கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 “தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்

     உபகாரம் தருமம் செய்து

கொண்டபொருள் விலைவாசி காணிதே

     டிக்கோடி கொடுப்ப தல்லால்

வண்டருமாய் ஒன்றுபத்து விலைகூறி

     அநியாய வட்டி வாங்கிக்

கண்டவர்தம் கடுந்தேட்டுக் கண்ணை அறக்

     கெடுக்குமிது கருமந் தானே.”


இதன் பொருள் ---


தண்டலையார் அடிபணிந்து – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை வணங்கி, தவம் தானம் உபகாரம் தருமம் செய்து கொண்ட பொருள் - தவமும் தானமும் உதவியும் பிற அறமும் புரிந்து தேடிய பொருள், விலைவாசி காணி கோடி தேடிக் கொடுப்பது அல்லால் - விலைவாசியையும் நிலபுலனையும் கோடியாகத் தேடிக் கொடுக்குமே அல்லாமல், வண்டருமாய் – (இறைவனுக்கு ஏவல் செய்யாது) பிறருக்கு ஏவல் செய்வோராக வாழ்ந்து, ஒன்று பத்து விலை கூறி – பொருள்களுக்கு ஒன்றுக்குப் பத்தாக விலை சொல்லியும், அநியாய வட்டி வாங்கிக் கண்டவர்தம் கடுந்தேட்டு - ஒழுங்கற்ற முறையிலே வட்டியை வாங்கிச் சிக்கனமாகச் சேர்த்து வைத்த பொருளானது, கண்ணை அறக் கெடுக்கும் - வாழ்க்கையை முழுதும் கெடுக்கும், இது கருமந்தான் - இதுதான் உலகில் நடப்பது.


விளக்கம் ---

 

வாசி – வேறுபாடு. பொருளுக்கான விலையிலே உயர்வு, தாழ்வு. பொருள் வணிகம் செய்யும்போது ஒன்றுக்குப் பத்தாக விலைகூறிப் பொருளைக் குவிப்பது கூடாது. அநியாய வட்டிக்கு விட்டுப் பொருளைச் சேர்ப்பதே வாழ்க்கை எனக் கொண்டு வாழ்வோரை, “வட்டிகொண்டு ஈட்டியே மண்ணின் முகந்திடும் பட்டிப் பதகர்” என்கிறார் திருமூல நாயனார்.


மனிதனுக்குப் பொருளானது அவன் செய்யும் சிவபுண்ணியம் காரணமாக, இறைவன் திருவருளால் இயல்பாகவே வந்து சேரும். தான தருமங்களைச் செய்து வாழ்வோருக்கும் இறையருளால் பொருள் வந்து குவியும் என்பது காட்டப்பட்டது. “இறைக்கிற கிணறு ஊரும், இறைக்காத கிணறு நாறும்” என்பார்கள். பிறருக்குப் பொருளைக் கொடுப்பதனால், தமது செல்வம் குறைந்து விடும் என்று எண்ணுவது அறியாமை. ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கும் இடமே பசித்தவன் வயிறுதான் என்பார் திருவள்ளுவ நாயனார். “அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்பு உழி” என்பது திருக்குறள். “இரப்பவர்க்கு ஊய வைத்தார், ஈபவர்க்கு அருளும் வைத்தார், கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநரகங்கள் வைத்தார்” என்பது அப்பர் தேவாரம். 


“இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணிக்

கரப்பவர் கண்டு அறியார் கொல்லோ? - பரப்பில்

துறைத்தோணி நின்று உலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

இறைத்தோறும் ஊறும் கிணறு.”. – பழமொழி நானூறு.


கடலில் உள்ள துறையில், தோணிகள் நின்று அசைந்து கொண்டிருக்கும் அசைகின்ற நீரை உடைய கடல் நாடனே! தன்னிடம் வந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குக் கொடுப்பதால் தமது செல்வமு குறைவுபடும் என்று எண்ணி, ஈயாது மறைப்பவர்கள், இறைக்கும் தோறும் நீர் ஊறுகின்ற கிணற்றைப் பார்த்து அறியாதவர் போலும்.


எனவே, பொருளைச் சேர்த்து வைப்பதோடு, அது மேலும் வளரும் அருள்வழியை விடுத்து, தீயவழியில் ஒன்றுக்குப் பத்தாகப் பொருளுக்கு விலை கூறியும், அநியாய வட்டிக்குப் பொருளைக் கொடுத்தும் வாழ்வது கூடாது என்று அறிவிக்க, “கடும் தேட்டு, கண்ணை அறக் கெடுக்கும்” என்று சொல்லப்பட்டது.  தேட்டு – சம்பாத்தியப் பொருள். கண்ணைக் கெடுக்கும் – நல்லறிவை மழுங்கச் செய்து வாழ்வைக் கெடுக்கும்.


No comments:

கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

 “தண்டலையா ரடிபணிந்து தவம் தானம்      உபகாரம் தருமம் செய்து கொண்டபொருள் விலைவாசி காணிதே      டிக்கோடி கொடுப்ப தல்லால் வண்டருமாய் ஒன்றுபத்து ...