திருமகள் சேராமல் நீங்கி இருக்கும் இடங்கள் எவை என்பதைத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது....
1. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
பிறரை வெறுத்து அந்த வெறுப்பினால், அவரது ஆக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத குணம் (பொறாமைக் குணம்) உடையவனிடம் இருந்து திருமகளானவள் நீங்கி, அவனைத் தனது தமக்கையாகிய மூதேவிக்குக் காட்டி விடுவாள்.
பொறாமைக் குணம் உடையவனிடத்திலே திருமகள் இருக்கமாட்டாள். மூதேவி இருப்பாள் என்பது கருத்து.
2. வினைக்கண் வினையுடையான் கேண்மை, வேறாக
நினைப்பானை நீங்கும் திரு.
தான் மேற்கொண்ட செயலில் முழு ஈடுபாட்டோடு உரிமையால் தனக்குச் சுற்றமாய் நடக்கின்ற தன்மையை உடையவனுடைய தொடர்பை வேறாக நினைப்பவனை விட்டுத் திருமகள் நீங்குவாள்.
வேறாக நினைத்தல் - அவமதிப்புச் செய்தல், கோபம் கொள்ளுதல். சந்தேகம் கொள்ளுதல்.
3. இருமனப் பெண்டிரும் கள்வரும் கவரும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
இரண்டுவகை மனங்களைக் கொண்ட பொதுமகளிரும், கள் குடித்தலும், சூதாடுதலும் திருமகளால் புறக்கணிக்கப்பட்டவருடைய தொடர்புகள் ஆகும்.
No comments:
Post a Comment