"கழிந்தது நென்னற்றுக் கட்டுவிட்டு, நாறி
ஒழிந்தது, உடல்இரா வண்ணம் - அழிந்தது
இராமல்,ஐயா, கொண்டுபோ என்னாமுன், நெஞ்சே!
சிராமலையான் பாதமே சேர்."
இதன் பொருள் ---
கழிந்தது நென்னெற்று கட்டுவிட்டு - நல்ல நெற்றுப்போல வறண்ட உடலானது நேற்று உயிர் போன பின்னர் கட்டுவிட்டுக் கழிந்தது, நாறி ஒழிந்தது உடல் – உடலானது அழுகும் பதமாய் நாறுகிறது. அது இராவண்ணம் – இனி வைத்து இருக்க முடியாதபடி, அழிந்தது இராமல் – அழிந்து போன உடலை இன்னமும் வீட்டில் வைத்து இராமல், ஐயா – ஐயா!, கொண்டு போ என்னாமுன் - எடுத்துக்கொண்டு போ என்று சொல்லாத முன்னே; நெஞ்சே – நெஞ்சமே! சிராமலையான் பாதமே சேர் - திருச்சிராமலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளினது திருவடிகளை இடைவிடாது நினைப்பாயாக.
நெற்றுப் பதம் வந்த பிறகு காய்கள் மரத்தில் இருந்து தன்னால் உதிர்வது போல, வற்றிப் போன உடலில் இருந்து உயிர் பிரிந்து சென்றது. நேரம் செல்லச் செல்ல பிணமானது அழுகி நாற்றம் எடுக்கும். உறவினர்களைப் பார்த்து, ஐயா, இனிச் சிறிது நேரமும் வைத்து இருக்காமல், அதனை அடக்கம் செய்ய வேண்டிய இடத்திற்குக் கொண்டு போ என்று அயலார் சொல்லுவார்கள். இந்த நிலை வந்து சேராத முன்னம், திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவன் திருவடிகளை எப்போதும் நினைப்பாயாக என்று உபதேசம் செய்யப்பட்டது.
சேர்தல் என்னும் சொல்லுக்கு இடைவிடாது நினைத்தல் என்றும் பொருள். எனவே, திருச்சிராப்பள்ளி என்னும் திருத்தலத்திற்குச் சென்று வழிபடுவாயாக என்பதோடு, இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைத்துக் கொண்டு இருப்பாயாக என்பதாகவும் பொருள்லகொள்ளலாம். “மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்” என்னும் திருக்குறளில், சேர்தல் – இடைவிடாது நினைத்தல் என்று பரிமேலழகர் உரை கண்டுள்ளார் என்பதை அறிக.
இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல. இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. உடம்பானது, இரதம், உதிரம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலமாகிய விந்து என்னும் ஏழுவகைத் தாதுக்களால் ஆனது. மாயையின் துணைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த உடம்பு தோன்றி, நின்று அழியும் தன்மை உடையது. இது நெடுநாளைக்கு நிற்பது அல்ல.
“என்பினால் கழிநிரைத்து இறைச்சிமண்
சுவர் எறிந்த இதுநம் இல்லம்,
புன்புலால் நாறுதோல் போர்த்து, பொல்-
லாமையால் முகடு கொண்டு,
முன்பு எலாம் ஒன்பது வாய்தலார்
குரம்பையின் மூழ்கி டாதே
அன்பன் ஆரூர்தொழுது உய்யலாம்
மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே.”. --- திருஞானசம்பந்தர்.
“புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம்ஒரு தோலால் மூடி
ஒழுக்குஅறா ஒன்ப துவாய் ஒற்றுமை ஒன்றும்இல்லை
சழக்குஉடை இதன்உள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர்மூ லட்ட னீரே.” --- அப்பர்.
“கால்கொடுத்து இருகை ஏற்றிக்
கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து
தோல்படுத்து உதிர நீரால்
சுவர்.எடுத்து இரண்டு வாசல்
ஏல்வுடைத்தா அமைத்து அங்கு
ஏழு சாலேகம் பண்ணி
மால்கொடுத்து ஆவி வைத்தார்
மாமறைக் காடனாரே.” --- அப்பர்
"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல கசுமாலம்" --- திருப்புகழ்.
“தோல்,எலும்பு,சீ,நரம்பு,பீளை,துன்று கோழை,பொங்கு
சோரி பிண்டமாய் உருண்டு ...... வடிவான,
தூல பங்க காயம் வம்பிலே சுமந்து,நான் மெலிந்து
சோரும், இந்த நோய் அகன்று,...... துயர்ஆற,” --- திருப்புகழ்.
“தோல் அத்தியால் அப்பினால் ஒப்பு இலாது உற்ற
தோளு கை கால் உற்ற ...... குடில் ஊடே,
சோர்வு அற்று வாழ்வு உற்ற கால் பற்றி ஏகைக்கு
வேதித்த சூலத்தன் ...... அணுகா முன்..” --- திருப்புகழ்.
“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,
ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,
ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி
ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,
நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது
நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,
நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி
நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” – திருப்புகழ்.
“தோலால் சுவர்வைத்து,நால்ஆறு காலில் சுமத்தி, இரு
காலால் எழுப்பி,வளைமுதுகு ஓட்டி, கைந் நாற்றி, நரம்-
பால் ஆர்க்கை இட்டு,தசைகொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால்,
வேலால் கிரிதொளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே.” - கந்தர் அலங்காரம்.
திருச்சி என வழங்கும் திருச்சிராப்பள்ளி தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கிய நகரம். திருச்சி நகரை எந்த திசையிலிருந்து நெருங்கும் போதும் கம்பீரமாக காட்சி தரும் மலைக்கோட்டையில் அமைந்துள்ளது தாயுமானவர் திருக்கோயில். மலைக்கோட்டை என்று சொல்லப்படும் ஒரு குன்றின் மேல் 273 அடி உயரத்திலும், 417 படிகளும் கொண்டு அமைந்துள்ளது. தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது.
இது பற்றி வழங்கும் ஒரு கதை உண்டு. ஒருமுறை திருக்கயிலாயத்தில் சிவபெருமானை வணங்க ஆதிசேடனும் வாயுவும் வந்தனர். ஆதிசேடன் வருகையைப் பலரும் புகழ்ந்து கொண்டாடியதைக் கண்டு வாயுவுக்குப் பொறாமை ஏற்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஆதிசேடன் திருக்கயிலாய மலையைத் தன் உடலால் இறுக்க, அதைத் தகர்ப்பதற்காக வாயுதேவன் பலத்த காற்றை வீச திருக்கயிலாயம் அதிர்ந்தது. அதிலிருந்து மூன்று துண்டுகள் புறப்பட்டு திருக்காளத்தி, திருச்சி, இலங்கையில் உள்ள திரிகோணம் எனும் மூன்று இடங்களில் வீழ்ந்தன. இதன்படி, திருச்சிராப்பள்ளி மலை தென்கயிலாயம் என்ற பெயர் பெற்றது.
திரிசரன் என்ற அரக்கன் இங்கே ஆட்சி புரிந்து இறைவனைப் பூசித்து பேறு பெற்றான். அதனால் இத்தலம் திரிசிரபுரம் என்றும் பெயர் பெற்றது. தென்கயிலாயம் என்றும் போற்றப்படும் சிறப்பை உடையது.
இத்திருத்தலத்தில் வாழ்ந்து வந்த சிவனடியவள் இரத்தினாவதி. பேறு காலத்தில் அவளுக்கு உதவி செய்ய அவளுடைய தாய் வெளியூரில் இருந்து வந்த போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. காவிரி நதியின் அக்கரையில் இருந்த தாயால் இக்கரைக்கு வந்து இரத்தினவதியைக் கவனித்துக் கொள்ள முடியவில்லை. தனது அடியவளின் துயரத்தைப் போக்கி உதவி புரிய இறைவன் அவளது தாய் உருவில் வந்து சுகப்பிரசவம் ஆக அருள் செய்தார். இதனால், இறைவன் திருப்பெயர் தாயுமானசுவாமி என்று வழங்கப்படுகின்றது. பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த, “நன்றுடையானை தீயது இல்லானை” எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் சுகப் பிரசவம் ஆகும் என்பது அன்பர்களின் நம்பிக்கை. அது உண்மையும் கூட. அன்பர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொள்ளுகின்றனர். கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்காக தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தார் வாங்கிக் கட்டுவதாக வேண்டிக் கொள்வார்கள். பிரசவம் ஆன பிறகு தாயுமானவர் சந்நிதியில் வாழைத்தாரைக் கட்டி அதைச் சற்று நேரம் ஊஞ்சல் போல ஆடவிட்டு, பிறகு அங்கு வரும் அடியவர்களுக்கு வாழைப்பழங்களை வழங்குவார்கள்.
திருஞானசம்பந்தப் பெருமான், அப்பர் பெருமான் பாடி வழிபட்ட திருத்தலம். வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "மல் செய் அராப்பள்ளி மேவும் அவன் நின்று வாழ்த்தும் சிராப்பள்ளி ஞானத் தெளிவே" என்று போற்றி உள்ளார்.
No comments:
Post a Comment