மூர்க்கரோடு இணங்காதே

 

கயவர் குணத்தை மட்டும் மாற்ற முடியாது

 

-----

 

     "பதர்" குறித்த ஐந்து பதிவுகளையும், "துட்டனைக் கண்டால் தூர விலகு" என்னும் முதுமொழி குறித்த இரு பதிவுகளையும், படித்த பிறகு, "பதர்களையும்" "துட்டர்களையும்" இந்தக் கலியுகத்தில் அடையாளம் கண்டுகொள்வது எவ்வாறு என்னும் ஐயம் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

 

     "கலி" என்னும் சொல்லுக்கு, ஆரவாரம், துன்பம், செருக்கு, வஞ்சகம், வறுமை என்னும் பொருள்கள் உண்டு. எனவே, கலியுகத்தில் இவை எல்லாம் உண்டு. இவற்றோடுதான் நமது வாழ்நாளைக் கழிக்கவேண்டி உள்ளது. இவற்றில் இருந்து தப்பிக்க, இறையருள் உண்டு என்பதையும் மறக்கலாகாது.

 

     மேற்குறித்த பதிவுகளைத் திரும்பவும் படித்துப் பார்த்தால், ஓர் உண்மை விளங்கும். கீழ்மக்கள் என்பவரை, அவரது உருவத்தால் அடையாளம் காணமுடியாது. அவரது சொல்லையும், செயல்களையும் கொண்டே அடையாளம் காணமுடியும் என்பது தெளிவாகும்.

 

     பொறுமையாகப் படித்துப் பார்க்கவேண்டும். பதிவுகளை உருட்டிக் கொண்டு பார்த்தால் (SCROLL) உண்மை விளங்காது.

 

     இங்கு இரு புராண நிகழ்வுகளைச் சொல்லியாக வேண்டும்.

 

     முதலில் மகாபாரத நிகழ்வு ஒன்றைக் காண்போம்.

 

     உள்ளத்தில் கள்ளம் என்பது சிறிதும் இல்லாத பாண்டவர்கள் மீது பொறாமையும், வெறுப்பும் உள்ளூரக் கொண்டு இருந்தவன் திருதராஷ்டிரன். அதை அவ்வப்போது வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு இருந்தவர்கள் துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாதனன் ஆகியவர்கள்.

 

     இந்த ஐவரும் கூடி, பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அனுப்புவதன் மூலம், அத்தினாபுரத்தை விட்டு அவர்களை வெளியேற்ற எண்ணினர்.

 

     சிறிய தந்தையாகிய திருதராஷ்டிரன், தங்களை வாரணாவதம் செல்லுமாறு பணித்தது, நன்மை கருதியே என்று உள்ளத்தில் தூயவரான தரும்புத்திரர் நம்பினார். ஆனால், திருதராஷ்டிரன் முதலானோரின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு இருந்த, விதுரர், அவர்களுடைய வஞ்சகத்தை அறிந்து, சூசகமாக, "காடு பற்றி எரியும் போது, எலிகள் வளைக்குள் புகுந்து தப்பிவிடும்" என்று சொல்லி பாண்டவர்களை வாரணாவதம் செல்ல வழியனுப்பி வைக்கின்றார். அத்தோடு அவர்கள் உய்யும் உபாயத்தையும் செய்து வைத்தார்.

 

     திருதராஷ்டிரன் சொன்ன சொல்லில் வஞ்சகம் தெரியவில்லை. அவனது செயலில்தான் வஞ்சகம் ஒளிந்து இருந்தது.

 

     அடுத்து, பெரியபுராணத்தில் ஒரு நிகழ்வைக் காண்போம்...

 

     மெய்ப்பொருள் நாயனாரின் புகழையும், பெருமையையும் சகியாது, பலமுறையும் அவரை எதிர்த்து, தோற்ற முத்தநாதன் என்னும் ஓர் அரசன் வஞ்சனையால் அவரை வெல்லக் கருதி சிவசின்னங்கள் தாங்கி, உடைவாளைப் புத்தகக் கவளியில் மறைத்துக் கட்டித் தவவேடத்தோடு அவர் அரண்மனை புகுந்தான். அந்தப்புர வாயில் காப்போனான தத்தன் தடுப்பவும், நாயனார்க்கு ஞானோபதேசம் செய்ய வந்ததாகக் கூறி உள்சென்று நாயனாரைக் கண்டான்.  அவனுடைய வேடத்தைக் கண்டு, உண்மை தெளியாத நாயனார், அந்த வஞ்சகனை ஓர் ஆசனத்தில் இருத்தி, எதிரில் வணங்கி நிற்க, அப் பாதகன் புத்தகம் எடுப்பது போல உடைவாளை எடுத்துத் தன் எண்ணத்தை முடித்தான். நடந்தவற்றை எல்லாம் கருத்தோடு பார்த்திருந்த தத்தன் ஒரு கணப் பொழுதினுள் வந்து தன் வாளை ஓச்ச, பூமியில் வீழ்கின்ற நாயனார், "தத்தா நமர்" என்று தடுத்து வீழ்ந்தார். நாயனார் பணியை மேற்கொண்டு தத்தன் அவனை அழைத்து வெளிச்சென்று அவன் செய்கை அறிந்து அவனைக் கொல்லச் சூழ்ந்தவர்களை எல்லாம் விலக்கி, அந் நகர் எல்லையளவும் உடன் சென்று வழிவிட்டு, மீண்டு வந்து, "சிவனடியாரை இடையூறின்றி நகர்ப்புறத்து விட்டனன்" என்று சொல்லும் வரை உயிர்தாங்கி இருந்த நாயனார், "திருநீற்று அன்பு பாதுகாத்து அளிப்பீர்" என்று மந்திரி முதலியவர்க்குச் சொல்லி, சிவனடி நீழல் அடைந்தார்.

 

     வேடத்தைக் கண்டு ஏமாந்தார் மெய்ப்பொருள் நாயனார். ஆனால், முத்தநாதனை நன்றாக கவனித்த, வாயில் காப்போன் அவனது வஞ்சகத்தை அறிந்து கொண்டான்.

 

     எனவே, தீயவர்களை, மூர்க்கர்களை, கீழ்மக்களை அவர்களது வெளித் தோற்றத்தை வைத்து மதிப்பிடாமல், அவர்களது செயல்களை வைத்தே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகும். புறத் தோற்றத்தில் தீயவர்கள் நல்லவர்களாகத் தான் தெரிவார்கள்.

 

     இதனை, பின்வரும் திருக்குறளால், நாயனார் நம்மைத் தெளிவுபடுத்துகின்றார்.

 

"கணை கொடிது, யாழ்கோடு செவ்விது ஆங்கு, அன்ன

வினைபடு பாலால் கொளல்".

 

இதன் பொருள் ---

     வடிவில் அம்பு நேராக இருப்பினும் செயலால் தீங்கு விளைவிப்பது. கழுத்தில் வளைந்து யாழ் இருப்பினும், அது தரும் இனிமையான இசை இன்பத்தைத் தரும். அதுபோலவே, ஒருவரை நல்லவர் தீயவர் என்பதை அவருடைய செயலின் வடிவத்தாலும் புறத்தோற்றத்தாலும் கூற இயலாது. ஆகவே, ஒருவரை புறத்தோற்றத்தாலும் அல்லது அவர் வகிக்கும் பதவியாலும் மதிப்பிடக் கூடாது. அவர் செய்யும் செயலைக் கொண்டே நல்லவரா, தீயவரா என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

 

     புறத்தோற்றத்தில் எல்லோரும் மனித வடிவில் தான் உள்ளனர். அவர் சொல்லும் சொல் கூட மிக இனிமையாகத்தான் இருக்கின்றது. ஆனால், அவரது சொல் வேறு, செயல் வேறாக இருக்கும்.

 

     காட்டில் வாழும் மிருகங்கள் ஒவ்வொன்றும் வடிவத்தாலும், செயலாலும் வேறுபட்டு இருப்பவை. அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்கு உபாயங்கள் உள்ளன. ஆனால், கயவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான உபாயத்தை, அறிவு நூல்களை ஓதுவதன் மூலமாகவும், கற்ற பெரியோர்கள் சகவாசத்தாலுமே அறிந்து கொள்ள முடியும்.

 

     எந்த விதமான சாதனைகளையும் ஒருவன் புரிந்து கொள்ள முடியும். ஆனால், கயவர் குணத்தை மட்டும் திருத்த முடியாது என்பதை விளக்கும் ஒரு பாடல், "குமரேச சதகம் என்னும் நூலில் வருகிறது. அதனைக் காண்போம்...

 

 

குணமிலாத் துட்டமிரு கங்களையும் நயகுணம்

     கொண்டுட் படுத்திவிடலாம்,

கொடியபல விடநோய்கள் யாவும்ஒள டதமது

     கொடுத்துத் திருப்பிவிடலாம்,

 

உணர்விலாப் பிரமராட் சசுமுதல் பேய்களை

     உகந்துகூத் தாட்டிவிடலாம்,

உபாயத்தி னால்பெரும் பறவைக்கு நற்புத்தி

     உண்டாக்க லாம்,உயிர்பெறப்

 

பிணமதை எழுப்பலாம், அக்கினி சுடாமற்

     பெரும்புனல் எனச்செய்யலாம்,

பிணியையும் அகற்றலாம், காலதூ துவரையும்

     பின்புவரு கென்றுசொலலாம்,

 

மணலையும் கயிறாத் திரிக்கலாம், கயவர்குணம்

     மட்டும் திருப்பவசமோ?

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மயில் ஏறி விளையாடு குகனே --- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

 

     புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     குணம் இலாத் துட்ட மிருகங்களையும் நயகுணம் கொண்டு உட்படுத்தி விடலாம் --- நல்ல குணம் இல்லாத கொடிய விலங்குகளையும் இனிய பண்பினாலே வசப்படுத்தி விடலாம்.

 

     கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்துத் திருப்பி விடலாம் --- கொடுமையான பல துன்பத்தைத் தரும் நோய்களை எல்லாம் தக்க மருந்தைக் கொடுத்து மாற்றிவிடலாம்.

 

     உணர்வு இலாப் பிரமராட்சசு முதல் பேய்களை உகந்து கூத்தாட்டி விடலாம் --- நல் உணர்வு இல்லாத பிரமராட்சசு முதலான பேய்களை, அவைகள் விரும்பும் முறையிலே கூத்தாடச் செய்து, அவைகளை  நீக்கிவிடலாம்.

    

     உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் --- தக்க முறைகளைக் கையாண்டு, கிளி முதலிய பறவைகளுக்கும் நல்லறிவை உண்டாக்கிப் பழக்கலாம்.

 

     உயிர் பெறப் பிணம் அதை எழுப்பலாம் --- பிணத்தையும் கூட உயிர் பெற்று எழச் செய்து விடலாம்.

 

     அக்கினி சுடாமல் பெரும் புனல் எனச் செய்யலாம் --- அக்கினித் தம்பம் என்னும் முறையினால் சுடுகின்ற நெருப்பை, மிகவும் குளிர்ந்த நீர் என ஆக்கி விடலாம்.

 

     பிணியையும் அகற்றலாம் --- நோயையும் அகற்றலாம்.

 

     கால தூதுவரையும் பின்பு வருக என்று சொல்லலாம் --- காலனுடைய தூதுவர்களையும் "பிறகு வருக" என்று கூறலாம்.   

 

     மணலையும் கயிறாத் திரிக்கலாம் ---  மணலைக் கூடக் கயிறாகத் திரிக்கலாம்.

 

      கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ  -- கீழ்மக்களின் குணத்தை மட்டும் மாற்ற இயலாது.

 

        விளக்கம் --- எந்தத் தீமையையும் நன்மையாக மாற்றலாம். ஆனால், கீழ்மக்களை மட்டும் நற்குணம் பொருந்தியவர்களாக்க முடியாது என்கின்றார் இந்த நூலின் ஆசிரியர். இக் கருத்தையே பிற நூலாசிரியர்களும் வலியுறுத்துவதை அறியலாம். கயவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று "கயமை" என்னும் ஒரு அதிகாரத்தில் காட்டினார் திருவள்ளுவ நாயனார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...