பாடல் 10

 "படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட

முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு

தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு

ஓடுஏந்தி உண்ப துஉறும்."


இதன் பொருள் ---


    படிமுழுதும் - நில உலகம் முழுவதையும், வெண்குடைக் கீழ் – தமது வெண்கொற்றக் குடையின்கீழ், பார் எலாம் ஆண்ட முடி அரசர் செல்வத்து – உலகை எல்லாம் ஆட்சி செய்த முடிமன்னர் செல்வத்து - உலகமெல்லாம் தமது வெண்கொற்றக் குடையின் கீழே தங்கும்படி எல்லா உலகங்களையும் ஆட்சி புரிந்த முடிமன்னர்களது செல்வத்தினும், கடி இலங்கு தோடு ஏந்து – மணம் மிகுந்த இதழ்களை உடைய, கொன்றை அம் தார் சோதிக்கு – அழகிய கொன்றை மாலையினை அணிந்த சோதி வடிவினர் ஆகிய சிவபரம்பொருளுக்கு, தொண்டுபட்டு – திருத்தொண்டு புரிந்து, ஓடு ஏந்தி உண்பது மும்மை உறும் – தருவோட்டினை ஏந்தி இரந்து உண்பது, மூன்று மடங்கு உயர்ந்தது ஆகும்.

    இத் திருப்பாடலை அருளிய நாயனார், மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரச பாரத்தை இன்னல் தருவது எனக் கருதித் துறந்தர் என்பதை அறிக.  “ஓடு ஏந்தி உண்பது” வீடுபேற்றினை அடைவதற்கு வழி ஆகும். 


“பரந்து உலகேழும் படைத்த பிரானை

இரந்து உணி என்பர்கள், எற்றுக்கு இரக்கும்;

நிரந்தர மாக நினையும் அடியார்

இரந்து உண்டு தன்கழல் எட்டச்செய்தானே.” --திருமந்திரம்.

    எழுவகை உலகம் முழுமையும் வழுவின்றிப் படைத்த விழுப்பொருளாகிய சிவபெருமானை இரந்து உண்பவன் என்று கூறுவர் உண்மையறியாதார். சிவனை உலக முதல்வனாக எண்ணுபவர், அவன் எதன்பொருட்டு இரக்கின்றான் என்பதனை உய்த்து உணர்தல் வேண்டும். இடைவிடாது தன்னையே பூசிக்கின்ற மெய்யடியார்கள் தன்னையே நினைந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் உலகியலில் ஈடுபடாது, பசி நீக்குதல் பொருட்டாக இரந்து உண்டு, பற்றின்றி வாழவேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான். அவர்கள் உண்ணும் உணவு தன் திருவருளால் வழங்கப்படுவது என்னும் மெய்ம்மையை இறைவன் உள்ளிருந்து உணர்த்த உணர்கின்றனர். அதனால் தனது செயலைப் போலவே, தனது அடியார்களும் பிச்சை ஏற்று உண்டு, முடிவில் தனது திருவடியை அடைதல் வேண்டும் என்னும் திருக்குறிப்பு, இறைவன் பிச்சை ஏற்று உண்பதாகும்.

    அரச செல்வம் பற்றினை விளைத்துப் பிறவிக்கே ஏது ஆகும். இறைவனுக்குத் தொண்டுபட்டு ஓடு ஏந்தி உண்பது வீடுபேற்றுக்கு ஏது ஆகும்.


No comments:

பாடல் 10

 "படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடியரசர் செல்வத்து மும்மைக் கடியிலங்கு தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு ஓட...