பூமி பாரங்கள் --- 4



                                                           பூமி பாரங்கள் --- 4


     அடுத்து, நான்காவதாக, "பூமி பாரம்" என்று யாரை நமக்குக் காட்டுகின்றார் திருவள்ளுவ நாயனார் என்று பார்ப்போம்.

     "நன்றியில் செல்வம்" என்னும் அதிகாரம். அதாவது, ஈட்டியவனுக்கும், பிறர்க்கும் பயன்படாத செல்வத்தை நன்றியில் செல்வம் என்றார் நாயனார்.

     காரணம், "செல்வத்துப் பயனே ஈதல்" என்பது புறநானூறு. "அறமாவது ஈதல். பொருளாவது தீவினை விட்டு ஈட்டல்" என்றார் ஔவையாரும்.

திருக்குறளைக் காண்போம்....

"ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம், நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

நாம் பிறரை வி, செல்வத்தை நிறையச் சேர்த்து பெரிய செல்வந்தன் ஆவோம் என்று எண்ணி, செல்வத்தைச் சேர்ப்பதிலேயே ஈடுபாடு கொண்டு, புகழை விரும்பாத மக்களின் பிறப்பானது நிலுத்துக்குச் சுமை.

     புகழ் என்பது இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது. அது ஈட்டிய பொருளை இல்லாதார்க்குத் தந்து உதவுவதால் பெறப்படுவது. பொருளைத் தந்து புகழைப் பெற்று வாழ விரும்பாமல், மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகச் செல்வத்தை ஈட்டவேண்டும் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு பொருள் சேர்த்து, தானும் அனுபவிக்காது, பிறர்க்கும் பயன் தராது வாழ்ந்து மடிந்து போகும் மக்களை பூமி பாரமாகக் காட்டினார் திருவள்ளுவ நாயனார். செல்வத்தை மிகவாகப் பாடுபட்டுச் சேர்த்து வைத்தவர் யாரும் அதை முழுமையாக அனுபவிக்கவில்லை என்பதே உலகியலில் நாம் காணுவது.

     திருக்குறளின் பெருமைகளை விளக்க வந்த "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் ஒரு பாடல், இத்திருக்குறளின் பெருமையைப் பின்வருமாறு விளக்கும்.

"மாழ்கிநிதி நல்காநால் வாணிகர்மாண் டார்கடலுள்
மூழ்கிநிதி யோடு முருகேசா - வாழ்வுமிகு
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை".

இதன் பொருள் ---

     முருகேசா - முருகப் பெருமானே, நிதி நல்கா நால் வாணிகர் - திருக்கோயில் திருப்பணிக்கும் பொருளைக் கொடாத நான்கு வாணிகர்களும், கடலுள் நிதியோடு மூழ்கி மாழ்கி மாண்டனர் - கடலுள் செல்வத்தோடு மூழ்கி வருந்தி இறந்தார்கள். வாழ்வு மிக - வாழ்வு மிகுதிப்படுமாறு, ஈட்டம் இவறி - சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு, இசை வேண்டா ஆடவர் தோற்றம் - புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல், நிலக்குப் பொறை - நிலத்திற்குச் சுமையாகும்.

     திருக்கோயில் திருப்பணிக்கு பொருளைக் கொடாத நான்கு வணிகர்களும் தம்முடைய பொருளோடு கடலிலே மூழ்கி வருந்தி மாண்டார்கள். செல்வம் சேர்த்தலையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மனிதர்களுடைய பிறப்பானது நிலத்திற்குச் சுமையாகும் என்பதாம்.

நான்கு வணிகர்கள் கதை

     யவன நாட்டிலே ஆதித்தபுரத்திலே விச்சுவவசு என்னும் பெயருடைய வணிகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நான்கு மக்கள் இருந்தனர். அவர்கள் பொருளைப் பெருக்கிச் சிறப்புடன் வாழ்ந்திருந்தார்கள். ஆதித்தேசுவரர் திருக்கோயில் திருப்பணியின் பொருட்டு ஓர் அந்தணன் அவர்களிடம் பொருள் வேண்டினான். பொருளுதவி செய்வதாகக் கூறி அலையச் செய்தார்களே அன்றிக் கொடுக்கவில்லை. கொடுக்காத தீவினையினால் அவர்கள் கடலில் சென்றபொழுது பெருங்காற்றால் கப்பல் கவிழ்ந்தது. செல்வத்தோடு மூழ்கி இறந்தார்கள். அவர்கள் நிலவுலகிலே வாழ்ந்திருந்தது நிலத்திற்குச் சுமையாக முடிந்தது.

     ஆக இவ்வாறான பூமி பாரங்கள் பிறக்காமல் இருப்பதே அவர்களுக்கும் நல்லது. உலகமக்கள் பிறருக்கும் நல்லது. "தோன்றின் புகழொடு தோன்றுக, அஃது இல்லார், தோன்றலின் தோன்றாமை நன்று" என்று, இதையெல்லாம் தொகுத்து நமக்கு வழங்கினார் திருவள்ளுவ நாயனார்.

     நன்மைக்கு உரிய குணங்கள் இல்லாத ஒருவன் பிறத்தல் தேவையில்லை. பிறந்து விட்டால் நல்லவனாகவே வாழவேண்டும். அப்படிப்பட்டவன் தான் சிறந்த இறை அன்பனாகவும், அடியானாகவும் வாழமுடியும் என்பதைத் திருநாவுக்கரசு நாயனார் பின்வரும் பாடலில் காட்டினார்.

குலம்பொல்லேன், குணம்பொல்லேன், குறியும் பொல்லேன்,
குற்றமே பெரிதுஉடையேன், கோலம் ஆய
நலம்பொல்லேன், நான்பொல்லேன், ஞானி அல்லேன்,
நல்லாரோடு இசைந்திலேன், நடுவே நின்ற
விலங்கு அல்லேன், விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்,
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்,
இலம் பொல்லேன், இரப்பதே, ஈய மாட்டேன்,
என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே.

இதன் பொருள் ---

     சார்ந்த கூட்டத்தால் நான் தீயவன் ஆக உள்ளேன்; குணத்தாலும் தீயவனாக உள்ளேன்; குறிக்கோளாலும் தீயாவனாக உள்ளேன். குற்றமாகிய செயலே பெரிது உடையவன் நான்; நலம் பயத்தற்குரிய சிவவேடத்தாலும் தீயவன். எல்லாவற்றாலும் நான் தீயவனே. நான் ஞானியல்லேன்; நல்லவர்களோடு கூடிப் பழகுகின்றவன் இல்லை; பாவச் செயல்களை உடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன வுணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றல் உடையவன். பிறப்பாலும் நான் நல்லவன் இல்லை. என்செயலால் அதுவும் பொல்லாதவனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு, என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் எப்படி வாழ்ந்து ஈடேற வேண்டும் என்ற அறிவு சிறிதளவும் இல்லாத நான் என்ன செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.

     வள்ளல் பெருமானின் இதே கருத்து அமைந்து திருவருட்பாப் பாடல் ஒன்றையும் இங்கே சிந்தித்தல் நன்மை பயக்கும். திருவருட்பாப் பாடல் இதோ....

குலத்திடையும் கொடியன்,ஒரு குடித்தனத்தும் கொடியேன்,
குறிகளிலும் கொடியன்,அன்றிக் குணங்களிலும் கொடியேன்,
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்,
வன்மனத்துப் பெரும்பாவி, வஞ்சநெஞ்சப் புலையேன்,
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன், பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன், பேய்க்கும்மிக இழிந்தேன்,
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன், நின்கருத்தை அறியேன்,
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

இப்பாடலின் பொருள்....

     நிர்க்குண நடராசப் பெருமானாகிய நிபுண மணியே! குலம் குடித்தனங்களிலும் குறி குணங்களிலும் நேர்மை இல்லாதவனாகிய நான் மலத்தில் புழுக்கும் சிறு புழுக்களினும் கடையவன். வன்மையான மனத்தை உடைய பெரும்பாவி நான். வஞ்சம் நிறைந்த நெஞ்சினை உடைய புலைத் தன்மை கொண்டவன் நான். நன்மை தரும் செயல்களில் சிறிதும் நாட்டம் இல்லாதவன் நான். பொல்லாத நாயும் கண்டு நகைக்கத் தக்க கீழ்மையில் உள்ளவன் நான். பேயினை விடவும் இழிந்த நிலையில் உள்ள நான், இந் நிலவுலகத்தில் பிறந்த காரணம் தெரியவில்லை.  என்னை இந்தப் பிறப்பில் கொண்டு சேர்த்த உனது திருவுள்ளம் என்ன என்றும் நான் அறியேன்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...