பாடல் 14

“இல்லும் பொருளும் இருந்த மனையளவே,

சொல்லும் அயலார் துடிப்பளவே, நல்ல

கிளைகுளத்து நீர்அளவே, கிற்றியே, நெஞ்சே!

வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.”


இதன் பொருள் ---

    இல்லும் பொருளும் இருந்த மனை அளவே - (உயிர் பிரிந்த பின்னர்) மனைவியும் பொருள்களும் குடி இருந்த மனையின் அளவே நின்று விடுவன. சொல்லும் அயலார் துடிப்பு அளவே - அயலார்களின் சொல்லின் துணையும் உயிர்ப்புத் துடிப்பு உள்ள அளவும், இறந்த பின்னர் சொல்லும் இரக்கச் சொல்லலின் அளவும்தான். நல்ல கிளை குளத்து நீர் அளவே - நல்ல சுற்றத்தார்களது தொடர்ச்சியும் சுடுகாடு வரை பின்தொடர்ந்து, பின்னர் நீர்மூழ்கும் குளத்தின் மட்டுமே. கிற்றியே நெஞ்ச – மனமே இதனை நீ அறியவல்லையானால், வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து – திருவளைகுளம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபரம்பொருளையே வாழ்த்துவாயாக.


பட்டினத்து அடிகளார் பாடியருளிய இந்தப்பாடலையும் இங்கு வைத்து ஓதி உணர்க.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்புஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மிவிம்மி இரு

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே,

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."

இதன் பொருள் –

    ஈட்டிய செல்வமும், அதனால் வாழ்கின்ற வாழ்வும் அவரவர் வீட்டின் அளவே. சூழ்ந்திருந்த பெண்களும் கண்களில் நீர் சோர அழுதுகொண்டு வீதி அளவே வருவார்கள். தந்தையின் அருமையை எண்ணி எண்ணி இருகரம் கூப்பி அழுகின்ற மைந்தர்களும் சுடுகாட்டு அளவே. இறந்துவிட்டவனைப் பின் தொடர்ந்து செல்வன அவன் செய்த புண்ணியமும் பாவமும் ஆகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளே.

    இறந்தவரது உடலைச் சுடுகாட்டில் கொண்டு போய் பெதைத்த பின்னர் அல்லது எரியூட்டிய பின்னர், நீரில் மூழ்கித் திரும்பவும் வராத சுற்றத்தார்கள் உண்டு. “நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே” என்றார் திருமூலதேவ நாயனார்.


    வளைகுளம் என்பது தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. 


“மருப்பனைய வெண்மதியக் கண்ணி யாரும்,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னாரும்,

விருப்புடைய அடியவர்தம் உள்ளத் தாரும்,

வெண்ணிஅமர்ந்து உறைகின்ற விகிர்த னாரே.”


“வானவர்கோன் தோள்இறுத்த மைந்தன் தன்னை,

வளைகுளமும் மறைக்காடும் மன்னி னானை”


எனவும் வரும் அப்பர் திருத்தாண்டகப் பாடல்கள் காண்க.


    தொண்டை நாட்டில் அரக்கோணம் – திருத்தணி சாலையில் உள்ள வளர்புரம் என்னும் ஊர் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வூர்த் திருக்கோயில் கல்வெட்டில் "வளைகுளத்து நாகேச்சரமுடையார்" என்று குறிக்கப்பட்டுள்ளது. சோழநாட்டில் தஞ்சை – திருச்சி சாலையில் உள்ள வல்லம் என்னும் ஊர் என்று கூறுவர். திரு ராம. சொ. சொக்கலிங்கம் சேட்டியார் என்பவரால் பாடப்பெற்ற “வளைகுளம் நாகேசுரர் பதிகம்” என்று ஒரு நூல் 1921-ல் வெளியிடப்படு உள்ளது. திருத்தலம் எங்குள்ளது என்பது குறித்து இந்நூலில் இல்லை.


No comments:

பாடல் 14

“இல்லும் பொருளும் இருந்த மனையளவே, சொல்லும் அயலார் துடிப்பளவே, நல்ல கிளைகுளத்து நீர்அளவே, கிற்றியே, நெஞ்சே! வளைகுளத்துள் ஈசனையே வாழ்த்து.” இத...