பாடல் 12


"குயில்ஒத்து இருள்குஞ்சி கொக்குஒத்து, இருமல்

பயிலப் புகாமுன்னம், நெஞ்சே! -  மயிலைத்

திருப்புன்னை அம்கானல் சிந்தியாய் ஆகில்,

இருப்பின்னை அங்காந்து இளைத்து."


இதன் பொருள் --- 


    நெஞ்சே – மனமே! குயில் ஒத்து இருள் குஞ்சி கொக்கு ஒத்து – குயிலின் நிறம் போன்று கருமை நிறைந்து இருந்த தலைமயிரானது, நரைத்து கொக்கின் நிறம் போன்று வெண்மயிர் ஆகவும், இருமல் பயிலப் புகாமுன்னம் – இருமல் அடிக்கடி வருத்துகின்ற முதுமைப் பருவம் வந்து அடையும் முன்னரே, மயிலைத் திருப்புன்ன அம்கானல் சிந்தியாய் ஆகில் – திருமயிலாப்பூரிலே உள்ள திருப்புனை அம்கானல் என்னும் திருத்தலத்தை நினைக்கமாட்டாய் என்றால், பின்னை அங்காத்து இளைத்து இரு – முதுமையில் வாய் திறந்து இளைப்பினை அடைந்து இருப்பாய். (வாய் திறந்து இறப்பினையும் அடைந்து இருப்பாய்)

    இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல், கொக்கின் நிறம்போல் நரைத்து வெண்மை ஆகிவிடும். இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும். மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி இறைவன் அமைத்து இருகுகலாம்.  அது அவனுக்கு அருமையானது அல்ல. அதானல் இறைவனுக்கு நட்டமும் இல்லை.  இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

“கறுத்து தலை வெளிறு மிகுந்து” எனவும், “தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து” எனவும் வரும் திருப்புகழ்ப் பாடல்களை இங்கு வைத்து எண்ணுக. முதுமையில் கோழை மிகுவதால், இருமல் அடிக்கடி உண்டாகும். மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், பாடி இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு. அதுவும் இரவு நேரத்தில் இருமல் வாட்டும். “உறக்கம் வரும் அளவில், எலும்பு குலுக்கி விடும் இருமல் தொடங்கி, உரத்த கன குரலும் நெரிந்து” என்பார் அருணகிரிநாதர். பின்னை – முதுமைக் காலத்தில். அங்காத்தல் – வாயைத் திறத்தல். துயரத்தால் வாயைத் திறந்தபடி இருந்து, வாயைத் திறந்தபடியே இறந்து போவாய் என்றார்.

    புன்னை அம் கானல் - புன்னை மரங்கள் மிகுந்து உள்ள அழகிய கடற்ரை. மயிலை – திருமயிலை என வழங்கும் திருமயிலாப்பூர். இது தொண்டை நாட்டுத் திருத்தலம். சென்னைமாநகரின் ஒரு பகுதியாக உள்ளது. திருக் கபாலீச்சரம் என்பது திருக்கோயிலின் பெயர். “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டம் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். எலும்பைப் பெண்ணாக்கிய அற்புதத் திருப்பதிகம் திருஞானசம்பந்தரால் அருளப்பட்டது.


No comments:

அறிவு

அறிவு ---      பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றுள்ள மனிதனுக்குத் தனியான, தலையான அறிவு ஒன்று உண்டு. அதுவே ஆறாவது அறிவு. நல்லதன் நலனும் அல்லதன் ...