திருத் தெங்கூர்

 

 

திருத் தெங்கூர்

 

இறைவர்           : இரசதகிரீசுவரர், வெள்ளிமலைநாதர்

 

இறைவியார்       : பெரியநாயகி

 

தல மரம்            : தென்னை

 

தீர்த்தம்             : சிவகங்கை

 

வழிபட்டோர்      : இலட்சுமி தேவி, நவக்கிரகங்கள்

 

தேவாரப் பாடல்கள்    : திருஞானசம்பந்தர் - புரைசெய் வல்வினை.

 

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

 

     மக்கள் வழக்கில் திருத்தங்கூர் என்று வழங்கப்படுகின்றது.

    

      திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி இரயில் தடத்தில் உள்ள திருநெல்லிக்காவல் இரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் உள்ளது. திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் நான்கு சாலை நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே திருநெல்லிக்காவல் செல்லும் பாதையில் திரும்பி திருநெல்லிக்காவல் சென்று அதே சாலையில் மேலும் 2 கி.மீ. சென்றால் திருதெங்கூர் திருத்தலத்தை அடையலாம்.

 

ஆலய முகவரி  

அருள்மிகு வெள்ளிமலைநாதர் திருக்கோயில்

திருத்தங்கூர்

திருநெல்லிக்காவல் அஞ்சல்

திருத்துறைப்பூண்டி வட்டம்

திருவாரூர் மாவட்டம்

PIN - 610205

 

         காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

 

         தலத்தின் சிறப்பு: ஒரு சமயம் உலகம் முழுக்க பிரளயம் எழும்பி கடல்நீர் பூவுலகம் முழுவதையும் மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தாள். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும் இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது.

 

         உமாதேவியின் விருப்பப்படி பிரளயத்தில் மூழ்காமல் இருந்த இத்தலத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மகாலட்சுமி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து நிரந்தரமாக இங்கேயே தங்கினாள். திரு என்னும் லட்சுமி வந்து தங்கியதால் இத்தலத்திற்கு திருத்தங்கூர் என்ற பெயர் ஏற்பட்டது.

 

         உமையம்மைக்கு விருப்பமான தலம் என்பதையும், திருமகள் வந்து சிவபூஜை செய்த தலம் என்பதையும் தெரிந்து கொண்ட நவக்கிரகங்கள் இத்தலத்திற்கு வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூஜித்து பலனடைந்தார்கள்.

 

         தென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் "தெங்கூர்" என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது என்றும் கூறுவர். அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.

 

         சிவகங்கை தீர்த்தம்: கங்கை நதியில் நீராடுபவர்களின் பாவங்களைச் சுமந்து வாடிய கங்கை, அந்த பாவங்களை எல்லாம் போக்கிக் கொள்ள பூலோகத்தில் உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி சிவபூஜை செய்தாள். அப்படியும் பாவம் முழுவதும் போய் விடவில்லை. இந்த நிலையில் இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அறிந்தாள் சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி. திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி 48 நாட்கள் செந்தாமரை மலர்களால் சிவனுக்கு பூஜை செய்தாள். கங்கைக்கு காட்சி தந்த ஈசன் அவள் பாவங்களை எல்லாம் போக்கினார். மேலும் அவள் உருவாக்கிய தீர்த்தத்திற்கு சிவகங்கை தீர்த்தம் எனப் பெயரிட்டு அதில் நீக்கமற எப்போதும் நிறைந்திருக்க அருளாசி புரிந்தார்.

 

         ஆலய அமைப்பு: இத்தலத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு நுழைவு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் பலிபீடத்தையும், நந்தியையும் காணலாம். கொடிமரத்திற்கு பதில் கொடிமர விநாயகர் உள்ளார். இரண்டு பிரகாரங்கள் உள்ள இவ்வாலயத்தின் வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. வெளிப் பிரகாரம் முழுவதும் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து அதனால் பிரகாரம் சுற்றி வர முடியாமல் காணப்படுகிறது. வலதுபுறம் அம்பாள் பெரியநாயகி சந்நிதி தனிக்கோயிலாக இருப்பதைக் காணலாம். உள்வாயிலைத் தாண்டிச் சென்றால், நேரே மூலவர் தரிசனம். கருவறை வாயிலிலுள்ள துவாரபாலகர்களையும், மற்றும் இருபுறமும் உள்ள விநாயகர், சுப்பிரிமணியரையும் வணங்கி உட்சென்று கிழக்கு நோக்கி சற்று உயர்ந்த பாணமுடைய சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி தரும் மூலவரைத் தரிசிக்கலாம். உட்பிரகாரத்தில் சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகங்கள் வழிபட்ட லிங்கங்கள், நவக்கிரக சந்நிதி முதலியவற்றைக் காணலாம். நடராஜ சபையும் இப்பிரகாரத்தில் உள்ளது. பைரவர், சூரியன் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.

 

         கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உள்ள சந்நிதிகளில் முக்கியமானவை இரண்டு. அவற்றில் முதலாவது மகாலட்சுமியின் சந்நிதி. மகாலட்சுமி சிவபூஜை செய்த தலமாதலால் இச்சந்நிதி முக்கியமானது. அடுத்தது வடக்குப் பிரகாரத்தில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் ஸ்தாபித்த சிவலிங்கங்கள். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

 

         இந்தத் திருத்தலத்தில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் ஒளிக் கதிர்கள் இறைவனின் திருமேனியில் படுகிறது. சூரிய பூசையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடுகிறார்கள்.

 

 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 574

நம்பர்மகிழ் திருஆரூர் வணங்கிப் போந்து,

         நலங்கொள்திருக் காறாயில் நண்ணி ஏத்தி,

பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றி,

         பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி,

உம்பர்பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர்

         ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றி,

செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தி,

         திருமலிவெண் துறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

 

         பொழிப்புரை : சிவபெருமான் மகிழும் திருவாரூரை வணங்கிச் சென்று, நன்மைகொண்ட திருகாறாயிலைச் சேர்ந்து வணங்கி, பசுமையான நீரை உடைய மென்மையான வயல்கள் சூழ்ந்த திருத்தேவூரினை அணைந்து போற்றி, இறைவரின் திருநெல்லிக்காவைப் பணிந்து திருப்பதிகம் பாடிச் சென்று, தேவதேவரின் கைச்சினமும் போற்றி, தெங்கூரும் மிக்க புகழையுடைய திருக்கொள்ளிக்காடும் போற்றி, மேற்சென்று, செம்பொன்னால் அழகுபடுத்தப்பட்ட மதில்களையுடைய திருக்கோட்டூரினை வணங்கிச் சென்று, திருமலிகின்ற திருவெண்துறையினைத் தொழும் பொருட்டுச் சென்று சேர்ந்தார்.

 

         குறிப்புரை : இத் திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

 

திருக்காறாயில் -          நீரானே (தி.2 ப.15) - இந்தளம்.

 

திருத்தேவூர் -         1. பண்ணிலாவிய (தி.2 ப.82) - காந்தாரம்.

                                 2. காடுபயில் (தி.3 ப.74) - சாதாரி.

திருநெல்லிக்கா -     அறத்தாலுயிர் (தி.2 ப.19) - இந்தளம்.  

 

திருக்கைச்சினம் - தையலோர் (தி.2 ப.45) - சீகாமரம்.

 

திருத்தெங்கூர் -       புரைசெய் (தி.2 ப.93) - பியந்தைக்காந்தாரம்.

 

திருக்கொள்ளிக்காடு - நிணம்படு (தி.3 ப.16) - காந்தாரபஞ்சமம்.

 

திருக்கோட்டூர் -       நீலமார்தரு (தி.2 ப.109) - நட்டராகம்.

 

 

2.093    திருத்தெங்கூர்               பண் - பியந்தைக்காந்தாரம்

                                             திருச்சிற்றம்பலம்

 

பாடல் எண் : 1

புரைசெய் வல்வினை தீர்க்கும்

         புண்ணியர், விண்ணவர் போற்றக்

கரைசெய் மால்கடல் நஞ்சை

         உண்டவர், கருதலர் புரங்கள்

இரைசெய்து ஆர்அழல் ஊட்டி

         உழல்பவர் இடுபலிக்கு, எழில்சேர்

விரைசெய் பூம்பொழில் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :மணம் கமழும் அழகிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்று எனப்பெறும் கோயிலில் அமர்ந்த இறைவர் துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர் . விண்ணவர் போற்றக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர் . முப்புரம் எரித்தவர் . இடுபலிக்கு உழல்பவர் .

 

 

பாடல் எண் : 2

சித்தம் தன்அடி நினைவார்

         செடிபடு கொடுவினை தீர்க்கும்,

கொத்தின் தாழ்சடை முடிமேல்

         கோள்எயிற்று அரவொடு பிறையன்,

பத்தர் தாம்பணிந்து ஏத்தும்

         பரம்பரன், பைம்புனல் பதித்த

வித்தன், தாழ்பொழில் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :தாழ்ந்த பொழில் சூழ்ந்து விளங்கும் தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , மனம் ஒன்றி நினைக்கும் அடியவர்களின் கொடுவினைகளைத் தீர்ப்பவர் . கொத்தாக விளங்கும் சடைமுடிமேல் அரவோடு பிறையைச் சூடியவர் . பக்தர்கள் பணிந்தேத்தும் பரம்பரர் . நீரில் பதித்த விதை போன்றவர் .

 

 

பாடல் எண் : 3

அடையும் வல்வினை அகல

         அருள்பவர், அனல்உடை மழுவாள்

படையர், பாய்புலித் தோலர்,

         பைம்புனல் கொன்றையர், படர்புன்

சடையில் வெண்பிறை சூடித்

         தார்மணி அணிதரு தறுகண்

விடையர், வீங்குஎழில் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :அழகுமிக்க தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் பெருமானார் , நம்மை அடையும் வலிய வினைகளைத் தீர்ப்பவர் . அனல்போன்ற மழுப்படையை உடையவர் . புலித்தோல் உடுத்தவர் . கொன்றையணிந்த சடைமேல் பிறைசூடி மணி கட்டிய விடைமீது வருபவர் .

 

 

பாடல் எண் : 4

பண்டு நான்செய்த வினைகள்

         பறையஓர் நெறிஅருள் பயப்பார்,

கொண்டல் வான்மதி சூடிக்

         குரைகடல் விடம்அணி கண்டர்,

வண்டு மாமலர் ஊதி

         மதுவுண இதழ்மறிவு எய்தி

விண்ட வார்பொழில் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்று அமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :மது உண்ண வந்த வண்டுகளால் விரிந்த மலர்களை உடைய பொழில் சூழ்ந்த தெங்கூரில் வெள்ளியங்குன்றில் விளங்கும் இறைவர் , முற்பிறவிகளில் நான்செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர் . வானத்து இளம் பிறையைச் சூடியவர் . கடலில் தோன்றிய விடத்தை உண்ட நீலமணி போன்ற கண்டம் உடையவர் .

 

 

பாடல் எண் : 5

சுழித்த வார்புனல் கங்கை

         சூடி,ஓர் காலனைக் காலால்

தெழித்து வானவர் நடுங்கச்

         செற்றவர், சிறையணி பறவை

கழித்த வெண்தலை ஏந்திக்

         காமனது உடல்பொடி யாக

விழித்த வர்,திருத் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :திருத்தெங்கூர் வெள்ளியங்குன்று அமர்ந்த இறைவர் கங்கையை முடிமிசைச் சூடி வானவர் நடுங்கக் காலனைக் காலால் செற்றவர் . அன்னப் பறவையாய் வடிவெடுத்த பிரமனது தலை யோட்டைக் கையில் தரித்தவர் . காமனின் உடல் பொடியாகுமாறு விழித்தவர் .

 

 

பாடல் எண் : 6

தொல்லை வல்வினை தீர்ப்பார்,

         சுடலைவெண் பொடிஅணி சுவண்டர்,

எல்லி சூடிநின்று ஆடும்

         இறையவர், இமையவர் ஏத்தச்

சில்லை மால்விடை ஏறித்

         திரிபுரம் தீயெழச் செற்ற

வில்லி னார்,திருத் தெங்கூர்

         வெள்ளியஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :திருத்தெங்கூர் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , பழவினை தீர்ப்பவர் . சுடலைப் பொடி பூசியவர் . திங்களை முடியில் சூடி நின்று ஆடுபவர் . இமையவர் ஏத்த விடை மீது ஏறிச் சென்று திரி புரம் எரித்த வில்லினர் .

 

 

பாடல் எண் : 7

நெறிகொள் சிந்தையர் ஆகி

         நினைபவர் வினைகெட நின்றார்,

முறிகொள் மேனிமுக் கண்ணர்,

         முளைமதி நடுநடுத்து இலங்கப்

பொறிகொள் வாள்அரவு அணிந்த

         புண்ணியர், வெண்பொடிப் பூசி

வெறிகொள் பூம்பொழில் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்று அமர்ந்தாரே.

 

         பொழிப்புரை :வெண்ணீறணிந்தவராய் மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றில் எழுந்தருளிய இறைவர் , நெறியான மனம் உடையவராய் நினைபவர் வினைகளைத் தீர்ப்பவர் . தளிர்போலும் திருமேனியையும் மூன்று கண்களையும் உடையவர் . பிறைகண்டு அஞ்சுமாறு சடைமிசைப் பாம்பைச் சூடிய புண்ணியர் .

 

 

பாடல் எண் : 8

எண்ணி லாவிறல் அரக்கன்

         எழில்திகழ் மால்வரை எடுக்க,

கண்எலாம்பொடிந்து அலறக்

         கால்விரல் ஊன்றிய கருத்தர்,

தண்உ லாம்புனல் கண்ணி

         தயங்கிய சடைமுடிச் சதுரர்,

விண்உ லாம்பொழில் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :விண்ணளாவிய பொழில் சூழ்ந்த தெங்கூரில் விளங்கும் வெள்ளியங்குன்றமர்ந்த இறைவர் , அளவற்ற ஆற்றல் படைத்த இராவணன் கயிலை மலையை எடுக்க முற்பட்டபோது அவன் கண்களெல்லாம் பொடியாய் , அவன் அலறி விழுமாறு கால் விரலால் ஊன்றிய தலைவர் . தண்ணிய கங்கையாகிய கண்ணியைச் சூடியவர் .

 

 

பாடல் எண் : 9

தேடித் தான்அயன் மாலும்

         திருமுடி அடியிணை காணார்,

பாடத் தான்பல பூதப்

         படையினர் சுடலையில் பலகால்

ஆடத் தான்மிக வல்லர்,

         அருச்சுனற்கு அருள்செயக் கருதும்

வேடத் தார்,திருத் தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :திருத்தெங்கூரில் , அயனும் மாலும் முறையே திருமுடியையும் திருவடியையும் தேடிக் காணப்பெறாதவர். பூதப் படைகள் பாடச் சுடலையில் பலகாலும் ஆடும் இயல்பினர். அருச்சுனனுக்கு அருள் செய்யும் வேடத்தினர்.

 

 

பாடல் எண் : 10

சடங்கொள் சீவரப் போர்வைச்

         சாக்கியர் சமணர்சொல் தவிர

இடங்கொள் வல்வினை தீர்க்கும்,

         ஏத்துமின், இருமருப்பு ஒருகைக்

கடம்கொள் மால்களிற் றுஉரியர்,

         கடல்கடைந் திடக்கனன்று எழுந்த

விடம்கொள் கண்டத்தர், தெங்கூர்

         வெள்ளிஅம் குன்றுஅமர்ந் தாரே.

 

         பொழிப்புரை :திருத்தெங்கூரில் வெள்ளியங்குன்றமர்ந்த பெருமான் உடலிற்போர்த்திய சீவரப் போர்வையை உடைய சாக்கியர் சமணர் சொற்களை வெறுத்துச் சைவ நெறிசார்வோரின் வல்வினை களைத் தீர்த்தருள்புரிபவர் . இருமருப்புக்களையும் ஒருகையையும் உடைய யானையின் தோலைப் போர்த்தியவர் . கடல் கடைந்த போதெழுந்த விடம் பொருந்திய கண்டத்தினர் .

 

 

பாடல் எண் : 11

வெந்த நீற்றினர், தெங்கூர்

         வெள்ளியங் குன்றுஅமர்ந் தாரை,

கந்தம் ஆர்பொழில் சூழ்ந்த

         காழியுள் ஞானசம் பந்தன்,

சந்தம் ஆயின பாடல்

         தண்தமிழ் பத்தும்வல் லார்மேல்

பந்தம் ஆயின பாவம்

         பாறுதல் தேறுதல் பயனே.

 

         பொழிப்புரை :வெந்த வெண்ணீறணிந்த தெங்கூர் வெள்ளியங் குன்றமர்ந்த இறைவரை மணம் பொருந்திய பொழில் சூழ்ந்த காழி ஞானசம்பந்தன் பாடிய சந்தப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும் . அவர்கள் தெளிவு பெறுதல் வந்துறும் பயனாகும் .

 

 

                                             திருச்சிற்றம்பலம்

 

 

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...