பாடல் 8


தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாது,

பெட்டப் பிணம்என்று பேர்இட்டு, கட்டி

எடுங்கள்,அத்தா! என்னாமுன், ஏழைமட நெஞ்சே!

நெடுங்களத்தான் பாதம் நினை.


        ஏழை மட நெஞ்சே! – அறிவில்லாத நெஞ்சமே! தொட்டுத் தடவி – உடலைத் தொட்டுப் பார்த்தும் தடவிப் பார்த்தும், துடிப்பு ஒன்றும் காணாது – நாடித் துடிப்பு ஒரு சிறிதும் அறியப்படாமையால்,  பெட்ட பிணம் என்று பேர் இட்டு – வெறும் பிணம் என்று பேரைச் சூட்டி;  அத்தா கட்டி எடுங்கள் என்னாமுன் – அத்தா! பிணத்தைப் பாடை கட்டி எடுங்கள் என்று சொல்லும் நிலை வருவதன் முன்னம், நெடுங்களத்தான் பாதம் நினை – திருநெடுங்களம் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருவடிகளை நினைப்பாயாக.

விளக்கம் --- தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணாது – கணை பார்வை இழந்து, செவி கேட்பதும் அடங்கி, கேச்சும் மூச்சும் இன்றி உணர்வு இழந்து கிடக்கின்ற நிலையில், உயிர் உள்ளதா என்று அறிந்து கொள்வதற்குக் கையாளும் முறை நாடித் துடிப்புப் பார்த்தல். உடலை விட்டு உயிர் பிரிந்த நிலையில் நாடித் துடிப்பு, இதயத் துடிப்பு இருக்காது. அந்த நிலையில் முன்பு பலராலும் விரும்ப்பபட்உ, ஒரு பெயர் இட்டு அழைக்கப்பட்ட இந்த உடலைப் பிணம் என்று கூறுவர். “பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு” என்பது திருமூரல் திருமந்திரம். உயிருள்ளபோது ஒவ்வோர் உடம்புக்கும் வெவ்வேறு பெயர். உயிர் பிரிந்தபின் எல்லா உடம்புகளுக்கும் பிணம் என்பதே பொதுப் பெயர். 

        அத்தா – அக்காள் கணவன், அத்தை மகன், அம்மான் மகன்,உடன்பிறந்தாள் கணவன், கணவன் ஆகியோரைக் குறிக்கும் சொல். தலைவன் எனவும் பொருள்படும். “அத்தா உனக்கு ஆளாய்” என்பது சுந்தரர் தேவாரம்.


“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,

     ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,

 ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி

     ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,

 

நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது

     நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,

 நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி

     நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” -- திருப்புகழ்.


    உடம்பை விட்டு உயிர் பிரிந்தது, நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் செய்தி அறிந்து, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, வந்து, வாய்க்கு வந்த்தை எல்லாம் பேசி முழக்கம் இட்டும், அழுதும், ஓய்ந்து போவார்கள். பலவிதமாகப் பல்லக்கு போல அலங்கரிக்கப்பட்ட பாடையின் மீது பிணத்தைக் கிடத்துவார்கள்.

     பிணமான பின்னர் நாற்றம் எடுக்கும். பிணமானது நைந்து நாற்றம் வீசும் முன்னர், பாடையில் கிடத்தி, சுடலைக்குக் கொண்டு சென்று, தீயில் சுட்டுவிடுவார்கள். முடிவில் ஒரு பிடி சாம்பல் ஆகும். "ஒரு பிடி சாம்பரும் காணாது, மாய உடம்பு இது" என்றார் அருணகிரிநாதர்.

    “கட்டி எடுங்கள்” பாடயைக் கட்டிப் பிணத்தை எடுங்கள். “ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டு” என்பது திருமூலர் திருமந்திரம். பாடை என்பது விதவிதமாக இருக்கும் என்பதால், “நானாவிதச் சிவிகை” என்றார் அருணகிரிநாதர்.

        பிறவியானது உயிர்கள் ஈட்டிய விளைகளின் பயனாக ஊட்டப்படுகின்றது. மூலமலமான ஆணவமலம், அறிவை மறைக்கும் ஆற்றல் உடையது. ஆணவ மலத்தால் அறிவை இழந்து, உண்மைப் பொருளை உணராமல், உணர்ந்ததையே பொருளாக உணர்ந்து. மீண்டும் மீண்டும் பிறவிக்கு வருகின்றது. இறைவன் உள்ளிருந்து உணர்த்துகின்றான். என்றாலும், அதை உணரும் பக்குவம் இன்மையால், தான் உணர்ந்ததையே உணரும் அறியாமை நிலையில் ஆன்மா உள்ளது.

 

“உணர்த்தும் உனை உணராமல்,உணர்ந்தவையே நாடி

இணக்கு உறும் என் ஏழைமைதான் என்னே பராபரமே.”   --- தாயுமானார்.


      கொஞ்சம் கொஞ்சமாகப் பிறவிகள் தோறும் பக்குவப்பட்ட ஆன்மாவுக்கு அறிவு உதித்து, பிறவி பொய் எனவும், வேண்டாத ஒன்று எனவும் தோன்றும். அந்த உணர்வு பெருகப் பெருக, பிறவி அறவேண்டும் என்னும் ஏக்கமும் மிகும். அந்த நிலையில், பிறவி நோய்க்கு மாமருந்தாக உள்ளவன் இறைவன். அவனே பவரோக வயித்தியநாதன் என்னும் நினைப்பு வந்து வழிபடவேண்டும் என்னும் எண்ணம் மிகும். இறைவன் தலங்கள் தோறும் எழுந்தருளி உயிர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருக்கிறான். திருநெடுங்களம் என்பது ஒரு தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம். திருச்சி - தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி வரை சென்று அங்கிருந்து பிரியும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மாங்காவனம் செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலம் வழியாகச் செல்கிறது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய இத்தலத் திருப்பதிகம், அதனை ஓதுவோர்க்கு வரும் பலவகை இடையூறுகளையும் நீக்கிக் காக்க வல்லது. 


No comments:

பாடல் 8

தொட்டுத் தடவித் துடிப்புஒன்றும் காணாது, பெட்டப் பிணம்என்று பேர்இட்டு, கட்டி எடுங்கள்,அத்தா! என்னாமுன், ஏழைமட நெஞ்சே! நெடுங்களத்தான் பாதம் நி...