அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை

 


அறிவு மயக்கம் தீரப் பிரார்த்தனை

-----

 

      தனது உள்ளத்தில் உண்டான ப்ரமத்தை முருகப் பெருமான் தவிர்க்க வேண்டும் என்பது அருணகிரிநாதர் வேண்டுகோள். ப்ரமம் என்பது மயக்கம்.  "அமரும் பதிகேள் அகம் ஆம் எனும் இப்பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா"என்று கந்தர் அனுபூதியில் இந்தப் பிரமத்தைப் பற்றிச் சொல்கிறார். "பிரமம்" என்பது "பிமரம்" என்று எழுத்து மாறி வந்தது.

 

     (அமரும் பதி) நம் சொந்த ஊர் அல்லது வாழும் ஊர் நம்மைப் பலவகையில் வளர்த்தது. (கேள்) உறவினர்கள் நமக்கு ஆக்கமானவர்கள். (அகம்) நமது குடும்பமும் வீடும் நமது வாழ்க்கைக்கு உறுதுணை ஆனவை. இவை ஏன் நமக்கு அறிவு மயக்கத்தைத் தருகின்றன  என்பதை ஆராய்ந்துஉண்மையை அறிந்தால்அறிவு மயக்கம் தீர்ந்து அறிவுத் தெளிவு பிறக்கும். அமரும் பதிகேள்அகம் என்பவை அனைத்தும் நமது ஆன்ம வளர்ச்சிக்காக இறைவனால் அருளப்பட்டவை. இவற்றை அருளியலுக்குப் பயன்படுத்தினால் பிறப்புத் துன்பம் அறும். மாறாகஅவற்றிலேயே அழுந்திஅனுபவித்துக் கொண்டுஆன்ம வளர்ச்சி இல்லாமல் இருப்பது மயக்கம் அல்லது பிரமை அல்லது பிரமம் ஆகும். மதிநிலை கெட்டுப் போவது மயக்கம் ஆகும். "உலக பசு பாச தொந்தம் அதுவான உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் மலசல சுவாச சஞ்சலம் ஆதல் என் மதிநிலை கெடாமல் உன்தன் அருள் தாராய்" என்றார் திருப்புகழில்.


     பாசத்தினால் வந்த மயக்க உணர்வினால்,துணையாகாத உறவினர் மனைவி பிள்ளைகள் முதலியவரைத் துணை என நம்பி வாழ்நாள்களை பயனற்ற முறையில் கழித்துஅவமே கெட்டு,ஆன்மாக்கள் அல்லற்படுகின்றன."மனைவிதாய்தந்தைமக்கள்மற்று உள்ள சுற்றம் என்னும்வினையுளே விழுந்து அழுந்தி,வேதனைக்கு இடம் ஆகாதே" என்பார் அப்பர் பெருமான்.ஆன்மாக்களுக்கு உள்ள அறிவை ஆணவமலம் மறைத்து,அறிய விடாமல் தடுக்கின்றது. அதனால் ஆன்மா அறிவு கெட்டு,தனது உண்மையையும் தலைவனது உண்மையையும் அறியாமல் தவிக்கின்றது.ஞான வடிவாக உள்ள சிவம் என்ற அருட்பெருஞ்ஜோதிஆன்மாவிற்கு உள்ளும் புறமும் வியாபித்நு இருக்கும் போதுஆணவ மலம் என்னும் இருள்ஆன்மாவை எப்படி மறைக்கிறாது என்றால்,  கோட்டானுக்குச் சூரியன் இருட்டாக காணப்படுவது போமூடனுக்குத் தன் உயிருக்கு உயிராக நிற்கும் பரம்பொருள் தோன்றாது. அவன்தான் அறிவுக் குருடனாக இருக்கின்றானே. 

 

     பகல் பொழுதிலும் கோட்டான் விழிக் குருடாய் இருப்பதற்குஅதன் விழிக் குற்றம் காரணம். சூரியன் குற்றம் அல்ல.  அதுபோல் எங்கும் நீக்கமற நிறைந்து ஞானப் பகலாகவே உள்ள இறைவனைக் காணமாட்டாது ஆன்மா அறிவுக் குருடாய் இருப்பதற்கு அதனிடத்துப் பொருந்தி உள்ள ஆணவ மலக்குற்றமே காரணம். சிவஞானபோதம் 7-ஆம் சூத்திரம் யாவையும் சூனியம் சத்து எதிர்” என்று உபதேசிக்கின்றது. விளங்கி நில்லாமையே சூனியம் எனப்பட்டது. கோட்டானுக்கு  இருளில் பார்வை உண்டானது போ சீவனுக்கும் அஞ்ஞான தசையில் சிற்றறிவு நிகழும்.

 

     தெளிவு இல்லாமல் இருப்பதே மயக்கம். தெளிவு என்பது இன்ன பொருள் இத்தகையது என்று உணர்ந்துகொள்ளும் மனநிலை. "எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார். நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் சரியானபடி தெரிந்து கொள்கிறோம்.காதினால் கேட்கும் வார்த்தைகளுக்குச் சரியானபடி பொருள் செய்து கொள்கிறோம். ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும். ஆனால் அந்த எண்ணம் உண்மை அல்ல. நாம் காணுகிற அனைத்தும் உண்மை அல்ல. வெவ்வெறு வகையான பொருள்களை நாம் காண்கிறோம். அனைத்தையும் விருப்பு வெறுப்புடன்தான் நாம் பார்க்கிறோம். நான் என்ற நினைவோடு பார்க்கிறோம். அந்த அந்தப் பொருளைஅதன் அதன் இடத்திலேயே வைத்துப் பார்க்காமல்  நம்மோடு ஒட்டிப் பார்க்கிறோம். நம் பார்வையும் கருத்தும் நம்மிடத்திலிருந்தே தொடங்குகின்றன. ஆதலால் பொருள்களின் இயல்பை உள்ளவாறே உணர்ந்து கொள்ள முடியவில்லை.

 

     இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவும் மெய்யாகவே தோன்றுகின்றன. உண்மையான பொருள் இன்னது என்று தெரியாமல் திண்டாடுகிறோம். பெரியவர்கள் இறைவனை மெய்ப்பொருள் என்றும் பரம்பொருள் என்றும் சொல்கிறார்கள். அதை நாம் கேட்கிறோம்ஆனால்அனுபவத்தில் மெய்ப்பொருளை உணர முடிவதில்லை. பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மறுத்துப் பேசாமல் இருக்கிறோம். மறத்துப் பேசுவதே பாவம் என்றும் சொல்லப்படுகிறது.

 

     நமக்கு எல்லாமே பொருளாக இருக்கின்றன.  எல்லாப் பொருள்களையும் பொருள்களாக உணர்ந்தோமே அல்லாதுநாம் மெய்ப்பொருளை உணரவில்லை. அந்த மெய்ப்பொருள் எங்கே இருக்கிறதுபெரியவர்கள் எல்லாப் பொருளாகவும் அந்த மெய்ப்பொருள் உள்ளதாகச் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் "ஒன்றாகக் காண்பதே காட்சி" என்று உபதேசம் செய்கிறார்கள். மெய்ப்பொருள் நம்மை விட்டுஎங்கோ வெகுதூரத்தில் இருப்பது அல்லஅது நம்முடன் இடைவிடாமல் இருக்கிறது என்று பெரியவர்கள் சொல்வது நமக்குத் தெளிவை உண்டாக்குவது இல்லை."பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தமே" என்று தாயுமானவர் சொல்கிறார். நாம் காண்பது உண்மையானால்நமக்கு மனநிறைவு உண்டாக வேண்டும்இன்பம் உண்டாக வேண்டும். நாமோ பல வகையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் நாம் காண்பதுவே சரி என்று சொல்ல இயலவில்லை.

 

     நாம் படும் துன்பங்களுக்கெல்லாம் மூலம் பிறப்பு என்கிறார் திருவள்ளுவ நாயனார். பிறவி என்பது பெரிய துன்பம்பல துன்பங்களை உண்டாக்கும் தாய் அது. அது நமக்கு எப்படி உண்டாகிறது? 'மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாகக் காண்பதனால்தான் துன்பம் நிறைந்த பிறப்பு உண்டாகிறது’  என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார்.

 "பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்  மருளான் ஆம் மாணாப் பிறப்பு" என்பது திருக்குறள். மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்யாக உணர்வதுதான் மருள்,மயக்கம். அதையே அருணகிரியார் "ப்ரமம்" என்று சொல்கிறார். அதுதான் பிறப்புக்கு ஆதாரம். பிறப்பு சிறப்பு இல்லாதது. துன்பம் தருவதனால் மாணாத பிறப்பு ஆயிற்று.

 

     இந்த மயக்கமாகிய மருள் இறைவன் அருளால் நீங்கும். மருள்ஒன்றை வேறு ஒன்றாகவும் பலவாகவும் காணும்படி செய்கின்றது. அருளோ யாவற்றையும் ஒன்றாகக் காணச் செய்கின்றது. இருட்டிலே தெளிவு இராது. கட்டையானது மனிதன் போலத் தோன்றும். ஒன்றும் இல்லாத இடத்தில் யாரோ நடமாடுவது போல இருக்கும். இந்த மருள் நீங்கி ஒளி உண்டானால் உள்ளது உள்ளபடியே தோன்றும். அருளால் ஒளி உண்டாக வேண்டும்.

 

     உள்ளத்தில் உள்ள மயக்கத்தால் உண்டாகும் விளைவுகள் பலவானாலும் இங்கே சுருக்கி இரண்டாகச் சொல்கிறார். சளத்தில் பிணிபட்டிருப்பது ஒன்று.  அந்தப் பிணிப்பினால் அசட்டுக் கிரியைக்குள் தவிப்பது மற்று ஒன்று. இவை ஒன்றுக்கு ஒன்று காரணமாக நிற்பவை. ப்ரமத்தால் சளம் உண்டாகிறதுசளத்தால் அசட்டுக் கிரியைகள் உண்டாகின்றன. "சளம்" என்னும் சொல்லுக்குமூர்க்கம்வஞ்சனைதுன்பம்கீழ்மைகுற்றம் என்று பொருள். ப்ரமம் என்பது சளத்தைஉண்டாக்கஅதில் நாம் பிணிபட்டுக் கிடக்கிறோம். அதன் விளைவாக அசட்டுச் செயல்களைச் செய்கிறோம்அதனால் தவிக்கிறோம். 

 

     மனத்தில் ஒன்று நினைப்பதுவாக்கில்  வேறு ஒன்று பேசுவது வஞ்சனைப் பேச்சு. மனத்தில் ஒன்றும் செயலில் வேறு ஒன்றும் செய்வது வஞ்சனைச் செயல். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதாகிய வஞ்சனையைப் பிறரிடம் நாம் காட்டுகிறோம். நாம் சொல்வது வஞ்சனைப் பேச்சுதான் என்று பிறர் எளிதில் அறிவதில்லை. ஆனால்நமக்கு வேண்டிய ஒன்றை நாம் எண்ணும்போது அப்படியே செய்யாமல்நம்மை நாமே வஞ்சித்துக் கொள்கிறோம். நமக்கு நாமே வஞ்சனை செய்து கொள்வதனால் நமக்குக் கவலைகளும் அச்சமும் உண்டாகின்றன. "தன் நெஞ்சு அறிவது பொய்யற்கபொய்த்த பின்தன் நெஞ்சே தன்னைச் சுடும்"என்கிறார் திருவள்ளுவ நாயனார். பொய்யை மெய்யாக உணர்வது மருள் அல்லது ப்ரமம். அதிலிருந்து விளைவது உள்ளும் புறமும் ஒவ்வாமல் இருக்கும் பொய். மூலப் பொய்யுணர்வுக்கு ப்ரமம் என்று பெயர். அதிலிருந்து விளையும் பொய்க்கு வஞ்சனை என்று பெயர்.

 

     பிறரை வஞ்சிக்கும் குணம் தீயதுதன்னைத் தானே வஞ்சிக்கும் இயல்பு அதைவிடத் தீயது. இந்த வஞ்சனையில் நாம் கட்டுப்பட்டிருக்கிறோம். ஒரு செயலால் நமக்குத் துன்பம் விளைவதை அனுபவத்தில் உணரும்போதுஇனி இப்படிச் செய்யக்கூடாது என்று எண்ணுகிறோம். ஆனால் மறுபடியும் அந்தச் செயலைச் செய்யப் போகிறோம். இது பெரிய வஞ்சனை. பிறரை வஞ்சிப்பவர்களை விடத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொள்பவர்களே அதிகம்.

 

     அந்த வஞ்சனையின் விளைவுதான் நாம் செய்யும் அசட்டுக் காரியங்கள். அசட்டுக் கிரியைகளைச் செய்து தவிக்கிறோம். அவை பயனில்லாததும்உலக சம்பந்தமானதும் ஆகிய மூடத் தொழில்கள். நாம் துன்பப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் செயல்களை அசட்டுக் கிரியைகள் என்று சொல்லலாம்.  அசடு என்று அறியாமை உடையவர்களை நாம் கூறுகிறோம். புத்திசாலி அல்லாதவன் அசடு. ப்ரமத்திலிருந்து உண்டான சளத்தின் விளைவு அசட்டுச் செயல்.

 

     அசத்து என்பதே அசடு என்று திரிந்தது சத்து அல்லாதது அசத்து. சத்து என்பது உண்மைமெய்ப்பொருள்.  அசத்துஉண்மை அல்லாததுபொருள் அல்லாதது. மெய்ப்பொருளில் நாட்டமின்றிச் செய்யும் அசட்டுக் காரியங்கள்.

 

"கசட்டுறு வினைத்தொழில் கள்வராய் உழல்

அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய

வசிட்டனும்,அருமறை வடிவு போன்று ஒளிர்

விசிட்டனும். வேத்தவை பொலிய மேவினார்."

 

என்பது கம்பராமாயணம்.

   

     (கசடு = குற்றம்) குற்றங்கள் விளைவிக்கும் செயல்களை உடையகள்வர்களாகத் திரிகின்ற அறிவிலிகள் போன்ற ஐம்புலன்களையும் அற்றுப் போகும்படிச் செய்த வசிட்டனும்அரிய வேதங்களின் வடிவைப்போல விளங்கும் சிறந்த  முனிவனான கலைக்கோட்டு முனிவனும் அந்த அரசவை பொலிவு எய்துமாறுவந்து அடைந்தனர் என்கிறார் கம்பர். ஐந்து பொறிகளாகிய அசட்டர்களை அற்றவர் ஆக்கினார் வசிட்டர். அவர் பொறிகளை அடக்கினவர் இந்திரிய நிக்கிரகம் செய்தவர்.  'பொருள் அல்லவற்றைப் பொருள்என்று உணரும் பொறிகளை அசட்டர்கள் என்று கம்பர் சொல்கிறார்.

 

     நமக்கு உண்டான நோயைக் குணப்படுத்த மருத்துவர் மருந்தை ஊசி வழியாக இரத்தத்தில் ஏற்றுகிறார். இரத்தத்தில் மருந்து கலந்தால் உடம்பில் எந்தப் பகுதியில் நோய் கண்டாலும் நீங்கும். அதுபோல மனிதனுடைய செயல்களில் உள்ள குற்றங்களைகசடுகளை நீக்கஅவற்றுக்கெல்லாம் காரணமாக இருக்கிற உள்ளத்தில் ஊசியைப் போட வேண்டும். உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கிவிட்டால் உள்ளும் புறம்பும் ஒத்து நிற்கும். செய்யும் செயல்கள் யாவும் சத்தாகிவிடும். இறைவன் திருவருளால் உள்ளத்தே ப்ரமம் நீங்கி ஒளி உண்டாகிவிட்டால் செய்யும் செயல்கள் யாவும் இறைவனோடு தொடர்புடைய சத்தாகிவிடும்.

 

     அருணகிரியார் தவிப்பைப் போக்குவாய் என்று சொல்லவில்லைஅசட்டுச் செயல்களை செய்யாமல் இருக்க அருள் புரி என்று சொல்லவில்லைஉள்ளொன்றும் புறம்பொன்றுமாக இருக்கும் வஞ்சனை நிலையை மாற்று என்றும் வேண்டிக் கொள்ளவில்லை. எல்லாவற்றுக்கும் காரணமான ப்ரமத்தைப் போக்க வேண்டும் என்றுதான் வேண்டுகிறார். 

 

     பாசத்தால் கட்டுப்பட்டிருக்கும் உயிர் அந்தக் கட்டினின்றும் விடுபடுவதுதான் முத்தி. முத்தி என்ற சொல்லுக்கே விடுதலை என்பதுதான் பொருள்வீடு என்பதும் அதுதான்.  ப்ரமம் நீங்கினால் கட்டு நீங்கும்கட்டு நீங்கினால் அசட்டுச் செயல் நீங்கும்அது நீங்கினால் தவிப்பு நீங்கும்.

 

     தேவசேனாபதியாகிய முருகன் வீரருள் வீரன். அவன் அவுணர்களின் மார்பிலே வேலைப் பாய்ச்சி வெற்றி பெற்றான். பேய்கள் பிணத்தைத் தின்று குருதிக் கடலிலே குதித்து விளையாடும்படியாக அசுரர்களைச் சங்காரம் செய்த முருகனிடம் தனது துன்பங்களுக்கு எல்லாம் காரணமான பிரமத்தைப் போக்கி அருள அருணகிரிநாதர் வேண்டிக் கொள்கிறார். அரக்கர்கள் புரிந்த மாமாயைகளை நீக்கியது போதனது உள்ளத்தில் உள்ள மயக்கத்தையும் நீக்கி அருள வேண்டும் என்று வேண்டுகிறார்.

 

"சளத்தில் பிணிபட்டு அசட்டுக் கிரியைக்குள் தவிக்கும் என்றன்

உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய்,அவுணர்உரத்து உதிரக்

குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக்குடித்துவெற்றிக்

களத்தில் செருக்கிக் கழுதுஆட வேல்தொட்டகாவலனே!"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடியருளிய பாடல்.

 

இதன் பொருள் ---

 

     பேய்கள் அரக்கர்களுடைய மார்பில் இருந்து பெருகி வந்த இரத்தக் குளத்தில் குதித்து முழுகி களிப்புடன் அந்த இரத்தத்தைக் குடித்துபோர்க்களத்தில் அகங்காரத்துடன் ஆடும்படி வேலை விடுத்து அருளிய காவலர் ஆகிய முருகப் பெருமானே! ஆதிதைவிகம்ஆதிபௌதிகம்ஆதிஆத்மிகம் என்னும் மூவகைத் துன்பங்கள் என்னும் கயிற்றினால் கட்டப்பட்டு,  மூடத்தனமான செயல்களைச் செய்துஅவகளால் மீண்டும் ஆகாமியம் என்னும்  இனையைத் தேடிக் கொண்டுஅதில் இருந்து தப்பி ஈடேறும் வழி அறியாமல் மயங்கிக் கிடக்கின்றேன். அடியேனுடைய உள்ளத்தில் உண்டான மயக்கத்தை நீக்கி அருள் புரிவீர்.

 

     எல்லா உயிர்களுக்கும் காலவனாக அமைந்தவன் இறைவன். எனவே, "காவலனே!" என்றார். தொழுது வழிபடும் அடியர் காவல்காரப் பெருமாளே" என்று திருப்புகழில் ஒரு சொற்றொடரை வைத்தார் அடிகளார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு புறக்காவலாக இருந்துஇடர்களை நீக்கி இன்பம் வழங்குவதோடுஉள்ளத்திலும் காவலனாக இருந்துதீய எண்ணங்கள் வந்து நுழையாவாறு காவல் புரிந்து காத்தருளுகின்றார் முருகப் பெருமான். தாய்க்குத் தனது பிள்ளைகள் மீது அன்பு. அடியார்கள் மீது பெருமானுக்கு அன்பு. அதனால்செஞ்சொல் அடியார்கள் வாரக்கார" என்றும் போற்றினார். வாரம் என்னும் சொல்லுக்கு அன்பு என்று பொருள். உள்ளத்தில் கள்ளம் கபடம் இல்லாமல் செம்மையான சொற்களையே பேசுகின்ற மனத்தூய்மை உடைய அடியார்களிடத்து அன்பு உள்ளவன் இறைவன். அது அறக்கருணை எனப்படும்.

 

     காவல் என்பது,  நல்லவர்களைக் காப்பதற்கும்அல்லாதவர்களைத் தண்டித்து நல்வழிப்படுத்துதற்கும் உரியது.

 

     அடியார்கள் அல்லாதவர்க்கும் இறைவன் காவலனாக இருந்துஅவர்கள் மீதும் அன்பு காட்டுபவன். அவர்களை நல்வழிப்படுத்திஆட்கொள்பவன். அது மறக்கருணை எனப்படும்.

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...