96. பிடாரி மனைவி ஆனால்....


அடுத்தமனை தொறும்புகுவாள்! கணவன்உணும்

     முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!

கடுத்தமொழி பேசிடுவாள்! சிறுதனம்தே

     டுவள்! இவளைக் கலந்து வாழ்தல்

எடுத்தவிடைக் கொடியாரே! தண்டலையா

     ரே! எவர்க்கும் இன்பம் ஆமோ?

குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப்

     பெண்டுவைத்துக் கொண்ட தாமே.


இதன் பொருள் ---


    எடுத்த  விடைக் கொடியாரே - இடபக்கொடியினை உயர்த்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே! அடுத்த மனைதொறும் புகுவாள் - அயல் வீடுகளிலெல்லாம் நுழைவாள், கணவன் உ(ண்)ணும் மு(ன்)னம் உண்பாள் - கணவன் உண்பதற்குமுன் தான் உண்பாள், அடக்கம் இல்லாள் – அடங்கி இருக்கமாட்டாள், கடுத்தமொழி பேசிடுவாள் - வெறுப்பாகவே  உரையாடுவாள், சிறு தனம் தேடுவள் - (தனியே) சிறு சேமிப்புச் செய்வாள், இவளைக் கலந்து வாழ்தல் எவர்க்கும் இன்பம் ஆமோ - இப்படிப்பட்டவளைக்  கூடி வாழ்வது  யாருக்குத்  தான் மகிழ்ச்சியாக இருக்கும்? (இப்படிப்படவளை மணந்து வாழ்வது) குடித்தனமே கெடவேண்டிப் பிடாரிதனைப் பெண்டு வைத்துக் கொண்டது - குடிகெடுவதற்குப் பிடாரியை மனைவியாகக் கொண்டதை, ஆம் – ஒத்த செயல் ஆகும்.


     “பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு” என்பது கலித்தொகை. ஐந்தறிவு உள்ள விலங்குக்கே இந்த அன்பு விளங்குகிறது. விலங்கினும் மேம்பட்ட எப்படி இருக்க வேண்டும் என்பது இதனால் விளங்கும். “கறுத்தமுலைச் சூல் பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக் கைந் நீட்டும்” என்பது பதினொன்றாம் திருமுறை. கறுத்த முலையினை உடைய பெண்யானைக்கு, ஆண் யானையானது சந்தன மரத்தை ஒடித்துத் தன் துதிக்கையால் நீட்டிக் கொடுக்கிறதாம். “சந்தனப் பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்து, யானை மந்தண் மடப்பிடியின் வாய்க் கொடுப்ப வந்து, அதன் கண்களிக்கத் தான் களிக்கும்” என்பதும் பதினொன்றாம் திருமுறை. ஆண்யானையானது, சந்தன மரத்தின் அழகிய பசுமையான தழையை தேனில் தோய்த்து பெய்யானையின் வாயில் கொடுக்கிறதாம். அந்த அன்பினை நோக்கிப் பெண்யானையில் கண்களில் நீர் துளித்தது. பெண்யானை மகிழ்ந்ததைப் பார்த்து, ஆன்யானை மகிழ்ந்தது. மனிதனுக்கு அமைந்து இருக்க வேண்டிய நற்பண்புகள் இவை இவை என்று நமது முன்னோர்கள், விலங்கினங்களைக் காட்டி நமக்கு அறிவுறுத்திய அற்புதக் காட்சிகள் இவை ஆகும். எனவே, முன் ஊட்டிப் பின் ஊட்டுதல் அன்பு மிகுந்தோர் செய்யும் செயல் ஆகும் என்பதனை அறிக. 


பிடாரி - காளி. இவள் சிவனுடன் வாதாடினாள்  என்று கூறுவதால், அடங்கா மனைவியை, ‘அடங்காப்பிடாரி' என்று கூறுவது மரபு.  பின்வரும் பாடல்களின் கருத்தை இங்கு. ஐத்து எண்ணுக.


“எறி என்று எதிர் நிற்பாள் கூற்றம்; சிறுகாலை

அட்டில் புகாதாள் அரும்பிணி; - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ் பேய்; - இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை.” --- நாலடியார்.


தவறு செய்துவிட்ட மனைவியைத் தண்டிக்க வரும் கணவன் எதிர் நின்று, அவனை எதிர்த்துப் பேசுபவள் அவனுக்கு மனைவி அல்ல, எமன். காலையில் அவனுக்கு உணவு சமைத்து வைக்காதவள் மனைவி அல்ல, தீராத நோய். சமைத்த உணவை அவன் உண்ண அன்புடன் பரிமாறி உதவாதவள், மனைவி அல்ல, வீட்டில் இருக்கும் பேய். கணவனை உயிரோடு கொல்ல இந்த மூன்று வகைப் பெண்களை போதும். வேறு படைக் கருவி தேவை இல்லை.


"இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்று இல்லை,

இல்லாளும் இல்லாளே ஆம்ஆயின், - இல்லாள்

வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ்வில்

புலிகிடந்த தூறாய் விடும்." -- மூதுரை


இதன் பொருள் ---


    நற்குண நற்செய்கைகளை உடைய மனையாள் வீட்டில் இருந்தால், அவ் வீட்டில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. மனையாள் இல்லாமல் போனாலோ, மனையாள் கடுமை பொருந்திய சொற்களைச் சொன்னாலோ, அந்த வீடானது புலி தங்கிய புதர் போல் ஆகி விடும்.


நற்குண நற்செய்கைகளையுடைய மனையாள் இருக்கும் வீடே எல்லாப் பொருளும் நிறைந்த வீடு. அது அல்லாத வீடு யாவரும் கிட்டுதற்கரிய காடே ஆகும். 


No comments:

36. தீயவரிடம் இருந்து விலகி இருத்தல்

“பேதையரைக் கண்டால் பெரியோர் வழிவிலகி நீதியொடு போதல் நெறி அன்றோ? - காதுமத மாகரத்த யானை வழிவிலகல், புன்மலம்தின் சூகரத்துக்கு அஞ்சியோ? சொல்.” ...