98. முழுதும் அனுபவிக்க யாராலும் முடியாது

 


ஆழியெல்லாம் பாலாகி அவனியெல்லாம்

     அன்னமயம் ஆனால் என்ன?

சூழவரும் இரவலர்க்குப் பசிதீர

     உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ!

ஏழுலகும் பணியவரும் தண்டலையா

     ரே! சொன்னேன்! எந்தநாளும்

நாழிநெல்லுக்கு ஒருபுடைவை விற்றாலும்

     நிருவாணம் நாய்க்குத் தானே.


இதன் பொருள் ---


    ஏழு  உலகும் பணியவரும் தண்டலையாரே - ஏழுலக மக்களும் வணங்கத் தேடிவரும் திருத் தண்டலை இறைவரே! எந்த நாளும் நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய்க்கு நிருவாணந்தான் - எக்காலத்திலும் ஒரு படி நெல்லுக்கு ஒரு புடைவை என்று விற்றபோதிலும், நாய் ஆடையின்றித்தான் இருக்கவேண்டும். (அதுபோல), ஆழி எல்லாம் பாலாகி அவனி எல்லாம் அன்ன மயம் ஆனால் என்ன - எல்லாக்  கடல்களும் பாற்கடல்களாகவும், உலகம் முற்றும் சோற்றுக் குவியலாகவும் ஆனாலும் என்ன பயன்?, சூழ்வரும் இரவலர்க்குப் பசிதீர உண்டிருக்கும் சுகந்தான் உண்டோ - (உலகைச்) சுற்றி அலையும் பிச்சைக்காரர்களுக்குப் பசி தீர பாலைக் குடித்தும், உணவை உண்டு களிக்கும் நலம் உண்டாகுமா? (உண்டாகாது)


      ஆழமாக இருப்பது பற்றி, கடலானது ஆழி என வழங்கப்படும். அனைத்துக் கடலுமே பாற்கடலாக மாறினாலும், அதைப் பார்த்து வரும் இரவலருக்கு, பாற்கடலை முழுமையாகக் குடித்து மகிழ முடியாது. உலகம் எங்கும் சோற்றுப் பெருக்கு இருந்தாலும் அதைப் பார்த்து வரும் இரவலர்க்கு சோறு முழுவதையும் உண்டு மகிழ முடியாது. இதை விளக்கவே, ‘நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும் நாய் நிருவாணமாகத் தான் இருக்கும் என்னும் பொருள்பட ஒரு பழமொழி இருந்திருத்தல் வேண்டும்.


        பின்வரும் பாடல்களை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

 பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்,

துய்ப்பேம் எனினே தப்புந பலவே. “.      – புறநானூறு

இதன் பொருள் ---

  தெளிந்த கடல் நீரால் சூழப்பட்டு உள்ள இந்த உலகில், "எல்லார்க்கும் பொதுவானது அல்ல, எனக்கே உரியது" என்று ஒரு குடையின் கீழ் ஏகச் சக்கராதிபதியாக வாழ்ந்த மாமன்னர்களுக்கும்; பகல் பொழுதிலும் உறங்காமல், நள்ளிரவில் கணி விழித்து, விரைந்து செல்லுகின்ற காட்டு விலங்குகளை வேட்டை ஆடித் திரியும், கல்வி அறிவு இல்லாத வேடர்களுக்கும் தேவைப்படுவது --- உண்பதற்கு ஆழாக்குத் தானியமும், உடுப்பதற்கு மேல் ஒன்றும், கீழ் ஒன்றுமாக இரண்டு துண்டு உடைகளுமே ஆகும். மற்ற மற்றத் தேவைகள் எல்லாம் கூட, இந்த இரண்டு விதமானவர்க்கும் ஒரே மாதிரியாகத் தான் உள்ளது. எனவே, செல்வத்தை ஈட்டுவதன் பயன், பிறருக்குக் கொடுத்து மகிழவே. இதை உணராமல், ஈட்டிய செல்வம் தமக்கே உரியது; தாமே அனுபவித்து கிழலாம் என்று இருந்த பலரும், அந்த வாய்ப்பைத் தவறவிட்டு, உயிரை இழந்து இருக்கின்றார்கள்.


 “சேவித்தும், சென்று இரந்தும், தெண்ணீர்க் கடல்கடந்தும்,

பாவித்தும், பார்ஆண்டும், பாட்டுஇசைத்தும், - போவிப்பம்

பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்

நாழி அரிசிக்கே நாம்.”            -- நல்வழி.

 

இதன் பொருள் ---

      வயிற்றுப் பசியின் கொடுமையால் பிறரைத் தேடிச் சென்று வணங்கியும், பலரிடத்தில் சென்று யாசித்தும், தெளிந்த நீரை உடைய கடலைக் கடந்து, வேற்ற நாடுகளுக்குச் சென்றும், அற்பர்களை எல்லாம் பெரியவர்களாகப் பாவித்தும், உலகை ஆண்டும்,  செல்வர்களைப்  புகழ்ந்து பாடியும், இப்படிப் பலவிதமாக உடம்பினை ஓம்புவதற்கு வேண்டிய படி அரிசிக்காகவே உழைத்துக் காலத்தைக் கடத்துகின்றோம்.



No comments:

39. அடியார்களைப் பகைத்தால் அழிவு

 “ஈசன்எதிர் நின்றாலும், ஈசன்அருள் பெற்று அயர்ந்த நேசர்எதிர் நிற்பது அரிதாமே; - தேசுவளர் செங்கதிர்முன் நின்றாலும், செங்கதிரவன் கிரணம் தங்குமண...