பூமி பாரங்கள் --- 2



                                                            பூமி பாரங்கள் --- 2


     "வெருவந்த செய்யாமை" என்னும் அதிகாரத்தில் வரும் ஒரு திருக்குறள். மக்கள் அஞ்சுவதும், தன்னைச் சார்ந்தோர் அஞ்சுவதும், தானே அஞ்சுவதும் ஆகிய செயல்களைச் செய்யாமல் இருத்தல் பற்றி வந்த அதிகாரம் இது. திருக்குறள் இதோ...

"கல்லார்ப் பிணிக்கும் கடும் கோல், அது அல்லது
இல்லை நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

     நீதிநூல் முதலியவற்றைக் கல்லாதாரைத் தனக்குச் சுற்றமாகக் கூட்டுவது கொடுங்கோன்மை. அந்தக் கூட்டம் அல்லாமல் வேறு பாரம் இந்த நிலத்துக்கு இல்லை.

     அநீதியையே பயிலவேண்டும் என நினைக்கும் ஒருவன் அதற்கு ஏதுவாகத் தன்னோடு ஒரு கூட்டத்தை வைத்து இருப்பான். அக் கூட்டமானது அவனது இழி செயல்களுக்கு அறிவு நிலையிலும், செயல் வடிவிலும் துணையாக இருக்கும். இந்தக் கூட்டம்தான் பூமிக்குப் பாரமாக விளங்குவது என்கிறார் நாயனார். காரணம், ஒருவனை நல்வழிப்படுத்த எண்ணுவது அறிவு சார்ந்த நிலை. தீமைக்குத் துணை போவது அறிவு அல்லாத நிலை.

     இது வாழ்வியலின் ஒரு அங்கமான அரசியலுக்கும் பொருந்தும் என்பதால், அரசியல் பகுதியில் நாயனார் கூறினார்.

பின்வரும் பாடல்களையும் காண்க....

"கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும்புலி வாழும் காடு நன்றே.
சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன்தேர் குறவர் தேயம் நன்றே".

     இவ்வாறு "வெற்றிவேற்கை" என்னும் நூலில் பாடியவர் வேறு யாரும் அல்ல. கொற்கையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவராகிய அதிவீரராம பாண்டியர் தான்.

         "நீதியில்லாத அரசர் வாழுகின்ற நாட்டைப் பார்க்கிலும், கொடிய புலி வாழுகின்ற காடு நல்லது.  அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் இல்லாத பழைமையான நகரத்தில் இருப்பதைப் பார்க்கிலும், தாம் உண்பதற்கு உரிய தேனைத் தேடி அலைகின்ற குறவர்கள் வசிக்கும் மலைப்பக்கத்தில் இருப்பது நல்லது" என்கின்றார்.

"முடிப்ப முடித்துப் பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்து உண்ப உண்ணா - இடித்துஇடித்துக்
கட்டுரை கூறில் செவிக்கொளா கண்விழியா
நெட்டு உயிர்ப்போடு உற்ற பிணம்".   

     "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில், குரமகுருபர அடிகள் பாடிய பாடல் இது. இதன் பொருள் ---

     சூடத் தக்க மலர் முதலியவைகளை சூடிக் கொண்டு, பூசத் தக்க மணப்பொருள்களைப் பூசிக் கொண்டு, உடுக்கத்தக்க பட்டு, பீதாம்பரம் முதலியவற்றை உடுத்துக் கொண்டு, உண்ணத்தக்க நெய் உணவுகளை உண்டுகொண்டு, உயிர் இருப்பது போல் காட்டி, அமைச்சர் முதலியோர் பலமுறை நெருக்கிக் கூறும் அறவுரைகளைக் காது கொடுத்துக் கேளாமலும், அவர்களைக் கண்ணெடுத்துப் பாராமலும் இருக்கும் அரசர்கள், பெருமூச்சோடு கூடிய பிணம் போன்றவர்கள்.

     முடிப்பதும் பூசுவதும் உடுப்பதும் உண்பதுமான செயல்களெல்லாம் உயிரிருப்பது போல் காட்டுகின்றன. ஆனால் கேளாமையும் பாராமையும் உயிரில்லாதது போல் காட்டுகின்றன. உயிருக்கு முதன்மையான தன்மை அறிவே. ஆதலால், அதன் செய்கைகளான கேட்பதும் பார்ப்பதும் இல்லாத அரசர்களைப் `பிணம்’ என்றே கூறல் வேண்டினார். ஆனால் இறந்த பிணத்தில் இருந்து, சிறிது வேறுபடுத்திக் காட்டுவதற்கா, நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம் என்றார்.  பிணத்திற்கு பேச்சு மூச்சு இருக்காது. இந்த நடைப்பிணத்திற்கு, மூச்சு உண்டு.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...