“இழவுஆடிச் சுற்றத்தார் எல்லாருங் கூடி
விழவுஆடி ஆவி விடாமுன்னம், மழபாடி
ஆண்டானை, ஆரமுதை, அன்றுஅயன்மால் காணாமை
நீண்டானை, நெஞ்சே! நினை.”
இதன் பொருள் ---
இழவு ஆடிச் சுற்றத்தார் எல்லாரும் கூடி - உயிரினை இழக்கும் நிலை கருதிச் சுற்றத்தார்கள் எல்லாரும் கூடி, விழவு ஆடி ஆவி விடாமுன்னம் – பிணத்தின் மேல் விழுந்து அழுகின்ற நிலை உண்டாகும் முன்னரே, மழபாடி ஆண்டானை – திருமழபாடி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள ஆண்டவரை, ஆரமுதை – உயிர்கட்கு நிறைந்த அமுதம் போன்றவரை, அன்று அயன் மால் காணாமை நீண்டானை – முன்னொரு காலத்தில் பிரமனும், திருமாலும் காணமுடியாதபடி நெருப்பு உருவமாய் மேலும் கீழும் நீண்டவரை, நெஞ்சே நினை – நெஞ்சமே நினைப்பாயாக.
திரு மழபாடி, சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். இத் திருத்தலம் திருவையாற்றில் இருந்து வடமேற்கே 13 கி.மீ. தொலைவில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு, திருமானூர் வழியாக இந்த திருத்தலத்திற்கு செல்லலாம். திருச்சியிலிருந்து புள்ளம்பாடி வழியாக பேருந்து வசதி உள்ளது. அரியலூர் என்ற ஊரில் இருந்தும் மழபாடி வரலாம். இறைவர் திருநாமம், வயிரத்தூண் நாதர், வச்சிரதம்பேசுவரர். இறைவியார் திருநாமம், சுந்தராம்பிகை, அழகம்மை. திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தர் ஆகிய தேவார மூவர்முதலிகள் பாடி வழிபட்ட திருத்தலம்.
இந்தத் திருக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை புருடாமிருகம் பிரமலோகத்தில் இருந்து எடுத்து வந்து, இங்கு பிரதிட்டை செய்து பூசித்துக் கொண்டிருந்ததாகவும், அதனை மீட்டு எடுத்துச் செல்ல வந்த பிரமாவால் எவ்வளவு முயன்றும் சிவலிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்ல. அதனால் இது என்ன வயிரத்தூணோ என்று வியந்து கூறியதால் இறைவன் வயிரத்தூண் நாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.
இதையே திருநாவுக்கரசர் தமது பாடலில் "மறைகலந்த மழபாடி வயிரத்தூணே" என்று பாடுகிறார். திருஞானசம்பந்தரோ "வரிந்த வெஞ்சிலை ஒன்று உடையான் மழபாடியைப் புரிந்து கை தொழுமின் வினையாயின போகுமே" என்று இங்கு இறைவனை வணங்குவோர்க்கு வினைகள் யாவும் தீரும் என்று தனது திருப்பதிகத்தில் பாடி அருள் செய்திருக்கின்றார்.
இறைவனிடம் சகல வரங்களையும் பெற்ற தனது மகன் செப்பேசர் என்கிற திருநந்திதேவருக்கு திருமணம் செய்ய சிலாத முனிவர் முடிவு செய்தார். அதன்படி வசிட்ட முனிவரின் பேத்தியான சுயசாதேவியை அவருக்கு திருமணம் செய்து வைத்தார். இத்திருமணம் திருமழபாடி திருத்தலத்தில் பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நடந்தது. இன்றைக்கும் இத்திருமண உற்சவம் திருமழபாடியில் வருடம்தோறும் நடைபெறுகிறது. திருமண உற்சவத்தில் இந்த ஊரை சுற்றி உள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து சித்திரையில் திருவையாற்றில் ஏழூர் வலம் விழா நடைபெறும்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "விரும்பி நிதம் பொன்னும் கௌத்துவமும் பூண்டோன் புகழ்ந்து அருளை மன்னும் மழபாடி வச்சிரமே" என்று போற்றி உள்ளார்.
No comments:
Post a Comment