பாடல் 16

 


“இட்ட குடிநீர் இருநாழி ஒர்உழக்காச்

சட்டஒரு முட்டைநெய் தான்கலந்து அட்ட

அருவாய்ச்சா றுஎன்றுஅங்கு அழாமுன்னம் பாச்சில்

திருவாச்சி ராமமே சேர்.”


இதன் பொருள் ---


        இட்ட குடிநீர் – மருந்துப் பண்டங்களைக் கூட்டிய குடிநீரில், சட்ட - செம்மையாக, ஒரு முட்டை நெய்தான் கலந்து – ஒரு சிறிய கரண்டி அளவுக்கு விளக்கெண்ணையைக் கலந்து, இருநாழி ஓர் உழக்கா – இரண்டு கால்படி நீரானது ஒரு கால்படி அளவுக்குச் சுருங்கும் அளவில், அட்ட அருவாய்ச் சாறு – அடுப்பில் வைத்துச் சுவறக் காய்ச்சி எடுக்கப்பட்ட அரிய கசாயச் சாற்றை, என்று – இதனைக் குடியுங்கள் என்று கொடுத்து, அங்கு அழா முன்னம் – அங்கே கூடியுள்ளவர்கள் அழும் நிலை வருவதற்கு முன்பாகவே, பாச்சில் திரு ஆச்சிராமமே சேர் – திருப்பாசிலாச்சிராரமம் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, அங்கு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளை வழிபட்டு உய்வாயாக.


        நாழி, உழக்கு என்பது அக்கால முகத்தல் அளவைகள். ஒரு முட்டை - முட்டை வடிவமாக எண்ணெய் முகப் பதற்குச் செய்து வைக்கப்படும் சிறிய அகப்பை. நெய் – நெய்ப்புத் தன்மை உள்ளது நெய் எனப்படும். இங்கே விளக்கெண்ணையைக் குறித்து வந்ததாகக் கொள்ளலாம். அருவாய்ச் சாறு – அரிய சாறு, கசாயம். என்று – நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் உள்ள ஒருவரை எந்து உபாயத்தினாலாவது காப்பாற்ற எண்ணி, சுற்றி உள்ளவர்கள், இந்தக் கசாயத்தைக் குடியுங்கள் என்று அழுதுகொண்டே தருவார்கள். அந்த நிலை வருவதற்கு முன்பாகவே இறைவனை வழிபட்டு உய்தல் வேண்டும்.


        திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் திருத்தலம், திருச்சி-சேலம் வழித தடத்தில் உள்ளது. பாச்சில் கூற்றத்து ஆச்சிராமம். திருவாசிராமம் என்பது மருவி, இன்று திருவாசி என்று வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்ற திருத்தலம்.


        இப்பகுதியை ஆண்டு வந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் எனும் தீராத நோயினால் பீடிஇக்கப்பட்டாள். மணி, மந்திர ஔடத முறைகளால் முயன்றும் நோய் தீராவில்லை. கொல்லி மழவன் சைவ வழி வந்தவன். ஆதலால், சிவசந்நிதி முன்னர் தனது அருமை மகளைக் கிடாத்தினான். அவ்வேளையில் திருஞானசம்பந்தர் வருகையைக் கேள்வியுற்ற கொல்லிமழவன், நகரை அலங்கரித்துப் பிள்ளையாரை எதிர்கொண்டு, அவர்தம் சிவிகையின் முன் விழுந்து வணங்கினான். பிள்ளையார் அவனுக்கு அருள் செய்தார்.  அவனுடன் பிள்ளையார் திருக்கோயிலுள் சென்றார். அங்கே உணர்வழிந்து கிடந்த பெண்ணைப் பார்த்து, "என்ன இது?" என்று கேட்டார். கொல்லிமழவன் திருஞானசம்பந்த வள்ளலாரை வணங்கி, "இவள் அடியேன் புதல்வி. இவளை முயலகன் என்னும் கொடிய நோய் பீடித்து இருக்கிறது. அந் நோய் மணி, மந்திர, மருந்துகளால் தீரவில்லை. இவளைச் சிவசந்நிதி முன்னே கிடத்தினேன்" என்றான். ஆளுடைய பிள்ளையார் ஆகிய திரலுஞானசம்பந்தர், திருவருளைச் சிந்தித்து, "துணிவளர் திங்கள்" என்று எடுத்து, "மணிவளர் கண்டரோ, மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே" என்று பாடியருளினார். உடன் அக் கன்னியும் பிணி தீர்ந்து எழுந்தாள். கொல்லிமழவன் பெருமகிழு எய்திப் புதல்வியோடும் பிள்ளையாரின் திருவடிகளை வணங்கினான். பிள்ளையார் அவர்களுக்கு அருள் செய்து அங்கே சிலநாள் தங்கியிருந்தார்.


இத்தலத்தில் இறைவன் மாற்றுரை வரதீசுவரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். இப் பெயர் வழங்கக் காரணமாக ஒரு வரலாறு உள்ளது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. சுந்தரர், "இவர் அல்லாது இல்லையோ பிரானார்?" என்று "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். திருப்பதிகத்தின் கடைசி பாடலில் "திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுக்கள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவைகளை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று பாடிப் பொன் பெற்றார். இது பெரிய புராணம் நமக்கு அறிவுறுத்துவது.


வழக்கம் போலவே, சில தலங்களுக்கு உள்ள செவிவழிச் செய்தியும் உண்டு. அது வருமாறு, அந்தப் பொன் தரமானது தானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தை சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக் கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்துப் (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்து விட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்து காட்டியதையும், திருமால் அவருடன் வந்ததையும் உணர்ந்தார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரை வரதர்' என்ற பெயர் ஏற்பட்டது.


இத் திருத்தல இறைவரை வழிபட்டு, திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த திருப்பதிகத்தைப் பாராயணம் செய்து வந்தால் தீராத நோய் தீரும் என்பது அடியவர்களின் நம்பிக்கை.


No comments:

43. காலத்துக்கு ஏற்ற இன்பம் தருவன

 “வாவியுறை நீரும், வடநிழலும், பாவகமும், ஏவனைய கண்ணார் இளமுலையும், - ஓவியமே! மென்சீத காலத்து வெம்மைதரும், வெம்மைதனில் இன்பு ஆரும் சீதளம் ஆமே....