‘இதுகருமம், இதனாலே இதை முடிப்பாய்!'
எனத் தொழிலை யெண்ணிச் செய்தால்
அதுகருமம் பாராமல், திருடியும் அள்
ளியும் புரட்டாய் அலைவ தெல்லாம்
மதியணியும் தண்டலையார் வளநாட்டில்
நீராடும் மாதர் தங்கள்
முதுகினைத்தேய் எனச் சொன்னால் முலைமீது
கையிட்ட முறைமை தானே.
இதன் பொருள் ---
மதி அணியும் தண்டலையார் வளநாட்டில் – பிறைச்சந்திரனைத் திருச்சடையில் முடித்துள்ளவரும், திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரமத்பொருளின் வளம் பொருந்திய நாட்டினில், இது கருமம், இதனாலே இதை முடிப்பாய் எனத் தொழிலை எண்ணிச் செய்தால் - ‘இதுதான் உனக்குள்ள செயல்; இந்த வழியில் இதனைச் செய்திடு' என்று விதிக்கப்பட்ட ஒரு செயலை எண்ணிச் செய்தால், அது கருமம் – அது செம்மையாக முடியும். பாராமல் – அந்த வழியில் சிந்தித்து முயன்று செயல்ப்படுப் பொருளை ஈட்டாமல், திருடியும் அள்ளியும் புரட்டாய் அலைவது எல்லாம் – பிறர் பொருளைக் கவர்ந்தும், எடுத்தும், மாறுபானாகவும், வஞ்சகமாகவும் செயல்களைச் செய்து திரிவது எல்லாம், நீராடும் மாதர் தங்கள் முதுகினைத் தேய் எனச் சொன்னால் - நீரில் குளிக்கும் பெண்கள் தங்கள் முதுகைத் தேய்க்கச் சொன்னால், முலைமீது கையிட்ட முறைமைதானே – முதுகைத் தேய்ப்பது தொடங்கி, வஞ்சகமாக முலைமீது கையை வைத்த செயலாக முடியும்.
புரட்டு – மாறுபாடு, வஞ்சகம். புரட்டரிடத்திலே ஒரு தொழிலைக் கொடுத்தால், அதைப் பலவகையிலும் கெடுத்துத் தங்கள் நலத்தையே நாடிக் கொள்ள முயன்று கேட்டினைத் தேடிக் கொள்வர்.
No comments:
Post a Comment