ஊழை வெல்லுதல் எளிது!!!!!

 

ஊழை வெல்லுதல் எளிது

----

     திருக்குறளில் "ஆள்வினை உடைமை" என்னும் அதிகாரத்தில் வரும் திருக்குறளில், "பயனை விலக்குவதாகிய ஊழையும் புறம் காண்பர், அவ் விலக்கிற்கு இளையாமல், தொழிலைத் தாழ்வு அற முயலுபவர்" என்கின்றார் நாயனார்.

 

     ஊழின் வலியானது, தன் வழியாக வராதபோது ஒருவன் எடுத்த காரியத்தை விலக்கும். அப்போது எடுத்த முயற்சியை விடாது செய்து வந்தால், அந்த முயற்சியே ஊழாகி, எடுத்த தொழில் முற்றுப் பெறுவதோடு, எண்ணிய பயனையும் தந்துவிடும். எனவே, தொடர் முயற்சியானது, முன் இருந்து ஊழை விலக்கி, நற்பயனைத் தந்துவிடும்.

 

     ஊழ் என்னும் அதிகாரத்தில், ஊழின் தன்மையைக் குறித்து நாயனார் கூறவந்தபோது, ஊழானது வலிமையை உடையது என்றும், அதனைப் போக்க ஓர் உபாயத்தால் முயன்றாலும், ஊழானது வந்து முன் நின்று, முயற்சியைத் தடுக்கும்" என்று கூறிய நாயனார், இங்கே, ஊழை உப்பக்கம் காண்பது குறித்து அறிவுறுத்துகின்றார்.

 

 

"ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவு இன்றித்

தாழாது உஞற்று பவர்".

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.                

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

 

பாலன் ஒருவன் பணிந்து கடவூர் அரனைக்

காலற் கடந்து இருக்கக் கண்டோமே --- ஞாலத்தின்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

தாழாது உஞற்று பவர்.

 

இதன் பொருள் ---

 

         விடா முயற்சியால் விதியையும் கடக்கலாம் என்பது கூறப்பட்டது.

 

     பாலன் --- மார்க்கண்டேயன். கடவூரன் --- திருக்கடவூரில் கோயில் கொண்டுள்ள சிவபெருமான். காலற் கடந்து --- யமனை வென்று. மார்க்கண்டேயன் பொருட்டுச் சிவபெருமான் இயமனைச் சங்கரித்தது யாவரும் அறிந்ததே.

 

மார்க்கண்டேயர் வரலாறு

 

     அநாமயம் என்னும் வனத்தில் கவுசிக முனிவரது புத்திரராகிய மிருகண்டு என்னும் பெருந்தவ முனிவர் முற்கால முனிவரது புத்திரியாகிய மருத்துவதியை மணந்து தவமே தனமாகக் கொண்டு சித்தத்தைச் சிவன்பால் வைத்திருந்தனர். நெடுங்காலம் மக்கட்பேறு இல்லாமையால் மனம் வருந்தி, காசித் திருத்தலத்தை அடைந்து, மணிகர்ணிகையில் நீராடி, விசுவேசரை நோக்கி ஓராண்டு பெருந்தவம் புரிந்தனர். வேண்டுவார் வேண்டிய வண்ணம் நல்கும் விடையூர்தி விண்ணிடைத் தோன்றி, “மாதவரே! நினக்கு யாது வரம் வேண்டும்?” என்றனர்.

 

     முனிவர் பெருமான் புரமூன்று அட்ட பூதநாயகனைப் போற்றி செய்து புத்திர வரம் வேண்டும் என்றனர்.

 

     அதுகேட்ட ஆலம் உண்ட நீலகண்டர் புன்னகை பூத்து, “தீங்குறு குணம், ஊமை, செவிடு, முடம், தீராப்பிணி, அறிவின்மையாகிய இவற்றோடு கூடிய நூறு வயது உயிர்வாழ்வோனாகிய மைந்தன் வேண்டுமோ? அல்லது சகலகலா வல்லவனும், கோல மெய்வனப்பு உடையவனும், குறைவிலா வடிவு உடையவனும், நோயற்றவனும், எம்பால் அசைவற்ற அன்பு உடையவனும் ஆகி, பதினாறாண்டு உயிர் வாழ்பவனுமாகிய மைந்தன் வேண்டுமா? பகருதி” என்றனர்.

 

"தீங்கு உறு குணமே மிக்கு, சிறிது மெய் உணர்வு இலாமல்,

மூங்கையும் வெதிரும் ஆகி, முடமும் ஆய், விழியும் இன்றி,

ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப்போன் ஆகி,

ஈங்கு ஒரு புதல்வன் தன்னை ஈதுமோ மா தவத்தோய்",    

     

"கோலமெய் வனப்பு மிக்கு, குறைவு இலா வடிவம் எய்தி,

ஏல் உறு பிணிகள் இன்றி, எமக்கும் அன்பு உடையோன் ஆகி,

காலம் எண் இரண்டே பெற்று, கலைபல பயின்று வல்ல

பாலனைத் தருதுமோ? நின் எண்ணம் என் பகர்தி" என்றான்.   --- கந்த புராணம்.

 

     முனிவர், “வயது குறைந்தவனே ஆயினும் சற்புத்திரனே வேண்டும்” என்றனர். அவ்வரத்தை நல்கி அரவாபரணர் தம் உருக் கரந்தனர்.

 

மாண் தகு தவத்தின் மேலாம் மறை முனி அவற்றை ஓரா,

"ஆண்டு அவை குறுகினாலும் அறிவுளன் ஆகி, யாக்கைக்கு

ஈண்டு ஒரு தவறும் இன்றி, எம்பிரான் நின்பால் அன்பு

பூண்டது ஓர் புதல்வன் தானே வேண்டினன், புரிக" என்றான். --- கந்த புராணம். 

        

     ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியின் அருளால் மிருகண்டு முனிவரின் தரும பத்தினியாகிய மருந்துவதி காலனது இடத்தோள் துடிக்கவும், பூதல இடும்பை நடுங்கவும், புரை தவிர் தருமம் ஓங்கவும், மாதவ முனிவர் உய்யவும், வைதிக சைவம் வாழவும் கருவுற்றனள். பத்து மாதங்களுக்குப் பின் இளஞ்சூரியனைப் போல் ஒரு மகவு தோன்றியது. தேவ துந்துபிகள் ஆர்த்தன; விண்ணவர் மலர்மழைச் சிந்தினர். முனிவர் குழாங்கள் குழுமி ஆசி கூறினர். பிரமதேவன் வந்து மார்க்கண்டன் என்று பேர் சூட்டினன். ஐந்தாவாது ஆண்டில் சகல கலையும் கற்று உணர்ந்த மார்க்கண்டேயர் சிவபக்தி, அறிவு, அடக்கம், அடியார் பக்தி முதலிய நற்குணங்களுக்கு உறைவிடமாயினர். பதினைந்து ஆண்டுகள் முடிந்து பதினாறாவது ஆண்டு பிறந்தது. அப்பொழுது தந்தையும் தாயும் அவ்வாண்டு முடிந்தால் மகன் உயிர் துறப்பான் என்று எண்ணி துன்பக் கடலில் மூழ்கினர். அதுகண்ட மார்க்கண்டேயர் இரு முதுகுரவரையும் பணிந்து “நீங்கள் வருந்துவதற்கு காரணம் யாது?’ என்று வினவ, “மைந்தா! நீ இருக்க எமக்கு வேறு துன்பமும் எய்துமோ? சிவபெருமான் உனக்குத் தந்த வரம் பதினாறு ஆண்டுகள் தாம். இப்போது உனக்குப் பதினைந்தாண்டுகள் கழிந்தன; இன்னும் ஓராண்டில் உனக்கு மரணம் நேருமென எண்ணி ஏங்குகின்றோம்" என்றனர்.

 

     மார்க்கண்டேயர், “அம்மா! அப்பா! நீவிர் வருந்த வேண்டாம்; உமக்கு வரமளித்த சிவபெருமான் இருக்கின்றனர், அபிஷேகம் புரிய குளிர்ந்த நீர் இருக்கிறது, அர்ச்சிக்க நறுமலர் இருக்கிறது, ஐந்தெழுத்தும் திருநீறும் நமக்கு மெய்த்துணைகளாக இருக்கின்றன. இயமனை வென்று வருவேன். நீங்கள் அஞ்சன்மின்” என்று கூறி விடைபெற்று, காசி க்ஷேத்திரத்தில் மணிகர்ணிகையில் நீராடி, சிவலிங்கத்தைத் தாபித்து, நறுமலர் கொண்டு வணங்கி வாழ்த்தி வழிபாடு புரிந்து நின்றனர். என்பெலாம் உருகி விண்மாரி எனக் கண்மாரி பெய்து, அன்பின் மயமாய்த் தவம் இயற்றும் மார்க்கண்டேயர் முன் சிவபெருமான் தோன்றி “மைந்தா!  நினக்கு யாது வரம் வேண்டும்” என்றருள் செய்தனர். மார்க்கண்டேயர் மூவருங்காணா முழுமுதற் கடவுளைக் கண்டு திருவடிமேல் வீழ்ந்து,

 

ஐயனே! அமலனே! அனைத்தும் ஆகிய

மெய்யனே! பரமனே! விமலனே! அழல்

கையனே! கையனேன் காலன் கைஉறாது

உய்ய, நேர் வந்து நீ உதவு என்று ஓதலும்’     --- கந்தபுராணம்.

 

     சங்கரா! கங்காதரா! காலன் கைப்படாவண்ணம் காத்தருள்வீர்” என்று வரம் இரந்தனர். கண்ணுதல் “குழந்தாய்! அஞ்சேல், அந்தகனுக்கு நீ அஞ்சாதே! நம் திருவருள் துணை செய்யும்” என்று அருளி மறைந்தனர்.

 

     மார்க்கண்டேயர் காலம் தவறாது நியமமொடு சிவபெருமானை ஆராதித்து வந்தனர். பதினாறாண்டு முடிந்து, இயமதூதன் விண்ணிடை முகிலென வந்து, சிவார்ச்சனை புரிந்து கொண்டிருக்கிற மார்க்கண்டேயரை கண்டு அஞ்சி சமீபிக்கக் கூடாதவனாய் திரும்பி, சைமினி நகரம் போய், தனது தலைவனாகிய கூற்றுவனுக்குக் கூற, இயமன் சினந்து, “அச்சிறுவனாகிய மார்க்கண்டன் ஈறில்லாத ஈசனோ?” என்று தனது கணக்கராம் சித்திரகுத்திரரை வரவழைத்து மார்க்கண்டரது கணக்கை உசாவினன். சித்திர குத்திரர் “இறைவ! மார்க்கண்டேயருக்கு ஈசன் தந்த பதினாறாண்டும் முடிந்தது. விதியை வென்றவர் உலகில் ஒருவரும் இல்லை; மார்க்கண்டேயருடைய சிவபூசையின் பயன் அதிகரித்துள்ளதால் நமது உலகை அவர் அடைவதற்கு நியாயமில்லை; அவர் திருக்கயிலாயம் செல்லத் தக்கவர்” என்று கூறினர். இயமன் உடனே தம் மந்திரியாகிய காலனை நோக்கி “மார்க்கண்டேயனை பிடித்து வருவாயாக” என்றனன். காலன் வந்து அவருடைய கோலத்தின் பொலிவையும் இடையறா அன்பின் தகைமையையும் புலனாகுமாறு தோன்றி, முனிகுமாரரை வணங்கி காலன் அழைத்ததைக் கூறி “அருந்தவப் பெரியீர்! எமது இறைவன் உமது வரவை எதிர் பார்த்துளன்; உம்மை எதிர்கொண்டு வணங்கி இந்திர பதவி நல்குவன்; வருவீர்” என்றனன். அதுகேட்ட மார்க்கண்டேயர் “காலனே! சிவனடிக்கு அன்பு செய்வோர் இந்திரனுலகை விரும்பார்.”

 

நாதனார் தமது அடியவர்க்கு அடியவன் நானும்,

 ஆதலால் நுமது அந்தகன் புரந்தனக்கு அணுகேன்,

 வேதன்மால் அமர் பதங்களும் வெஃகலன், விரைவில்

 போதிபோதி என்றுஉரைத்தலும் நன்றுஎனப் போனான்.”

                                    

     அது கேட்ட காலன் நமன்பால் அணுகி நிகழ்ந்தவை கூற, இயமன் வடவை அனல் போல் கொதித்து, புருவம் நெறித்து, விழிகளில் கனற்பொறி சிந்த, எருமை வாகனம் ஊர்ந்து பரிவாரங்களுடன் முனிமகனார் உறைவிடம் ஏகி, ஊழிகாலத்து எழும் கருமேகம் போன்ற மேனியும் பாசமும் சூலமும் ஏந்திய கரங்களுமாக மார்க்கண்டேயர் முன் தோன்றினன்.

 

     அந்தகனைக் கண்ட அடிகள் சிறிதும் தமது பூசையினின்று வழுவாதவராகி சிவலிங்கத்தை அர்ச்சித்த வண்ணமாயிருந்தனர். கூற்றுவன் “மைந்தா! யாது நினைந்தனை? யாது செய்தனை? ஊழ்வினையைக் கடக்கவல்லார் யாவர்? ஈசனாரது வரத்தை மறந்தனை போலும், நீ புரியும் சிவபூசை பாவத்தை நீக்குமே அல்லாது, யான் வீசும் பாசத்தை விலக்குமோ? கடற்கரை மணல்களை எண்ணினும், ககனத்து உடுக்கைகளை எண்ணினும் எண்ணலாம்; எனது ஆணையால் மாண்ட இந்திரரை எண்ண முடியுமோ? பிறப்பு இறப்பு என்னும் துன்பம் கமலக்கண்ணனுக்கும் உண்டு, கமலாசனுக்கும் உண்டு; எனக்கும் உண்டு; ஆகவே பிறப்பு இறப்பு அற்றவர் பரஞ்சுடர் ஒருவரே. தேவர் காப்பினும், மூவர் காப்பினும், மற்ற எவர் காப்பினும், உனது ஆவி கொண்டு அல்லது மீண்டிடேன்; விரைவில் வருதி” என்றனன்.

 

     மார்க்கண்டேயர் “அந்தகா! அரன் அடியார் பெருமை அறிந்திலை; அவர்களுக்கு முடிவில்லை; முடிவு நேர்கினும் சிவபதம் அடைவரே அன்றி நின் புரம் அணூகார். சிவபிரானைத் தவிர வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையார்; தணிந்த சிந்தையுடைய அடியார் பெருமையை யாரே உரைக்கவல்லார்; அவ்வடியார் குழுவில் ஒருவனாகிய என் ஆவிக்குத் தீங்கு நினைத்தாய்; இதனை நோக்கில் உன் ஆவிக்கும் உன் அரசுக்கும் முடிவு போலும்.

 

தீது ஆகின்ற வாசகம் என்தன் செவிகேட்க

ஓதா நின்றாய்,மேல் வரும் ஊற்றம் உணர்கில்லாய்,

பேதாய், பேதாய், நீ இவண் நிற்கப் பெறுவாயோ,

போதாய் போதாய்” என்றுஉரை செய்தான் புகரில்லான்.       --- கந்தபுராணம்

 

     இவ்விடம் விட்டு விரைவில் போதி” என்ற வார்த்தைகளைக் கேட்ட மறலி, மிகுந்த சினங்கொண்டு, “என்னை அச்சுறுத்துகின்றனை? என் வலிமையைக் காணுதி” என்று ஆலயத்துள் சென்று பாசம் வீசுங்கால், மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைத் தழுவி சிவசிந்தனையுடன் நின்றனர். கூற்றுவன் உடனே பாசம் வீசி ஈர்த்திடல் உற்றான். பக்த ரட்சகராகிய சிவமூர்த்தி சிவலிங்கத்தினின்றும் வெளிப்பட்டு “குழந்தாய் ! அஞ்சேல், அஞ்சேல், செருக்குற்ற இயமன் நின் உயிர் வாங்க உன்னினன்” என்று தனது இடது பாதத்தை எடுத்து கூற்றுவனை உதைத்தனர். இயமன் தன் பரிவாரங்களுடன் வீழ்ந்து உயிர் துறந்தான். சிவபிரான் மார்க்கண்டேயருக்கு அந்தமிலா ஆயுளை நல்கி மறைந்தனர். மார்க்கண்டேயர் தந்தை தாயை அணுகி நிகழ்ந்தவைக் கூறி அவர்கள் துன்பத்தை நீக்கினர். நெடுங்காலத்துக்குப் பின் மரண அவத்தையின்றி பூபார மிகுந்தது. தேவர்கள் வேண்ட சிவபிரான் இயமனை உயிர்ப்பித்தனர்.

 

மதத்தான் மிக்கான் மற்று இவன் மைந்தன் உயிர் வாங்கப்

பதைத்தான் என்னா உன்னி, வெகுண்டான், பதி மூன்றும்

சிதைத்தான், வாமச் சேவடி தன்னால் சிறிது உந்தி

உதைத்தான், கூற்றன் விண் முகில் போல் மண் உறவீழ்ந்தான்.    --- கந்தபுராணம்.

 

நலமலி தருமறை மொழியொடு

         நதிஉறு புனல், புகை, ஒளிமுதல்,

மலர்அவை கொடுவழி படுதிறல்

         மறையவன் உயிர் அது கொளவரு

சலமலி தரு மறலி தன்உயிர்

         கெட உதை செய்தவன் உறைபதி

திலகம் இது என உலகுகள் புகழ்

         தருபொழில் அணிதிரு மிழலையே.---  திருஞானசம்பந்தர்.

 

நன்றுநகு நாள்மலரால் நல்இருக்கு மந்திரம்கொண்டு

ஒன்றி, வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்

கன்றிவரு காலன்உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்

கொன்றைமலர் பொன்திகழும் கோளிலி எம் பெருமானே.---  திருஞானசம்பந்தர்.

 

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து

ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரைக் கொல்வான்,

சாற்றுநாள் அற்றது என்று, தருமராசற்காய் வந்த

கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்ட னாரே.--- அப்பர்.

 

மருள்துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்கு ஆய்

இருட்டிய மேனி வளைவாள் எயிற்று எரி போலும் குஞ்சிச்

சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து, உங்ஙனே

உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே. --- அப்பர்.

 

அந்தணாளன்உன் அடைக்கலம் புகுத

         அவனைக் காப்பது காரணமாக

வந்தகாலன் தன்ஆருயிர் அதனை

         வவ்வினாய்க்கு உன்தன் வண்மைகண்டு,டியேன்

எந்தை!நீ எனை நமன் தமர் நலியில்

         இவன்  மற்றுஎன் அடியான் என விலக்கும்

சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்

         செழும்பொழில் திருப்புன் கூர்உளானே. --- சுந்தரர்.

 

தூமொழி நகைத்துக் கூற்றை மாளிட

     உதைத்துக் கோத்த தோள்உடை

     என்அப்பர்க்கு ஏற்றி      திரிவோனே    ----(வார்குழல்) திருப்புகழ்.

 

     தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் பதினாறு ஆண்டுகள் என்று இருந்ததை, மார்க்கண்டேயர் புரிந்த இடைவிடாத சிவபூசை மாற்றிது. மார்க்கண்டேயர் புரிந்தது இடைவிடாத சிவபூசை. அதன் பலனாக, இயமனை உதைத்து, வாழ்நாள் முடிவை மாற்றியது இறைவன்.

 

     நமக்கு வாய்த்துள்ள இந்தப் பிறவி, முற்பிறவிகளில் நாம் செய்து வைத்திருந்த வினைகளின் பயனாக வந்தது. இது கடல் அலைபோல காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் வந்துகொண்டே இருக்கும். இதனை அறுக்க வேண்டும் என்றால், நம்முடைய இடைவிடாத முயற்சி மட்டுமே போதாது. இறையருளும் துணை நிற்க வேண்டும்.    நம்முடைய இடைவிடாத முயற்சியே ஊழாக நின்று, ஊழ்வினையை அறுக்கும். இயமன் வடிவில் வந்த ஊழை உப்பக்கம் காணச் செய்தது இறைவன். அதனைக் கண்டகூடாகக் கண்டவர் மார்க்கண்டேயர். எனவே, "உப்பக்கம் காண்பர்" என்று நாயனார் அருளினார்.

 

     அடுத்து,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் திருமூல நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியருளிய ஒரு பாடல்...

 

பரகாயம் சேர்ந்தார் பசுக்களால் ஆய்ச்சி

மருவாமல் மாதவமே வாய்ந்தார் --- திருமூலர்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர்.              

 

இதன் பொருள் ---

 

         திருக்கயிலாய மலையிலே திருநந்திதேவருடைய மாணாக்கர்களில் சிவயோகி ஒருவர் பொதிகை மலையில் இருந்த அகத்தியரைக் காண மிக்க அவா உற்றார். திருக்கயிலாயத்தை அகன்று வழிக்கொண்தடு, திருக்கேதாரம், பசுபதி நேபாளம், காசி. சீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சிபுரம், திருவதிகை, சிதம்பரம் முதலிய தலங்களை வணங்கித் திருவாவடுதுறையை அடைந்து சிவதரிசனம் செய்து இருந்தார். திருவாவடுதுறையை அடுத்து உள்ள சாத்தனூரின் அருகிலே பசுக்கள் கூடி, அங்கே இறந்து கிடந்த மேய்ப்போன் ஆகிய மூலன் உடலைச் சுற்றிச்சுற்றிக் கதறுவதைக் கண்டார். மனம் இரங்கினார். மூலன் மாண்ட உடம்பில் தான் பரகாயப் பிரவேசம் செய்தார். எழுந்து, பசுக்கள் மனம் துன்புறாமல் மகிழச் செய்தார். பின்பு நன்றாக மேய்த்துப் பசுக்களின் பின்பே சென்று அவைகள் வீட்டில் புகத் தாம் வெளியே நின்றார். மூலன் மனைவி கிட்டிவர அவளைத் தொடாமல், உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை என மறுத்தார். ஊரார் உண்மையை உணர்ந்தனர். திருமூலர் மறுநாள் சென்று சேமித்த இடத்தில் தமது உடலைக் காணாமையால் திருவருட் செயல் இது எனத் தேர்ந்தார். திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் திருவாவடுதுறையிலே அரசின்கீழ் சிவயோகத்தில் அமர்ந்து இருந்தார். மூவாயிரம் திருமந்திரங்களை அருளிச் செய்தார். 

 

         பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர், அவ் விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார் எனத் திருவள்ளுவர் அருளியமை காண்க.

 

         பரகாயம் --- மறுகூடு.  ஓருடம்பை விட்டு மற்றோர் உடம்பில் புகுதல். ஆய்ச்சி --- இடைச்சி, என்றது மூலனாகிய இடையன் மனைவியை. உலைவின்றி --- இளையாது. உஞற்றுபவர் --- முயல்பவர்.

                                                                       

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

செய்துசிவ பூசை சிரஞ்சீவி ஆம்அபயம்

எய்தினன்மார்க் கண்டன் இரங்கேசா - நொய்தாக

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்

தாழாது உஞற்று பவர்.

 

இதன் பொருள் --- 

 

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! சிவபூசை செய்து --- பத்தி வைராக்கியச் சுத்தமனத்தோடு சிவலிங்க பூசை செய்து, மார்க்கண்டன் --- மார்க்கண்டேய மாமுனிவர், சிரஞ்சீவி ஆம் அபயம் எய்தினன் --- என்றும் சாகாமல் உயிருடன் இருக்கும்படி (சிவபெருமானிடத்தில்) அபயதானம் பெற்றார்,  (ஆகையால், இது)   உலைவு இன்றி தாழாது --- ஊழின் விலக்குக்குப் பின்வாங்கித் தாமதிக்காமல், நொய்து ஆக --- (அதை) அற்பமாக மதித்து, உஞற்றுபவர் --- முயற்சி செய்பவர், ஊழையும் --- (பயனை விலக்குவதாகிய) விதியையும், உப்பக்கம் காண்பர் --- முதுகு காட்டி (தோற்கக்) காண்பார்கள் (என்பதை விளக்குகின்றது).

 

         கருத்துரை --- விதியை மதியால் வெல்லலாம்.

 

     மார்க்கண்டேயர் வரலாறு மேலே சொல்லப்பட்டுள்ளது காண்க.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

ஆள்வினையால் மிக்கதவம் ஆற்றிச் சுவேதமன்னன்

மூள்வினைஅற்று உய்ந்தான், முருகேசா! - கோள்வினையாம்

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்

தாழாது உஞற்று பவர்.                   

 

இதன் பொருள் ---

 

         முருகேசா --- முருகப் பெருமானே, சுவேத மன்னன் --- சுவேத ராசன் என்பவன், ஆள்வினையால் --- மிகுந்த முயற்சியால், மிக்க தவம் ஆற்றி --- மிகுந்த தவத்தைச் செய்து, மூள்வினை அற்று உய்ந்தான் --- நெருங்கிய தீவினையை வென்று நல்வாழ்க்கை பெற்றான். கோள் வினையாம் --- கோள்களால் உண்டாகும் தீவினையாகிய, ஊழையும் --- ஊழ்வினையையும், உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் --- சோர்வு இல்லாமல் முயற்சியைச் செய்கின்றவர்கள், உப்பக்கம் காண்பர் --- தோல்வி அடையச் செய்வார்கள்.

 

         சுவேதன் என்னும் அரசன் மிகுந்த முயற்சியோடு தவம் செய்து சூழ்வினையை நீக்கி நல்வாழ்வு பெற்றான். சிறிதும் தளர்ச்சி இல்லாமல் இடைவிடாது முயற்சி செய்பவர் ஊழ் என்னும் வினையையும் வெல்வர் என்பதாம்.

 

                                    சுவேத மன்னன் கதை

 

         சுவேத மன்னன் என்பவன், தன்னுடைய அரசாட்சியை மகனிடம் ஒப்புவித்துவிட்டு, மனைவியோடு காட்டை அடைந்து முனிவனாகித் தவம் செய்துகொண்டு இருந்தான். அப்போது அவனுடைய மனைவிக்குச் சாவுத் துன்பம் உண்டாகியது.  அதனைக் கண்டு, "அந்தோ, இத்தகைய துன்பம் என்னையும் வருத்துமே" என்று அஞ்சினான். சுக்கிராசாரியாரை அடைந்து வழிபட்டுச் சாவுத் துன்பம் நீங்கும்படி மிருத்தியுஞ்சய மந்திரோபதேசம் பெற்று, அவர் கூறியவாறே பல சிவப்பதிகளையும் வழிபட்டுத் திருநெல்வேலியை அடைந்து சிவவழிபாடு செய்து, அகத்திய முனிவரால் அவ் ஊரின் பெருமையை அறிந்து, கடவுளை வழிபட்டுத் தங்கி இருந்தான்.  அங்கே சாங்காலம் நெருங்கியபடியினால் நமன் அச்சுறுத்திப் பாசக்கயிற்றை எறிந்து பற்றினான். அரசன் சிறிதும் அஞ்சாது சிவபெருமானுடைய திருப்பெயர்களைக் கூறிக்கொண்டிருந்தான்.

சிவபிரான் எழுந்தருளி இயமனை உதைத்து அரசனைக் காப்பாற்றி அருளினார். அரசன் தன்னுடைய விடாமுயற்சியினால் சாவுத் துன்பத்திலிருந்து விடுபட்டான்.

 

     பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

                                                     

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று

தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ? அல்லல்

இழுகினான் ஆகாப்பது இல்லையே, முன்னம்

எழுதினான் ஓலை பழுது.      --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று - முழுது உலகத்தையும் முன்னே உண்டாக்கியவன் நமக்காக அல்லலையும் படைத்தான் என்று நினைத்து, தொழுது இருந்தக் கண்ணே அல்லல் ஒழியுமோ --- இது அவனாலேயே நீங்கும் போலும் என்று நினைத்து அவனையே தொழுதுகொண்டு முயற்சியின்றி இருப்பின் துன்பம் நீங்குமோ? முன்னம் ஓலை பழுது எழுதினான் --- முதலில் ஓலையைப் பழுதுபட எழுதியவன், இழுகினானாக --- தாம் குற்றம் செய்தவனாக அறிந்தபின், காப்பது இல்லை --- செய்த குற்றத்தைப் பாதுகாப்பதில்லை. (உடனே நீக்குவன் என்பதாம்.)

 

         துன்பம் தெய்வத்தால் வந்ததாயினும் அதனை நீக்க முயற்சி செய்க.

 

         ஓலையைப் பழுதாக எழுதினான் அப்பழுதினையே பாதுகாவாது நீக்குதல்போல, முயற்சி செய்து அல்லலை நீக்குக வென்பதாம்.

 

        

உலையா முயற்சி களைகணா ஊழின் 

வலிசிந்தும் வன்மையும் உண்டே - உலகுஅறியப் 

பால்முளை தின்று மறலி உயிர்குடித்த 

கால்முளையே போலும் கரி.         --- நீதிநெறி விளக்கம். 

 

        

இதன் பொருள் ---

 

     உலையா முயற்சி --- இளைத்தலில்லாத முயற்சியையே, களைகண்ணா --- பற்றுக்கோடாகக் கொண்டு, ஊழின்வலி --- போகு ஊழினது வலிமையை, சிந்தும் --- சிதைக்கின்ற, வன்மையும் உண்டே --- வலிமையும் உண்டு, உலகறிய --- உலகம் அறிய, பால்முளை தின்று --- ஊழ்வினையின் முளையைத் தின்று, மறலி உயிர் குடித்த --- கூற்றுவனது உயிரையும் குடித்த கால்முளையே --- மார்க்கண்டன் என்னும் சிறுவனே, கரி --- சான்றாவன்.

 

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...