"நொந்தவரும், பசித்தவரும், விருந்தினரும்,
விரகினரும், நோயுள் ளோரும்,
தந்தமது வருத்தமல்லாற் பிறருடைய
வருத்தமது சற்றும் எண்ணார்!
இந்துலவும் சடையாரே! தண்டலையா
ரே! சொன்னேன் ஈன்ற தாயின்
அந்தமுலைக் குத்துவலி சவலைமக
வோசிறிதும் அறிந்தி டாதே."
இதன் பொருள் ---
இந்து உலவும் சடையாரே – பிறைச்சந்திரன் உலாவுகின்ற திருச்சடையினை உடையவரே! தண்டலையாரே – திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் “நீள்நெறி” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!
ஈன்ற தாயின் அந்த முலைக் குத்துவலி சவலை மகவோ சிறிதும் அறிந்திடாதே - பெற்ற தாயின் முலையில் உண்டாகும் குத்து நோயைச் சவலைப் பிள்ளையோ கொஞ்சமும் அறியாது; (அதுபோல), நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும் விரகினரும் நோய் உள்ளோரும் – உள்ளம் வருந்தினோரும், பசியோடு இருப்பவரும், விருந்துண்ண வந்தோரும், காம உணர்வு கொண்டவரும், நோய்வாய்ப் பட்டோரும் ஆகிய இவர்கள், தந்தமது வருத்தம் அல்லால் பிறருடைய வருத்தமது சற்றும் எண்ணார் - தங்கள் வருத்தத்தை அன்றி மற்றவர்களின் வருத்தத்தைச் சிறிதும் நினையார்.
பிறர் வருத்தம் அறியாதவர் இன்னின்னார் என்பது கூறப்பட்டது. இதனால், இவர்களைத் தவிர, பிறர் யாவரும், பிறர் வருத்தத்தை உணர்ந்து, அதனைப் போக்க உதவுகின்ற மனம் உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்பது கருத்து.
No comments:
Post a Comment