நல்லார்க்குச் செய்த உபகாரம்

 

ஔவையார் அருளிய "மூதுரை"

 

நல்லவர்க்குச் செய்த உதவி

-----

 

அதமதானம் --- கைம்மாறு கருதியோ, அச்சம் காரணமாகவோ செய்யப்படுவது.

 

மத்திமதானம் --- ஏழை, குருடர், முதலியோர்க்கு, புண்ணியம் கருதிக் கொடுத்தல்.

 

உத்தம தானம் --- நல்வழியில் ஈட்டிய பொருளை, கைம்மாற கருதாமல், புண்ணியம் என்ற எண்ணமும் இன்றி, இல்லாத வறியவர்க்கும், தக்கார்க்கும் கொடுத்து உதவுதல்.

 

     தானம் அல்லது உதவி என்பது மேற்குறித்தவாறு மூன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

 

     தக்க பெரியோர்க்குச் செய்த உதவியானது, அவர்க்குப் பயன்படாது, அவர் மூலமாகப் பிற நல்ல செயல்களுக்குப் பயன்படுவதால், அந்த தானம் உத்தம தானம் எனப்பட்டது.

 

     தீயவர்க்குச் செய்த உதவியானது, அவர்க்கே நன்மையாய் முடியும். சில சமயங்களில், தீமையாகவே முடிவதும் உண்டு என்பதால் அது சிறப்பிக்கப்படவில்லை. தீயவர் என்றால், அவர்க்கு உதவியே செய்யக் கூடாதா? என்னும் ஐயம் எழும். அவர்க்குப் பசி தணிவித்தில் மட்டுமே புரிக என்றார் வள்ளல்பெருமான். காரணம், பசி என்பது அரசன், ஆண்டி, செல்வர், வறியவர் எல்லார்க்கும் உள்ளது.

 

     இதனை வைத்தே, ஔவைப் பிராட்டியார், பின்வரும் பாடலை "மூதுரை" என்னும் நூலில் அருளிச் செய்தார்...

 

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்

கல்மேல் எழுத்துப்போல் காணுமே, --- அல்லாத

ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்

நீர்மேல் எழுத்திற்கு நேர்.

 

இதன் பொருள் ---

 

     நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் --- நற்குணம் உடைய ஒருவர்க்குச் செய்த உதவியானது, கல்மேல் எழுத்துபபோல் காணும் --- கருங்கல்லின் மேல் செதுக்கப்பட்ட எழுத்தைப் போல அழியாது விளங்கும்; (ஆனால்) அல்லாத ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் --- நல்லவர் அல்லா, உள்ளத்தில் அன்பு இல்லாத மனத்தை உடையவர்க்குச் செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு நேர் --- நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, ஒப்பாக அப்போதே அழிந்துவிடும்.

 

     அல்லாத --- நல்லவர் அல்லாத. ஈரம் இலா --- அன்பு இல்லாத.

 

         நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும். தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும்.

 

     நல்லவர்கள், தமக்கு ஒரு நன்மையைச் செய்தவர், பின்னர் நூறு பிழைகளைச் செய்தாலும் பொறுத்துக் கொள்வர். ஆனால், தீயவர்களுக்கு, எழுநூறு நன்மைகளைச் செய்திருந்து, ஒன்று தீதாகி விட்டால், முன்பு செய்த அந்த எழுநூறு நன்மைகளையும் மறந்து, தீமைகளையே எண்ணி இருப்பர் என்கின்றது நாலடியார். எனவே, நல்லவர்க்குச் செய்த உபகாரம் என்றும் நிலைத்து நன்மையையே தரும் என்பது தெளிவாகும்.

 

ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழை நூறும் சான்றோர் பொறுப்பர்; - கயவர்க்கு

எழுநூறு நன்றி செய்து, ன்று தீது ஆயின்

எழுநூறும் தீதாய் விடும்.                 --- நாலடியார்.     

 

இதன் பொருள் ---

 

     ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் --- தமக்கு ஒரு உதவியைச் செய்தவர், பின்னர் நூறு குற்றங்களைச் செய்தாலும், சான்றோர் பொறுத்து நிற்பர்; கயவர்க்கு எழுநூறு நன்றி செய்து, ஒன்று தீது ஆயின் எழுநூறும் தீதாய் விடும் --- (ஆனால்)  கீழ்மக்களுக்கு ஒருவர் எழுநூறு நன்மைகள் செய்து இருந்து, பின்பு தவறிப் போய் ஒன்று தீமையாக நேர்ந்து விட்டால், அந்த ஒரு தீமையால், முன் செய்த எழுநூறு நன்மைகளும் தீமைகளாய்க் கருதப்பட்டு விடும்.

 

         கயவர் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும்.

 

     இதனை, பின்வரும் திருக்குறள் தெளிவாக்கிக் காட்டும்.

 

உதவி வரைத்து அன்று உதவி, உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

 

     இத் திருக்குறளின் மூலம், " ஒருவருக்குச் செய்யும் உதவியானது, அதற்கான காரணமும், பொருளும், காலமும் ஆகிய மூன்று வகையாலும் செய்த உதவியின் அளவைப் பொறுத்தது அல்ல. அந்த உதவியைப் பெற்றுக் கொண்டவரின் தகுதியைப் பொறுத்தே அதன் சிறப்பு அமையும்" என்கின்றார் நாயனார்.

 

     மூன்று வகையாலும் அல்லாத உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்ததும், தக்க காலத்தில் செய்ததும், பயனை எதிர்நோக்காது செய்த உதவியும் ஆகும். அதாவது, பிறர் செய்த உதவியை ஏற்றுக் கொண்டவர், அவருக்கு அவர் செய்த உதவியின் காரணம், உதவி செய்த பொருளின் அளவு, ஆகியவற்றிற்கு ஏற்ப பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, தமது தகுதிக்கு ஏற்பச் செய்தல் ஆகும்.

 

     உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்வதும், ஆபத்து நேர்ந்த காலத்தில் செய்வதும், பயனை எதிர்பாராது செய்வதும், பிறர் செய்த உதவிக்கு ஏற்றவண்ணம், பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, அவர் மனம் மகிழும் வண்ணம், தமது தகுதிக்கு ஏற்றவாறு மறு உதவி செய்வதும் ஆகும்.

 

     ஏனவே, காரணம் கருதியும், பொருள் கருதியும், காலம் கருதியும் செய்யும் உதவியானது, ஒரு பயனை நோக்கியதாக இருத்தலால், அது சிறந்தது ஆகாது.

 

     நல்லோர்க்குச் செய்த உதவியானது எப்போதும் நிலைத்து நின்று, நல்ல பயனையே தரும் என்பதற்குப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.

 

உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி

இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்

தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும்.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து --- (செயல் ஏதும் இல்லாமல் ஒடுங்கி இருக்கின்ற) மிகச்சிறிய அளவினதான ஓர் ஆலம் விதையானது, ஈண்டி --- (மண்ணில் விழுந்து முளைத்துத்) தழைத்துப் (பெரிய மரமாகி), இறப்ப நிழல் பயந்தாங்கு --- (பல நூறு பேர் வந்து தங்கி, இளைப்பாற) மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப் பயனும் தான் சிறிதாயினும் --- அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தருகின்ற பொருளும், அளவில் சிறியதே ஆனாலும், தக்கார் கைப்பட்டால் --- தகுதியுடைய பெரியோர் கையில் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்து விடும் --- வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

  

கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலம் தர,

அடித்தாமரைச் சுடர்ப்பரிதி அளித்தருளினை, அதனால்

புதுமலர்ப் பொழில் தில்லை வாண!

உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே.

 

என்கின்றார் "சிதம்பர செய்யுட் கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகள்.

 

இதன் பொருள் ---

 

     தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் தனது கண்ணை இடந்து, சிவபெருமான் திருவடியில் இட்டுப் பூசையை நிறைவு செய்தான். அதற்கு, அப் பெருமான் சூரியன் போலப் போரொளி விளங்கும் (சலந்தராசுரனை வதம் செய்த) சக்கரப்படையை அவன் கையில் தந்தான். எனவே, மேலோர்க்குச் செய்த உதவி மேலான பயனை விளைக்கும். சிவபெருமான் அருளிய உதவி, திருமால் புரிந்த பூசைக்கும் மேலானது. எனவே, சிவபெருமான் திருமால் புரிந்த பூசனைக்குக் கைம்மாறாகப் புரிந்த உதவியானது மிக உயர்ந்தது. மேலான பரம்பொருளைப் பூசித்ததால், மேலான பலனைத் திருமால் பெற்றார்.

 

மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனுநெறி

போன தண்குடை வேந்தன் புகழ் என,

ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்

தானம் என்ன, தழைத்தது நீத்தமே.   ---  கம்பராமாயணம், ஆற்றுப் படலம்.

 

இதன் பதவுரை ---

 

     மானம் நேர்ந்து --- மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி --- தருமநெறி கருதி;  மனுநெறி போன --- மனுநீதிப்படி நடக்கும், தண் குடை வேந்தன் புகழ் என --- குளிர்ந்த வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்;  ஞானம் முன்னிய --- ஞான வழியை நாடுகின்ற;  நான்மறையாளர் கைத் தானம் என்ன --- நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது --- சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.

 

     மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன் ஓங்கும். அதுபோல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓயாது.

 

     ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று.   துன்புறும் உயிர்க் குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம்.

 

     மாவலிச் சக்கரவர்த்தி,  "உனது காலடிகளால் மூன்று அடி மண்ணை அளந்து கொள்க" என்று கூறிக்கொண்டு வாமனன்  கையிலிருந்த குண்டிகை நீரை வாங்கித் தாரை வார்த்தான். மாவலி தாரை வார்த்த நீரரானது, தனது கையில் பட்டதும், பெற்றவர்களும் இகழும்படியான மிகச்சிறிய வடிவத்தை உடைய வாமனமூர்த்தி, வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். அவன் உயர்ந்த்து எப்படி இருந்தது என்றால், உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல இருந்தது. "உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்ற திருக்குறள் கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல, வாமனமூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்றார் கம்பநாட்டாழ்வார்.

 

கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும்

பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து, எதிர்

வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்,

உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே.  ---  கம்பராமாயணம், வேள்விப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     கயம் தரு நறும் புனல் --- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்; கையில் தீண்டலும் --- தனது கைகளில் தீண்டபப்பட்ட உடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் --- பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமனமூர்த்தி; எதிர் பார்த்து வியந்தவர் --- எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்; வெருக்கொள --- அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப --- அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல;  விசும்பின் ஓங்கினான் --- வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.     

 

     இதையே "சிவஞானசித்தியார்" என்னும் மெய்கண்ட சாத்திர நூல் கூறுவதையும் காணலாம்...

 

சிவஞானச் செயல்உடையோர் கையில் தானம்

          திலம்அளவே செய்திடினும், நிலமலைபோல் திகழ்ந்து,

பவமாயக் கடலின் அழுந் தாதவகை எடுத்து,

          பரபோகந் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்

தவம்ஆரும் பிறப்புஒன்றிற் சாரப் பண்ணி,

          சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே,

நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி,

          நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே.   ---  சிவஞானசித்தியார்.

 

இதன் பதவுரை ---

 

     சிவஞானச் செயல் உடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடினும் --- (விதிவழி இன்றிப் பத்தி வழியில் நின்கின்ற) சிவஞானிகள் கையில் தானம் செய்து அளித்த பொருள் சிறிதே ஆயினும், நிலம் மலைபோல் திகழ்ந்து --- நிலமும் மலையும் போல விரிவாகி ஓங்கி விளங்கும். (அத் தானம் செய்த அந்த பத்தருக்கு), பரபோகம் துய்ப்பித்து --- மேலாகிய (சிவசாலோகாதி பதங்களில் பொருந்தி உள்ள) இன்பங்களை அனுபவிக்கச் செய்து, பவமாயக் கடலில் அழுந்தாத வகை எடுத்து --- சனனம் மரணம் என்னும் கடலின்கண் அமிழ்ந்தாத வண்ணம் எடுத்து, பாசத்தை அறுக்க --– பாசத்தினை நீக்க, தவம் ஆரும் பிறப்பு ஒன்றில் சாரப் பண்ணி --- தவம் செய்தற்கு உரிய (உயர்ந்த குலத்தில்) ஒரு பிறவியை அடையச் செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே --- சரியை கிரியை யோகங்கள் (ஏனோர்க்குப் போலக் கால நீட்டிப்பும் அருமையும் இன்றி) எளிதில் கைகூடி முற்றுப் பெறச் செய்து, நவம் ஆகும் தத்துவ ஞானத்தை நல்கியே நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தான் --- (முடிவில்) புதுமையாகிய உண்மை ஞானநெறியைத் தலைப்படுத்தி முதல்வனது செங்கமல மலர்போலும் திருவடியாகிய வீட்டினை எய்துவிக்கும்.

 

     சிவஞானம் மிகுந்த அடியார்கள் கையில் கொடுத்த தானமானது, அதன் அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் பயனானது, இந்த நிலம் போலப் பரந்து விளங்கும். மலை போல மாண்பு பெற்று விளங்கும்.

 

     இதனையே, நமது கருமூலம் ஆறுக்க வந்த திருமூல நாயனாரும் வலியுறுத்துவார்.

 

திலம் அத்தனையே சிவஞானிக்கு ஈந்தால்,

பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்;

நிலம் அத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்,

பலமும் அற்றே, பரபோகமும் குன்றுமே. ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னே ஆயினும், அதனைச் சிவஞானம் கைவரப் பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெரும் சித்திகளையும், பதமுத்தி, அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று, யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலம் அத்தனைப் பொன்னைக் கொடுத்தாலும், அது யாதும் பயன் தராது. அல்லாமல், ஞானம் குறைதற்கும் ஏதுவாகி விடும்.

 

         குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி, உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக் கொடுத்தல் கொடையாகும்.

 

     எனவே, தக்கார்க்கு உதவி செய்தல் வேண்டும். அது சிறிதளவாக இருந்தாலும் பெரும்பயனைத் தரும் என்பதை அறிதல் வேண்டும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...