கொச்சையிலே பாலுமுண்டோ? கூத்தியர்கள்
தம்மிடத்திற் குணந்தான் உண்டோ?
துச்சரிடத் தறிவுண்டோ? துச்சரெங்கே
போனாலும் துரையா வாரோ?
நச்சரவத் தொடையாரே! தண்டலையா
ரே! இந்த நாட்டல் லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பைஅரைக்
காசதன்மேல் ஆர்கொள் வாரே?
இதன் பொருள் ---
நச்சு அரவத் தொடையாரே – நஞ்சை உடைய பாம்புகளை மாலையாக அணிந்தவரே! திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளே! இந்த நாட்டு அல்லாமல் அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்காசதன் மேல் யார் கொள்வாரே - இந்த நாட்டிலே அன்றி அச்சிக்குச் சென்றாலும் அகப்பை அரைக் காசுக்கு மேல் விலை போகாது, (ஆகையால், எங்கே சென்றாலும்) கொச்சையிலே பாலும் உண்டோ – வறட்டு ஆட்டிலே பால் கிடைக்குமா?, கூத்தியர்கள் தம்மிடத்தில் குணம்தான் உண்டோ - கூத்தாடும் மாதரிடம் நற்பண்பைத்தான் காணமுடியுமா?, துச்சர் இடத்து அறிவு உண்டோ - தீயருக்கு அறிவு உண்டாகுமா?, துச்சர் எங்கே போனாலும் துரை ஆவரோ - தீயவர் எங்கே சென்றாலும் தலைமைக்கு ஏற்றவர் ஆவாரோ?
கூத்தி – நாடகக் கணிகை. கூத்தியர் என்பவர் முற்காலத்தில் கூத்தாடும் தொழிலை மேற்கொண்டு, ஒழுக்கமின்றி ஊருராகச் சென்று கொண்டிருந்தவர்கள்.துச்சர் -இழிந்த குணம் உடையவர். ‘துச்சர் துரை ஆவாரே' துச்சரிடத்துத் துரைக்கு உரிய பண்பு பொருந்தி இருக்காது. ‘அச்சிக்குப் போனாலும் அகப்பை அரைக்காசு தான்' என்பது பழமொழி.
No comments:
Post a Comment