களித்துவரும் செல்வருக்கு வலிமையுண்டு!
மிடியருக்குக் கனந்தான் உண்டோ?
வளைத்தமலை யெனுஞ்சிலையார் தண்டலைசூழ்
தரும்உலக வழக்கம் பாரீர்!
ஒளித்திடுவர் தம்மனையிற் பெண்டீரைக்
கண்டவரும் ஒன்றும் பேசார்!
இளைத்தவன்பெண் டீரென்றால் எல்லார்க்கும்
மச்சினியாய் இயம்பு வாரே.
இதன் பொருள் ---
வளைத்த மலை எ(ன்)னும் சிலையார் தண்டலை சூழ்தரும் உலக வழக்கம் பாரீர் - வளைந்த மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தைச் சூழ்ந்த உலகத்தின் வழக்கத்தைப் பாருங்கள்!, தம் மனையில் பெண்டீரைக் கண்டு ஒளித்திடுவர்; அவரும் ஒன்றும் பேசார் - செல்வ வலிமை உடையோர் வீட்டில் உள்ள பெண்களைக் கண்டு ஒளித்திடுவார்; ஒன்றும் பேசவும் மாட்டார் (எனினும்), இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லோர்க்கும் மச்சினியாய் இயம்புவார் – ஆற்றலு அற்றவன் மனைவி என்றாலோ யாவருக்கும் மைத்துனியாகக் கொண்டு நகையாடுவர்; (ஆகையால்), களித்து வரும் செல்வருக்கு வலிமையுண்டு - களிப்புடன் வரும் செல்வர்களுக்கு ஆற்றலுண்டு; மிடியருக்குக் கனந்தான் உண்டோ - ஏழைகட்கு அப் பெருமை உண்டாகுமோ?
சிவபெருமான் மேருமலையை திரிபுர தகனத்தின்போது) வில்லாக வளைத்ததனால், வளைத்தமலை எனும் சிலையார், என்றார். (சிலை – மலை) ‘இளைத்தவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி' என்பது பழமொழி.
No comments:
Post a Comment