தராத நடந்ததைச் சொல்லுதலும், நன்மையைத் தரும் நடவாததைச் சொல்லுதலும் வாய்மை. இதனால் பழியும் பாவமும் வராது. இதில் தன்னலம் இல்லை.

 

     நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதலும், தீமையைத் தரும் நடந்ததைச் சொல்லுதலும் பொய்ம்மை. இதனால் பழியும் பாவமும் உண்டாகும். இதில் தன்னலம் உண்டு.

 

     பழியும், பாவமும் தவிர்த்து, தன்னலம் கருதாமல், குற்றமற்ற நன்மை விளையுமானால், அத்தகைய நேர்வுகளில் பொய்யைச் சொல்லுவதும், வாய்மையாகவே கொள்ளப்படும்.

 

 

பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரை தீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

 

என்பது திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல். சென்னையின் ஒரு பகுதியாக உள்ளதும், தற்போது "கொளத்தூர்" என்னும் ஊரில் திருக்கோயில் கொண்டு, அமுதாம்பிகை உடனுறை சோமநாதரைப் பாட்டுடைத் தலைவராக வைத்து, திருக்குறளுக்கு விளக்கமாகப் பாடப்பட்ட நூல் இது.

 

பிள்ளையுடன் உண்ணப் பேசி அழைத்தார் அன்பு

துள்ளு சிறுத்தொண்டர், சோமேசா! --- உள்ளுங்கால்

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா!  உள்ளுங்கால் --- நினைக்குமிடத்து, புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் --- பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின்,  பொய்ம்மையும் வாய்மை இடத்த --- பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பாலவாம்,

 

         அன்பு துள்ளு சிறுத்தொண்டர் --- அன்பு மிக்க சிறுத்தொண்ட நாயனார், பின்னை --- தமது மகனாகிய சீராளதேவர்,  உடன் உண்ண --- வைரவருடன் உண்ணும்படி, பேசி அழைத்தார் --- அவன் உயிரோடு இருப்பது போல்ச் சிலவற்றைச் சொல்லி அழைத்தருளினார் ஆகலான் என்றவாறு.

 

         குற்றம் தீர்ந்த நன்மை அறம். அதனைப் பயத்தலாவது கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றது ஓர் உயிர் அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறுதலும் நன்மை பயவாதாயின் பொய்ம்மையாம்,  நன்மை பயப்பின் மெய்ம்மையாம் என்பது கருத்து. இதனால் தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறுதலும் மெய்ம்மை எனவும்; நன்மை பயவாத நிகழாதது கூறலும், தீங்கு பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மை எனவும் அவற்றின் இலக்கணம் கூறப்பட்டது.

 

சிறுத்தொண்ட நாயனார் வரலாறு

 

         இந்த நாயனாரின் இயற்பெயர் பரஞ்சோதியார். திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர். ஆயுள்வேதக் கலைகளிலும் வடமொழிக் கலைகளிலும் புலமை வாய்ந்தவர். படைத் தொழில், யானையேற்றம், குதிரையேற்றம் முதலியவற்றிலும் பயிற்சி பெற்றவர். சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்தவர்.

 

         பரஞ்சோதியார் சோழ மன்னனிடத்தில் அமைச்சராய் அமர்ந்து கடனாற்றி வந்தார். அவர், வேற்றரசர்களை வெல்வதிலும், அவர்கள் நாடுகளைப் பற்றுவதிலும் பேர்பெற்று விளங்கினார். ஒரு முறை வடபுலத்திலே உள்ள வாதாபி என்னும் நகரத்தில் போர் மூண்டது. அப் போரில் பரஞ்சோதியார் தலைப்பட்டு வெற்றி பெற்றார். அவ் வெற்றியின் பயனாக மணி, நிதி முதலியவற்றைக் குவியல் குவியலாகவும், யானை குதிரை முதலியவற்றைக் கூட்டம் கூட்டமாகவும் பரஞ்சோதியார் திரட்டி வந்தார்.  அவற்றைக் கண்ட மன்னன், பரஞ்சோதியார் திறத்தை வியந்து பேசினான். அப்பொழுது அங்கு இருந்த மற்றை அமைச்சர்கள் மன்னனைப் பார்த்து, "இவர் சிவனடியார்.  இவருக்கு எதிராவார் ஒருவரும் இல்லை" என்று சொன்னார்கள்.  அது கேட்ட மன்னன் நடுக்குற்றான். "அந்தோ கெட்டேன். இதுவரை இவரைச் சிவனடியார் என்று உணர்ந்தேனில்லை. போர்முகத்துக்கு அனுப்பினேன், பாவியானேன்" என்று வருந்தினான். பரஞ்சோதியார் காலில் விழுந்து, "அடியவரே, என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று வேண்டினான். பரஞ்சோதியார், "என் கடமையைச் செய்தேன், அதனால் என்ன தீங்கு" என்றார். மன்னன் அவருக்கு நிதிக்குவியல்களையும், விருத்திகளையும் கொடுத்து, "உமது மெய்ந்நிலையை நான் அறியாதவாறு நடந்து வந்தீர். இனி என் கருத்துக்கு இசைந்து நடக்குமாறு வேண்டுகிறேன். இனி, இப்பணி செய்தல் வேண்டாம். திருத்தொண்டு செய்தல் வேண்டும்" என்று வணங்கி விடை கொடுத்தான். பரஞ்சோதியார் விடைபெற்றுத் தம் திருப்பதி சேர்ந்தார்.

 

         பரஞ்சோதியார் திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீச்சரப் பெருமானை வழிபடுவார். தமக்கு இல்லக் கிழத்தியாக வாய்த்த திருவெண்காட்டு நங்கையார் என்னும் பெருமாட்டியுடன் கலந்து நல்லறம் ஓம்புவார்.  சிவனடியார்களுக்கு அமுதூட்டிய பின்னர்த் தாம் உண்பார்.  அவர், அடியவர்களிடத்தில் மிகச் சிறியராய் நடப்பார். அதனால், அவருக்குச் "சிறுத்தொண்டர்" என்னும் திருப்பெயர் வழங்கலாயிற்று.

 

         இவ்வாறு ஒழுகி வரும் நாளில், சிறுத்தொண்டர் மனைவியார் கருவுற்றார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.  சீராளதேவர் என்னும் திருப்பெயர் சூட்டப்பட்டது. அவர் தக்க பருவத்தில் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.

 

         திருச்செங்காட்டங்குடிக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் எழுந்தருளினார். அவர் தம் வருகையைக் கேள்வியுற்ற சிறுத்தொண்டர், அவர் எதிர்கொண்டு அழைத்து வந்தார்.  அன்பில் மூழ்கிப் பலவித உபசாரம் செய்தார்.  திருஞானசம்பந்தப் பெருமான் தமது திருப்பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருளினார்.

 

         சிறுத்தொண்டரின் திருத்தொண்டு திருக்கயிலையையும் ஈர்த்தது. அவர் அன்பை நுகரச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். ஒரு வயிரவத் திருக்கோலம் தாங்கி, திருச்செங்காட்டங்குடி சேர்ந்தார். பசியால் பீடிக்கப் பட்டார் போல் நடந்தார். "சிறுத்தொண்டரின் வீடு எங்கே" என்று கேட்டு வந்தார். வீட்டின் வாயிலில் வந்து நின்று, "சிறுத்தொண்டர் வீட்டில் உள்ளாரா" என்று கேட்டார். தாதியாராகிய சந்தன நங்கையார், "மாதவர் வந்துள்ளார்" என்று விரைந்து வந்து வயிரவர் திருவடியிலே விழுந்து வணங்கி, "நாயனார் அடியவர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். அடிகள் உள்ளே எழுந்தருளலாம்" என்று சொன்னார். அதற்கு வயிரவர், "பெண்கள் உள்ள இடத்தில் நாம் தனித்துப் புகுவதில்லை" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அவ்வுரை திருவெண்காட்டு நங்கையாருக்குக் கேட்டது. 'அடியவர் போய் விடுவாரோ' என்று எண்ணி ஓடி வந்தார். வந்து, "அடிகளே, நாயனார், அடியவர்கட்கு நாள்தோறும் அமுது செய்விப்பது வழக்கம். இன்று ஓர் அடியவரும் வரவில்லை. அதனால், அவர் அடியவர்களைத் தேடிப் போயுள்ளார். இப்பொழுது வருவார். புதிதாக அடிகள் எழுந்தருளி இருக்கிறீர். அடிகள் திருவேடத்தைப் பார்த்தால் நாயனார் மகிழ்வெய்துவார். அடிகள் உள்ளே எழுந்தருள்க" என்று வேண்டினார். அவ் வேண்டுதலுக்கு இசையாது, "நாம் இருப்பது வடதேசம். சிறுத்தொண்டரைக் காணவே வந்தோம். அவர் இல்லாத வேளையில் இங்கே தங்கமாட்டோம். கணபதீச்சரத்தில் திருஆத்தியின் கீழ் இருப்போம். சிறுத்தொண்டர் வந்ததும் தெரிவியுங்கள்" என்று கூறிக் கணபதீச்சரத்தைச் சேர்ந்தார்.

 

         அடியவர்கள் யாரையும் காணாது சிறுத்தொண்டர் வீடு வந்தார். நிலைமையை மனைவியார்க்குக் கூறி வருந்தினார்.  அம்மையார், நாயனாரைப் பார்த்து, "இப்பொழுது இங்கே ஒரு வயிரவர் வந்தார்" என்று சொன்னார். அதைக் கேட்டதும் நாயனார் "உய்ந்தேன், உய்ந்தேன்" என்று கூத்தாடினார். அவர் எங்கே என்று கேட்டு,  ஓடோடிச் சென்று வயிரவரைக் கண்டார், வணங்கினார். வயிரவர், நாயனாரைப் பார்த்து,  "பெரிய சிறுத்தொண்டர் நீரோ" என்றார். நாயனார் வயிரவரை மீண்டும் வணங்கி, "சிவனடியார்கள் எளியேனை அப்படிச் சொல்வது வழக்கம். அடிகளே, ஏழைக் குடிலுக்கு எழுந்தருளல் வேண்டும்" என்று முறையிட்டார். வயிரவர் சிறுத்தொண்டரைப் பார்த்து, "உம்மைக் காண வந்தோம். நாம் வடதேசத்தினோம். எமக்கு அமுதளிக்க உம்மால் இயலாது" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "அடிகளின் உணவு முறையைத் தெரிவியுங்கள்.  அவ்வாறே செய்விப்பேன். அருமை ஒன்றும் இல்லை" என்றார்.  அதுகேட்ட வயிரவர், "நாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறை உண்போம். அந்த நாள் இந்நாள் ஆகும். பசுவைக் கொன்று சமைத்து உண்பது எமது வழக்கம். இது உமக்கு அருமையானது அன்றோ" என்றார். அதற்குச் சிறுத்தொண்டர், "சால நன்று. எமக்கு முந்நிரையும் உண்டு. ஒன்றும் குறைவில்லை. அடிகளுக்குத் திருவமுது ஆகும் பசு இன்னதென்று தெரிவித்தல் வேண்டும்.  தெரிந்தால், நான் போய் விரைவில் அமுதாக்குவித்துத் திரும்புவேன்" என்றார்.

 

         வயிரவர், "தொண்டரே! நாம் உண்ணும் பசு, நரப் பசுவாகும்.  ஐந்து வயது உடையதாய், உறுப்பில் பழுது இல்லாததாய் இருத்தல் வேண்டும். இன்னும் அதன் இயல்பைக் கூறுவோம். கூறினால், அது உமக்கு புண்ணில் வேல் எறிந்தால் போல் தோன்றும்" என்றார். சிறுத்தொண்டர் "நன்றாகக் கூறலாம்" என்றார். வயிரவர், "அச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்கத் தந்தை உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு அரிந்து சமையல் செய்தால் நாம் உண்போம்" என்றார். சிறுத்தொண்டர், "இதுவும் எமக்கு அரிது அன்று. அடிகள் திருவமுது செய்ய இசைவது போதும்" என்றார்.

 

         சிறுத்தொண்டர் பேரானந்தத்துடன் வீடு நோக்கி வந்தார்.  அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த திருவெண்காட்டுநங்கையார், நாயனார் முகமலரச்சியோடு வருதவதைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். நாயனார் வயிரவர் விருப்பத்தைத் தெரிவித்தார். அது கேட்ட அம்மையார், "ஒரு குடிக்கு ஒருவனாக உள்ள சிறுவனுக்கு ஏங்கே போவது" என்றார்.  நாயனார் அம்மையாரைப் பார்த்து, "நினைவு நிரம்பப் பொருள் கொடுத்தாலும், பிள்ளையை யாரும் தரமாட்டார்கள். தந்தாலும் உவப்புடன் அரியும் பெற்றோர் இருப்பாரா? இனிக் காலம் தாழ்த்தல் ஆகாது. நமது அருமைப் புதல்வனை அழைப்போம்" என்றார். அம்மையார், "நம் குலமணியைப் பள்ளியில் இருந்து அழைத்து வாரும்" என்றார்.

 

         பள்ளியிலிருந்து ஓடி வந்து தன்னைத் தழுவிக்கொண்ட சீராளதேவனை, தோள் மேல் சுமந்து வீட்டுக்கு வந்தார்.  அம்மையார் பிள்ளையை வாங்கினார். தலைமயிரைத் திருத்தினார். முகம் துடைத்தார். திருமஞ்சனமாட்டி அலங்கரித்துத் தமது ஆருயிர்க் கணவரிடம் கொடுத்தார்.  சிறுவனை அன்போடு வாங்கிய சிறுத்தொண்டர் அடுக்களைக்குச் செல்லாமல் வேறோர் இடம் சென்றார். அம்மையார் பாத்திரங்களைக் கழுவி எடுத்துக் கொண்டு பின் சென்றார்.  பிள்ளையின் தலையைச் சிறுத்தொண்டர் பிடிக்க, அம்மையார் பிள்ளையின் கால்களை மடியிலே இறுக்கினார். இரண்டு கைகளையும் தமது இரண்டு கைகளால் பற்றினார். சீராளதேவர் பெற்றோர் மகிழ்வதாகக் கருதி நகை செய்தார்.  சிறுத்தொண்டரும் அம்மையாரும், நம் புதல்வன் நமக்குப் பெரும்பேற்றை அளித்தான் என்று மகிழ்வெய்தினர். அம் மகிழ்வுடன் செயற்கரும் செய்கையினைச் செய்தனர்.

 

         "தலை இறைச்சி அமுதுக்கு உதவாது" என்று அதை விலக்குமாறு தோழியாரிடம் அம்மையார் கூறினார். மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.

 

         நாயனார் களிகூர்ந்து, திரு ஆத்தியை அடைந்து, "அடிகள் விரும்பியவாறு சமையல் செய்யப்பட்டது. அருள் கூர்ந்த எழுந்தருள்க" என்று வேண்டினார். இருவரும் வீடு சேர்ந்தனர்.

 

         நாயனாரும் அம்மையாரும் முறைப்படி வயிரவருக்கு வழிபாடு செய்து "அமுது படைக்கு வகை எப்படி" என்று கேட்டனர். "சோற்றுடன் கறிகளையும் ஒக்கப் படைக்க" என்றார் வயிரவர். திருவெண்காட்டுநங்கை பரிகலம் திருத்தி, சோறு கறிகளை முறைப்படி படைத்தார். அதனைப் பார்த்த வயிரவர், "பசுவின் உறுப்புக்கள் எல்லாவற்றையும் சமைத்தீரா" என்று கேட்டார். "தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று அதனைக் கழித்தோம்" என்றார் திருவெண்காட்டுநங்கையார்.  "தலையும் வேண்டும்" என்றார் வயிரவர். நாயனாரும் அம்மையாரும் திகைத்து நிற்கையில், தாதியாராகிய சந்தன நங்கையார், "வயிரவர் திருவமுது செய்யம்போது அவர்தம் எண்ணம் தலை இறைச்சியின் மீது செல்லினும் செல்லும் என்று நினைந்து, அதையும் சமையல் செய்து வைத்திருக்கிறேன்" என்றார். திருவெண்காட்டுநங்கையார் அகமகிழ்ந்து தலை இறைச்சியையும் கொண்டு வந்து படைத்தார்.

 

         பிறகு வயிரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து, "நாம் தனியே உண்பதில்லை. சிவனடியார்களுடன் உண்பதே வழக்கம்.  அவர்களை அழைத்து வாரும்" என்றார்.  நாயனாருக்கு வருத்தம் மேலிட்டது. "ஐயோ, இரு திருவமுது செய்ய இடையூறு நேர்ந்ததே" என்று ஏங்கியபடியே வெளியே போனார். சிவனடியார் ஒருவரையும் காணவில்லை. நிலையை வயிரவருக்குத் தெரிவித்தார். "திருநீரு அணிந்தவர்க்கே நான் சோறிடுவது வழக்கம்" என்று சொல்லி வணங்கினார்.

 

         வயிரவர், நாயனாரை நோக்கி, "உம்மைப் போலத் திருநீறு இட்டவரும் உளரோ? ஆகவே, நீர் எம்மோடு திருவமுது செய்வீர்" என்றார். நங்கையாரை நோக்கி, "நமக்குப் படைத்த சோறு கறிகளில் இருந்து எடுத்து இவருக்கும் படைக்க" என்று பணித்தார். நங்கையாரும் அப்படியே செய்தார். 'நாம் உண்டால் வயிரவரும் உண்பார்' என்று எண்ணி, சிறுத்தொண்டர் உண்ணப் புகுந்தார். நாயனாரைப் பார்த்து வயிரவர், "நாம் உண்டு ஆறு மாதங்கள் ஆயிற்று. நீரோ நாளும் உண்பவர். நாம் உண்ணும் வரை பொறுக்கல் ஆகாதா? நம்முடன் உணவு கொள்வதற்குப் புத்திரன் இல்லையோ? இருப்பின், அவனை அழையும்" என்றார்.  நாயனார், "எனக்குப் புதல்வன் உண்டு. ஆனால் அவன் இப்போது இங்கு உதவான்" என்றார். வயிரவர், "அவன் வந்தால் அன்றி நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்" என்றார்.

 

         தமது மகனைத் தான் கறியாக்கித் தந்துள்ளோம் என்று சொன்னால், வந்த வயிரவர் அமுது செய்யமாட்டார். எனவே, உண்மையைச் சொல்ல இயலவில்லை. நாயனாரும் நங்கையாரும் செய்வது அறியாமல், திருவருளை நினைந்து வெளியே வந்து, "மைந்தா! மணியே! சீராளா! வாராய்! வாராய்! வயிரவர் உண்ண அழைக்கின்றார், வாராய்! வாராய்!" என்று ஓலமிட்டு அழைத்தனர்.

 

"வைய நிகழும் சிறுத்தொண்டர்,

     'மைந்தா வருவாய்' என அழைத்தார்,

தையலாரும் தலைவர் பணி

     தலை நிற்பாராய்த் தாம் அழைத்தார்,

'செய்ய மணியே, சீராளா,

     வாராய், சிவனார் அடியார் யாம்

உய்யும் வகையால் உண்ண அழைக்

     கின்றார்' என்று ஓலமிட"          --- (பெரியபுராணம் - சிறுத்தொண்டர்).

 

     ஆண்டவன் அருளால், சிராளதேவர் பள்ளியினின்று ஓடி வருபவர் போல வந்தார். அம்மையார் அருமைப் புதல்வரை எடுத்து அணைத்து, நாயனார் கையில் கொடுத்தார். நாயனார், "அடியவர் அமுது செய்யப் பெற்றோம் பெற்றோம்" என்று ஆனந்தம் கொண்டார். பிள்ளையுடன் வீட்டிற்கு விரைந்து வந்தார். அதற்கு முன்னரே வயிரவர் மறைந்தருளினார். சிறுத்தொண்டர் திகைத்தார், விழுந்தார், எழுந்தார், மயங்கினார். "வயிரவர் எங்கே எங்கே" என்றார். இறைச்சியும் அமுதும் கலத்தில் காணோம். நடுக்குற்று வெளியே வந்தார்.

 

         அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாருடனும், முருகப் பெருமானுடனும் மழவிடைமேல் காட்சி தந்தார். பெருமான் அந்த நால்வருக்கும் அருள் சுரந்து, தங்களைப் பிரியாத பெருவாழ்வு நல்கி, உடன் அழைத்துச் சென்றார்.

 

     குற்றமற்ற நன்மை விளையுமானால் பொய் சொல்லலாம் என்று நாயனார் அறிவுறுத்தும் திருக்குறளை, பெரியபுராணத்தில் வரும் சிறுத்தொண்ட நாயனார் வரலாற்றை வைத்து, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடலைச் சிந்தித்தோம். சிறுத்தொண்ட நாயனார் வரலாற்றின் மூலம் அறியப்பட வேண்டிய உண்மைகளைச் சிந்தித்து, திருக்குறளைப் பற்றி மேலும் சிந்திப்போம்.

 

சிறுத்தொண்ட நாயனார் வரலாற்று உண்மைகள்

 

     சிறுத்தொண்ட நாயனாரது இயற்பெயர் பரஞ்சோதியார் என்பது. இவ்வாறு அவ்வவர்களது உண்மைத் தன்மைப் புலப்பட பெயர் அமைவது பெரியோர் ஆகும் தன்மை உடையோர்களது சிறப்பு.

 

     நம்பியாரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரை, சிவபெருமான் திருவாக்கால், "வன்தொண்டர்" என்கின்றோம்.

 

     மருள்நீக்கியார் என்னும் பிள்ளைப் பெயர் கொண்ட நாயனாரை, சிவபெருமான் அருள்வாக்கினைக் கொண்டு, "திருநாவுக்கரசர்" என்றும், திருஞானசம்பந்தப் பெருமான் அருள்வாக்கினைக் கொண்டு, "அப்பர்" என்றும் வழங்குகின்றோம்.

 

     புனிதவதியாரை, "காரைக்கால் அம்மையார்" என்று வழங்குகின்றோம். புனைபெயர் என்பது பெரியோரால் வழங்கப்படுவது. தாமாகப் புனைந்து கொள்ளுவது அல்ல.

 

         தமக்கு உபகாரமாக, உள்ள நிறை கலைத் துறைகளாகிய நூற்கலையும், ஏற்றதொரு தொழிற்கலையும், பிற உயிர்களுக்கு உபகாரமாக ஆயுள்வேதக்கலை முதலிய பிறிதொரு கலையும் கற்கவேண்டியது யாவருக்கும் கடமை. இங்கு, பிறர் பொருட்டு ஆயுள்வேதக் கலையும், தம்பொருட்டு வடநூற்களையும், படைக்கலத் தொழிலும், யானையேற்றம், குதிரையேற்றம் முதலாகிய தொழில்களையும் கற்று விளங்கியவர் சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார்.

 

          பரஞ்சோதியார் அரசனிடம் சேனைத் தலைமை பூண்டு யானைப்படை செலுத்திப் பகையரசர் பலரையும் வென்று வடபுலத்து வலிய வாதாவிப் போரிலும் வெற்றிகொண்டு தமது அரசனுக்குச் சிறப்பு வருவித்தனர். இது உலகியல் ஆண்மையாகிய வீரம். அஞ்சா நெஞ்சம் படைத்த அவரே சிவனடியார்களைப் பணிந்து உபசரித்து அமுதூட்டி, அவர்கள் முன் தம்மை மிகச் சிறியராய் இருந்தமையால், சிறுத்தொண்டர் எனப் பெயர் பெற்றார். உலகியலில் வீரமும், அருளியலில் பணிவும் ஒருவனுக்கு வேண்டும் என்பது இதனால் பெறப்படும்.

 

      கற்புநெறி வழுவாது இல்வாழ்க்கை நடத்தி உலகியலில் இல்லறம் பேணவும் நன்மக்கள் பேறு பெறவும் கன்னியை மணஞ்செய்து கொள்க என்று வேதம் முதலிய அறநூல்கள் விதிக்கும். அவை உலகியல் அறங்கள். பரஞ்சோதியார் உலகியலுக்கும் மேலான சிவதருமங்களைச் செய்து வந்தார். இதுவே இல்லறத்தின் உயர்ந்த குறிக்கோள் ஆகும்.

 

         நாள்தோறும் சிவனடியார்களை விதி முறைப்படி இனியவாறு அன்புடன் முன்னே திருவமுதூட்டிப் பின்னே தாம் உண்ணும் நியதியினைக் கொள்ளுதல் சிறந்த சிவதருமம். இதனைப் பின்வரும் சேக்கிழார் அருட்பாடல் விளக்கும்.

 

"வேதகாரணர் அடியார்

     வேண்டிய மெய்ப்பணி செய்யத்

தீது இல் குடிப் பிறந்த

     திருவெண்காட்டு நங்கை எனும்

காதல் மனைக் கிழத்தியார்

     கருத்து ஒன்ற வரும் பெருமை

நீதி மனையறம் புரியும்

     நீர்மையினில் நிலை நிற்பார்".

 

     "வேதகாரணர்" என்றது, வேதங்களுக்கு மூலகாரணரான சிவபெருமானைன.

 

     கற்புடைய மனைவியே மனையறத்தின் வேராகி விளங்குபவர் என்பதையும், சிவன் அருளினாலும், சிவ தருமங்களும் அடியார் பணியும் செய்த நலத்தினாலும் நன்மகப்பேறு வாய்க்கும் என்பதையும் பின்வரும் பாடலால் சேக்கிழார் பெருமான் காட்டுகின்றார்...

 

நீர் ஆரும் சடைமுடியார்

    அருளினால், நிறைதவத்துப்

பேராளர் அவர்தமக்கு,

    பெருகுதிரு மனையறத்தின்

வேராகி விளங்கு திரு

    வெண்காட்டு நங்கைபால்

சீராள தேவர் எனும்

    திருமைந்தர் அவதரித்தார்.

 

     இந்த உண்மையை, மானக்கஞ்சாற நாயனார் வரலாற்றிலும் காணலாம்.

 

     அடியார்களின் அன்புச்செயல்கள் மிக்கபோது, அந்தப் பக்குவம் நோக்கி, அவரது அன்பினை நுகர்ந்து அருள்புரியும் பொருட்டு, சிவபெருமான் தாமே, மானிடச் சட்டை தாங்கி, வெளிப்பட்டு வந்து அருள் புரிவர்.

 

     பயிரவர் வேடம், சிவனடியார் திருவேடங்களுள் ஒன்று. மால் அற நேயம் மலிந்தவர் வேடத்தையும் அரன் எனவே கண்டு மகிழவேண்டும் என்பது மெய்கண்ட சாத்திரம்.

 

         அடியார்களின் அன்பின் திறத்தினை உலகறிய வெளிப்படுத்துதற்குச் சிவபெருமான் புரியும் திருவிளையாடல்கள் அளப்பில்லாதன. திருக்குறிப்புத் தொண்டர்பால் கந்தையினைக் கழுவக் கொடுத்தது. திருநீலகண்டருக்கு ஓடு கொடுத்தது. இயற்பகையாரிடம் அவரது மனைவியாரைக் கொடுக்கக் கேட்டது. கண்ணப்பர்பால் கண் பெற்றது. இவை யாவும் அவரவர் நிலைக்கு ஏற்ப அமைந்தது போலவே, சிறுத்தொண்டரிடம் பிள்ளைக் கறி கேட்டது. இவைகளை உலகியல் பாசநிலையினை வைத்து ஆராயமுடியாது. ஆராய்ந்தாலும் உண்மை விளங்காது.

 

     ஆசை, பாசம் என்பது வலிய பாசம் (கயிறு). இந்தக் கயிற்றினைக் கொண்டு மிகவும் வலியதான ஒரு வலை உயிர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு உள்ளது. அந்த வலையை அறுத்து வெல்லுதல் யார்க்கும் அரிது.

 

"மனை, மக்கள், சுற்றம், ...... எனும், மாயா

     வலையைக் கடக்க ...... அறியாதே,

வினையில் செருக்கி, ...... அடி நாயேன்

     விழலுக்கு இறைத்து ...... விடல் ஆமோ?"

 

என்னும் திருப்புகழ்ப் பாடல் வரிகள் மூலம் இது அறியப்படும்.

 

இத் திருப்புகழ்ப் பாடல் வரிகளின் பொருள் ---

 

     மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என்று சூழ்ந்துள்ள

மாயையாகிய வலையை அறுத்து எறிய அறிந்து கொள்ளாமல்,
நாய் போன்ற அடியேன், வினைவசத்தால் அகந்தை கொண்டு,

விழலாகிய புல்லுக்குத் தண்ணீர் இறைப்பது போல் வீணாகலாமா? (ஆகக் கூடாது.)

 

     இயல்பான காரணங்களால் மகனை இழக்க நேர்ந்தாலும் உயிர்விடும் மக்கள் உள்ளனர். இங்கே தாயும் தந்தையுமே தமது மகனை மனம் உவந்து அரிந்து, அமுதாக்கியது செயற்கரிய செயல் ஆகும். "வாளால் மகவு அரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்" என்று பட்டினத்தடிகள் வியந்து போற்றியது காண்க.

 

         மாதர்கள் மட்டும் இருக்குமிடத்தில், ஆண்மக்கள் இருத்தல் ஆகாது என்பது உலகியல் அறம். அதனால், சிறுத்தொண்டர் இல்லாத அவரது வீட்டில் பயிரவர் இருக்கச் சம்மதிக்கவில்லை. இக் கருத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான, "ஆசாரக் கோவை" என்னும் நூலில்

 

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்

சான்றார் தமித்தா உறையற்க, ஐம்புலனும்

தாங்கற்கு அரிது ஆகலான்.

 

என்று வலியுறுத்தப்பட்டது காண்க.

 

     அடியாராகிய பெரியோர்கள் மற்றும் சிவனடியார்களுடன் அன்றித் தாம் திருவமுது தனியே உண்ணமாட்டார்கள்.  இல்லறத்தில் நிற்போர் இல்லத்தில் திருவமுது உண்ணும் அடியார்கள், அந்த இல்லத்தில் உள்ளவர்களையும் உடன் இருத்தி உண்ணுதல் மரபு. அப்பூதி அடிகள் வரலாற்றிலும் இது குறிக்கப்பட்டது.

 

         இல்லறத்தில் வாழ்வோர் அடியார்க்கு அமுது படைத்தல் முதலிய அடியார் பணி, அரன் பணிகளைக் கணவன் மனைவி இருவரும் தம்மில் மனம் உவந்து, கருத்து ஒன்றிச் செய்தல் வேண்டும்.

 

         சிறுத்தொண்டரும், அவரது மனைவியாரும் பயிரவர் சொற்படி சென்று தமது மகனை அழைத்தபோது,  சீராள தேவர் மீள உயிர் பெற்று ஓடிவரக் கண்டபோது, எடுத்து அணைத்து மகிழ்ந்தனர். ஆனால் தமது மகனாரை மீளப்பெற்றது குறித்து அல்லாமல், தொண்டர் உண்ணப் பெற்றோம் என்னும் பொலிவால் மகிழ்ந்தனர். அடியார்க்குத் திருவமுதுக்கு தமது மைந்தன் உதவினான் என்று மகிழ்ந்தனர்.

 

     பொய் சொல்லுவது பெரும்பாலும், பொருள் கருதியும், காமம் கருதியுமே அமையும். இது தன்னலம் சார்ந்தது. இதனால் பழியும் பாவமும் வந்து சேரும். எனவே, பொய் சொல்லுதல் பாவம் எனவும், மெய்யைப் பேசுதல் அறம் எனவும் வகுக்கப்பட்டது.

 

     பொய் சொல்லுதல் பாவம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, உண்மையைப் பேசுவதும் சில நேர்வுகளில் தன்னலம் கருதியே அமைந்து விடும். அதனால், பிற உயிருக்குத் தீங்கு நேரும். எனவே, உண்மையைப் பேசுவதாலும், தீங்கு நேரும் என்பதைக் கொண்டு, திருவள்ளுவ நாயனார், மேற்குறித்த திருக்குறளை வகுத்தார்.

 

     அறம் சார்ந்த செய்திகளை அறிவுறுத்துவன புராணங்களும் இதிகாசங்களும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

 

     இத் திருக்குறளின் உண்மையை, பின்வரும் மகாபாரத நிகழ்வினால் தெளியலாம்...

 

     பாவத்தையே பயின்று வந்த துரியோதனன் சார்பில் துரோணர் இருந்து வந்தார். நல்லுரைகள் பல வழங்கியும் துரியோதனன் நல்வழிப்படவில்லை. ஆனாலும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க துரோணர் முதலானோர் கௌரவர் பக்கம் இருக்க வேண்டியதாயிற்று. அறத்தைக் காக்கவும், மறத்தை ஒழிக்கவும், பாரதப் போர் மூண்டது. பாரதப் போருக்கு வித்திட்டவன் கண்ணன்.

 

     பாரதப் போரின் பதினான்காம் நாளில், துரோணரின் உக்கிரமான போரினால் சோர்ந்து போயிருந்த பாண்டவர் படையினர், துரோணரை வீழ்த்த ஆழ்ந்த யோசனையில் இருந்தனர். துரோணரை தோற்கடித்தால் மட்டுமே கௌரவப் படையை வெல்ல முடியும், துரோணரின் பலமே அவரது மகன் அசுவத்தாமன் தான். அவன் மீது துரோணர் வைத்திருக்கும் அதீதமான பாசத்தை அவரிடமிருந்து பிரித்தால், அவரை வீழ்த்துவது எளிது என முடிவு செய்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, துரோணரைக் கொல்வதற்கு ஒரு உபாயமாக, "அசுவத்தாமன் இறந்து விட்டான்" என்று சொல்லுமாறு தருமரிடம் கூறுகின்றான் கண்ணன்.

 

     பொய் சொல்வது பெரும்பாவம்; எல்லாம் போய்விடும் என்கின்றார் தருமர்...

 

"அண்ணிய கிளையும், இல்லும்,

     அரும் பெறல் மகவும், அன்பும்,

திண்ணிய அறிவும், சீரும்,

     செல்வமும், திறலும், தேசும்,

எண்ணிய பொருள்கள் யாவும்,

     இயற்றிய தவமும், ஏனைப்

புண்ணியம் அனைத்தும் சேர,

     பொய்மையால் பொன்றும் அன்றே."

 

     இது வில்லிபாரதத்தில், தருமர் வாக்காக, ஆழ்வார் நமக்கு அறிவுறுத்தும் செய்திப் பாடல்.....

 

இதன் பொருள் ---

 

     மனை வாழ்க்கைத் துணையாகிய தாரமும்,  அரிய பெரிய மக்கள் செல்வமும், நெருங்கிய மற்ற உறவினரும், அன்பும், திண்மையான புகழும், மிக்க செல்வமும், வலிமையும், ஒளியும், மற்றும் எண்ணப்படும் பொருள்கள் யாவும், செய்த தவமும், மற்ற புண்ணியங்கள் யாவும், பொய்யைச் சொல்வதால் அப்பொழுதே அழிந்து விடும் அல்லவா?" (என்கின்றார் தருமர்.)

 

 

'உம்மையில் மறுமை தன்னில்

     உறு பயன் இரண்டும் பார்க்கின்,

இம்மையில் விளங்கும் யார்க்கும்

     அவர் அவர் இயற்கையாலே;

மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற

     விபத்தினை மீட்கும் ஆகின்,

பொய்ம்மையும் மெய்ம்மை போலப்

     புண்ணியம் பயக்கும் மாதோ!

 

     இது கண்ணன் செய்த உபதேசம்.

                  

இதன் பொருள் ---

 

     "இப்பிறப்பில் ஒருவர் அநுபவிக்கிற இன்ப துன்பங்களினால் முற்பிறப்பில் அவர் செய்த நல்வினை தீவினைகளை ஊகித்து அறியலாம். இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டு, வருபிறப்பில் அவர் அடையும் இன்பதுன்பங்களை ஊகித்து அறியலாம். பெரிய ஆபத்துக் காலத்தில் அதனை நீக்கும் பொருட்டுப் பொய் கூறலாம். அந்தப் பொய்யானது உண்மையைப் போலவே புண்ணியத்தின் பயனைத் தரும்" என்கிறான் கண்ணன்.

 

     அறம் சாராத கௌரவர்களை நிக்கிரகம் செய்து, அறம் சார்ந்துள்ள பாண்டவர்களுக்கு அனுக்கிரகம் புரியவேண்டி, துரோணருக்கு விடுதலை தருவதாகிய நன்மைக்குப் பொய் சொல்வதில் தவறில்லை எனப் பலவித நியாயங்களைத் தருமருக்குப் போதித்தான் கண்ணன்.

 

     கண்ணன் அறிவுறுத்திய உபாயத்தை ஏற்ற, தருமர், துரோணர் இருக்கும் இடம் சென்று, பகையை அழிக்கும் கொடிய வலிமை உடைய அசுவத்தாமா என்னும் மதம் பொருந்திய யானைக்கு பீமன் சிங்கமானான் என்னும் பொருள்படபட, "பீமன் அசுவத்தாமாவைப் போரிட்டுக் கொன்றான்" என்றான்.

 

     துரோணர் இதை நம்ப மறுத்தார். உத்தமர் ஆகிய தருமரைப் பார்த்து இது உண்மையா? என்று கேட்டார். தருமர் கண்ணனைப் பார்த்தார். தருமரின் எண்ண ஓட்டத்தை அறிந்த கண்ணன் புன்னகை புரிந்தார். தருமர் கனத்த மனதுடன் "அசுவத்தாமா ஹதா குஞ்சரகா" என்று சொல்லும்போது குஞ்சரகா (குஞ்சரம் --- யானை) என்ற கடைசி வார்த்தையானது துரோணரின் காதில் விழாதவாறு, கண்ணன் தனது சங்கை எடுத்து ஊதினார். "அசுவத்தாமா ஹதா" என்ற சொல் மட்டும் துரோணரின் காதில் விழுந்தது.

 

     கண்ணனின் ஆணைப்படி பீமன் அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்றிருந்தான். அது மட்டும் உண்மை. அந்த உண்மையைத் தான் துரோணரிடம் சொல்லுமாறு கண்ணன் பணித்தான். கண்ணன் பணித்தபடியே உண்மையைத் தான் தருமர் சொன்னார். ஆனால், அறத்தை நிலநாட்ட வேண்டுமே! கண்ணன் செய்த அந்த சதி நல்ல பலன் தந்தது. தனது மகன் அசுவத்தாமன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்ட துரோணர் சோர்ந்து போய்த் தேரைவிட்டுக் கீழே இறங்கி ஆயுதத்தைப் போட்டுவிட்டு இறக்கத் தயாரான மாதிரித் தரையில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் மூழ்கிவிட்டார். திட்டத்தூய்மன் வந்து துரோணரைக் கொன்றான்.

 

     பொய் சொல்லுவது பெரும்பாவம் தான். ஆனால், ஒரு ஆபத்தில் இருந்து நீங்கி, பெருநன்மை விளையுமானால், பொய்யையும் சொல்லலாம் என்பது கண்ணன் காட்டிய நீதி. இதையே, திருவள்ளுவ நாயனாரும் காட்டினார்.

 

     இதைத் தான், "மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற  விபத்தினை மீட்கும் ஆகில், பொய்ம்மையும் மெய்ம்மை போலப் புண்ணியம் பயக்கும்" என்ற வரிகளால் வில்லிப்புத்தூர் ஆழ்வார் விளக்கினார்.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல். இந்த நூலின் ஆசிரியர் யார் என்று விளங்கவில்லை. தம்மைக் காட்டிக் கொள்ளாமலேயே, நீதிநூல்களை வழங்கிய பெருமை தமிழ்ச் சமுதாயத்திற்கே உண்டு. அதன் பழம்பெருமையை மறந்து விடலாகாது.

  

     திருக்குறளுக்கோ, அது சார்ந்த பழம்பெரும் நூல்களுக்கோ "பதிப்புரிமை" இல்லை. அருளாசிரியர்கள் அவர்கள். திருக்குறளைப் பயின்றோரின் படைப்புக்களுக்கு "பதிப்புரிமை" உண்டாக்கப்படுகின்றது. பொருளாசிரியர்கள் இவர்கள். அன்பர்கள் விளங்கிக் கொள்வதற்காக இதைச் சொல்லவேண்டியதாயிற்று. அது கிடக்கட்டும். "திருப்புல்லாணி மாலை"ப் பாடலுக்கு வருவோம்.

 

"தாய்மலர் மங்கை தழைத்த புல்லாணி வந்தாய்பொய்ம்மையும்
வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனில்,
தூய்மன மெய்ந்நன்மை யாதேனும் இன்றிச்சொலும் பொய்ம்மையன்
ஆய், மெலிந்தேனை மெய் ஆளாக்கு இனிஉன் அடியிணைக்கே".

இதன் பொருள் ---

     எனது தாயாகிய திருமகளின் செல்வநலம் சிறந்து ஓங்கும் திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் வந்து திருக்கோயில் கொண்டு அமர்ந்த திருமாலே! குற்றத்தின் நீங்கிய நன்மையைப் பிறர்க்குத் தருவதாகில், சொல்லுகின்ற பொய்யும் மெய்யே என்றால், தூய்மையான மனம் இல்லாமல், நன்மை அற்ற சொற்களையே, உனது அருளாகிய நன்மையை வேண்டிப் பேசுபவன் ஆகி இளைத்த என்னை, உனது திருவடிக்கு உண்மைத் தொண்டன் ஆக்கி அருள்வாய்.

 

     பின்வரும் பாடல் இத் திருக்குறள் கருத்திற்கு ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்.

அயலார்செய் குற்றங்கள் கூறாமல்

             மறைத்தலே அறமாம், ன்னார்

துயர் உறா வண்ணம்நாம் பொய்த்தாலும்

             பிழைஅன்று, சொந்தமா ஓர்

பயன்வேண்டிச் சிறியதோர் பொய்சொலினும்

             பெரும்பழியாம், பார்மேல் கீழாய்

அயர்வாகப் புரண்டாலும் பிறர்க்கு இன்னா

             தரும்பொய்யை அறையல் நெஞ்சே.  ---  நீதிநூல்.

 

இதன் பொருள் ---

 

     மற்றவர்களுடைய நன்மைக்கு ஆகும் குற்றத்தைக் கூறாமல் நீக்குதலே நன்மையாம். அவர்கள் துன்புறாதபடி நாம் பொய் சொன்னாலும் குற்றமாகாது. நமக்கு ஒரு பயன் கருதிச் சிறு பொய் சொன்னாலும், அது பெரியதொரு பழியாகும். உலகம் கீழ்மேலாகத் தடுமாறினும் பிறர்க்குத் துன்பந் தரும் பொய்யை, மனமே! சொல்லாதே.

 

 

    

 

    

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...