சூர சம்மாரம்

 

 

சூர சம்மாரம் --- பொருள் என்ன?

-----

 

     ஆண்டுதோறும் கந்தர் சட்டி வருகின்றது. விரதம் இருக்கின்றோம். சூரசம்மாரத்தையும், முருகப் பெருமான் திருமணத்தையும் கண்டு களிக்கின்றோம்.

     இதன் உண்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றி சிந்திப்போம்.

சூரபதுமன் --- ஆணவ மலம்..

சிங்கமுகன் --- கன்ம மலம்.

கிரவுஞ்ச மலை --- வினைத்தொகுதி. (சஞ்சிதம், பிராரத்தம், ஆகாமியம் ஆகிய மூன்று விதமான வினைகளின் தொகுதி)

தாரகன் --- மாயா மலம். 

கடல் --- பிறவித் துன்பம்.

இச்சா சத்தி --- வள்ளிநாயகி. இச்சத்தி உயிர்களுக்கு மலத்தை நீக்கிச் சிவத்தை அளிக்கும்பொருட்டு  பெருங்கருணை கொள்ளும் சத்தி.  

ஞானசத்தி --- வேலாயுதம். உயிர்களின் மலத்தை நீக்கிச் சிவத்தை அளிப்பதற்கு வேண்டிய வழிவகைகளை அறியும் சத்தி. 

கிரியா சத்தி --- தெய்வயானை அம்மையார். படைத்தல் முதலிய ஐந்தொழில்களின் வழிவகைளைச் செய்யும் சத்தி.

     சூரபதுமன் அழியாத யாக்கையைப் பெற்றவன். வச்சிரம் போன்ற உடம்பு உடையவன். இது என்றும் அழியாது, பிறவிகள்தோறும் உயிருக்கு வந்து பொருந்துகின்ற ஆணவமலத்தைக் குறிக்கும்.

     சிங்கமுகாசுரன் என்பது உயிர்கள் இயற்றுகின்ற கன்மம் ஆகிய மலத்தைக் குறிக்கும். கன்மம் --- வினை அல்லது செயல். அது அறச் செயல், பாவச் செயல் என்று இருவகையாக இருக்கும். இச் செயல்கள் முறையே புண்ணியம் பாவம் ஆக மாறி, வினைத் தொகுதியில் சேரும்.

     இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

 

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.

     "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அருணகிரிநாதர் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்பார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

     கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. அது பொன்மலை. பொன் யாரையும் மயக்கும். கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

 

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட 

தனி வேலை வாங்கத் தகும்."

 

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

     "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

     வேல் --- வெல்லும் தன்மை உடையது. அது ஞானசத்தி என்னும் பதிஞானத்தைக் குறிக்கும். பதிஅறிவு. "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல். "வினை ஓட விடும் கதிர்வேல்" என்றார் அநுபூதியில். ஞானம் வெளிப்பட, மாயையும் ஆணவமும் அடங்கிப் போயின.

     அறிவின் தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும், வெற்றியைத் தருவதும், ஆணவமலத்தையும், வினைகளையும் அறுப்பது அறிவே ஆகும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், "போர்வேல்" எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல் கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவே, வேல், "நெடுவேல்" எனப்பட்டது.

     சிவபெருமான் தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார். அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்க்ளையும் அறுத்தார்.

     அலைகள் எழுவதால் கடலானது சதாகாலமும் இரைந்து கொண்டே இருக்கும். கடலால் சூழப்பட்டது இந்த உலகம். "அலைகடல் வளைந்து உடுத்த தலம்" என்பார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம்" என்பது புறநானூறு.

     காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை இங்குக் குறிக்கப்பட்டது.

     செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.

(1)   கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன. 

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள், நமக்கு நன்மை செய்வது போல் தோன்றி, தீமையை விளைக்கின்ற ஐம்புலன்கள் வாழ்கின்றனர். ஐம்புலன்களை வேடர் என்பது வழக்கம். வேடர்கள் ஆறு அலைப்பது போல, ஐம்புலன்கள் நமது உண்மை அறிவை விளங்கவொட்டாமல் செய்து அறிவை மயக்குகின்றன.

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

    நன்கு சிந்தித்துப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் இவ்வநுபவ மொழி நன்கு புலனாகும்.

     உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும், மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.

(1) ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100. இது பொய். உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன் புத்தகத்தை இருபக்கமும் கம்பியால் பொதிந்து விற்றுக்கொண்டு அலைய வேண்டாமே?

(2)       இந்த மருந்து பல வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3 மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000 இனாம். இதுவும் பொய். 

(3)       நோயில்லாத பொழுது, மருத்துவரிடம் பணம் தந்து, மருத்துவச் சான்றிதழ் பெற்று, விடுமுறை எடுத்தல். இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.

     பிறவியாகிய பெருங்கடலில், ஆணவமாகிய சூரபதுமன் ஒளிந்து இருந்தான். பின்னர் பெரிய மரமாக ஆனான். மாமரம் என்றால் பெரிய மரம் என்பது பொருள். அந்த மரம் எப்படி இருந்த்து என்பதை, கந்தபுராணத்தின் வாழிலாக அறியலாம். அரக்கர்களுக்கு மனிதப் பண்பு இருக்காது.  "இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினர், அரக்கர் என்று உள்ளர் சிலர், அறத்தின் நீங்கினார்" என்று கம்பராமாயணத்தில் அரக்கர்களின் நிலைமையைக் காட்டப்பட்டது. "மரம் போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்" என்றார் திருவள்ளுவ நாயனார். சூரபதுமன் கொண்டிருந்த மரத் தன்மையை அழித்தார் ஞானசத்திதரன் ஆகிய முருகப் பெருமான். சூரபதுமன் பிறவித் தன்மையில் இருந்து நீங்கினான். சேவலும் மயிலும் ஆனான். சேவலைத் தனது கொடியாக உயர்த்தி, மயிலைத் தனது ஊர்தியாகக் கொண்டார் முருகப் பெருமான். ஆணவமலம் நீங்கப் பெற்று, பிறவிக் கடலில் இருந்து தேறிய சூரபதுமன், புனிதம் பெற்றான். இன்று அவனைத் தான் நாம் மயில் வடிவிலும், சேவல்கொடி வடிவிலும் வணங்குகின்றோம். சூரத்தன்மை சம்மாரம் ஆனதால், ஆன்மா உயர் நிலை பெற்றது.

     பிறவியாகிய பெருங்கடலில் அழுந்தித் தானும் துன்புற்று, பிறரையும் துன்புறுத்துகின்ற, ஆன்மாக்களை, முத்தியாகிய கரையில் இருந்து, ஞானசத்தியைக் கொண்டு வெற்றிகொண்டு, முத்திக் கரையில் இறைவன் சேர்த்த உண்மைதான் இது. முத்திக் கரையில் இருந்த நகரம், ஆன்மாக்களை வெற்றி கொண்ட, "ஜெயந்தி நகரம்", செந்தி நகரம் என்று ஆகி, இறுதியில், செந்தில் என்று மருவி, இப்போது, திருச்செந்தூர் என்று வழங்கப்படுகின்றது.

     இங்கே சொல்லப்பட்ட பிறவிக் கடலும் இது அல்ல. செந்தி நகரமும் இது அல்ல. நம்முடைய பாவனை.

     சூரசம்மாரம் முடிந்த பின்னர், முருகப் பெருமான், தேவேந்திரானல் தனக்கு அளிக்கப்பட்ட, கிரியாசத்தி ஆகிய தேவயானை அம்மையாரைத் திருமணம் புணர்ந்தார்.

     இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார், சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்து, தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார்.

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

     ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனத்தில், மெய்ம்மையான உழவைச் செய்து, நல்ல எண்ணங்கள் ஆகிய தினைப்பயிர் வளர்ந்துகொண்டு இருக்கின்றது. அது வளர்ந்து ஞானானுபவம் ஆகிய பசுங்கதிர் உண்டாகும். நல்லெண்ணம் ஆகிய தினைப்பயிரை, தீயஎண்ணங்கள் ஆகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாமல் காவல் புரிந்து கொண்டு இருந்தவர், சீவான்மா ஆக உருவெடுத்து வந்த எம்பிராட்டி, அகிலாண்ட நாயகியாகிய வள்ளித் தாயார். அந்த சீவான்மாவைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார் ஆறுமுகப் பரம்பொருள்.

 

     நாமும், ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்கள் அற்ற சீவான்மாவாக விளங்கி, நல்லெண்ணங்களை வளர்த்து, ஞானானுபவத்தைப் பெற்று விளங்குவோமானால், எம்பெருமான் வந்து ஆட்கொண்டு அருள் புரிவான்.

 

     இதனை விளக்குவதே, சூரசம்மாரம் மற்றும் தேவயானை, வள்ளித் திருமணங்கள்.

 

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...