திரு ஆவடுதுறை --- 0856. சொற்பிழை வராமல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சொற்பிழை வராமல் (திருவாவடுதுறை)

முருகா!
பொருள் தேடி உலுத்தரைப் பாடி அலையாமல்,
அருள் தேடி உன்னையே பாடி உய்ய அருள்.


தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
     தத்ததன தான தனத்தனத் தத்ததத்த
     தத்ததன தான தனத்தனத் தத்ததத்த ...... தனதான


சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
     நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி
     சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து ...... விலைமாதர்

துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை
     வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த
     துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த ...... நிதிமேவு

கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த
     அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து
     கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து ...... மிகையாகக்

கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
     கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து
     கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க ...... விடலாமோ

எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து
     பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து
     எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு ...... நிலையோதி

எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
     முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த
     யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த ...... திறல்வீரா

வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து
     வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்
     மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து ......வெகுகோடி

விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த
     ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து
     மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சொல் பிழை வராமல் உனைக் கனக்கத் துதித்து
     நிற்பது வராத, பவக் கடத்தில் சுழற்றி
     சுக்கில அவதார வழிக்கு இணக்கிக் களித்து, ......விலைமாதர்

துப்பு இறையதான இதழ்க் கனிக்குக் கருத்தை
     வைத்து, மயலாகி, மனத்தை விட்டு, கடுத்த
     துற்சன ம காதகரை, புவிக்குள் தழைத்த ...... நிதிமேவு

கற்பக இராசன் என, படைக்குப் பெருத்த
     அர்ச்சுன நராதி என, கவிக்குள் பதித்து,
     கற்று அறி வினாவை எடுத்து, டுத்துப் படித்து ..... மிகையாகக்

கத்திடு மெய் ஆக வலிக் கலிப்பைத் தொலைத்து,
     கைப்பொருள் இலாமை எனைக் கலக்கப்படுத்து,
     கற்பனை விடாமல் அலைத்து இருக்கச் சலிக்க ......விடலாமோ?

எற்பு அணி அராவை மிதித்து வெட்டித் துவைத்து,
     பற்றிய கராவை இழுத்து உரக்கக் கிழித்து,
     எண் கரி படாமல் இதத்த புத்திக் கதிக்கு ...... நிலை ஓதி

எத்திய பசாசின் முலைக் குடத்தைக் குடித்து,
     முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டுச் சிரித்த,
     அயில்கணை இராமர் சுகித்து இருக்கச் சினத்த ...... திறல்வீரா!

வெற்பு என மதாணி நிறுத்து, ருக்கிச் சமைத்து
     வர்க்க மணியாக வடித்து, ருத்தித் தகட்டின்
     மெய்க்குலம் அதாக மலைக்க முத்தைப் பதித்து, ......வெகுகோடி

விண் கதிர் அதாக நிகர்த்து, ளிக்கச் சிவத்த
     ரத்தின படாக மயில் பரிக்குத் தரித்து,
     மிக்க திருவாவடு நல்துறைக்குள் செழித்த ...... பெருமாளே.


பதவுரை

         எல் பணி அராவை மிதித்து வெட்டித் துவைத்து --- இகழத் தக்க படத்தினை உடைய (காளிங்கன் என்னும்) பாம்பின் தலையை மிதித்து, உழக்கித் திருநடனம் புரிந்தும்,

     பற்றிய கராவை இழுத்து உரக்கக் கிழித்து ---(கஜேந்திரன் என்னும்) யானையைப் பற்றி இழுத்த முதலையை வெளியே இழுத்து (தனது திகிரிப் படையால்) பலமாகக் கிழித்து,

         எண் கரி படாமல் --- மதிக்கத்தக்க யானையானது அழியாமல் (காத்து),

     இதத்த புத்திக் கதிக்கு நிலை ஓதி --- நற்கதியை அடையுமாறு இதமான உறுதிப் பொருளை அதற்கு அருளி,

     எத்திய பசாசின் முலைக் குடத்தைக் குடித்து --- வஞ்சக எண்ணத்துடன் வந்த பேயாகிய பூதனையின் முலைக் குடத்தில் வாய் வைத்துப் பாலைக் குடித்து

     முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டுச் சிரித்த ---
வஞ்சனையால் முற்றி இருந்து அவளது உயிர், அந்த பேயுடம்பில் இல்லாத இல்லாத வகையில் அடக்கிப் புன்முறுவல் பூத்த கண்ணனாகவும்

         அயில் கணை இராமர் சுகித்து இருக்க --- கூரிய அம்பினைக் கொண்ட இராமனாகவும் வந்து அவதரித்த திருமால் சுகமாக இருக்க,

     சினத்த திறல் வீரா --- சூரபதுமனாதி அவணர்களைச் சினந்த வலிமை மிக்க வீரரே!

      வெற்பு என மதாணி உருக்கிச் சமைத்து நிறுத்து --- மலை போன்ற பெரிய பொன் பதக்கம் ஒன்றை உருக்கி உருவமாகச் செய்தது போலவும்,

      வர்க்க மணியாக வடித்து இருத்தி --- பலவிதமான மணிகளைத் தனது வடிவத்திலே கொண்டாதகவும் விளங்குகின்ற

     தகட்டின் மெய்க் குலம் அதாக மலைக்க முத்தைப் பதித்து --- தகடுகளில் முத்தைப் பதித்தது போன்று வியக்கும் வண்ணம்,

      வெகுகோடி விண்கதிர் அதாக நிகர்த்து ஒளிக்க --- பலகோடி சூரியர்களைப் போன்று ஒளி வீசுகின்,

     சிவத்த ரத்தின படாக(ம்) மயில் பரிக்குத் தரித்து --- சிவந்த ரத்தினத் திரைச் சீலையைப் போர்த்தியது போன்ற உடலமைப்பைக் கொண்டதும், குதிரையைப் போன்று விரைந்து செல்லக் கூடியதும் ஆன,  மயில் வாகனத்தின் மீது அமர்ந்து,  

      மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே --- மிகச் சிறந்த திருவாவடுதுறை என்னும் திருத்தலத்தில் உயிர்களுக்கு அருள் விளங்க எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      சொல் பிழை வராமல் --- சொற்களில் பிழை வராமல்,

     உனைக் கனக்கத் துதித்து நிற்பது வராத --- தேவரீரை மிகுதியாக வழிபட்டு, நன்னெறியில் நிற்பது இல்லாத

     பவக் கடத்தில் சுழற்றி --- பிறவியாகிய காட்டில் சுழன்று,

      சுக்கில அவதார வழிக்கு இணக்கிக் களித்து --- சுக்கிலத்தால் உண்டாகின்ற பிறவிநெறியில் இணங்கிக் களிப்புற்று இருந்து,

     விலைமாதர் துப்பு இறையதான இதழ்க் கனிக்குக் கருத்தை வைத்து மயலாகி --- விலைமாதர்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய கனிரசத்தின் மீது எனது கருத்தை வைத்து, அறிவு மயக்கம் கொண்டு,

      மனத்தை விட்டு --- அதன் வழியே மனத்தைப் போகவிட்டு,

     கடுத்த துற்சன ம காதகரை --- செருக்கு மிகுந்த, நற்குணம் இல்லாத பெரும் கொடியவர்களை நாடிச் சென்று,

     புவிக்குள் தழைத்த நிதிமேவு கற்பக இராசன் என --- இந்த உலகத்தில் மிக்க பொருளைப் படைத்துள்ள கற்பக மரங்கள் உள்ள தேவலோகத்துக்கு அரசன் எனவும்,

     படைக்குப் பெருத்த அர்ச்சுன நராதி என --- படைக்கலங்களில் வல்ல அருச்சுனனை ஒத்த மனிதன் எனவும்,

     கவிக்குள் பதித்து --- பாடல்களை அமைத்து,

      கற்று அறி வினாவை எடுத்து --- கற்று அறிந்த சொற்களை (அதற்கேற்ப) தெரிந்து எடுத்து,

     அடுத்துப் படித்து --- அவர்களை அடுத்துச் சென்று,

     மிகையாகக் கத்திடும் மெய் --- மிகுதியும் கத்துகின்ற இந்த உடம்பின்,

     ஆக வலிக் கலிப்பைத் தொலைத்து --- வன்மை கொண்ட பொலிவையும் இழந்து,

      கைப்பொருள் இலாமை என --- கையில் பொருள் இல்லாமல் திரும்புவதால்

     கலக்கப் படுத்து கற்பனை விடாமல் --- மனக் கலக்கத்தில் ஆழ்த்துகின்ற கற்பனைக் கவிதைகளை விடாமல்

     அலைத்து இருக்கச் சலிக்க விடலாமோ --- மனம் துன்புற்று சலிப்பினை அடைய விடல் ஆமோ?

பொழிப்புரை

         இகழத் தக்க படத்தினை உடைய (காளிங்கன் என்னும்) பாம்பின் தலையை மிதித்து, உழக்கித் திருநடனம் புரிந்தும், கஜேந்திரன் என்னும்) யானையைப் பற்றி இழுத்த முதலையை வெளியே இழுத்து, தனது திகிரிப் படையால் பலமாகக் கிழித்து, மதிக்கத்தக்க யானையானது அழியாமல் காத்து, நற்கதியை அடையுமாறு இதமான உறுதிப் பொருளை அதற்கு அருளி, வஞ்சக எண்ணத்துடன் வந்த பேயாகிய பூதனையின் முலைக் குடத்தில் வாய் வைத்துப் பாலைக் குடித்து, வஞ்சனையால் முற்றி இருந்து அவளது உயிர், அந்த பேயுடம்பில் இல்லாத இல்லாத வகையில் அடக்கிப் புன்முறுவல் பூத்த கண்ணனாகவும் கூரிய அம்பினைக் கொண்ட இராமனாகவும் வந்து அவதரித்த திருமால் சுகமாக இருக்க, சூரபதுமனாதி அவணர்களைச் சினந்த வலிமை மிக்க வீரரே!

         மலை போன்ற பெரிய பொன் பதக்கம் ஒன்றை உருக்கி உருவமாகச் செய்தது போலவும்,  பலவிதமான மணிகளைத் தனது வடிவத்திலே கொண்டாதகவும் விளங்குகின்ற, தகடுகளில் முத்தைப் பதித்தது போன்று வியக்கும் வண்ணம், பலகோடி சூரியர்களைப் போன்று ஒளி வீசுகின், சிவந்த ரத்தினத் திரைச் சீலையைப் போர்த்தியது போன்ற உடலமைப்பைக் கொண்டதும், குதிரையைப் போன்று விரைந்து செல்லக் கூடியதும் ஆன,  மயில் வாகனத்தின் மீது அமர்ந்து,  மிகச் சிறந்த திருவாவடுதுறை என்னும் திருத்தலத்தில் உயிர்களுக்கு அருள் விளங்க எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         சொற்களில் பிழை வராமல், தேவரீரை மிகுதியாக வழிபட்டு, நன்னெறியில் நிற்பது இல்லாத பிறவியாகிய காட்டில் சுழன்று, சுக்கிலத்தால் உண்டாகின்ற பிறவிநெறியில் இணங்கிக் களிப்புற்று இருந்து, விலைமாதர்களின் பவளம் போன்ற வாயிதழின் ஊறலாகிய கனிரசத்தின் மீது எனது கருத்தை வைத்து, அறிவு மயக்கம் கொண்டு, அதன் வழியே மனத்தைப் போகவிட்டு, செருக்கு மிகுந்த, நற்குணம் இல்லாத பெரும் கொடியவர்களை நாடிச் சென்று, இந்த உலகத்தில் மிக்க பொருளைப் படைத்துள்ள கற்பக மரங்கள் உள்ள தேவலோகத்துக்கு அரசன் ஆகிய இந்திரன் எனவும், படைக்கலங்களில் வல்ல அருச்சுனனை ஒத்த மனிதன் எனவும், பாடல்களை அமைத்து, கற்று அறிந்த சொற்களை அதற்கேற்பத் தெரிந்து எடுத்து, அவர்களை அடுத்துச் சென்று, மிகுதியும் கத்துகின்ற இந்த உடம்பின், வன்மை கொண்ட பொலிவையும் இழந்து,  கையில் பொருள் இல்லாமல் திரும்புவதால் மனக் கலக்கத்தில் ஆழ்த்துகின்ற கற்பனைக் கவிதைகளை விடாமல், மனம் துன்புற்று சலிப்பினை அடைய விடல் ஆமோ?


விரிவுரை

சொல் பிழை வராமல் உனைக் கனக்கத் துதித்து நிற்பது வராத பவக் கடத்தில் சுழற்றி, சுக்கில அவதார வழிக்கு இணக்கிக் களித்து  ---

     எழுத்துக்களைக் கூட்டினால் சொல் பிறக்கும். சொல்லானது பொருளைக் கொண்டு இருக்கும். பொருளை உணரவேண்டுமானால், எழுத்துப் பிழை இல்லாமல் ஓதி வருதல் வேண்டும்.

     "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்னும் மணிவாசகம் சிந்தனைக்கு உரியது.

     சொல்லானது பாவியுள்ள மெய்ப்பொருளை உணரவேண்டும். எனவே, "சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்து இருளை வாங்காதான்" என்றார் அப்பர் பெருமான்.

     பொருள் தெரிந்து ஓதுகையில், நெறிப்பட ஒழுகல் வாய்க்கும். "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது" என்னும் திருஞானசம்பந்த்பெ பெருமானாரின் அருள் வாக்கு அருமை. அருமை.

"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே".

என்றார் அருணை வள்ளல் கந்தர் அலங்காரத்தில்.

     "ஓதுவது ஒழியேல்" என்ற ஔவையார் திருவாக்கின்படி, அறநூல்களை ஓயாது ஓதுதல் வேண்டும். அங்ஙனம் ஓதுங்கால் குற்றமற ஓதுதல் வேண்டும். குற்றம் என்பது, ஐயம், திரிபு, மயக்கம் என குற்றங்கள் மூன்று என உணர்க.

     பொருளினிடத்தில் உண்டா, இல்லையா என்று ஐயுறுதல், ஒன்றை ஒன்றாக மாறுபட அறிதல், உண்மை அறியாமல் மயங்குதல். இந்தக் குற்றங்கள் கடிந்து கற்றல் வேண்டும்.

     இதனையே, திருவள்ளுவர், "கற்க. கசடுஅறக் கற்க. கற்பவை கற்க. கற்றபின் அதற்குத் தக நிற்க" என்று கூறுகின்றார்.

ஓதுவதன் பயன் ஒழுக்கமுடைமை. ஒழுக்கமில்லாதார் ஓதியும் பயனில்லை.

ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ---  உலகநீதி.

ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.   ---  கொன்றைவேந்தன்.

ஓதலின் நன்று ஒழுக்கம் உடைமை..     ---  கொன்றைவேந்தன்.

ஓதாதார்க்கு இல்லை உண்ரவொடு ஒழுக்கம்..
                                                                                 ---  கொன்றைவேந்தன்.

கல்விக்கு அழகு கசடுஅற மொழிதல். --- வெற்றிவேற்கை.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலில் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை.. --- முதுமொழிக் காஞ்சி.

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கள் பிறப்பில் பிறிதுஇல்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.                  ---  அறநெறிச்சாரம்.


பேருரை கண்டு அறியாது தலைச்சுமை
     ஏடுகள் சுமந்து பிதற்று வோனும்,
போரில் நடந்து அறியாது பதினெட்டு
     ஆயுதம் சுமந்த புல்லி யோனும்,
ஆரணி தண்டலை நாதர் அகம் மகிழாப்
     பொருள் சுமந்த அறிவிலோனும்,
காரியம்ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
     கழுதைக்குஒப் பாவர் தாமே.    ---  தண்டலையார் சதகம்.


     ஓதுகின்ற நாள்களும் குற்றமில்லாத நாள்களாக அமைய வேண்டும். அட்டமி, சதுர்த்தசி, புவுரணமி, அமாவாசை, பிரதமை.  எனவே மாதத்தில் எட்டு நாள்கள் ஓதக் கூடாது.

அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது,
சிட்டருக்குப் பன்னான்கு தீதாகும், --- கெட்டஉவா
வித்தைக்கு நாசமாம், வெய்ய பிரதமையில்
பித்தரும் பேசார் பிழை.                      --- ஔவையார்.

     ஆசிரியர் கற்பிக்கும்போது கவனமின்றிக் கேட்டல், பராக்குப் பார்த்தல், சிந்தையை வேறு இடத்தில் செலுத்துதல், அசட்டையாக இருத்தல், அவமதிப்புடன் நிற்றல் முதலியவைகளும் குற்றம் என அறிக. எனவே, குற்றம் கடிந்து, குணம்கொண்டு அடக்கமும் பணிவும் மேற்கொண்டு, அறிவை வளர்க்கும் அறநூல்களை ஓதுதல் வேண்டும்.

     இவ்வாறு ஓதுவதால்,  உயிர்க்கு உட்பகையாக உள்ள பகைகள் அறும். காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாச்சரியம் என்று சொல்லப்படும் ஆறுபகைகள்.
ஓதி, ஒழுகி நிற்பதால், இக் குற்றங்கள் உயிர்க்கு அகலும் என்று கொள்ளவேண்டும்.

     நிற்பது என்பது, "நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவ நாயானர் காட்டிய நெறி ஆகும்.

     அவ்வாறு சொல் பிழை வராமல், உள்ளம் உருகி ஓதி, மெய்ப்பொருளை உணர்ந்தால், பிறவியானது அறும். அல்லாமல் போனால், பிறவியாகிய சுழலில் அகப்பட்டுத் துன்புற நேரும்.

விலைமாதர் துப்பு இறையதான இதழ்க் கனிக்குக் கருத்தை வைத்து மயலாகி, மனத்தை விட்டு ---

     துப்பு --- பவளம்.

     தமது உடல் சுகத்தைப் பொருள் கருதி அளிப்பவர்கள். உடல் சுமத்தை விலை பேசுபவர்கள் விலைமாதர் எனப்பட்டனர்.

     விலைமாதரின் வாயிதழில் ஊறும் எச்சிலை, கனிரசம் எனக் கருதி அனுபவித்து, அதற்கே மனத்தைச் சுழலவிடுதல் கூடாது.

கடுத்த துற்சன ம காதகரை ---

     கடுப்பு, கடுத்தல் --- செருக்கு, அகங்காரம்.

     ம --- பெரிய. அகங்காரம் மிகுந்துள்ள,

     காதகர் --- கொடியவர்.

     செல்வச் செருக்கு மிகுந்து உள்ளவர்கள் கொடிய மனம் படைத்தவர்களாக இருப்பர்.

     புவிக்குள் தழைத்த நிதிமேவு கற்பக இராசன் என, படைக்குப் பெருத்த அர்ச்சுன நராதி என, கவிக்குள் பதித்து, கற்று அறி வினாவை எடுத்து, அடுத்துப் படித்து........... கைப்பொருள் இலாமை என ---

     செல்வச் செருக்கு மிகுந்துள்ள பயனிலிகள் இருப்பை நாடிச் சென்று, தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களை, இந்திரன் நீ என்றும், வில்லில் வல்ல அருச்சுனன் நீ என்றும், தாம் கற்ற நூல்களில் இருந்து சொற்களைத் தேடி எடுத்து, பலவாறாகப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடினாலும் பொருளைத் தரமாட்டார்கள். எவ்வளவு கத்திப் புகழ்ந்து பாடியும் பொருள் கிடைக்கவில்லையே என்னும் ஆதங்கத்தால் உள்ளமும், உடலும் வாடி விடும்.

தம்மையே புகழ்ந்த், ச்சை பேசினும்
     சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே, எந்தை
    புகலூர் பாடுமின் புலவீர்காள்!
இம்மையே தரும்சோறும் கூறையும்,
     ஏத்தலாம் இடர் கெடலும் ஆம்,
அம்மையே  சிவலோகம் ஆள்வதற்கு
     யாதும் ஐயுறவுஇல்லையே

மிடுக்கு இலாதானை வீமனே, விறல்
     விசயனே வில்லுக்கு இவன் என்று,
கொடுக்கிலாதானைப் பாரரியே என்று,
     கூறினும் கொடுப்பார் இலை,
பொடிக் கொள்மேனி எம் புண்ணியன்,புக-
     லூரைப் பாடுமின் புலவீர்காள்!
அடுக்குமேல் அமர் உலகம் ஆள்வதற்கு
     யாதும் ஐயுறவுஇல்லையே                    --- சுந்தரர்

குன்றும் வனமும் குறுகி வழிநடந்து
சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்
கொடாதவரைச் சங்குஎன்றும், கோஎன்றும் சொன்னால்
இடாதோ அதுவே இது.                       --- இரட்டையர்.

வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி
மஞ்சரி கோவை தூது           பலபாவின்
வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி
வந்தியர் போல வீணில்      அழியாதே.... --- திருப்புகழ்.


கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,
     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,
     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,
மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,
     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,
இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்
     யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.  ---  இராமச்சந்திர கவிராயர்.


எல் பணி அராவை மிதித்து வெட்டித் துவைத்து ---

     எல் --- இரவு, இகழ்ச்சி.

     "எல்லினும் கரியமேனி எம்படர்" என்று பாம்பன் சுவாமிகள் பாடி உள்ளது காண்க.

     அரா --- பாம்பு. இங்கே காளிங்கன் என்னும் பாம்பைக் குறித்து நின்றது.

     கிருஷ்ணனும் அவன் நண்பர்களும் யமுனைக் கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது நண்பர்களில் சிலர் தாகம் தணித்துக்கொள்ளும் பொருட்டு நதிக்கரைக்குச் சென்று நீரைக் குடிக்கச் சுருண்டு விழுந்து உயிர்விட்டனர். அந்த நண்பர்களைக் காணாத மற்ற சில நண்பர்களும் அவர்களைத் தேடிச் சென்று அங்கே நீரைக் குடித்து மாண்டனர்.

     நண்பர்கள் திரும்பி வராததைக் கண்ட கிருஷ்ணன் தன்னுடன் இருந்த மற்ற நண்பர்களுடன் நதிக்கரைக்குச் சென்றான். அங்கே தன் நண்பர்கள் உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு, நடந்ததை அறிந்துகொண்டான். காளிங்கனின் செயலுக்கு அன்று ஒரு முடிவு கட்ட நினைத்து நதிக்குள் குதித்தான்.

     உடன் இருந்த நண்பர்கள் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் கிருஷ்ணனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் அழுதுகொண்டே ஊருக்குள் சென்று யசோதையிடமும், நந்தகோபரிடமும் நடந்ததைச் சொன்னார்கள். அனைவரும் அழுது புலம்பிக்கொண்டே நதிக்கரைக்கு விரைந்து வந்தனர். அங்கே தண்ணீரின் மேல் பகுதி அலைபாய்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். கிருஷ்ணனின் சுவடுகூடத் தெரியவில்லை.

     தண்ணீருக்குள் அழகிய அந்தச் சிறுவன் வருவதைக் கண்ட காளிங்கனின் மனைவியர் தம் கணவனின் நச்சுக்கு அவன் பலியாகப் போவதை நினைத்து வருந்தினர்.

     கிருஷ்ணன் தன்னிடத்தை நோக்கிச் சிறிதும் அச்சமின்றி நீந்தி வருவதைக் கண்டான் காளிங்கன். வியப்பு மிகுந்து, சினம்கொண்டு சீறி எழுந்தான். அவன் சீற்றத்தில் நதியின் அந்தப் பகுதி கொதித்துக் கொப்பளித்தது. அவனருகில் வந்த கிருஷ்ணன் காளிங்கனின் வாலைப் பிடித்துக்கொண்டான். தன் பலம் முழுவதையும் பயன்படுத்தித் தன் வாலை விடுவித்துக்கொள்ளக் காளிங்கன் செய்த முயற்சி எல்லாம் வீணானது.

     கிருஷ்ணன் காளிங்கனின் வாலைப் பிடித்துச் சுழற்றினான் காளிங்கனின் நூற்றுக்கணக்கான வாய்களிலிருந்து வெளிப்பட்ட நச்சு நிறைந்த மூச்சில் நதிநீர் நுரைத்துப் பொங்கியது. கிருஷ்ணனின் பிடியிலிருந்து விடுபட முயன்ற காளிங்கன் தண்ணீருக்கு மேலே வந்தபோது அவன் தலைமீது கிருஷ்ணன் நின்று ஆடிக்கொண்டிருப்பதைக் கண்ட அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். கிருஷ்ணனின் ஆட்ட வேகத்தைத் தாங்க முடியாமல் காளிங்கன் சோர்ந்து போனான்.

     காளிங்கன் மடிந்து விடுவான் என்பதை உணர்ந்து கொண்ட அவனதுமனைவியர் தண்ணீருக்கு மேலே வந்து கிருஷ்ணனிடம் வந்து காளிங்கனுக்கு உயிர்ப் பிச்சை தருமாறு வேண்டினர்.

     அந்தப் பகுதியை விட்டுப் போய்விடுவதானால் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளிப்பதாகக் கிருஷ்ணன் கூறினான். தன் கர்வம் அடங்கிய காளிங்கனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தான். வெகு தொலைவில் கடலில் இருந்த ஒரு தீவுக்குத் தன் மனைவி மக்களுடன் போய்விட்டான் காளிங்கன்.


பற்றிய கராவை இழுத்து உரக்கக் கிழித்து எண் கரி படாமல், இதத்த புத்திக் கதிக்கு நிலை ஓதி ---

கரா --- முதலை.

எண் கரி --- மதிக்கத்தக்க கஜேந்திரன் என்னும் யானை.

கஜேந்திரன் வரலாறு

     திருப்பாற் கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்த் தருக்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், அப்சர மாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக்கொண்டிருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத்தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப்பட்டு, அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் ஆயிரம் ஆண்டுகள் யுத்தம் நிகழ்ந்தது. கஜேந்திரம் உணவு இன்மையாலும் முதலையால் பல ஆண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது. யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தல் தொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தல் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய
 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென
 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

     யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.


எத்திய பசாசின் முலைக் குடத்தைக் குடித்து, முற்று உயிர் இலாமல் அடக்கி விட்டுச் சிரித்த, அயில் கணை இராமர் ---

     பசாசு - பேய். இங்கே பூதனையைக் குறித்து வந்தது.

     பூதனையின் முலையில் வாய் வைத்து, அவளை மாய்த்த கண்ணன், இராமபிரானாக அவதரித்தான்.

     கண்ணபிரான் ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் யசோதையிடம் வளர்ந்து வர, மாயையால் அவர் தன்னைக் கொல்ல இருக்கும் தன்மையை உணர்ந்த கம்சன், பூதகி என்ற கொடிய ஓர் அரக்கியைக் கண்ணனைக் கொல்லுமாறு விடுத்தான். அவள் அரமடந்தை உருவெடுத்து உலகிலுள்ள குழந்தைகளை எல்லாம் நச்சுப் பாலூட்டிக் கொன்று கொண்டு, இறுதியில் ஆயர்பாடிக்கு வந்தாள். வந்தவள் நந்தகோபர் வீட்டில் நுழைந்து ஒரு புறம் விளையாடிக் கொண்டிருந்த கமலக்கண்ணனை எடுத்து, “கண்ணப்பா! என் முலையை உண்ணப்பா!” என்று முலை ஊட்டினள். அவள் வஞ்சனையை உணர்ந்த கண்ணன்,

அறிந்து நகை யாடிமுலை அங்கைகொடு பற்றி
மறங்குலவு வஞ்சமகள் மாமுலை மணிக்கண்
திறந்தொழுகு பாலினொடு செய்ய தளிரென்னப்
பிறங்குகனி வாய்முகில் பிழிந்துயிர் குடித்தான்.

     பூதகி உயிர்துறந்து ஒரு பெரிய கரியமலைபோல் விழுந்தாள். பெருமான் முலையுண்ட புண்ணியத்தால் அவளும் முத்திபெற்று உய்ந்தனள்

தாய் வாயில் சொல் கேளாள் தன் ஆயத்
      தோடு அணையாள் தட மென் கொங்கை-
யே ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான்
      திருவரங்கம் எங்கே? என்னும்-
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட
      பெரு வயிற்றன் பேசில் நங்காய்
மா மாயன் என் மகளைச் செய்தனகள்
      மங்கைமீர் மதிக்கிலேனே.   ---  திருமங்கை ஆழ்வார்.

தன்மகன்ஆக வன் பேய்ச்சி
     தான்முலை உண்ணக் கொடுக்க
வன்மகன்ஆய் அவள் ஆவி
     வாங்கி முலைஉண்ட நம்பீ!
நன்மகள் ஆய்மகளோடு
     நானில மங்கை மணாளா!
என்மகனே! அம்மம் உண்ணாய்,
     என்அம்மம் சேமம் உண்ணாயே.---  திருமங்கை ஆழ்வார்.


சுகித்து இருக்க சினத்த திறல் வீரா ---

     "அரி அரி பிரம ஆதியர் கால் விலங்கு அவிழ்க்கும் பெருமாளே" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் ஓதியது காண்க. மூவர் தேவர் துயர் தீர்க்க, முருகப் பெருமான், சூராதி அவுணர்களை அழித்து அருள் புரிந்தார்.


வெற்பு என மதாணி உருக்கிச் சமைத்து நிறுத்து...........மயில் பரிக்குத் தரித்து ---

     பரி --- குதிரை. இங்கே ஆடும்பரி ஆகிய மயிலைக் குறித்தது.

     மயிலின் அழகை அடிகளார் விரித்துக் கூறுகின்றார்.

பலநிறம் மிடைந்த விழு சிறை அலர்ந்த
     பருமயில் அடைந்த ...... குக! வீரா! --- (இலகுகனி) திருப்புகழ்.

இரத்ன ரேகை ஒக்கச் சிறக்கும்
     மாமயில் பொன் கழுத்தில் ...... வரும்வீரா! --- (பூசலிட்டு) திருப்புகழ்.

மரகதத் தமனிய மயில்
     தத்த விடும் அமரர் ...... பெருமாளே. --- (அத்துகிரின்) திருப்புகழ்.

இனன் நிலவு தலைமலைய, அடியின் உகிர் இலைகளென
     இருசதுர திசையில் உர ...... கமும்வீழ,
இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம்
     என, விமலை, யமுனை என ...... நிழல்வீசி,

ககனமழை உகை கடவுள் உடலம் என, முதியவிழி
     கதுவி, எழில் பொதியமிசை ...... படர்கோலக்
கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக
     கடகமுடன் அமர் பொருத ...... பெருமாளே.  --- (அனகனென) திருப்புகழ்.

                           
மிக்க திருவாவடு நல் துறைக்குள் செழித்த பெருமாளே ---

     திருவாவடுதுறை சோழநாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள நரசிங்கன்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை வழியில் உள்ள திருவாலங்காடு என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி 1 கி.மீ. ஒரு கிளைப் பாதையில் நடந்து சென்றால் இத்திருத்தலத்தை அடையலாம்.

இறைவர் --- மாசிலாமணி ஈசுரர், கோமுத்தீசுவரர் (மூலவர்),
                       அணைத்தெழுந்தநாயகர் (உமாதேவியை அணைத்தெழுந்த கோலமாக                       இருப்பவர் (திருவிழாவின் முடிவில் கோமுத்தி தீர்த்தம்  
                    கொடுத்தருளுபவர்)
                        செம்பொன் தியாகர் (திருவிழா காலத்தில் திருத்தேரில் எழுந்தருள்பவர்). 
இறைவியார் --- ஒப்பிலா முலையம்மை, அதுல்ய குஜாம்பிகை. 
தல மரம் --- அரசு (இது படர்ந்துள்ளதால், படர் அரசு )                         
தீர்த்தம் --- கோமுக்தி தீர்த்தம், பத்ம தீர்த்தம், கைவல்ய தீர்த்தம்.

     தேவார மூவர் வழிபட்டுத் திருப்பதிகங்கள் அருளப் பெற்றது.

     நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார் இறைவன் திருவடி அடைந்த திருத்தலம்.

     திருவிசைப்பா அருளியவர்களில் ஒருவராகிய திருமாளிகைத் தேவர் அவதரித்த திருத்தலம்.

     உமாதேவியார் பசு வடிவில் பூவுலகில் பல இடங்களில் இறைவனை வழிபட்ட திருத்தலம்.  அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள். சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார். "கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுத்தீசுவரர் என்று பெயர் பெற்றார்

         திருஞானசம்பந்தர், இத்திருத்தலத்தில் தன் தந்தையார் சிவபாத இருதயருடன் சிலகாலம் தங்கியிருந்தார். ஒருநாள் சிவபாத இருதயர், பிள்ளையாரை நோக்கி, "வேள்வி செய்யும் காலம் நெருங்கலாயிற்று. அதற்குப் பொருள் வேண்டும்" என்றார். திருஞானசம்பந்தப் பெருமான், "அந்தம் இல் பொருள் ஆவன ஆவடுதுறையுள் எந்தையார் அடித்தலங்கள் அன்றோ" என்று எண்ணித் திருகோயிலுள் சென்று, "இடரினும் தளரினும்" எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். சிவனருளால் பூதம் ஒன்று விரைந்து வந்தது. பலிபீடத்தின் உச்சியில் ஆயிரம் பொன் கொண்ட ஒரு கிழியை வைத்தது. வைத்துப் பிள்ளையார் முன் நின்று, "இந்தப் பொற்கிழி உமக்குச் சிவபிரான் அருளால் வந்தது" என்று சொல்லிற்று. பிள்ளையார் திருவருளை வியந்து பூமியில் விழுந்து வணங்கினார். அப் பொற்கிழியைத் தந்தையாரிடம் தந்து, "இதில் உள்ள பொன்னானது, சீர்காழியில் உள்ள அந்தணர்கள் அனைவருக்கும் வேள்விக்கு வேண்டியதைத் தரும்" என்று சொன்னார். சிவபாத இருதயர் சீர்காழிக்குத் திரும்பினார்.
"கா இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவூரர்க்கு, அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே" என இந்நிகழ்வைத் திருநாவுக்கரசரும் பாடி உள்ளார்.

         முசுகுந்த சக்கரவர்த்திக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டிய சிறப்பும் உடையது இத்தலம். மக்கள்பேறு இல்லாமல் தவித்த முசுகுந்த சக்கரவர்த்தி இந்திரனிடம் பெற்ற தியாகேசரை தொடர்ந்து வழிபட்டு வந்தான். ஒருசமயம் சிவன் அவரது கனவில் தோன்றி, இத்தலத்தில் தன்னை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி இங்கு வந்து சிவனை வணங்கி புத்திரப்பேறு பெற்றார் முசுகுந்தன். எனவே, புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் அப்பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

         ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பாவில் நான்கு பதிகங்கள் பாடிய திருமாளிகைத்தேவர் போகரின் சீடர். இவர் இத்திருத்தலத்தில் சிவத்தொண்டு செய்து வந்தார். ஒருசமயம் அவர் மீது வீண்பழி சுமத்தப்பட்டதால், மன்னன் படை வீரர்களை அனுப்பி அவரை தாக்க முயன்றான். திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டி அற்புதம் நிகழ்த்திய தலம் திருவாவடுதுறை. இன்றும் இவ்வாலயத்தின் மதில்களில் நந்திகள் இல்லையென்பதைக் காணலாம்.


திருமாளிகைத் தேவர் வரலாறு

         திருவிசைப்பா அருளிய ஆசிரியர்கள் ஒன்பதின்மருள் திருமாளிகைத் தேவர் முதலாமவராகத் திகழ்பவர். இவர் சுத்த சைவவேளாளர் மரபில் தோன்றியவரும், சோழமன்னர்களின் தீட்சா குருவாக விளங்கியவருமான திருவிடைமருதூரில் வாழ்ந்து வந்த ஐந்து கொத்தாருள் ஒருவரான சைவராயர் வழியில் தோன்றிய உத்தமர். 

         (ஐந்து கொத்தார் விவரம். இவர் பரியேறும் பேரியோர், தெய்வப் படிமப் பாதம் வைத்தோர், மாணிக்கக் கூத்தர், குருராயர், சைவராயர் என்று ஐந்து வகைப்படுவர். சிவதீட்சை பெற்றவர் அந்தணராகில் தம்பெயர் இறுதியில் 'சிவம்' என்றும், சுத்தசைவராகில், தம்பெயர் இறுதியில் 'தேவர்' என்றும், மற்றையோராகில், தம்பெயர் இறுதியில் 'கணம்' என்றும் சேர்த்து வழங்கல் வேண்டும் எனச் சிவாகமத்தின் சாரமான சித்தாந்த சாராவளி என்னும் நூல் கூறும்.)

         இவர் தம் முன்னோர்கள் வாழ்ந்த மடம் மாளிகை மடம் அல்லது பெரியமடம் எனப் பெயர் பெறும். அம்மடத்தின் சார்பால் இவர் திருமாளிகைத் தேவர் என்ற பெயரைப் பெற்றனர் என்பர்.  திரு அடைமொழி. இவர் துறவு பூண்டு திருவாவடுதுறையை அடைந்து படர் அரசின் கீழ் இருந்து சிலகாலம் தவம் புரிந்தார் என்பர்.

         பின்பு இவர் திருவாவடுதுறையில் சிவாலயத்திற்கு அருகே தென்திசையில் தமக்கென ஒரு மடாலயம் (அருள்துறை மடம்) அமைத்துக் கொண்டு, இறை வழிபாட்டில் நின்றவர். அதுபோது, அங்குச் சிவயோகத்தில் அமர்ந்திருந்த சித்தரான போகநாதரிடம் ஞானோபதேசம் பெற்றவர். தம் தவத்தின் பயனாக அழகிய ஒளி வீசும் உடலைப் பெற்று விளங்கியவர். பல சித்திகளைப் பெற்றுத் திகழ்ந்தார். சைவ சமயத்தை நன்கு வளர்த்துப் போற்றினார்.   பலப்பல சைவ சித்தாந்த நூல்களை ஆராய்ந்து உணர்ந்த வித்தகராக விளங்கினார்.

         ஒருநாள் திருமாளிகைத் தேவர் காவிரியில் நீராடிச் சிவபூசைக்குத் திருமஞ்சனம், புட்பம் ஆகியவற்றை ஏந்திக் கொண்டு வரும்போது, வழியில் மக்கள் ஒரு சவத்தினைச் சுடலைக்கு எடுத்துச் செல்வதைக் கண்டு, சவத் தீட்டினால் சிவபூசைக்கு முட்டு நேராவண்ணம், திருமஞ்சனக் குடம் முதலியவற்றை ஆகாயத்தில் எறிந்து, அங்கே நிற்கச் செய்து, சவத்தினைச் சுடலை வரை நடந்து செல்லுமாறு பணித்தார். பிறகு, திருமஞ்சனக் குடம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சென்றார். ஒரு சமயம், இவர் திருவீழிமிழலையில் இருந்து காலத்தில், அங்கு நடக்கும் தேர்த் திருவிழாவின்போது, மக்கள்  இழுக்க முடியாமல் ஓடாது இருந்த திருத்தேரினை வடம் கழற்றிவிட்டுத் தானே ஓடும்படி செய்தார்.

         இவர் தம் தவ வலிமையால் பேரழகு கொண்டு விளங்க, அதனைக் கண்ட மாதர் பலர் அவர் உருவத்தினைத் தம் மனத்தில் கொண்டனர். அதனால், அம்மாதர்கள் அவரைப் போலவே புதல்வர்களைப் பெற்றெடுத்தனர். இச் செயலைக் கண்ட, அந்த அந்த மாதர்களின் கணவன்மார்களும் பிறரும், திருமாளிகைத் தேவர் மீது சந்தேகம் கொண்டு பழிச்சொல் கூறலாயினர். பிறகு அங்கு ஆட்சி புரிந்த காடவர்கோன் கழற்சிங்கன் ஆகிய பல்லவ அரசனின் சிற்றரசனான நரசிங்கன் என்னும் அரசனிடம் சென்று முறையிட்டனர். (இவ் அரசன் வந்து தங்கும் இடம் 'நரசிங்கன்பேட்டை' என்பது). அப்போது அம் மன்னன் உண்மை அறியாது, தேவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வரக் காவலாளிகளிடம் கட்டளை இட்டான். அவர்கள் உடனே திருமாளிகைத் தேவர் திருமடத்திற்குச் சென்று, தாம் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அரசனிடம் வந்து சேர்ந்தனர். அது கண்ட அரசன் வெகுண்டு படையெடுத்து வந்த போது, திருமாளிகைத் தேவர் அரசனின் உள்ளக் கிடைக்கையை அறிந்து, கோமுத்தீசுவரர் திருக்கோயிலின் திருமதிலின்கண் இருந்த நந்திகளை உயிர்ப்பித்து ஏவி, நரசிங்கனுடைய படையினை முறியடிக்கச் செய்தார்.

         திருமாளிகைத் தேவர் ஒரு சமயம் சுடுகாட்டில் எழும் சவப்புகையின் நாற்றத்தை மாற்றியதும், கொங்கணவர் என்ற சித்தருடைய கமண்டலத்தில் என்றும் வற்றாத தண்ணீரை வற்றச் செய்ததும், சிவ நைவேத்தியமாகித் தமக்கு வந்த பயற்றஞ் சுண்டலைத் தம் மடாலயத்தின் புழக்கடையில் ஒரு பாத்தி கட்டி விதைத்துப் பலன் பெறச் செய்ததும் ஆகிய அற்புதச் செயல்களைச் செய்தனர். இவற்றை,

"குடங்கர் விசும்பிடை நிறுவிக் குணபநடந்
         திடஇயக்கிக் கொடிஞ்சிப் பொன்தேர்
வடம்கழற்றி ஓட்டி, மதில் நந்திகளை
         வரவழைத்து,  வரைநன் காட்டின்
உடம்பின்எழு புகைமாற்றி, கொங்கணர்பாத்
         திரம்சுவற்றி, உணவ தாய்வெந்
திடும்பயறு முளைசெய்துஎமக்கு அருள்திருமா
         ளிகைத் தேவர் இணைத்தாள் போற்றி"

எனவரும் தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் பாடலால் அறியலாம்.

         திருவாவடுதுறை ஆதீன மடாலயத்துள் திருமாளிகைத் தேவருக்குத் தனிக்கோயில் உள்ளது. அவருடைய திருவுருவம் நான்கு திருக்கைகளுடன் திகழ்கின்றது. கோமுத்தீசுவரருக்கு உச்சிக் கால பூசை முடிந்தபின், உடனை திருமாளிகைத் தேவருக்கும் பூசை நடைபெறும். அதன் பின்னர், மடாலயத்தில் பகல்பந்திப் போசனம் நடைபெறுவது வழக்கம்.


நம்பிரான் "திருமூலர்" வரலாறு

         திருக்கயிலாயத்திலே சிவபிரானது திருக்கோயிலில், முதல் பெருங்காவல் பூண்டவர் திருநந்தி தேவர். அவரது திருவருள் பெற்ற மாணாக்கராகிய சிவயோகியார் ஒருவர். அவர் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் வாய்க்கப் பெற்றவர்; அகத்திய முனிவர்க்கு நண்பர். அம் முனிவருடன் சில நாள் தங்குதற்கு எண்ணிய சிவயோகியார், பொதியமலையை அடைதற்கு எண்ணித் திருக்கயிலாயத்தினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கி வந்தார். வரும் வழியில் திருக்கேதாரம், பசுபதிநாதம் (நேபாளம்), அவிமுத்தம் (காசி), விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களைப் பணிந்து காஞ்சி நகரை அடைந்தார். அங்குத் திரு ஏகம்பத்தில் எழுந்தருளிய பெருமானை இறைஞ்சிப் போற்றினார். கல்வியில் கரையிலாத காஞ்சி மாநகரில் வாழும் சிவயோகியர்களாகிய தவமுனிவர் பலருடனும் அளவளாவி மகிழ்ந்தார். பின்னர்த் திருவதிகையை அடைந்து திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளை வழிபட்டுப் போற்றினார்.

         இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம் பலத்தினைத் தன்னகத்தே கொண்டு திகழும் பொற்பதியாகிய பெரும்பற்றப்புலியூரை வந்தடைந்தார். அங்குக் கூத்தப் பெருமானைப் போற்றித் தம் உள்ளத்தே பொங்கியெழுந்த சிவஞானமாகிய மெய்யுணர்வினால் சிவானந்தத் திருக்கூத்தினைக் கண்டுகளித்து ஆராத பெருவேட்கையினால் தில்லைப் பதியில் சிலகாலம் தங்கியிருந்தார்.

         தில்லைத் திருநடங்கண்டு மகிழ்ந்த சிவயோகியார், அங்கிருந்து புறப்பட்டுக் காவிரியில் நீராடி அதன் தென்கரையினை அடைந்தார். உமையம்மையார் பசுவின் கன்றாக இருந்து இறைவனை வழிபாடு செய்து, அம்முதல்வனுடன் எழுந்தருளியிருந்து, மன்னுயிர்க்கு அருள் புரியும் திருத்தலமாகிய திருவாவடுதுறையை அணுகித் திருக்கோயிலை வலம் வந்து, வழித்துணை மருந்தாகிய மாசிலாமணியீசரை வழிபட்டு மகிழ்ந்தார். அந்நிலையிலே அத் தலத்தை விட்டு நீங்காத ஒரு கருத்து அவர் உள்ளத்தே தோன்றியது. அதனால் அத்தலத்திலே தங்கியிருந்தார். ஆவடுதுறை ஈசர்பால் ஆராத காதலையுடைய சிவயோகியார், அத்தலத்தை அரிதின் நீங்கிச் செல்லத் தொடங்கினார். அவர் செல்லும் வழியில் காவிரிக் கரையிலுள்ள சோலையிலே மேய்ந்துகொண்டிருந்த பசுக்கள் கதறி அழுவதனை எதிரே கண்டார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் குடியில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பான் அவ் விடத்தே தனியே வந்து பசு நிரையை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டவன், தான் எடுத்த பிறவிக்குக் காரணமாகிய வினைகள் நுகர்ந்து தீர்ந்தமையால் அவனது வாழ்நாளைக் கூற்றுவன் கவர்ந்து கொள்ள உயிர் நீங்க, அங்கு நிலத்தில் வீழ்ந்து இறந்து வெற்று உடலாய்க் கிடந்தான். அவனது உயிர் பிரியவே, அவனால் அன்புடன் மேய்க்கப்பெற்ற பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றி நெருங்கி நின்று மோப்பனவும் கதறுவனவுமாகி வருந்தின.

         பசுக்களின் பெருந்துயரத்தைச் சிவயோகியார் கண்டார். அருளாளராகிய அவருள்ளத்திலே `பசுக்கள் உற்ற துயரத்தை நீக்குதல் வேண்டும்` என்னும் எண்ணம் இறைவன் திருவருளால் தோன்றியது, `இந்த ஆயன் உயிர் பெற்று எழுந்தாலன்றி இப் பசுக்கள் துயரம் நீங்கா` எனத் தெளிந்த சிவயோகியார், தம்முடைய உடம்பினைப் பாதுகாப்புடைய ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுத் தாம் பயின்று உணர்ந்த பரகாயப் பிரவேசம் (கூடுவிட்டுக் கூடுபாய்தல்) என்னும் பவன வழியினாலே, தமது உயிரை ஆயனாகிய மூலனது உடம்பில் புகும்படி செலுத்தித் திருமூலர் என்னும் பெயருடையராய் எழுந்தார். அவர் ஆயன் உடம்புடன் எழுதலும், சுற்றி நின்ற பசுக்கள் யாவும் தம் துயரம் நீங்கி அன்பின் மிகுதியால் அவரது உடம்பினை நாத்தழும்ப நக்கி மோந்து கனைத்து மிகுந்த களிப்புடன் துள்ளியோடித் தாம் விரும்பிய இடங்களில் சென்று புல்லை மேய்ந்தன. அதுகண்டு மகிழ்ந்த திருமூலர் பசுக்கள் விரும்பிப் புல்மேயும் இடங்களில் உடன் சென்று நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த பசுக்கள் கூட்டமாகச் சென்று காவிரியாற்றின் துறையில் இறங்கி நல்நீர் பருகிக் கரையேறின. திருமூலர் அப்பசுக்களைக் குளிர்ந்த நிழலிலே தங்கி இளைப்பாறச் செய்து பாதுகாத்தருளினார்.

         அந்நிலையில் கதிரவன் மேற்குத் திசையை அணுக, மாலைப் பொழுது வந்தது. பசுக்கள் தத்தம் கன்றுகளை நினைந்து தாமே மெல்ல நடந்து சாத்தனூரை அடைந்தன. அவை செல்லும் வழியிலே தொடர்ந்து பின் சென்ற திருமூலர், பசுக்கள் தத்தமக்குரிய வீடுகளில் சென்று சேர்ந்த பின்னர் அவ்வூர் வழியில் தனித்து நின்றார். அப்பொழுது ஆயனாகிய மூலனுடைய மனைவி "என் கணவர் பொழுது சென்றும் வரவில்லையே, அவர்க்கு என்ன நேர்ந்ததோ" என்று அஞ்சியவளாய்த் தன் கணவனைத் தேடிக் கொண்டு வழியெதிரே செல்பவள், திருமூலராகிய சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்தாள். தன் கணவனது உடம்பில் தோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். `"இவர்க்கு ஏதோ தீங்கு நேர்ந்திருத்தல் வேண்டும்" என எண்ணினாள். அவரைத் தளர்ச்சியின்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் கருத்துடன் அவர் உடம்பைத் தொடுதற்கு நெருங்கினாள். அதுகண்ட திருமூலராகிய சிவயோகியார், அவள் தம்மைத் தீண்டாதபடி தடுத்து நிறுத்தினார். நெருங்கிய சுற்றத்தார் எவரும் இன்றித் தனியளாகிய அவள், திருமூலரது தொடர்பற்ற தனி நிலையைக் கண்டு அஞ்சிக் கலக்கமுற்றாள். "நும்பால் அன்புடைய மனைவியாகிய எளியேனை வெறுத்து நீங்குதலாகிய இதனால் எனக்குப் பெருந்துன்பத்தைச் செய்துவிட்டீர்" என்று புலம்பி வாட்டம் உற்றாள். நிறைதவச் செல்வராகிய திருமூலர் அவளைப் பார்த்து, "நீ எண்ணியபடி உனக்கு என்னுடன் எத்தகைய உறவும் இல்லை" என்று சொல்லிவிட்டு அவ்வூரிலுள்ள பொது மடத்தில் புகுந்து சிவ யோகத்தில் அமர்ந்திருந்தார்.

         தன் கணவனது தன்மை வேறுபட்டதனைக் கண்ணுற்ற மூலன் மனைவி, அது பற்றி யாரிடமும் சொல்லாமலும் தவநிலையினராகிய அவர்பால் அணையாமலும் அன்றிரவு முழுதும் உறங்காதவளாய்த் துயருற்றாள். பொழுது விடிந்தபின் அவ்வூரிலுள்ள நல்லோரை அடைந்து, தன் கணவனது நிலைமையை எடுத்துரைத்தாள். அதனைக் கேட்ட பெரியோர்கள் திருமூலரை அணுகி, அவரது நிலையை நாடி உற்று நோக்கினார்கள். "இது பித்தினால் விளைந்த மயக்கம் அன்று; சித்த விகாரக் கலக்கங்களை எல்லாம் அறவே களைந்து, தெளிவுபெற்ற நிலையில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினராய் இவர் அமர்ந்திருக்கின்றார். இந்நிலைமை யாவராலும் அளந்தறிதற்கு அரியதாகும்" எனத் தெளிந்தார்கள். "இவர் இருவகைப் பற்றுக்களையும் அறுத்து, ஞானோபதேசத்தால் பரமர் திருவடியைப் பெற்ற சீவன் முத்தர்களைப் போன்று எல்லாவற்றையும் ஓருங்கே அறியவல்ல முற்றுணர்வுடைய முனிவராக விளங்குகின்றார். எனவே முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத் தொடர்பாகிய குடும்ப வாழ்க்கையில் ஈடுபடமாட்டார்"  என மூலனுடைய மனைவிக்கு எடுத்துரைத்தார்கள். அதுகேட்டு அவள் அளவிலாத் துயரத்தால் மயக்கமுற்றாள். அருகேயுள்ளவர்கள் அவளுக்குத் தேறுதல் கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

         சாத்தனூர்ப் பொதுமடத்தில் சிவயோகத்தில் அமர்ந்திருந்த திருமூலர், யோகு கலைந்து எழுந்து முதல்நாளில் பசுக்கள் வந்த வழியினையே நோக்கிச் சென்று தமது உடம்பினை மறைத்து வைத்த இடத்தை அடைந்து தம் உடம்பைத் தேடிப்பார்த்தார். வைத்த இடத்தில் அவ்வுடம்பு காணப்படவில்லை. அது மறைந்து போன செயலை மெய்யுணர்வுடைய சிந்தையில் ஆராய்ந்து தெளிந்தார்.

         `சிவபெருமான் உயிர்கள் பால் வைத்த பெருங்கருணையினாலே அருளிச் செய்த சிவாகமங்களின் அரும்பொருள்களை இந் நிலவுலகில் திருமூலரது வாக்கினால் தமிழிலே வகுத்துரைக்கக் கருதிய திருவருள் திறத்தால், சிவயோகியாரது முன்னைய உடம்பினை இறைவர் மறைப்பித்தருளினார்` என்ற உண்மையினைத் திருமூலர் தமது முற்றுணர்வினால் தெளிய உணர்ந்தார். சாத்தனூரிலிருந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த ஆயர் குலத்தவர்க்கும் தமக்கும் எத்தகைய உறவும் இல்லை என்று அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார். அவர்கள் எல்லோரும் தம்மை விட்டு நீங்கிய பின், சிவபெருமான் திருவடிகளைச் சிந்தித்து அவ்விடத்தை விட்டு நீங்கித் திருவாவடுதுறைத் திருக்கோயிலை அடைந்தார். அங்கு எழுந்தருளிய அம்மையப்பரை வணங்கி, அத் திருக்கோயிலின் மேல் திசையிலுள்ள அரசமரத்தின் கீழ்த் தேவாசனத்தில் சிவயோகத்தில் அமர்ந்து, நெஞ்சத் தாமரையில் வீற்றிருந்தருளும் செம்பொருளாம் சிவபரம் பொருளுடன் உணர்வினால் ஒன்றியிருந்தார்.

         இங்ஙனம் சிவயோக நிலையில் அமர்ந்திருந்த திருமூல நாயனார், ஊனொடு தொடர்ந்த பிறவியாகிய தீய நஞ்சினால் உளவாம் துயரம் நீங்கி உலகத்தார் உய்யும் பொருட்டு, ஞானம் யோகம் சரியை கிரியை என்னும் நால்வகை நன்னெறிகளும் நால்வகை மலர்களாக விரிந்து ஞானமணம் பரப்பிச் சிவானந்தத் தேன் பிலிற்றும் திருமந்திர மாலையாகிய செந்தமிழ்ப் பனுவலை இறைவன் திருவடிக்கு அணிந்து போற்றும் நிலையில்,

"ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச்
சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே".

என்னும் திருப்பாடலைத் தொடங்கி, ஒராண்டுக்கு ஒரு திருப்பாடலாக மூவாயிரம் ஆண்டுகள் சிவயோகத்து அமர்ந்திருந்து மூவாயிரம் திருப் பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளினார். இவ்வாறு தமிழ் மூவாயிரமாகிய திருமந்திர மாலையை நிறைவு செய்தருளிய திருமூல நாயனார் சிவபெருமானது திருவருளாலே திருக்கயிலையை அடைந்து, இறைவன் திருவடி நீழலில் என்றும் பிரியாது உறையும் பேரின்ப வாழ்வினைப் பெற்று இனிதிருந்தார். திருமூலர் அருளிய திருமந்திர மாலை `நலஞ் சிறந்த ஞான யோகக் கிரியா சரியையெலாம் மலர்ந்த மொழிமாலையாகத் திகழ்கின்றது` எனச் சேக்கிழார் பெருமான் திருமூலநாயனார் வரலாற்றினைப் பெரிய புராணத்தில் விரித்துக் கூறியுள்ளார்.

         இங்ஙனம் திருமூல நாயனார் வரலாறாகச் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குத் திருமந்திரத்தில் திருமூலர் தம் வரலாறு கூறும் முறையில் அருளிச் செய்த திருமந்திரப் பாடல்கள் அகச்சான்றுகளாக அமைந்துள்ளன. மூலன் என்னும் ஆயனது உடம்பில் புகுந்து திருமந்திர மாலையை அருளிச் செய்த முனிவர்பிரான், திருக்கயிலையில் நந்தி தேவர்பால் ஞானோபதேசம் பெற்ற நான்மறை யோகிகளுள் ஒருவர் எனவும் அருளாளராகிய அவர் சாத்தனூரை அடைந்த பொழுது மூலனால் மேய்க்கப்பெற்ற பசுக்களின் துயரம் நீங்கத் தமது சித்தித் திறத்தால் தமது உயிரை மூலனது உடம்பிலே புகச் செய்து, திருமூலர் என்னும் பெயர் பெற்றுத் திருமந்திரமாகிய செந்தமிழ் ஆகமத்தை அருளிச் செய்தார் எனவும் நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரடிகளும் தெளிவாகக் கூறியிருத்தலால், திருமந்திர நூலாசிரியர்க்கு வழங்கும் திருமூலர் என்னும் இப்பெயர் அவர் மூலன் என்னும் ஆயனது உடம்பிற் புகுந்த பின்னரே உளதாயிற்று என்பது நன்கு புலனாகும்.

     நந்திதேவர்பால் அருளுபதேசம் பெற்ற நான்மறை யோகியராகிய அவர், தம் முன்னை நிலையில் அவர் பிறந்த ஊர், குடி, பேர் முதலியவற்றை அறிந்து கொள்ளுதற்குரிய வரலாற்றுச் சான்றுகள் தெளிவாகக் கிடைக்காமையால், அவரது வரலாறு கூற வந்த சேக்கிழாரடிகள், சிவயோகியார் மூலன் உடம்பில் புகுந்து திருமூலர் என்னும் பெயர் பெறுவதற்கு முன்னுள்ள அவர்தம் ஊர், பேர், குலம், முதலிய வரலாற்றுச் செய்திகளைக் குறித்து எதுவும் கூறாது விட்டார் எனக் கருதவேண்டியுள்ளது. இத்திருத்தலத்தின் வெளிப் பிரகாரத்தில் திருமூலருக்கு சன்னதி இருக்கிறது.

         சுவாமி சன்னதிக்கு வலப்புறத்தில் தியாகேசர் சந்நிதி உள்ளது. பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் இத்தலத்தின் உற்சவ மூர்த்தியான அணைத்தெழுந்த நாயகர் இருக்கிறார். இவர் அம்பாளை அணைத்த கோலத்தில் இருந்தாலும், அம்பாள் மீது கைகள் படாதவாறு சிலை அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம். இவர் இங்கு வரப்பிரசாதியாக திகழ்கிறார். பிரிந்திருக்கும் தம்பதியர் இவரிடம் வேண்டிக்கொண்டால் மீண்டும் இணைவர் என்பது நம்பிக்கை.

         ஐந்து நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலுக்கு எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலின் இருபுறமும் பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள் உள்ளன. கோபுர வாயிலைக் கடந்தால் நீண்ட நடைபாதை. அதன் முடிவில் உள்ள மண்டபத்தில் பெரிய நந்தியுள்ளது. இந்த நந்திக்குப் பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி வைத்தருளிய இடமாகும். பலீபீடத்தின் நான்கு புறமும் பூதகணங்கள் தாங்கி நிற்கின்றன.

     திருஞானசம்பந்தர் இப்பீடத்தின் அருகில் தமிழ்மணம் கமழ்வதை அறிந்து பீடத்தின் கற்களை பெயர்க்க அதன் அடியில் இருந்து திருமூலர் பாடிய திருமந்திரம் வெளிப்பட்டது என்னும் ஒரு கருத்தும் உள்ளது. பெரிய நந்திக்கு முன்புறம் மற்றொரு சிறிய நந்தியும் இருக்கிறது. பிரதோஷ வேளையில் இவருக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது.

     திருவிடைமருதூர் தலத்திற்கான பரிவாரத் தலங்களில் இத்தலம் நந்தி தலமாக இருப்பதால் இங்கு நந்தியிடம் வேண்டிக்கொள்வது சிறப்பு.

         சிவபெருமான் இத் திருத்தலத்தில் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமாசித்திகளை உபதேசித்ததாக ஐதீகம்.தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றதும் இத்தலத்தில் தான். திருமூலர், திருமாளிகைத்தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பதும் இத்திருத்தலத்தில் தான்.

கருத்துரை

முருகா! பொருள் தேடி உலுத்தரைப் பாடி அலையாமல், அருள் தேடி உன்னையே பாடி உய்ய அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...