பொறுமையுடன் அறிவுடையார் இருந்தஇடம்
விளக்கேற்றிப் புகுத வேண்டும்!
கெறுவமுடன் அகந்தையுள்ளார் இறுமாந்து
நடந்துதலை கீழாய் வீழ்வார்!
வறுமையினும் மறுமையினும் காணலாம்;
தண்டலையார் வாழும் நாட்டில்
நிறைகுடமோ தளும்பாது! குறைகுடமே
கூத்தாடி நிற்ப தாமே!
இதன் பொருள் ---
தண்டலையாா் வாழும் நாட்டில் – சிவபரம்பொருள் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருத்தண்டலை என்னும் திருத்தலம் உள்ள நாட்டில், பொறுமையுடன் அறிவுடையார் இருந்த இடம் விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும் - பொறுமையும் அறிவும் உடையவர் இருக்கும் இடத்தை விளக்கு ஏற்றிச் சென்று காணவேண்டும். கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து நடந்து தலைகீழாய் வீழ்வர் - செருக்கும் ஆணவமும் உடையோர் பணிவின்றி நடந்து தலைதடுமாறி அழிவார்கள். வறுமையினும் மறுமையினும் காணலாம் - வறுமைக் காலத்தினும் மற்றைக் காலத்தினும் இவர்கள் நிலையை அறியலாம். (எப்போதும் ஒரு தன்மையராகவே இருப்பர்) நிறைகுடமோ தளும்பாது - நீர் நிறைந்த குடம் எனிலோ தளும்புவது செய்யாது; குறைகுடமே கூத்தாடி நிற்பது ஆம் - நீர் குறைந்த குடமே கூத்தாடி நிற்கும்.
கருவம் என்னும் சொல் எதுகை மோனை நயங்களை நோக்கிக், ‘கெறுவம்' என வந்தது. ‘இருந்த இடம் விளக்கேற்றிப் புகுத வேண்டும்' ‘தலைகீழாய் வீழ்வார்' என்பன மரபு மொழிகள். ‘நிறைகுடம் தளும்பாது; குறைகுடம் கூத்தாடும்' என்பது பழமொழி.
இக் கருத்தையே “பழமொழி நானூறு” என்னும் நூலும் பின்வரும் பாடலால் வலியுறுத்தும்.
“கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்; - தெற்ற
அறைகல் அருவி அணிமலை நாட!
நிறைகுடம் நீர்தளும்பல் இல்.”
இதன் பொருள் ---
அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை. (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைப் பொருளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கொண்டனவே அடக்கத்திற்குரிய செயல்கள் ஆகும். அறியாதார் - நூல்களைக் கற்றதோடு அமைந்து, நூற்பொருளின் உண்மையையும் அனுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.
No comments:
Post a Comment