திரு வாய்மூர்

 


திரு வாய்மூர்


சோழநாட்டுத் தென்கரைத் திருத்தலம்

 

இறைவர்

வாய்மூர் நாதர்

இறைவியார்

பாலின் நன்மொழியாள்

தல மரம்

பலா

தீர்த்தம்

சூரிய தீர்த்தம்

 

வழிபட்டோர்

சூரியன்

 

தேவாரப் பாடல்கள்

1. திருஞானசம்பந்தர் - 1. தளிரிள வளரென

2. அப்பர்   -   1. எங்கே என்னை

                            2. பாடஅடியார் பரவ

 

 

     

         திருத்தலக் குறிப்பு: திருவாய்மூர் தலம் தியாகராஜருக்கு உரிய சப்தவிடங்கத் தலங்களில் மூன்றவதாக கருதப்படும் தலமாகும். இந்த விடங்கருக்கு நீலவிடங்கர் என்று பெயர். நடனம் கமலநடனம். தியாகராஜர் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலப்புறம் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. ஐப்பசி மாதப் பிறப்பன்று நீலவிடங்கப் பெருமானுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இத்தலம் சுமார் 2ஏக்கர் பரப்பளவில் மூன்று நிலைகளுடன் கூடிய கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடனும் ஒரு பிரகாரத்துடனும் அமைந்துள்ளது. சூரியன் இங்கு இறைவனை வழிபட்டுள்ளார். நவக்கிரகங்களில் ஒருவரான சூரிய பகவான் இத்தலத்து இறைவனைப் பூஜித்து துன்பம் நீங்கப் பெற்றுள்ளார் என்று தலப்புராணம் கூறுகிறது. பங்குனி மாதம் 12, 13 தேதிகளில் சூரியனுடைய கிரணங்கள் கருவறையில் உள்ள இலிங்கத்தின் மீது விழுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். இங்கு சூரியனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் சூரிய தீர்த்தம். மேலும் இத்தலம் ஒரு கோளிலித் தலமாக விளங்குகிறது.

 

         இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. இத்தலத்து இறைவன் வாய்மூர்நாதரை வணங்கி வழிபடுவோருக்கு நவக்கிரக தோடங்கள் விலகும். இத்தலத்தில் 8பைரவர் மூர்த்திகள் இருந்ததாகக் கூறுவர். ஆனால் இப்போது 4தான் இருக்கின்றன.

 

         திருநாவுக்கரசர் மறைக்காட்டில் ஆலயக் கதவினை திறக்கத் திருப்பதிகம் பாடிய பிறகு அன்றிரவு அங்கு தங்கினார். அப்போது,தான் 10பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய பிறகு கதவு திறந்ததையும்,திருஞானசம்பந்தர் பதிகத்தின் முதல் பாடலிலேயே கதவு மூடியதையும் நினைத்து சற்று மனக் கலக்கத்துடன் இருந்தார். அவர் உறங்கும் போது இறைவன் அவர் கனவில் தோன்றி அசரீரியாக நான் திருவாய்மூரில் கோயில் கொண்டுள்ளேன். இங்கு வருவாய் என்று கூறி அருளினார். அப்பர் விழித்தெழுந்து கனவில் தோன்றிய உருவம் வழிகாட்டப் பின்சென்று திருவாய்மூர் அடைந்து இறைவனைப் பதிகம் பாடித் துதித்தார். 

 

     அங்கே திருமறைக்காட்டில் அப்பரைக் காணாத திருஞானசம்பந்தர் அவரைத் தேடிக் கொண்டு திருவாய்மூர் வந்து சேர்ந்தார். அப்பர் கவலையுடன் திருவருளை அறியாமல் திருக்கதவு திறக்கப் 10பாடல்கள் கொண்ட பதிகம் பாடிய எனக்கு காட்சி தராவிட்டாலும்,ஒரு பாட்டிலேயே கதவு அடைக்கச் செய்த திருஞானசம்பந்தருக்காவது தங்கள் திருக்கோலத்தை காட்டியருள வேண்டாமோ என்று கூறினார். இறைவனும் சம்பந்தருக்கு மட்டும் திருக்கோலம் காட்டி அருளினார். திருஞானசம்பந்தர் தான் கண்டு களித்த இறைவன் திருக்கோலத்தை அப்பருக்கும் காட்டினார் என்று பெரிய புராணம் கூறுகிறது.

 

அருகிலுள்ள தேவார வைப்புத் தலங்கள்

 

         கீழையூர்: தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் கீழையில் என்றும்தற்காலத்தில் கீழையூர் என்றும் அழைக்கப்படும் இத்தலம் திருவாய்மூரில் இருத்து வடகிழக்கே 5கி. மி. தொலைவில் உள்ளது. மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு செம்மலைநாதர். அம்பாள் பெயர் வண்டமரும் பூங்குழலாள்.

 

         ஈசனூர்: திருவாய்மூரில் இருத்து வடகிழக்கே 1கி. மி. தொலைவில் உள்ளது. ஈச்சனூர்ஈசானூர் என அழைக்கப்படும் இத்தலத்தின் மூலவர் சுயம்பு லிங்கமாக அருள்மிகு தருமபுரீசுவரர். அம்பாள் பெயர் செளந்தரநாயகி.

 

     திருவாய்மூருக்குதிருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக வேதாரண்யம் செல்லும் பேருந்துளில் செல்லலாம்.

 

 

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 593

இவ்வகை திரும றைக்காட்டு

         இறையவர் அருளை உன்னி,

மெய்வகை தெரிந்த வாக்கின்

         வேந்தர்தாம் துயிலும் போதில்,

மைவளர் கண்டர் சைவ

         வேடத்தால் வந்து "வாய்மூர்

அவ்இடை இருத்தும் அங்கே

         வா"என அருளிப் போக.

 

         பொழிப்புரை : இவ்வாறு நினைத்துத் திருமறைக் காட்டு இறைவரின் திருவடிகளின் இயல்பை நினைந்து கொண்டு மெய்ம்மைத் திறம் தெரிந்து ஒழுகும் நாவுக்கரசர் உறங்கும் போதில்திருநீலகண்டரான சிவபெருமான் சைவக் கோலத்தில் எழுந்தருளிஅவருக்குக் காட்சியளித்துத் `திருவாய்மூரில் நாம் இருப்போம்! அங்குத் தொடர வா!\' எனக் கூறி முன்னே போக,

 

 

பெ. பு. பாடல் எண் : 594

கண்டஅப் போதே கைகள்

         குவித்துடன் கடிது செல்வார்,

மண்டிய காத லோடு

         மருவுவார் போன்றும் காணார்,

எண்திசை நோக்கு வாருக்கு

         எய்துவார் போல எய்தா

அண்டர்தம் பிரானார் தம்பின்

         போயினார் ஆர்வத் தோடும்.

 

         பொழிப்புரை : அவ்வாறு கனவில் கண்ட பொழுதேஎழுந்து கைகளைக் கூப்பி விரைவாக உடன் செல்பவரான நாவுக்கரசர்நிரம்பிய பேரன்புடன் பொருந்துவார் போன்றிருந்தும் காணாத வராய்எட்டுத் திசையிலும் தேடிப் பார்த்தவருக்குக் கிட்டுவார் போலிருந்து கிட்டாதவராய் நின்ற தேவதேவரான பெருமானின் பின்பு மிகுந்து எழும் அன்புடனே தொடர்ந்து சென்றார்.

 

 

பெ. பு. பாடல் எண் : 595

அங்குஅவர் ஏகச் சண்பை

         ஆண்தகை யாரும் "அப்பர்

எங்குஉற்றார்" என்று கேட்ப

         "எய்தினார் திருவாய் மூரில்

பொங்கிய காத லால்"என்று

         உரைத்திடப் போன தன்மை

சங்கைஉற்று என்கொல் என்று

         தாமும்அங்கு அணையப் போந்தார்.

         

         பொழிப்புரை : திருநாவுக்கரசர் அவர்பின் செல்லச் சீகாழித் தலைவரான சம்பந்தரும்அப்பர் எங்குச் சென்றனர்என்று வினவஅறிந்தவர் `மேன்மேல் பொங்கிய அன்பின் மேலீட்டால் திருவாய் மூருக்குச் சென்றார்என்று கூறஅப்பர் அங்ஙனம் சென்ற காரணம் தான் என்னவோஎன்று ஐயுற்று அங்குத் தாமும் சேரச் செல்லலானார்.

 

 

பெ. பு. பாடல் எண் : 596

அந்நிலை அணைந்த போதில்

         அம்பிகை உடனே கூட

மன்னிய ஆடல் காட்டத்

         தளரிள வளரும் பாடிச்

சென்னியால் வணங்கி வாய்மூர்

         அரசொடுஞ் சென்று புக்குஅங்கு

இன்னியல்பு உறமுன் கூடி

         இருவரும் போற்றி செய்தார்.

 

         பொழிப்புரை : அவ்வாறு சென்றவர்நாவுக்கரசர் இருந்த இடத்தை அடைந்தபோதுஇறைவர் அம்மையப்பராக இருந்து தம் திருக்கூத்தைக் காட்டியருளவேஅதுகண்ட பிள்ளையார் அரசருக்குக் காட்டி மகிழ்ந்து `தளிரிளவளர்\' எனத் தொடக்கமுடைய பதிகத்தைப் பாடியருளிதலை தாழ்த்தி வணங்கிஅரசரோடும் திருவாய்மூருக்குச் சென்றுதிருத்தொண்டின் இனிய இயல்பு பொருந்தக் கூடி இருவரும் இறைவரைப் போற்றியிருந்தனர்.

 

         குறிப்புரை : `தளிரிளவளர்' (தி.3ப.87) எனத் தொடக்கமுடையது நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.

 

 

பெ. பு. பாடல் எண் : 597

நீடுசீர்த் திருவாய் மூரில்

         நிலவிய சிவனார் தம்மைப்

பாடுசொல் பதிகம் தன்னால்

         பரவி,அப் பதியில் வைகி,

கூடுமெய் அன்பு பொங்க

         இருவரும் கூடி மீண்டு

தேடுமா மறைகள் கண்டார்

         திருமறைக் காடு சேர்ந்தார்.

 

         பொழிப்புரை : திருவாய்மூரில் நிலைபெற்றெழுந்தருளிய இறைவரைப் பாடும் சொல் பதிகத்தால் போற்றிஅப்பதியில் தங்கிபொருந்திய அன்பு மேலும் மீதூரஇருபெரு மக்களும் கூடித் தங்கி யிருந்துபின் அங்கிருந்து மீண்டுதேடும் பெரிய மறைகளினால் வணங்கிக் காணப்பெற்ற இறைவரின் திருமறைக்காட்டில் சேர்ந்தனர்.

 

         குறிப்புரை : பாடுசொற்பதிகம் என்று குறிக்கப் பெற்ற பதிகம் இதுபொழுது கிடைத்திலது. அன்றி முற்கூறிய `தளிரிள வளர்\' என்ற பதிகத்தையே மீண்டும் கொண்டு போற்றுவாராயினர் என்றலும் ஒன்று எனக்கூறிஇதுபோன்று முற்கூறிய பதிகத்தையே மீண்டும் எடுத்து ஆண்டமைக்குப் `போகமார்த்த\' எனத் தொடங்கும் பதிகத்தையே அனல் வாதத்திற்கு மீண்டும் எடுத்தாண்டமையையும்திருமறைக் காட்டில் சுந்தரருடன் சென்ற கழறிற்றறிவார் அருட்சேரர் சிறந்த அந்தாதியிற் சிறப்பித்தனவே ஓதித் திளைத்தெழுந்தார் எனக் கூறுதற் கேற்பவழிபட்டமையையும் சான்றாகக் காட்டுவர் சிவக்கவிமணியார். (பெ.பு. திருஞா.பு.உரைபா.597)

 

திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம்

 

 

 

2.111  திருவாய்மூர்                  பண் - நட்டராகம்

                                    திருச்சிற்றம்பலம்

 

பாடல் எண் : 1

தளிரிள வளர்என உமைபாடத்

         தாளம் இட,ஓர் கழல்வீசிக்

கிளர்இள மணிஅரவு அரைஆர்த்து,

         ஆடும் வேடக் கிறிமையார்

விளர்இள முலையவர்க்கு அருள்நல்கி

         வெண்ணீறு அணிந்துஓர்   சென்னியின்மேல்

வளர்இள மதியமொடு இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :தளிர்களோடு கூடிய இளங்கொம்புபோல உமையம்மை அருகிருந்து பாடவும் தாளம் இடவும் ஒப்பற்ற தழலை உடைய கையை வீசி விளங்கும் மாணிக்க மணியை உடைய பாம்பை இடையிலே கட்டி ஆடும் பொய்வேடத்தை உடையவர். தம்மை விரும்பும் பருத்த தனபாரங்ளை உடைய மகளிர்க்கு அருள் நல்கித் திரு நீறுபூசிமுடிமேல் பிறையணிந்து காட்சி தருபவர். வாய்மூரடிகளாகிய அவர் வருவார் காணீர்.

 

 

பாடல் எண் : 2

வெந்தழல் வடிவினர்பொடிப்பூசி,

         விரிதரு கோவண உடைமேல்ஓர்

பந்தஞ்செய்து அரவுஅசைத்து ஒலிபாடிப்

         பலபல கடைதொறும் பலிதேர்வார்,

சிந்தனை புகுந்துஎனக்கு அருள்நல்கிச்

         செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ

வந்தனை பலசெய இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :தழல் போன்ற திருமேனியராய் திருநீறுபூசி விரித் தணிந்த கோவண ஆடை மீது பாம்பை அரைநாணாகக் கட்டிக் கொண்டு வேதஒலி இசைத்துக் கொண்டு பலபல வீடுகளுக்கும் சென்று பலியேற்பவர் . செஞ்சுடர் வண்ணராகிய வாய்மூரடிகள் என் சிந்தனை புகுந்து எனக்கு அருளை நல்கிப் புறத்தே தம் அடியைப் பரவி வழிபாடு செய்யுமாறு வருவார் காணீர் .

 

 

பாடல் எண் : 3

பண்ணில் பொலிந்த வீணையர்,

         பதினெண் கணமும் உணராநஞ்சு

உண்ணப் பொலிந்த மிடற்றினார்,

         உள்ளம் உருகில் உடன்ஆவார்,

சுண்ணப் பொடிநீறு அணிமார்பர்,

         சுடர்பொன் சடைமேல் திகழ்கின்ற

வண்ணப் பிறையோடு இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :பண்ணிசை பொருந்திய வீணையை உடையவர் . பதினெட்டுத் தேவர் கணத்தினரும் உணராத வகையில் நஞ்சுண்டு விளங்கும் திருமிடற்றை உடையவர் . திருநீற்றுச் சுண்ணம் அணிந்த மார்பினர் . அழகிய சடை மீது இளம்பிறை சூடியவர் . வாய்மூரில் விளங்கும் அவ்அடிகள் வருவார் காணீர் .

 

  

பாடல் எண் : 4

எரிகிளர் மதியமொடு எழில்நுதன்மேல்

         எறிபொறி அரவினொடு ஆறுமூழ்க

விரிகிளர் சடையினர் விடைஏறி

         வெருவவந்து இடர்செய்த விகிர்தனார்,

புரிகிளர் பொடிஅணி திருஅகலம்

         பொன்செய்த வாய்மையர்பொன்மிளிரும்

வரிஅரவு அரைக்குஅசைத்து இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :சடைமுடி மீது நெருப்புப்போல விளங்கும் பிறை மதியையும்அழகிய நுதலின் மேற்பகுதியில் பாம்பையும்,கங்கையையும் அணிந்து விடையேறி வந்து மகளிராகிய எங்கட்கு இடர் செய்த விகிர்தர். திருநீறணிந்த மார்பினர். சத்திய வடிவினர். வாய்மூரில் விளங்கும் அவ்வடிகள் அழகியதொரு அரவை அரைக்கசைத்து வருவார் . காணீர் .

 

 

பாடல் எண் : 5

அஞ்சன மணிவணம் எழில்நிறமா

         அகமிடறு அணிகொள உடல்திமில

நஞ்சினை அமரர்கள் அமுதம்என

         நண்ணிய நறுநுதல் உமைநடுங்க

வெஞ்சின மால்களி யானையின்தோல்

         வெருவுறப் போர்த்துஅதன் நிறமும் அஃதே

வஞ்சனை வடிவினொடு இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :நஞ்சினைக்கண்டு தேவர்கள் உடல் நடுங்கி வேண்டியபோது நீலமணிபோலும் அழகிய நிறத்தினைப் பெறவும் கழுத்திடம் அழகுபெறவும் அமுதம்போல அதனை உண்டவரும் நறுநுதலை உடைய உமையம்மை நடுங்க யானையின் தோலைக் கண்டோர் அஞ்சுமாறு உரித்துப் போர்த்தவரும் ஆகிய வாய்மூர் அடிகள் பெண்களின் மனம் கவர வஞ்சனை வடிவோடு வருவார் . அவரைக் காணீர் .

 

 

பாடல் எண் : 6

அல்லிய மலர்புல்கு விரிகுழலார்

         கழல்இணை அடிநிழல் அவைபரவ

எல்லியம் போதுகொண்டு ஏரிஏந்தி

         எழிலொடு தொழில்அவை இசையவல்லார்

சொல்லிய அருமறை இசைபாடிச்

         சூடுஇள மதியினர் தோடுபெய்து

வல்லியம் தோல்உடுத்து இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :அடுக்கடுக்கான இதழ்களை உடைய மலர்களைச் சூடிய விரிந்த கூந்தலை உடைய மகளிர் தம் திருவடிகளைப் பரவ இராப்போதில் எரியேந்தி ஆடும் அவ்விறைவர் அம் மகளிரது பரவுதலை ஏற்றருளுபவர் . வேதங்களைப் பாடிக்கொண்டு இளமதி சூடி ஒருகாதில் தோடணிந்து புலித்தோலுடுத்துவருவார் . அவ்வாய்மூர் இறைவரைக் காணீர் .

 

 

பாடல் எண் : 7

கடிபடு கொன்றைநன் மலர்திகழும்

         கண்ணியர்விண்ணவர் கனமணிசேர்

முடிபில்கும் இறையவர்மறுகின்நல்லார்

         முறைமுறை பலிபெய முறுவல்செய்வார்,

பொடிஅணி வடிவொடு திருஅகலம்

         பொன்என மிளிர்வதொர் அரவினொடும்

வடிநுனை மழுவினொடு இவராணீர்,

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :மணம் கமழும் கொன்றை மலர் மாலையைத் தலை யில் அணிந்தவர் . தேவர்கள் தலையில் சூடிய முடிகளில் பதித்த முழுமணிகளின் ஒளி சிதறும் திருவடியினர் . வீதிகளில் பெண்கள் பலியிடலைக் கண்டு முறுவல் செய்பவர் . திருநீறு அணிந்த வடிவோடும்பொன்போல் மிளிரும் பாம்பணிந்த மார்போடும்கூரிய மழுவை ஏந்தி அவ்வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

 

 

பாடல் எண் : 8

கட்டிஅணை புதுமலர்க் கமழ்கொன்றைக்

         கண்ணியர்வீணையர்தாமும் அஃதே

எண்துணை சாந்தமொடு உமைதுணையா

         இறைவனார் உறைவதொர் இடம்வினவில்

பட்டுஇணை அகல்அல்குல் விரிகுழலார்

         பாவையர் பலிஎதிர் கொணர்ந்துபெய்ய

வட்டணை ஆடலொடு இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :இணை இணையாகக் கட்டப்பட்ட புதிய கொன்றை மலர்மாலையைத் தலையில் அணிந்தவர் . வீணை வாசிப்பவர் . அவ் விறைவர் சந்தனமணிந்து உமையம்மை துணையாக உறையுமிடம் வாய்மூராகும் . பட்டாடை அணிந்த தாருகாவன மகளிரிடம் பலி கேட்டு அவர்களை மயங்குமாறு செய்து தாளமிட்டுச் சதிராடும் வாய்மூர் இறைவராகிய அப்பெருமானார் வருவார் . காணீர் .

 

 

பாடல் எண் : 9

ஏனம ருப்பினொடு எழில்ஆமை

         இசையப் பூண்டு ஓர்ஏறுஏறிக்

கானம்அது இடமா அறைகின்ற

         கள்வர் கனவில் துயர்செய்து

தேன்உண மலர்கள் உந்திவிம்மித்

         திகழ்பொன் சடைமேல் திகழ்கின்ற

வானநன் மதியினொடு இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :பன்றிக் கொம்போடு ஆமைஓட்டையும் அணிந்து எருதேறிக் காட்டை இடமாகக் கொண்டு உறையும் இவர் நம் உள்ளங்களைக் கவரும் கள்வராவர் . கனவிடைத் தோன்றி நமக்குத் துயர் விளைத்துத் தேன்பொருந்திய மலர்களை அணிந்த அழகிய சடைமீது பிறையணிந்து அவ் வாய்மூர் இறைவர் வருவார் . காணீர் .

 

 

பாடல் எண் : 10

சூடல்வெண் பிறையினர்சுடர்முடியர் ,

         சுண்ணவெண் ணீற்றினர்சுடர்மழுவர்,

பாடல்வண் டிசைமுரல் கொன்றைஅம் தார்

         பாம்பொடு நூல்அவை பசைந்துஇலங்கக்

கோடல்நல் முகிழ்விரல் கூப்பிநல்லார்

         குறையுறு பலிஎதிர் கொணர்ந்துபெய்ய

வாடல்வெண்த பிலைபிடித்து இவராணீர்

         வாய்மூர் அடிகள் வருவாரே.

 

         பொழிப்புரை :பிறைசூடியவராய் சுடர்முடியவராய் திருநீறு பூசியவராய் மழுவேந்தியவராய் கொன்றைமாலை சூடியவராய் பாம்பும் முப்புரி நூலும் அணிந்தவராய்காந்தள் போன்று முகிழ்த்த கையினராகிதாருகாவன முனி பன்னியர் பலிபெய்யுமாறு பிரமகபாலத்தை ஏந்தியவராய் வாய்மூர் இறைவர் வருவார். காணீர் .

 

 

பாடல் எண் : 11

திங்களொடு அருவரைப் பொழிற்சோலைத்

         தேன்நலம் கானல்அம் திருவாய்மூர்

அங்கமொடு அருமறை ஒலிபாடல்

         அழல்நிற வண்ணர்தம் அடிபரவி

நங்கள்தம் வினைகெட மொழியவல்ல

         ஞானசம் பந்தன் தமிழ்மாலை

தங்கிய மனத்தினால் தொழுதுஎழுவார்

         தமர்நெறி உலகுக்குஓர் தவநெறியே.

 

         பொழிப்புரை :சந்திரனைச் சென்று தொடும் மதில்களையும்இசைபாடும் தேன் வண்டுகள் உடைய கடற்கரைச் சோலைகளையும் உடைய திருவாய்மூரிலுள்ள வேதங்கள் வேதாங்கங்கள் ஆகிய பாடல்களின் பொருளாயுள்ள தீ வண்ணரின் திருவடிகளைப் பரவி நம்வினை கெடுமாறு ஞானசம்பந்தன் மொழிந்த இத்தமிழ் மாலை தங்கிய மனத்தோடு அவரைத் தொழும் அடியவர் நெறிஉலகில் மேலான தவநெறியாகும் .

                                             திருச்சிற்றம்பலம்

 

 

திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

 

பெரிய புராணப் பாடல் எண் : 275

"அரிதில் திறக்கத் தாம்பாட,

         அடைக்க அவர்பா டியஎளிமை

கருதிநம்பர் திருவுள்ளம்

         அறியாது அயர்ந்தேன்" எனக்கவன்று

பெரிதும் அஞ்சித் திருமடத்தில்

         ஒருபால் அணைந்து பேழ்கணித்து

மருவும் உணர்வில் துயில்கொண்டார்

         வாய்மை திறம்பா வாகீசர்.

 

         பொழிப்புரை : தாம் கதவு திறக்குமாறு மிக அரிதில் முயன்று பாடவும்கதவு திருக்காப்புக் கொள்ள ஞானசம்பந்தர் பாடியதன் எளிமையையும் பார்த்து `இறைவரின் திருவுள்ளக் கிடக்கையை அறியாமல் அயர்ந்தேன்`என்று கவலையடைந்துமிகவும் அச்சம் கொண்டுஅம் மடத்தின் ஒரு பக்கத்தில் அணைந்துகண்களை மூடிக் கொண்டுஉணர்வுடைய நிலையில் துயில்வாரான உண்மை நிலையின் வழுவாத நாவரசர்.

 

         குறிப்புரை : இப்பாடல் முதல் `பாடும் தமிழ்எனத் தொடங்கும் பா.1546ஆவது வரை உள்ள வரலாற்றை ஆசிரியர் சேக்கிழார்கூறியிருப்பதற்கு அடித்தளமாயிருப்பதுநாவரசர் அருளிய `எங்கே என்னைஎனத் தொடங்கும் திருவாய்மூர்த் திருப்பதிகமே ஆகும். அப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடலில் `உன்னி யுன்னி உறங்கு கின்றேனுக்கு` (தி.5ப.50பா.2) எனவரும் தொடரே `திருவுள்ளம் அறியா தயர்ந்தேன் எனக் கவன்று .... துயில்கொண்டார்` (பா.275) எனச் சேக்கிழார் அருளுதற்குக் காரணமாயிற்று.

 

         பேழ் கணித்து - தம்பிழை குறித்துச் சிந்தித்து - ஆறுமுகத் தம்பிரானார்.

         பேழ்கணித்தல் - நித்திரை இன்றிக் கண்மூடல் - பழைய குறிப்புரை.

 

 

பெ. பு. பாடல் எண் : 276

மன்னும் செல்வ மறைக்காட்டு

         மணியின் பாதம் மனத்தின்கண்

உன்னித் துயிலும் பொழுதின்கண்

         உமையோர் பாகம் உடையவர்தாம்

பொன்னின் மேனி வெண்நீறு

         புனைந்த கோலப் பொலிவினொடும்

துன்னி அவர்க்கு "வாய்மூரில்

         இருப்போம் தொடர வா"என்றார்.

 

         பொழிப்புரை : செல்வம் பொருந்திய திருமறைக்காட்டின் மணியைப் போன்றவரான இறைவனின் திருவடிகளை மனத்தில் கொண்டு உறங்கும் பொழுதுபொன்னார்ந்த மேனியில் வெண்ணீறு பூசிய திருக்கோலப் பொலிவுடனே உமையம்மையாரை ஒரு கூற்றில் கொண்ட இறையவர் தாமே எழுந்தருளி `நாம் திருவாய்மூரில் இருப்போம். அங்குத் தொடர்ந்து வா!`எனத் திருவாய் மலர்ந்தருளினார்.

 

 

பெ. பு. பாடல் எண் : 277

"போதம் நிகழ வாஎன்று

         போனார் என்கொல்" எனப்பாடி

"ஈதுஎம் பெருமான் அருள்ஆகில்

         யானும் போவேன்" என்றுஎழுந்து

வேத வனத்தைப் புறகுஇட்டு

         விரைந்து போகஅவர்முன்னே

ஆதி மூர்த்தி முன்காட்டும்

         அவ்வே டத்தால் எழுந்துஅருள.

 

         பொழிப்புரை : நாவரசர் அறிதுயிலினின்று விழிப்பு நிலை எய்த, `என்னை அங்கே வா என்று சொல்லிச் சென்றார். அஃது என்னவோ!என்ற கருத்துக் கொண்ட திருக்குறுந்தொகைப் பதிகம் பாடி `இதுவே எம்பெருமானின் அருளாக அமையுமாயின் அவ்வாணையின் படியே நானும் போவேன்!என்று துணிந்து எழுந்துதிருமறைக்காடு புறகிடுமாறு விரைவாகச் சென்றார். செல்லஆதி முதல்வரான இறைவர் தாம் முன்பு காட்டிய அதே திருவடிவோடு அவர்தம் முன்பு எழுந்தருளிப் போக,

 

 

 

பெ. பு. பாடல் எண் : 278

சீர்ஆர் பதியில் நின்று எழுந்து

         செல்லும் திருநா வுக்கரசர்

ஆரா அன்பில் ஆர்அமுதம்

         உண்ண எய்தா வாறேபோல்

நீர்ஆர் சடையார் எழுந்துஅருள

         நெடிது பின்பு செல்லும்அவர்

பேரா ளரைமுன் தொடர்ந்துஅணையப்

         பெறுவார் எய்தப் பெற்றிலரால்.

 

         பொழிப்புரை : சிறந்த அத்திருப்பதியினின்றும் புறப்பட்டுச் செல்லும் நாவரசர்அயராத அன்பினால் நிறைந்த அமுதம் கையில் கிடைக்கப் பெற்றும் வாயில் உண்ணக் கிடைக்காதவாறு போலக்கங்கை பொருந்திய சடையுடைய பெருமான் முன்னே செல்லநெடுந்தொலைவு பின்னே தொடர்ந்து செல்பவர்பெருமையுடைய அவரை அணைய முயன்றும் எய்தப் பெற்றிலர்.

 

 

பெ. பு. பாடல் எண் : 279

அன்ன வண்ணம் எழுந்துஅருளி

         அணித்தே காட்சி கொடுப்பார்போல்

பொன்னின் கோயில் ஒன்றுஎதிரே

         காட்டி அதன்உள் புக்குஅருளத்

துன்னும் தொண்டர் அம்மருங்கு

         விரைந்து தொடரப் போந்தபடி

மன்னும் புகலி வள்ளலார்

         தாமும் கேட்டு வந்து அணைந்தார்.

 

         பொழிப்புரை : சிவபெருமான் அங்ஙனம் எழுந்தருளிஅருகில் காட்சி தருபவர் போல் பொன்மயமான திருக்கோயில் ஒன்றை அவருக்கு முன்னதாகத் தோற்றுவித்துஅதற்குள் புகுந்தருளினார். அவரை அடைய நெருங்கி வரும் நாவரசர் விரைவாக அவரைத் தொடரவும்இவ்வாறு அவர் சென்றதை நிலைபெற்ற சீகாழித் தலைவரான ஞானசம்பந்தரும் கேட்டு அங்கு வந்து சேர்ந்தார்.

 

 

பெ. பு. பாடல் எண் : 280

"அழைத்துக் கொடுபோந்து அணியார்போல்

         காட்டி மறைந்தார்" எனஅயர்ந்து

"பிழைத்துச் செவ்வி அறியாதே

         திறப்பித் தேனுக் கேஅல்லால்,

உழைத்தாம் ஒளித்தால்கதவம் தொண்டு

         உறைக்கப் பாடி அடைப்பித்த

தழைத்த மொழியார் உப்பாலார்,

         தாம்இங்கு எப்பால் மறைவது"என.

 

         பொழிப்புரை : `என்னை வா என்று அழைத்துக் கொண்டு வந்து அருகில் கூட வருபவரைப் போலக் காட்டி மறைந்து விட்டார்என எண்ணித், `தங்கள் செவ்வியை அறியாமல் கதவு திறக்கச் செய்த பிழையுடைய எனக்குப் பக்கத்திலிருந்து தாங்கள் மறைந்து அருளலாமே அல்லாதுதிருத்தொண்டின் உறைப்பு விளங்கப் பாடி அக்கதவைக் காப்புக் கொள்ளுமாறு செய்தசெழுமை வாய்ந்த செஞ்சொற்களையுடைய ஞானசம்பந்தர் இடையே உள்ளார்அவருக்குத் தாங்கள் இனி மறைந்தருளுவது எங்ஙனம்?`` என்று பாட,

 

 

பெ. பு. பாடல் எண் : 281

மாட நீடு திருப்புகலி

         மன்னர் அவர்க்கு மால்அயனும்

நேடி இன்னம் காணாதார்

         நேரே காட்சி கொடுத்து அருள

ஆடல் கண்டு பணிந்துஏத்தி

         அரசும்  காணக் காட்டுதலும்

"பாட அடியார்" என்றுஎடுத்துப்

         பரமர் தம்மைப் பாடினார்.

 

         பொழிப்புரை : மாளிகைகள் பொருந்திய சீகாழியின் மன்னவரான ஞானசம்பந்தருக்குமாலும் அயனும் தேடி இன்னமும் காண முடியாதவரான சிவபெருமான் வெளிப்பட்டு நேரே காட்சி தந்தருளஅக்கூத்தைப் பிள்ளையார் பார்த்துப் பணிந்து,துதித்துநாவுக்கரசரும் காணுமாறு காட்டியருளுதலும்நாவரசர் கண்டு `பாட அடியார்எனத் தொடங்கி இறைவனைப் பாடிட.

 

         குறிப்புரை : உடன் வந்த தமக்கு இறைவன் மறையினும்பிள்ளையாருக்கு மறைக்கத் தகுமோஎன நாவரசர் விண்ணப்பிக்கஇறைவனும் அவருக்குக் காட்சி கொடுத்தருளினன். கண்ட பிள்ளையார் தாமும் அத்திருவடிவைக் கண்டமையைக் காட்ட அரசரும் மீண்டும் கண்டு மகிழ்ந்தனர். அந்நிலையில் `பாட அடியார்` (தி.6ப.77) எனத் தொடங்கும் அரிய பதிகத்தைப் பாடினர். திருமறைக்காட்டிலிருந்து திருவாய்மூர் வரை நாவரசரை அழைத்து வந்த இறைவனேதிருவாய்மூர் அணுக மறைந்தருளினன். அந்நிலையிலேயேஇறைவன் தனக்கு மறைப்பினும் இடையில் வந்திருக்கும் பிள்ளையாருக்கும்மறைக்கப்போமோ என விண்ணப்பிக்கஇறைவனும் அவருக்குக் காட்டஅவரும் தாம் கண்டமையை இவருக்குக் காட்ட நேர்ந்தது.

 

 

பெ. பு. பாடல் எண் : 282

பாடும் தமிழ்மா லைகள்கொண்டு

         பரமர் தாமும் எழுந்துஅருள

நீடுந் திருவாய் மூர் அடைந்து

         நிலவும் கோயில் வலஞ்செய்து

சூடும் பிறையார் பெருந்தொண்டர்

         தொழுது போற்றித் துதிசெய்து

நாடுங் காதல் வளர்ந்துஓங்க

         நயந்து அந்நகரில் உடன்உறைந்தார்.

 

         பொழிப்புரை : இவ்வகையில் பாடிய தமிழ்ப் பதிகங்களை ஏற்றுக் கொண்டருளிய சிவபெருமான் எழுந்தருளபிறையைச் சூடும் சிவபெருமானின் தொண்டரான நாவரசர்நீடும் திருவாய்மூரை அடைந்துநிலை பெற்ற கோயிலை வலம் வந்துதொழுதும் போற்றியும் துதி செய்தும் அன்பு பெருக விரும்பி அத்திருநகரில் ஞானசம்பந்தருடன் வீற்றிருந்தார்.

 

 

பெ. பு. பாடல் எண் : 283

ஆண்ட அரசும் பிள்ளையார்

         உடனே அங்கண் இனிதுஅமர்ந்து

பூண்ட காதல் பொங்கி எழ

         வாய்மூர் அடிகள் அடிபோற்றி

மூண்ட அன்பின் மொழிமாலை

         சாத்தி ஞான முனிவரொடு

மீண்டு வந்து திருமறைக்காட்டு

         எய்தி விமலர் தாள்பணிந்தார்.

 

         பொழிப்புரை : நாவரசர் ஞானசம்பந்தருடனே அத்திருப்பதியில் இனிதாய் வீற்றிருந்து பொருந்திய காதல் மேன்மேல் எழுந்து பொங்கத் திருவாய்மூர்ப் பெருமானின் திருவடிகளை வணங்கிமிக்க அன்பால் திருப்பதிகத் தமிழ் மாலைகளைப் பாடியருளிஞானமுனிவரான சம்பந்தரோடும் போந்தருளித் திருமறைக்காட்டை அடைந்துவினையின் நீங்கி விளங்கியருளும் இறைவரின் திருவடிகளைப் பணிந்தார்.

 

         குறிப்புரை : இதுபொழுது திருவாய்மூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.

 

 

திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்கள்

 

 

5. 050    திருவாய்மூர்            திருக்குறுந்தொகை

                                      திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1

எங்கே என்னை இருந்தஇடம் தேடிக்கொண்டு

அங்கே வந்துஅடை யாளம் அருளினார்

தெங்கே தோன்றும் திருவாய்மூர்ச் செல்வனார்

அங்கே வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

 

         பொழிப்புரை : தென்னைகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர் என்னை எங்கே என்று தேடி இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர் திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார் அதன் காரணம் என்னை கொல் ?

 

 

பாடல் எண் : 2

மன்னு மாமறைக் காட்டு மணாளனார்,

உன்னி உன்னி உறங்குகின் றேனுக்குத்

தன்னை வாய்மூர்த் தலைவன் ஆமாசொல்லி,

என்னை வாஎன்று போனார் அதுஎன்கொலோ.

 

         பொழிப்புரை : எம்பெருமானையே நினைந்து நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக் காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார் அதன் காரணம் என்னை கொல் ?

 

 

 

பாடல் எண் : 3

தஞ்சே கண்டேன்தரிக்கிலாது ஆர்என்றேன்,

அஞ்சேல் உன்னை அழைக்கவந் தேன்என்றார்,

உஞ்சேன் என்றுஉகந் தேஎழுந்து ஓட்டந்தேன்,

வஞ்சே வல்லரேவாய்மூர் அடிகளே.

 

         பொழிப்புரை : தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன் ; ` அஞ்சாதே ! உன்னை அழைக்க வந்தேன் என்று அருளினார் ; ` உய்ந்தேன் என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன் வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ ?

 

 

பாடல் எண் : 4

கழியக் கண்டிலேன்கண்எதி ரேகண்டேன்,

ஒழியப் போந்திலேல் ஒக்கவே ஓட்டந்தேன்

வழியில் கண்டிலேன் வாய்மூர்அடிகள்தம்

சுழியில் பட்டுச் சுழல்கின்றது என்கொலோ.

 

         பொழிப்புரை : அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை கண்ணெதிரே கண்டேன் என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை ஒக்கவே ஓடிவந்தேன் ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ ?

 

 

பாடல் எண் : 5

ஒள்ளி யார்இவர் அன்றிமற்று இல்லைஎன்று

உள்கி உள்கி உகந்துஇருந் தேனுக்குத்

தெள்ளி யார்இவர் போலத் திருவாய்மூர்க்

கள்ளி யார்அவர் போலக் கரந்ததே.

 

         பொழிப்புரை : ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்குதிருவாய் மூரின்கண் தெளிந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே .

 

 

பாடல் எண் : 6

யாதே செய்தும் யாம்அலோம் நீஎன்னில்

ஆதே எயும்அளவுஇல் பெருமையான்,

மாதே ஆகிய வாய்மூர் மருவினார்

போதே என்றும் புகுந்ததும் பொய்கொலோ.

 

         பொழிப்புரை : எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும் . அளவில்லாத பெருமையுடையான் அவன் மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ ?

 

 

பாடல் எண் : 7

பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு

வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரைப்போல்

தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா

ஓடிப் போந்துஇங்கு ஒளித்தவாறு என்கொலோ.

 

         பொழிப்புரை : பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய் மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னையோ ?

 

 

பாடல் எண் : 8

திறக்கப் பாடிய என்னினும்செந்தமிழ்

உறைப்புப் பாடி அடைப்பித்தார் உந்நின்றார்,

மறைக்க வல்லரோதம்மைத் திருவாய்மூர்ப்

பிறைக்கொள் செஞ்சடை யார்இவர் பித்தரே.

 

         பொழிப்புரை : வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும் செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞான சம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார் திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ இவர் பித்தரேயாவர் .

 

 

பாடல் எண் : 9

தனக்கு ஏறாமை தவிர்க்கஎன்று வேண்டினும்

நினைத்தேன் பொய்க்குஅருள் செய்திடு நின்மலன்,

எனக்கே வந்துஎதிர் வாய்மூருக் கேஎனாப்

புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ.

 

         பொழிப்புரை : தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள் வாயாக என்று வேண்டினும் பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன் எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ ?

 

 

பாடல் எண் : 10

தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால்

மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை

வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத்

தூண்டிக் கொள்வன்நான் என்றலும் தோன்றுமே.

 

         பொழிப்புரை : பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன் திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான் .

 

                                             திருச்சிற்றம்பலம்

 

 

6. 077    திருவாய்மூர்            திருத்தாண்டகம்

                                             திருச்சிற்றம்பலம்

 

பாடல் எண் : 1

பாட அடியார் பரவக் கண்டேன்,

         பத்தர் கணம்கண்டேன்மொய்த்த பூதம்

ஆடல் முழவம் அதிரக் கண்டேன்,

         அங்கை அனல்கண்டேன் ,கங்கை யாளைக்

கோடல் அரவுஆர் சடையில் கண்டேன்,

         கொக்கின் இதழ்கண்டேன்கொன்றை கண்டேன்,

வாடல் தலைஒன்று கையில் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :அடியார்கள் பாடிப்பரவவும் பத்தர்கணம் சூழ்ந்து நிற்கவும் பூதங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அமைந்த சூழலில் அழகிய கையில் அனல் ஏந்தியவரும் காந்தட் பூவும் பாம்பும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும் கொக்கிறகைச் சூடியவரும் கொன்றைமாலையை அணிந்தவரும்உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 2

பாலின் மொழியாள்ஓர் பாகம் கண்டேன்,

         பதின்எண் கணமும் பயிலக் கண்டேன்,

நீல நிறம்உண்ட கண்டம் கண்டேன்,

         நெற்றி நுதல்கண்டேன்பெற்றம் கண்டேன்,

காலைக் கதிர்செய் மதியம் கண்டேன்,

         கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன்,

மாலைச் சடையும் முடியும் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :பால்போன்று இனிக்கும் மொழியாளாகிய பார்வதி ஒரு பங்காகத் திகழப்பெற்றவரும் பதினெண் கணத்தேவரும் சூழ்ந்து பணி செய்யக் கொண்டவரும் நீலகண்டரும் நெற்றிக் கண்ணரும் பெற்றமூர்பவரும் ஒளிஉமிழும் இளமதியைத் தரித்தவரும் திருமுடி மேல் கரந்தை மலரைச் சூடியவரும்மாலை அணிந்த சடையாலான முடியை உடையவரும் ஆக வாய்மூர் அடிகளை நான் கண்டேன்.

 

பாடல் எண் : 3

மண்ணைத் திகழ நடம் அதுஆடும்

         வரைசிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன்,

விண்ணில் திகழும் முடியும் கண்டேன்

         வேடம் பலவாம் சரிதை கண்டேன்

நண்ணிப் பிரியா மழுவும் கண்டேன்

         நாலு மறைஅங்கம் ஓதக் கண்டேன்,

வண்ணம் பொலிந்துஇலங்கு கோலம் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :நிலவுலகம் நின்று நிலைக்க நிகழ்த்தும் கூத்தாட்டில் கட்டப்பட்ட சிலம்பு ஒலிக்கின்ற பாதங்களை உடையவராய் விண்ணிற் சென்று விளங்கும் முடியினராய் ஏற்கும் பலவகை வேடங்கட்கும் பொருந்திய செயல்களைச் செய்பவராய் பிரியாது விளங்கும் மழுவினராய் நான்கு மறைகளையும் ஆறு அங்கங்களையும் ஓதுபவராய் பலவகை நிறங்களும் அழகுபெறத் திகழும் தோற்றத்தினராய்த் திருவாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 4

விளைத்த பெரும்பத்தி கூர நின்று

         மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்,

இளைக்கும் கதநாக மேனி கண்டேன்,

         என்பின் கலம்திகழ்ந்து தோன்றக் கண்டேன்,

திளைக்கும் திருமார்பில் நீறு கண்டேன்,

         சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று

வளைத்த வரிசிலையும் கையில் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :முன்னைத் தவம் விளைத்த பத்தி மிக நின்று உண்மை அடியார்கள் தம்மை விரும்புமாறு திகழ்பவராய் கருடனுக்கு அஞ்சுவனவும் இயல்பாகக் கோபம் மிக்கனவும் ஆகிய நாகங்களை அணிந்து விளங்கும் மேனியராய் எலும்பாலான அணிகலன்களைப் பூண்டு திகழுபவராய் திருநீற்றில் மூழ்கும் திருமார்பினராய் வானிடத்து மதில்கள் மூன்றும் அன்று அழியுமாறு வளைத்த வரிந்து கட்டப்பட்ட சிலையைக் கையில் கொண்டவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 5

கான்மறையும் போதகத்தின் உரிவை கண்டேன்,

         காலிற் கழல்கண்டேன் கரியின் தோல்கொண்டு

ஊன்மறையப் போர்த்த வடிவும் கண்டேன்,

         உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்,

நான்மறை யானோடு நெடிய மாலும்

         நண்ணி வரக்கண்டேன்திண்ண மாக

மான்மறி தம்கையின் மருவக் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :காட்டில் மறைந்து வாழும் யானையின் தோலை உரித்தவராய் காலிற்கட்டிய கழலினராய் அவ் யானைத் தோலின் புலாற் பொல்லாங்கு மறையும் வண்ணம் அதனை போர்வையாகப் போர்த்திக் கொண்ட வடிவினராய் உயிர்கள் தம்மை நினைத்தற்கு உரிய மனத்தை உபகரித்து அருளினவராய் நான்மறையானாகிய பிரமனும் நெடியானாகிய திருமாலும் தம் வலப்பாலும் இடப்பாலும் நண்ண வருபவராய் மான் கன்று நிலையாகப் பொருந்தி நிற்கும் கையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 6

அடிஆர் சிலம்புஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்,

         அவ்அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்,

முடிஆர் சடைமேல் அரவம் மூழ்க

         மூரிப் பிறைபோய் மறையக் கண்டேன்,

கொடியார் அதன்மேல் இடபம் கண்டேன்,

         கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்,

வடிஆரும் மூவிலைவேல் கையில் கண்டேன்

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :திருவடிகளிற் கட்டிய சிலம்பு ஒலிகளின் ஆரவாரத்தை உடையவராய் அவரவர்க்கு ஏற்குமாறு ஈந்த கருணையினராய் சடைச்சுற்றின் நெருக்கினிடை பாம்பு புகுந்து மறைய அப்பாம்பு தன்னைப் பற்றக் கரந்து வருவதாகக் கருதிப் பெருமை மிக்க பிறையும் அச்சடையின் வேறோர் இடுக்கில் புக்குமறையக் கண்டவராய் ,கொடியிடத்துப் பொருந்திய இடபத்தினை உடையவராய் ,கோவணமும் கீளும் கொண்டு விளங்குபவராய் கூரிய மூவிலை வேலினைக் கையில் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 7

குழைஆர் திருத்தோடு காதில் கண்டேன்,

         கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்,

இழைஆர் புரிநூல் வலத்தே கண்டேன்,

         ஏழிசையாழ் வீணை முரலக் கண்டேன்,

தழைஆர் சடைகண்டேன்தன்மை கண்டேன்,

         தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்,

மழைஆர் திருமிடறும் மற்றும் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :குழையும் நிறைந்த அழகினையுடைய தோடும் விளங்கும் காதுகளை உடையவராய் கொக்கரை சச்சரி ஆகிய வாச்சியங்களைப் பயன் கொள்பவராய் இழைகள் பொருந்திய முறுக்கப்பட்ட பூணூலை வலம்வர அணிந்தவராய் ஏழிசையும் பயிலும் யாழ் வீணைகளின் இசையை நுகர்வாராய் தழைத்த சடை யினராய் தம்வயத்தினராய் தக்கை தாள முழக்கினராய் மேகம் போன்று கறுத்த திருமிடற்றினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 8

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்,

         போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்,

பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன்,

         பாராய்ப் புனல்ஆகி நிற்கை கண்டேன்,

விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்,

         மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன்,

மருந்தாய்ப் பிணிதீர்க்கும் ஆறு கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :உலகத்தார்க்கு ஏலாத செய்கைகள் ஆம் நஞ்சுண்ணுதல் பாம்பணிதல் போன்றனவும் பொருத்தமற்ற செய்கைகள் ஆம் சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் தம்பால் பொலியக் கொண்டவராய் போற்றி என்று கூறி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய் அன்பருக்கு அருளும் தன்மையாராய் நிலனொடு நீராய் நிற்பவராய் புதியராய் வந்து பரவிய பூதவேதாளக் கணங்களிடையே திகழ்பவராய் மெல்லியல் உமையும் விநாயகனும் மனைவியும் மகனுமாம் உறவு முறை கொண்டவராய் ,பிணிதீர்க்கும் மருந்தாம் தன்மையினராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

 

பாடல் எண் : 9

மெய்யன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்,

         வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்,

கைஅம்பு அரண்எரித்த காட்சி கண்டேன்,

         கங்கணமும் அங்கைக் கனலும் கண்டேன்,

ஐயம் பலவூர் திரியக் கண்டேன்

         அன்றவன்றன் வேள்வி அழித்து உகந்து

வையம் பரவ இருத்தல் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :மெய்யன்பர்க்கு அருளுபவராய் வேட்டுவக் கோலம் கொண்டு நின்றவராய் கையிடத்துக்கொண்ட அம்பால் அரண்களை அழித்த காட்சியினராய் பாம்புக்கங்கணராய்அங்கையில் அனல் ஏந்தியவராய் பல ஊர்களிலும் திரிந்து பிச்சை ஏற்பவராய் பகைத்த தக்கன் வேள்வியை அழித்தவராய் மகிழ்ந்து உலகம் பரவ இருந்தவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கணடேன் .

 

 

பாடல் எண் : 10

கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட

         காரணமும் கண்டேன்கருவாய் நின்று

பலங்கள் தரித்துஉகந்த பண்பும் கண்டேன்,

         பாடல் ஒலிஎலாம் கூடக் கண்டேன்,

இலங்கைத் தலைவன் சிரங்கள் பத்தும்

         இறுத்துஅவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்,

வலங்கைத் தலத்துள் அனலும் கண்டேன்,

         வாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே.

 

         பொழிப்புரை :மாலும் அயனும் கலங்குமாறு நீண்ட தழற் பிழம்பாய்த் தோன்றிய காரணராய் முதலாய் நின்று பயன்களைத் தன்னுட் கொண்டு மகிழ்ந்த பண்பினராய் பாடல் இசையும் ஏனைய ஒலியும் தாம் ஆம் தன்மையராய் இலங்கைக் கிறை இராவணனுடைய பத்துத் தலைகளும் நசுங்கச் செய்து பின் அவனுக்கு வரங்கள் ஈந்த பெருமையராய் வலக்கையிடத்து அனல் ஏந்தியவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன் .

 

                                             திருச்சிற்றம்பலம்

 

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...