103. முலைமீது கை வைத்த முறைமை

‘இதுகருமம், இதனாலே இதை முடிப்பாய்!'

     எனத் தொழிலை யெண்ணிச் செய்தால்

அதுகருமம் பாராமல், திருடியும் அள்

     ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம்

மதியணியும் தண்டலையார் வளநாட்டில்

     நீராடும் மாதர் தங்கள்

முதுகினைத்தேய் எனச் சொன்னால் முலைமீது

     கையிட்ட முறைமை தானே.


இதன் பொருள் ---


    மதி அணியும் தண்டலையார் வளநாட்டில் – பிறைச்சந்திரனைத் திருச்சடையில் முடித்துள்ளவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரமத்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில், இது கருமம், இதனாலே இதை முடிப்பாய் எனத் தொழிலை எண்ணிச் செய்தால் - ‘இதுதான் உனக்குள்ள செயல்; இந்த வழியில் இதனைச் செய்திடு' என்று விதிக்கப்பட்ட ஒரு செயலை எண்ணிச் செய்தால்,  அது கருமம் – அது செம்மையாக முடியும். பாராமல் – அந்த வழியில் சிந்தித்து முயன்று செயல்ப்படுப் பொருளை ஈட்டாமல், திருடியும் அள்ளியும் புரட்டாய் அலைவது எல்லாம் – பிறர் பொருளைக் கவர்ந்தும், எடுத்தும், மாறுபானாகவும், வஞ்சகமாகவும் செயல்களைச் செய்து திரிவது எல்லாம், நீராடும் மாதர் தங்கள் முதுகினைத் தேய் எனச் சொன்னால் - நீரில் குளிக்கும் பெண்கள் தங்கள் முதுகைத் தேய்க்கச் சொன்னால், முலைமீது கையிட்ட முறைமைதானே – முதுகைத் தேய்ப்பது தொடங்கி, வஞ்சகமாக முலைமீது கையை வைத்த செயலாக முடியும்.


      புரட்டு – மாறுபாடு, வஞ்சகம். புரட்டரிடத்திலே ஒரு தொழிலைக் கொடுத்தால்,  அதைப் பலவகையிலும் கெடுத்துத் தங்கள் நலத்தையே நாடிக் கொள்ள முயன்று கேட்டினைத் தேடிக் கொள்வர்.


No comments:

43. காலத்துக்கு ஏற்ற இன்பம் தருவன

 “வாவியுறை நீரும், வடநிழலும், பாவகமும், ஏவனைய கண்ணார் இளமுலையும், - ஓவியமே! மென்சீத காலத்து வெம்மைதரும், வெம்மைதனில் இன்பு ஆரும் சீதளம் ஆமே....