பாடல் 7

மாண்டு வாய் அங்காவா முன்னம், மடநெஞ்சே!

வேண்டுவாய் ஆகி, விரைந்து,ஒல்லை, பாண்டவாய்த்

தென்னிடை வாய் மேய சிவனார் திருநாமம்

நின்னிடைவாய் வைத்து நினை.


இதன் பொருள் ---


    மாண்டு வாய் அங்காவா முன்னம் - உயிர் பிரிந்து வாய்திறந்து போகாத முன்பு,  மடநெஞ்சே – மடமை உடைய நெஞ்சமே! பாண்டவாய்த் தென் இடைவாய் மேய சிவனார் திருநாமம் – மட்பாண்டம் போன்று விரிந்த வாயினை உடைய காவிரியின் தென்கரையில், திரு இடைவாய் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருநாமத்தை, வேண்டுவாயாகி விரைந்து ஒல்லை – விருப்பம் உடையவன் ஆகி மிக விரைவாக; நின்னிடை வாய் வைத்து நினை - உனது மனத்துள்ளே பதிய வைத்து நினைவாயாக.

அங்காத்தல் - திறத்தல். வேண்டுவாயாகி - விரும்புதல் தன்மையை உடையை ஆகி. தென் இடைவாய் - தென்னாட்டில் உள்ள `இடைவாய்` என்னும் திருத்தலம். சோழ நாட்டில் அண்மையில், `விடைவாய்` என்னும் தலத்து திருஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைக் கல்வெட்டிலிருந்து கண்டு சென்னைச் சைவ சித்தாந்த மகாசமாசம் வெளியிட்டது. `இடைவாய்` என்பது அத்தலத்தின் மறுபெயராகலாம். திருவிடை வாசல் என்று வழங்குவது, கொரடாச்சேரி நிலயத்திற்கு அருகில் உள்ளது.  நின்னிடை - நின்னிடமாக. வாய் வைத்தல், வாசகமாகக் கணித்தல். நினைதல் - மானதமாகக் கணித்தல்.


No comments:

திருமகள் வாழிடம்

திருமகள் விருப்பத்தோடு சேர்ந்து இருக்கும் இடங்கள் எவை எனத் திருவள்ளுவ நாயனார் காட்டுவது..... 1. அகன்அமர்ந்து செய்யாள் உறையும், முகன்அமர்ந்...