திருப் பந்தணை நல்லூர் --- 0862. கெண்டைகள் பொரும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கெண்டைகள் பொரும் (திருப்பந்தணை நல்லூர்)

முருகா!
பெண்மயலால் அடியேன் படும் துயர் தீ,
திருவடிகளைத் தந்து அருள்விராக.



தந்ததன தந்ததன தனதனத்
     தந்ததன தந்ததன தனதனத்
     தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான


கெண்டைகள்பொ ருங்கண்மங் கையர்மலர்க்
     கொண்டைகள்கு லுங்கநின் றருகினிற்
     கெஞ்சுபலு டன்குழைந் தமளியிற் ......கொடுபோய்வண்

கெந்தபொடி யும்புனைந் துறவணைத்
     தின்பவச னந்தருந் தொழிலடுக்
     கின்றமய லின்படுந் துயரறப் ...... ப்ரபைவீசுந்

தண்டைகள்க லின்கலின் கலினெனக்
     கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத்
     தண்கொலுசு டன்சிலம் பசையவுட் ...... பரிவாகிச்

சந்ததமும் வந்திரும் பரிமளப்
     பங்கயப தங்களென் கொடுவினைச்
     சஞ்சலம லங்கெடும் படியருட் ...... புரிவாயே

தொண்டர்கள்ச ரண்சரண் சரணெனக்
     கொம்புகள்கு குங்குகுங் குகுமெனத்
     துந்துமிதி மிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை

சுந்தரிம ணஞ்செயுஞ் சவுரியக்
     கந்தகுற வஞ்சிதங் கருவனத்
     துங்கமலை யும்புரந் தமரருக் ...... கிடர்கூரும்

பண்டர்கள்பு யங்களும் பொடிபடக்
     கண்டவப்ர சண்டகுஞ் சரியெழிற்
     பைந்தருவ னம்புரந் தகழெயிற் ...... புடைசூழும்

பந்திவரு மந்திசெண் பகமகிற்
     சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
     பந்தணையில் வந்திடுஞ் சரவணப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கெண்டைகள் பொரும் கண், மங்கையர் மலர்க்
     கொண்டைகள் குலுங்க நின்று, ருகினில்
     கெஞ்சு பல்உடன் குழைந்து, அமளியில்......கொடுபோய், வண்

கெந்த பொடியும் புனைந்து, ற அணைத்து,
     இன்ப வசனம் தரும் தொழில் அடுக்-
     கின்ற மயலின் படும் துயர் அற, ...... ப்ரபை வீசும்

தண்டைகள் கலின்கலின் கலின் என,
     கிண்கிணி கிணின்கிணின் கிணின்என,
     தண் கொலுசுடன், சிலம்பு அசைய, உள் ......பரிவாகி,

சந்ததமும் வந்து இரும் பரிமளப்
     பங்கய பதங்கள், என் கொடுவினைச்
     சஞ்சலம் மலம் கெடும்படி அருள் ...... புரிவாயே.

தொண்டர்கள் சரண் சரண் சரண் என,
     கொம்புகள் குகுங் குகுங் குகும் என,
     துந்துமி திமிந் திமிந் திமின் என, ...... குறும்ஓசை

சுந்தரி மணஞ் செயும் சவுரியக்
     கந்த! குறவஞ்சி தங்கு அருவனத்
     துங்க மலையும் புரந்து, மரருக்கு ...... இடர்கூரும்

பண்டர்கள் புயங்களும் பொடிபடக்
     கண்டவ! ப்ரசண்ட குஞ்சரி எழில்
     பைந் தரு வனம் புரந்து, கழ்எயில் ......புடைசூழும்

பந்தி வரு மந்தி செண்பகம் அகில்
     சந்து செறி கொன்றை துன்றிய வனப்
     பந்தணையில் வந்திடும் சரவணப் ......    பெருமாளே.


பதவுரை

      தொண்டர்கள் சரண் சரண் சரண் என --- அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க,

     கொம்புகள் குகும் குகும் குகும் என --- ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என ஓசை செய்ய,

     துந்துமி திமிந் திமிந் திமிந் எனக் குறுகு ஓசை --- பேரிகை முதலான வாத்தியங்கள் திமிந் திமிந் திமின் என்று நெருங்கி ஓசை செய்ய,

      சுந்தரி மணம் செயும் சவுரியக் கந்த --- அழகிய தேவயானையைத் திருமணம் புணர்ந்த வல்லமை வாய்ந்த கந்தப் பெருமானே!

      குறவஞ்சி தங்கு அருவனத் துங்க மலையும் புரந்து --- குறமகளாகிய வள்ளிநாயகியார் தங்கியிருந்து அரிய காடுகள் நிறைந்த வள்ளிமலையையும் காத்து அருள் புரிந்து,

     அமரருக்கு இடர் கூரும் பண்டர்கள் புயங்களும் பொடிபடக் கண்டவ --- தேவர்களுக்குத் துன்பத்தை விளைவித்த கீழ்மக்களாகிய அசுரர்களின் தோள்களும் பொடியாகச் செய்தவரே!

      ப்ரசண்ட குஞ்சரி --- வலிமை மிக்க தேவலோகத்து யானையால் வளர்க்கபட்டவளாகிய தேவயானை அம்மை வாழ்ந்திருந்த

     எழில் பைந்தரு வனம் புரந்து --- அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தையும் காத்து அருள் புரிந்து,

      அகழ் --- அகழியும்,

     எயில் புடை சூழும் --- பக்கத்தில் மதில்களால் சூழப்பட்டு உள்ளதும்,

     பந்தி வரு மந்தி --- வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்துள்ளதும்,

     செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வன --- செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை ஆகிய மரங்கள் பொருந்தியதும் ஆகிய சோலைகளால் சூழப்பட்டுள்ள,

      பந்தணையில் வந்திடும் சரவண --- திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் சரவணபவரே!

     பெருமாளே --- பெருமையில் மிக்கவரே!  

       கெண்டைகள் பொரும் கண் மங்கையர் --- கெண்டை மீனைப் பழிக்கும்படியான கண்களை உடைய பெண்கள்,

     மலர்க் கொண்டைகள் குலுங்க --- மலர்களைச் சூடியுள்ள கொண்டைகள் குலுங்கும்படியாக,

       அருகினில் நின்று கெஞ்சு ப(ல்)லுடன் குழைந்து --- அருகினில் வந்து, பற்களை தெரியக் காட்டிக் குழைந்து பேசி,

     அமளியில் கொடு போய் --- படுக்கையில் கொண்டு போய்,

      வண் கெந்த பொடியும் புனைந்து --- மணம் மிக்க பொடிகளைப் பூசி,

     உற அணைத்து --- இறுக அணைத்து,

     இன்ப வசனம் தரும் தொழில் அடுக்கின்ற மயலின் படும் துயர் அற --- இன்பத்தைத் தருவதான பேச்சுக்களுடன் கூடிய அவர்களது செயல்களால் உண்டாகும் காமமயக்கில் அடியேன் படுகின்ற துன்பம் நீங்க,

      ப்ரபை வீசும் தண்டைகள் கலின்கலின் கலின் என --- ஒளி வீசும் தண்டைகள் கலின் கலின் என ஒலிக்க,

     கிண்கிணி கிணின் கிணின் என ---  கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய,

      தண் கொலுசுடன் சிலம்பு அசைய --- அழகிய கொலுசுகளும் சிலம்புகளும் அசைய,

     உள் பரிவாகி --- அடியேன் மீது பரிவுகொண்டு,

     சந்ததமும் வந்து இரும் பரிமளப் பங்கயப் பதங்கள் ---
எப்போதும் என் முன் வந்து தோன்றும் தேவரீரது  பெருமை தங்கிய, நறுமணம் மிக்க தாமரைமலரைப் போன்ற திருவடிகளைத் தந்து,

       என் கொடு வினைச் சஞ்சலம் மலம் கெடும்படி --- அடியேனது கொடிய வினைகளும், மனத் துயரும், மும்மமலங்களும் கெட்டு ஒழியும்படியாக

     அருள் புரிவாயே --- திருவருள் புரிந்து அருள்வீராக.


பொழிப்புரை


         அடியார்கள் அடைக்கலம், அடைக்கலம், அடைக்கலம் என்று வணங்க, ஊது கொம்புகள் குகுங் குகுங் குகும் என ஓசை செய்ய, பேரிகை முதலான வாத்தியங்கள் திமிந் திமிந் திமின் என்று நெருங்கி ஓசை செய்ய, அழகிய தேவயானையைத் திருமணம் புணர்ந்த வல்லமை வாய்ந்த கந்தப் பெருமானே!

     குறமகளாகிய வள்ளிநாயகியார் தங்கியிருந்து அரிய காடுகள் நிறைந்த வள்ளிமலையையும் காத்து அருள் புரிந்து, தேவர்களுக்குத் துன்பத்தை விளைவித்த கீழ்மக்களாகிய அசுரர்களின் தோள்களும் பொடியாகச் செய்தவரே!

         வலிமை மிக்க தேவலோகத்து யானையால் வளர்க்கபட்டவளாகிய தேவயானை அம்மை வாழ்ந்திருந்த அழகிய பசுமை வாய்ந்த கற்பக மரக் காடுகள் உள்ள தேவலோகத்தையும் காத்து அருள் புரிந்து, அகழியும், பக்கத்தில் மதில்களால் சூழப்பட்டு உள்ளதும், வரிசையாய் வரும் குரங்குகள் நிறைந்துள்ளதும், செண்பகம், அகில், சந்தனம், நெருங்கிய கொன்றை ஆகிய மரங்கள் பொருந்தியதும் ஆகிய சோலைகளால் சூழப்பட்டுள்ள திருப்பந்தணைநல்லூரில் வீற்றிருக்கும் சரவணபவரே!

     பெருமையில் மிக்கவரே!  

         கெண்டை மீனைப் பழிக்கும்படியான கண்களை உடைய பெண்கள் மலர்களைச் சூடியுள்ள கொண்டைகள் குலுங்கும்படியாக, அருகினில் வந்து, பற்களை தெரியக் காட்டிக் குழைந்து பேசி, படுக்கையில் கொண்டு போய்,  மணம் மிக்க பொடிகளைப் பூசி, இறுக அணைத்து, இன்பத்தைத் தருவதான பேச்சுக்களுடன் கூடிய அவர்களது செயல்களால் உண்டாகும் காமமயக்கில் அடியேன் படுகின்ற துன்பம் நீங்க, ஒளி வீசும் தண்டைகள் கலின் கலின் என ஒலிக்க, கிண்கிணி கிணின் கிணின் என்று ஒலி செய்ய, அழகிய கொலுசுகளும் சிலம்புகளும் அசைய, அடியேன் மீது பரிவுகொண்டு, எப்போதும் என் முன் வந்து தோன்றும் தேவரீரது  பெருமை தங்கிய, நறுமணம் மிக்க தாமரைமலரைப் போன்ற திருவடிகளைத் தந்து, அடியேனது கொடிய வினைகளும், மனத் துயரும், மும்மமலங்களும் கெட்டு ஒழியும்படியாகத் திருவருள் புரிந்து அருள்வீராக.


விரிவுரை

கழ் எயில் புடைசூழும், பந்தி வரு மந்தி, செண்பகம் அகில் சந்து செறி கொன்றை துன்றிய வனப் பந்தணை ---

திருப் பந்தணை நல்லூரின் எழிலை இந்த அடிகளில் அடிகளார் விளக்கி அருளுகின்றார்.

"திருப்பந்தணை நல்லூர்", சோழ நாட்டு காவிரி வடகரைத் திருத்தலம். மக்கள் வழக்கில் "பந்தநல்லூர்" என்று வழங்குகிறது.

கும்பகோணம் - பந்தநல்லூர், திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்து வசதிகள் உள்ளன.

இறைவர் --- பசுபதீசர்.
இறைவியார் --- வேணுபுஜாம்பிகை, காம்பனதோளியம்மை.
தல மரம்--- சரக்கொன்றை.
தீர்த்தம்  --- சூரியதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமானும், அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளிய திருத்தலம்.

இத் திருத்தலத்தின் பெயர்க் காரணம் குறித்து வழங்கப்பட்டு வரும் வரலாறு ஒன்று உண்டு.  உமாதேவி பந்துகொண்டு விளையாட விரும்பினாள். இறைவனும் நால்வேதங்களையே பந்துகளாக்கித் தந்துதவினார். உமாதேவி மிகவும் விருப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அதற்கு இடையூறாக ஆகலாகாது என்றெண்ணிச் சூரியன் மறையாது இருந்தான் காலநிலை மாறுவது கண்டு தேவர்கள் இறைவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவ்விடத்திற்கு வந்தார். அவரையும் கவனியாது உமை விளையாடிக் கொண்டிருந்தாள். அது அறிந்த இறைவன் கோபங்கொண்டு, அப்பந்தை தன் திருவடியால் எற்றினார். பந்தைக் காணாத உமை, இறைவனிடம் வந்து வணங்க, அம்பிகையை பசுவாகுமாறு சபித்தார். சாபவிமோசனமாக, அப் பந்து விழும் தலத்தில், கொன்றையின் கீழ் தாம் வீற்றிருப்பதாகவும், அங்கு வந்து வழிபடுமாறும் பணித்தார். அவ்வாறே திருமாலை உடன் ஆயனாக அழைத்துக்கொண்டு, பசு உருவில் (காமதேனுவாகி) கண்வ முனிவர் ஆசிரமம் அடைந்து அங்கிருந்து வந்தார். அங்கிருக்கும் நாளில் புற்று உருவிலிருந்த இறைவன் திருமேனிக்குப் பால் சொரிந்து வழிபட்டு வந்தார். ஆயனாக வந்த திருமால் நாடொறும் கண்வமுனிவரின் அபிஷேகத்திற்குப் பால் தந்து வந்தார். ஒரு நாள் பூசைக்குப் பசுவிடம் பால் இல்லாமைக் கண்டு, சினமுற்றுப் பசுவின் பின்சென்று அதுபுற்றில் பால் சொரிவதுகண்டு சினந்து பசுவைத் தன் கைக்கோலால் அடிக்க, அப்பசுவும் துள்ளிட, அதனால் அதன் ஒருகாற் குளம்பு புற்றின்மீது பட - இறைவன் ஸ்பரிசத்தால் உமாதேவி தன் சுயவுருவம் அடைந்து சாபவிமோசனம் நீங்கி அருள் பெற்றாள்.

பசுவுக்குப் பதியாக வந்து ஆண்டுகொண்டமையால் சுவாமி பசுபதி என்று பெயர் பெற்றார். இறைவன் எற்றிய பந்து வந்து அணைந்த இடமாதலின் பந்தணைநல்லூர் என்று ஊர்ப் பெயருண்டாயிற்று. மூலவரின் சிரசில் பசுவின் குளம்புச்சுவடு பதிந்திருப்பதாகச் சொல்லுகின்றார்கள்.

காம்பீலி மன்னனின் மகன் குருடு நீங்கிய இடம். இதனால் இம்மன்னன் தன் மகனுக்கு பசுபதி என்று பெயர் சூட்டியதோடு, திருக்கோயில் திருப்பணிகளையும் செய்து வழிபட்டதாக வரலாறு. இது தொடர்பாகவே இங்குள்ள திருக்குளம் இன்றும் காம்போச மன்னன் துறை என்றழைக்கப்படுகிறது.

தனிக்கோயிலாக பரிமளவல்லித் தாயாருடன் ஆதிகேசவப் பெருமாள் வீற்றிருக்கின்றார். இவர்தான் உமையுடன் ஆயனாக வந்தவர்.

சுவாமி சந்நிதி நுழைவாயிலுக்கு "திருஞானசம்பந்தர் திருவாயில்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கருத்துரை

முருகா! பெண்மயலால் அடியேன் படும் துயர் தீ, திருவடிகளைத் தந்து அருள்விராக.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...