வம்பரெல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால்
என்ன? அதுமாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினிற் கிடந்திட்டால்
என்ன? அதிற் பலன்உண் டாமோ?
கம்புலவும் தண்டலையார் வளநாட்டில்
வருந்துபல கழுதை தாமும்
அம்புவியிற் கிடந்தென்ன? பாதாளந்
தனிற்கிடந்தென் ஆகுந் தானே?
இதன் பொருள் ---
கம்பு உலவும் தண்டலையார் வளநாட்டில் - சங்குகள் உலவும் நீர்வளம் பொருந்திய திருத்தண்டலை இறைவரின் வளம் பொருந்தல் நாட்டிலே, வருந்து பல கழுதை தாமும் அம்புவியிற் கிடந்து என்ன - திறனற்று வருந்துகின்ற பல கழுதைகள் அழகிய இந்த உலகிலே இருப்பதால் என்ன பயன்?, பாதாளந்தனில் கிடந்து என் ஆகும் - பாதாளத்திலே கிடந்தால் மட்டும் என்ன கெட்டுவிடும்? (ஆகையால்), வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்திருந்தால் என்ன - வம்பர்களுக்கு எல்லாம் செல்வாக்கு மிகுந்திருந்தால் என்ன? அது மாறி, ஓய்ந்த பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால் என்ன - ஆதிக்கம் கெட்டு ஆடி ஓய்ந்த பம்பரம்போல மூலையில் முடங்கிக் கிடந்தால் என்ன?, அதின் பலன் உண்டாமோ - அதனால் ஏதாவது நலம் உண்டாமா? (நலம் ஏதும் விளைவதில்லை)
No comments:
Post a Comment