95. நாணம் அற்றார் நிலை

சேணிலகு மதிச்சடையார் தண்டலையார்

     வளநாட்டிற் சிறந்த பூணின்

காணவரும் நாணுடையார் கனமுடையார்

     அல்லாதார் கருமம் எல்லாம்

ஆணவலம்! பெண்ணவலம்! ஆடியகூத்து

     அவலம்! என அலைந்து கேடாம்!

நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும்

     வாயிலெனும் நடத்தை ஆமே.


இதன் பொருள் ---

    சேண்  இலகும்  மதிச்  சடையார்  தண்டலையார் வளநாட்டில் - வானில் உலவும் பிறைத் திங்கள் அணிந்த திருச்சடையினை உடையவரும், திருதண்டலை என்னும் திருத்தலத்தில் நீள்நெறி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருப்பவரும் ஆன சிவபரம்பொருளின் வளம் பொருந்திய நாட்டில், சிறந்த பூணின் காண வரும் நாணுடையார் கனம் உடையார் அல்லாதார் கருமம் எல்லாம் - சிறப்பு மிக்க அணிகலன் போலக் காணப்படும் நாணமும் பெருமையும் இல்லாதவரின் செயல்கள் யாவும், ஆண் அவலம் பெண் அவலம் ஆடிய கூத்து அவலம் என அலைந்து கேடு ஆம் - ஆடவரும் வீணர், பெண்டிரும் வீணர், அவர்கள் நடத்திய கூத்தும் வீண், என்னும்படியாக அலைவுற்றுக் கேடு ஆகும்.(அச்செயலானது, நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும் வாயில் எனும் நடத்தை ஆம் - வெட்கம் அற்ற கூத்தாடிச்சிகளுக்கு நான்கு திசையினும் வழி என்னுமாறு ஆய்விடும்.

      நன்றாகக் கூத்தாடும் திறமையற்ற கூத்தாடும் பெண்டிர் தம்மைப் பலரும் பழிக்கும்போது வெட்கித் திசை நோக்காமல் தப்பித்து ஓடுவர். அதுபோல நாணமும் மானமும் இல்லார் செயலும் பலரும் பழிக்கும்படி வீணாகும் என்பது அறிவுறுத்தப்பட்டது. “‘நாணமில்லாக் கூத்தியர்க்கு நாலுதிக்கும் வாயில்” என்பது என்பது பழமொழி போலும்.

ஆண் ஒருவன் பெண் வேடம் இட்டாலும் அவலமாகவே முடியும். பெண் ஒருத்தி ஆண்வேடம் புனைந்தாலும் அவலமாகவே முடியும். அடியார் போல வேடமிட்டுக் கொண்டு திரியும் அவலர்களைக் குறித்து இப்பாடல் எழுந்ததாகக் கொள்ளலாம். “வேடநெறி நில்லார் வேடம் பூண்டு என் பயன்?” என்பார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூலதேவ நாயனார். “சிவ வேடம்”, “அவ வேடம்” என இரண்டு பகுதிகளைத் திருமந்திரத்தில் நாயனார் வகுத்து இருப்பது காண்க.

வள்ளல் இராமலிங்க சுவாமிகள் அருளிய திருவருட்பாவில் உள்ள பின்வரும் பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“நிலைகாட்டி ஆண்டநின் தாட்கு அன்பு

    இலாது, அன்பில் நீண்டவன்போல்

புலைகாட் டியமனத் தேன்கொண்ட

     வேடம், புனைஇடைமேல்

கலைகாட்டி, கட்டு மயிர்த்தலை

     காட்டி, புன் கந்தைசுற்றி

முலைகாட்டி, ஆண்மகன் பெண்வேடம்

     காட்டும் முறைமை அன்றே.”.  – திருவருட்பா.


     பெருமானே! உலகின் நில்லாத இயல்பு கண்டு உணர்ந்து, தேவரீரது திருவடிக் கூழ் பெறும் இன்பமே நிலையான இன்பம் அடியேனது உணர்வில் இருந்து உணர்த்தி ஆட்கொண்டாய். அந்த நன்றிநினை உணர்ந்து உம்மிடத்துப் பேரன்பினைச் செலுத்த வேண்டும். தேவரீரது திருவடிக்கு உண்மையில் அன்பு இல்லாமல், மிக்க அன்பினை உடையவன்போல் புறத்தார் காணுமாறு, அடியேன் பூண்டு இருக்கும் அடியவர் வேடம் பூண்டு உலாவுகின்றேன். இது ஆண்மகன் ஒருவன், பெண்ணின் இடுப்பினைப் போலப் புனையபட்ட இடுப்பில் புடைவையைச் சுற்றிக் கொண்டு, கட்டு மயிரை வைத்துக்  கூந்தல் போலக் காட்டி, இல்லாத முலைக்காக, கந்தைத் துணியைப் பந்துபோல் சுருட்டிக் கட்டி, பெண்வேடம் பூண்டு தோன்றும் முறைமையாக இருக்கிறது. 


No comments:

35. அறம் செய்யக் காலம் ஏன்?

“உள்ளபொழுது ஏதும் உவந்து அளிப்பது அல்லாமல்,ஓர் எள்ளளவும் ஈய இசையுமோ? - தெள்ளுதமிழ்ச் சீரளித்தோன் உண்டநாள் சேர்மேகத்துக்கு அருந்த நீரளித்த தோ...