பிள்ளை பெற்றவரைப் பார்த்துப் பெருமூச்சு எறிதல்

 

பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு எறிதல்

-----

 

     திருக்குறளில் "அழுக்காறாமை" என்னும் ஓர் அதிகாரம்.

 

     "அழுக்காறு" என்னும் சொல், அழுக்கு ஆறு (வழி) என இரண்டு சொற்களால் ஆனது என்றாலும், அதனை ஒரு சொல்லாகவே கொண்டு, அழுக்காறு என்றனர். அழுக்காறு என்பது சொல்லால், உடன்பாடாகத் தோன்றினும், பொருளால் எதிர்மறை ஆகி நின்று அழுக்கைத் தவிர்த்தலை உணர்த்தி நின்றது. அழுக்கு வழியில் செல்லாமல் இருத்தலை உணர்த்தியது. அழுக்காறு என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ளாத தீய குணம் ஆகும்.. அழுக்காறாமை என்பது, பிறருக்கு உண்டாகும் ஆக்கத்தைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத தீய குணத்தை விடுதல் என்பது ஆகும். பொறாமைப் படாமை. பொறுத்துலுக்கு மறுதலை ஆனது இது, என்பதால் பொறை உடைமையின் பின், பொறாமைப் படாமை வைக்கப்பட்டது.

 

     பொறாமைக் குணமானது ஒருவனுக்கு இம்மை மறுமை நலன்கள் அனைத்தையும் ஒருங்கே கெடுத்து, ஈன வாழ்வினைக் கொடுக்கும். எனவே, இனிமையான வாழ்வினை விரும்புகின்ற ஒருவன், தனது உள்ளத்தில், பிறர் ஆக்கம் கண்டு மனம் பொறுக்காமால், பொறாமை கொண்டு வாழ்கின்ற ஈனத்தை ஒழித்துவிட வேண்டும். உள்ளத்தில் அழுக்காறு கொள்ளாதவனே உண்மையான ஒழுக்கம் உள்ளவன் என்பதை உணர்த்த,

 

ஒழுக்கு ஆறாக் கொள்க, ஒருவன் தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.    

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

     பொறாமைக் குணத்தை உள்ளத்தில் கொண்டவனிடத்தில் வஞ்சனையும் பொய்யும் குடிகொண்டு இருக்கும். அவன் நல்ல நெறியில் சேரமாட்டான் என்பதை,

 

"வஞ்சனையும் பொய்யும்உள்ளே வைத்து அழுக்காறாய் உளறும்

நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே".

 

என வரும் தாயுமானார் பாடலால் அறிக.

 

     பொறாமை கொண்டு எப்போதும் உள்ளம் புழுங்குகின்ற புல்லர்கள், தீய ஒழுக்கத்தையே பற்றி இருப்பார்கள். அவர்களுக்கு இன்பநலம் எய்துவது இல்லை என்பதை,

 

"அழுக்காற்றால் நெஞ்சம் அழுங்கியபுன் மாக்கள்

இழுக்காற்றால் இன்பநலம் எய்தார் பராபரமே".

 

எனவரும் தாயுமானார் பாடல் காட்டும்.

 

     பொறாமைக் குணமானது ஒருவனுடைய செல்வத்தைக் கெடுக்கும். சுற்றத்தைத் தொலைக்கும். இகபர நலங்கள் வாய்க்காது. அது இறுதியில் ஒருவனைக் கொடிய நரகத்திலே கொண்டு சேர்க்கும். எனவே, அந்தக் கொடிய புன்மையைப் பகைவரிடத்தும் கூடச் செய்தல் கூடாது என்று அரசன் ஒருவன் தனது மகனுக்கு அறிவுறுத்துவதாக, "விநாயக புராணம்" என்னும் நூலில் பின்வரும் பாடல் அறிவுறுத்தும்.

 

ஒழுக்காறு ஒழிக்கும், பொருள் அனைத்தும்

     ஒழிக்கும், இம்மை மறுமையினும்

வழுக்காறு அனைத்தும் உறுவிக்கும்,

     மருங்கு உளார்க்கும் கேடு உறுக்கும்,

இழுக்காறு உடைய எரிநிரயத்து

     ஏய்க்கும், இதனால் ஏமகண்டா!

அழுக்காறு ஆய பெரும் பகையை

     அமரார் இடத்தும் புரியற்க.

 

     அமரார் --- பொருந்தாத பகைவர்.

 

     அடுத்தவரின் ஆக்கத்தைப் பொறுத்துகொள்ளாமல் மனம் புழுங்கி வாடுவதால் எந்த நலமும் விளையப் போவது இல்லை. பிள்ளைப் பேறு உடைய ஒருத்தியைப் பார்த்து, மலடியானவள் மனமு புழுங்கி, ஏங்கிப் பெருமூச்சு விடுவது போன்றதே ஆகும் என்கின்றது "தண்டலையார் சதகம்"        

 

அள்ளித்தெள் நீறுஅணியும் தண்டலையார்

      வளநாட்டில் ஆண்மை உள்ளோர்,

விள்ளுற்ற கல்விஉள்ளோர், செல்வம்உள்ளோர்,

      அழகு உடையோர் மேன்மை நோக்கி,

உள்ளத்தில் அழன்று அழன்று, நமக்கு இல்லை

      என உரைத்து இங்கு உழல்வார் எல்லாம்

பிள்ளை பெற்றவர்தமைப் பார்த்திருந்து, பெரு

      மூச்சு எறியும் பெற்றியாரே.

 

இதன் பொருள் ---

 

     தெள் நீறு அள்ளி அணியும் தண்டலையார் வளநாட்டில் --- தூய திருநீற்றை எடுத்து அணிகின்ற திருத்தண்டலை நீள்நெறி இறைவரின் வளமுடைய  நாட்டில், ஆண்மை உள்ளோர் --- வீரம்  உடையோர், விள்ளுற்ற கல்வி உள்ளோர் --- விளக்கிக் கூறப்படும் கல்வி கற்றோர், செல்வம் உள்ளோர் --- செல்வம் உடையோர், அழகு உடையோர் --- அழகு உள்ளவர் (ஆகியவரின்), மேன்மை நோக்கி --- உயர்வைப் பார்த்து, நமக்கு இல்லை என உள்ளத்தில் அழன்று அழன்று இங்கு உழல்வார் எல்லாம் --- நமக்குக் கிடைக்கவில்லையே என்று மனத்தில் வெதும்பி வெதும்பித்  திரிபவர்கள் எல்லோரும், பிள்ளை  பெற்றவர் தமைப் பார்த்து --- பிள்ளை பெற்றவர்களை நோக்கி, இருந்து பெருமூச்சு எறியும் பெற்றியார் --- அமர்ந்து பெருமூச்சு விடும் தன்மை உள்ளவர்.

 

      அழுக்காறு என்னும் மாசு படியாத மனமானது, தேசு உடையதாய் ஈசனுக்கு இனிய நிலையமாய் விளங்கும்.

 

     சைவக் கருவூலமாகிய "பெரியபுராணம்" அருளிச் செய்த தெய்வச் சேக்கிழார் பெருமான், தவம் மறைந்து அல்லவை செய்து ஒழுகுகின்ற சமணர்கள், தங்களுக்கு வகுக்கப்பட்ட நெறியை மறந்து, திருஞானசம்பந்தர் வருகையால் தாங்கள் பாண்டிய மன்னனிடத்துக் கொண்டிருந்த ஆக்கம் சிதையுமோ என்னும் ஏக்கத்தால், பொறாமை கொண்டு இருந்து, தமது சமயம் வகுத்த ஒழுக்கநெறியில் இருந்து பிறழ்ந்து, அது காரணமாகவே அழிந்தார்கள் என்பதைப் பின்வரும் பாடல்களால் திருவள்ளுவ நாயானர் திருவுள்ளத்தைக் காட்டியுள்ள திறம் அறிந்து இன்புறத்தக்கது.

 

பிள்ளையார் செம்பொன்மணிப்

         பீடத்தில் இருந்தபொழுது,

உள்ள(ம்)நிறை பொறாமையினால்

         உழைஇருந்த கார் அமணர்

கொள்ளும் மனத்திடை அச்சம்

         மறைத்து, முகம் கோபத் தீத்

துள்ளி எழும் அனல் கண்கள்

         சிவந்து, பல சொல்லுவார்.

 

இதன் பொருள் ---

 

     திருஞானசம்பந்தர் பொன் பீடத்தில் அமர்ந்திருந்த போது, உள்ளத்தில் உண்டான பொறாமையினால், அருகிருந்த கருநிறமுடைய சமணர்கள் தம் மனத்திடைக் கொண்ட அச்சத்தை மறைத்து, முகத்தில் சினத் தீயானது துள்ளி எழுவதுபோல் கண்கள் நெருப்பெனச் சிவந்து பலவாறு சொல்பவராய்.

 

     குறிப்பு --- சமணர்கள் உள்ளத்தில் அச்சம் நிறைந்து இருந்தது. அதனை மறைத்து, கோபத் தீயானது, அவர்களது முகத்தில் வெளிப்பட, கண்கள் சிவந்தன. பொறாமைப் படுபவர்களுக்கு சினமும், அச்சமும் சேர்ந்தே இருக்கும்.

 

     திருநீற்றுப் போரிலும், அனல்வாதத்திலும் திருஞானசம்பந்தரிடம் தோற்றுப் போன, சமணர்கள், புனல் வாதம் புரிவோம் என்றனர். திருஞானசம்பந்தப் பெருமான் அதற்கும் உடன்பட்டார். அப் பொழுது குலச்சிறை நாயனார், "இனி வாதில் தோற்றவர்களை என்ன செய்வது என்பதை முடிவு செய்துகொண்ட பின்னரே, வாதில் இறங்க வேண்டும்" என்றார். அது கேட்ட, சமணர்களுக்கு கோபமும், பொறாமையும் பொங்கி வழிந்தன. அது காரணமாக, அவர்கள் தமது வாய் சோர்ந்து, "நாங்கள் தோற்றாமானால், எங்களை இம் மன்னன் கழுவினில் ஏற்றுவான்" என்று கூக்குரல் இட்டாரகள். பாண்டியன், சமணர்களைப் பார்த்து, "கோபமும், பொறாமையும் எங்களை இவ்வாறு கூறச் செய்தன" என்று சொன்னான்.

 

அங்கு அது கேட்டு நின்ற

         அமணரும் அவர்மேல் சென்று,

பொங்கிய வெகுளி கூரப்

         பொறாமை காரணமே ஆகத்

தங்கள் வாய் சோர்ந்து, தாமே

         "தனிவாதில் அழிந்தோம் ஆகில்

வெங்கழு ஏற்றுவான், இவ்

         வேந்தனே" என்று சொன்னார்.

 

இதன் பொருள் ---

 

     அங்கு அவர் உரைத்ததைக் கேட்ட சமணர்கள், அவ்விடத்து மேற்கொண்டு பொங்கிய சினம் மிகுதியால், பொறாமைக் குணமும் மீதூர, தம் வாய் சோர்ந்து, `இந்த ஒரு வாதத்திலும் தோற்றோம் எனில், இம்மன்னனே எங்களைக் கொடிய கழுவில் ஏற்றுவானாக!'என்று தாங்களே கூறினர்.

 

மற்று அவர் சொன்ன வார்த்தை

         கேட்டலும், மலய மன்னன்,

"செற்றத்தால் உரைத்தீர், உங்கள்

         செய்கையும் மறந்தீர்" என்று

பற்றிய பொருளின் ஏடு

         படர்புனல் வைகை யாற்றில்

பொற்புற விடுவதற்குப்

         போதுக என்று கூற.

 

இதன் பொருள் ---

 

     அவர்கள், அங்ஙனம் உரைத்ததைக் கேட்ட பொதிய மலையின் அரசனான பாண்டிய மன்னன், `நீங்கள் சினம் மிகுதியினால் இங்ஙனம் கூறி விட்டீர்கள். உங்கள் செய்கைகளையும் மறந்து விட்டீர்கள்!' என்று சொல்லிப் பின், `உண்மை பற்றிய பொருளை உட்கொண்ட உம் ஓலைகளை ஓடும் நீரையுடைய வைகையாற்றில் அழகுபொருந்த விடுவதற்குச் செல்லுங்கள் ' என்று கூற.

 

     பின்னர் திருஞானசம்பந்தப் பெருமான் திருத்தெளிச்சேரி என்னும் திருத்தலத்தைச் சாரச் செல்லுகையில்,  பெருமானது வருகையை, போதிமங்கையில் இருந்த புத்தநந்தி முதலானவர்க்கு அறிவித்த புத்தர்கள், திருஞானசம்பந்தப் பெருமானாரின் ஆக்கம் கண்டு, பொறாமை கொண்டிருந்த நிலையை, தெய்வச் சேக்கிழார் பெருமான் அறிவித்து அருளுவதைக் காண்போம்...

 

புல்லறிவில் சாக்கியர்கள் அறிந்தார் கூடிப்

         புகலியர்தம் புரவலனார் புகுந்து தங்கள்

எல்லையினில் எழுந்தருளும் பொழுது, தொண்டர்

         எடுத்தஆர்ப் பொலியாலும், எதிர்முன் சென்று

மல்கிஎழும் திருச்சின்ன ஒலிகளாலும்

         'மனம் கொண்ட பொறாமையினால் மருண்டு', தங்கள்

கல்வியினில் மேம்பட்ட புத்த நந்தி

         முதலான தேரர்க்கும் கனன்று சொன்னார்.

 

இதன் பொருள் ---

 

     இதனைப் புல்லிய அறிவுடைய சாக்கியர்களுள் அறிந்தவர்கள் ஒன்று சேர்ந்து, சீகாழியினரின் காவலரான திருஞானசம்பந்தர் ஊரின் எல்லையுள் புகுந்தபோது, திருத்தொண்டர்கள் எடுத்த சிவ ஒலிகளின் முழுக்கத்தாலும், அவர்களின் எதிரே முன் அணியில் திரண்டு எழுந்து ஒலிக்கும் திருச்சின்னம் எக்காளம் என்ற இவற்றின் ஒலிகளாலும், தம் உள்ளத்துள் கொண்ட பொறாமையால், மயக்கம் அடைந்து, தம் கல்வியிலே மேம்பட்ட புத்தநந்தி முதலானவர்களுக்குச் சினத்துடன் கூறினர்.

                                                     

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருத்தலைக் காணலாம்....

 

தாரணியில் எவரேனும் துயர் உறில், தன்

             தலையின்முடி தரித்தது ஒப்பாம்,

சீரணியும் செல்வம் அவர் படைத்திடில் தன்

             தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,

காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்

             தன்வலியால் கணத்துக்கு உள்ளே

பூரணமா ஆக்கிடுவோன், பொறாமை உளோன்

             அன்றி எவர் புவியின் கண்ணே.   ---  நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

         பிறர் வாழ மனம் பொறுக்காத தீயோருக்கு, உலகில் யார் துன்புற்றாலும், தம் தலையில் முடி சூடியது ஒப்பாகும். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்தது ஒப்பாகும். இப்படி ஒரு காரணமும் இன்றி நொடிப் பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வன்மை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?

 

வவ்விடலே முதலாய வினையால் ஒவ்

             வோர் பயன் கை வந்து கூடும்,

அவ்வினைகள் இயற்ற வெவ்வேறு இடம் கருவி

             சமையமும் வந்து அமைய வேண்டும்,

எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல்

             எரி என்ன இதயம் தன்னைக்

கவ்வி உண்ணும் அவ்வியத்தால் கடுகு அளவு

             பயன் உளதோ கருதுங் காலே.      --- நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

     கவர்தல் முதலாகிய தீமைகளால் ஒவ்வொரு பயன் வந்து கை கூடும். அதற்கும் இடம், கருவி, காலம் எல்லாம் பொருத்தமாக அமையவேண்டும். உள்ளத்தைத் தீப்போல் கவர்ந்து மேல் எழும் பொறாமைக் குணத்துக்கு இடம், காலம் ஏதும் வேண்டா. எப்பொழுதும் நிகழும். ஆனால், அதனால் கடுகளவு பயனும் கிடையாது.

 

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...