கந்தனூர் --- 0905. விந்து பேதித்த

 

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ் 

விந்து பேதித்த (கந்தனூர்)

 

முருகா!

இப்பிறவியிலேயே அடியேன்

ஞானத்தைப் பெற்று உய்ய அருள்.

 

 

தந்தனா தத்தனா தந்தனா தத்தனா

     தந்தனா தத்தனா ...... தந்ததான

 

 

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு

     மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி

 

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு

     மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே

 

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி

     வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற

 

மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி

     வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ

 

அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு

     மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள

 

அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்

     அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா

 

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்

     எந்தைபா கத்துறையு ...... மந்தமாது

 

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்

     எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.

 

பதம் பிரித்தல்

 

விந்து பேதித்த வடிவங்களாய் எத்திசையும்

     மின் சராசர்க் குலமும் ...... வந்து உலாவி,

 

விண்டுபோய் விட்ட உடல் சிந்தைதான் உற்று அறியும்,

     மிஞ்ச நீ விட்டவடி ...... வங்களாலே,

 

வந்து, நாயில் கடையன் நொந்து ஞானப்பதவி

     வந்துதா இக்கணமெ ...... என்றுகூற,

 

மைந்தர் தாவிப் புகழ தந்தைதாய் உற்று, உருகி

     வந்து, சேயைத் தழுவல் ...... சிந்தியாதோ?

 

அந்தகா ரத்தில் இடி என்ப வாய் விட்டுவரும்

     அங்கி பார்வைப் பறையர் ...... மங்கிமாள,

 

அங்கைவேல் விட்டு அருளி, இந்த்ர லோகத்தின்மகிழ்

     அண்டர் ஏறக் கிருபை ...... கொண்டபாலா!

 

எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வைச் சடையர்

     எந்தைபாகத்து உறையும் ...... அந்தமாது

 

எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் சத்திபுகழ்

     எந்தை பூசித்துமகிழ் ...... தம்பிரானே.

 

 

பதவுரை

 

     அந்தகாரத்தில் இடி என்ப வாய் விட்டுவரும் அங்கி பார்வைப் பறையர் --- காரிருளில் இடி இடிப்பதுபோல் கூச்சலிட்டு, கண்களில் நெருப்புப் பொறி பறக்க வருகின் இழிகுலத்தவர் ஆன அரக்கர்கள்,

 

     மங்கி மாள --- (தமது வலி) ஒடுங்கி மாண்டு போக,

 

     அங்கை வேல் விட்டு அருளி --- அழகிய திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தை விடுத்து அருளி,

 

     இந்த்ர லோகத்தின் மகிழ் அண்டர் ஏறக் கிருபை

கொண்ட பாலா --- இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் மீண்டும் குடியேற அருள்புரிந்த குமாரக் கடவுளே!

 

     எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வைச் சடையர் --- என் உயிருக்கு உதவியவர் ஆகிய சந்திரனைத் தரித்துள்ள திருச்சடையை உடையவரும்,

 

     எந்தை பாகத்து உறையும் அந்தமாது --- எமது தந்தையும் ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய உமாதேவியும்,

 

     எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் --- எங்கும் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற கந்தனூர் என்னும் திருத்தலத்தில்

 

     சத்தி புகழ் எந்தை பூசித்து மகிழ் தம்பிரானே --- பராசக்தி புகழும் எமது தந்தையாகிய பரமசிவன் பூசித்து மகிழும் தனிப்பெருந்தலைவரே!

 

     விந்து பேதித்த வடிவங்களாய் எத்திசையும் --- விந்துவால் உண்டான வெவ்வேறான உருவங்களாய், எல்லாத் திசைகளிலும்,

 

     மின் சராசர்க் குலமும் வந்து உலாவி --- ஒளி பொருந்திய அசையும் (தாவர) அசையாப் (சங்கம) பொருள்களாய் இவ்வுலகில் தோன்றி இருந்து,

 

     விண்டு போய் விட்ட உடல் சிந்தைதான் உற்று அறியும் --- பின்பு உடலை விட்டு உயிர் பிரிந்து போனதை என் மனமானது ஆராய்ந்து அறியும்.

 

     மிஞ்ச நீ விட்ட வடிவங்களாலே --- மிகுதியாக தேவரீர் எனக்கு அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து

 

     வந்து --- இந்த உலகத்தில் வந்து,

 

     நாயில் கடையன் நொந்து --- நாயினும் கடைப்பட்டவனான (எல்லாப் பிறவிகளையும் பிறந்து எய்த்து) நான் மனம் நொந்து,

 

     ஞானப் பதவி வந்து தா இக்கணமெ என்று கூற --- ஞான நிலையை இந்தக் கணத்திலேயே வந்து அருள் புரிவாயாக என்று அடியேன் உம்மிடம் முறையிடவும்,

 

     மைந்தர் தாவிப் புகழ தந்தை தாய் உற்றுருகி வந்து --- குழந்தைகள் பெற்றோரிடம் அன்போடு தாவிச் சென்று புகழ்ந்தால், தந்தையும் தாயும் அம்மொழிகளைக் கேட்டு மனம் உருகி ஓடி வந்து,

 

     சேயைத் தழுவல் சிந்தியாதோ --- தமது குழந்தையைத் தழுவிக்கொள்ளுவது போன்றதொரு அருள் உமது திருவுள்ளத்தில் தோன்றாதா? (எனக்கு அருளுதல் கூடாதா? விரைந்து அருளுதல் வேண்டும்)

 

 

பொழிப்புரை

 

     காரிருளில் இடி இடிப்பதுபோல் கூச்சலிட்டு, கண்களில் நெருப்புப் பொறி பறக்க வரும் இழிகுலத்தவர் ஆன அரக்கர்கள் தமது வலி ஒடுங்கி மாண்டு போக, அழகிய திருக்கையில் விளங்கும் வேலாயுதத்தை விடுத்து அருளி, இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள் மீண்டும் குடியேற அருள்புரிந்த குமாரக் கடவுளே!

 

     என் உயிருக்கு உதவியவர் ஆகிய சந்திரனைத் தரித்துள்ள திருச்சடையை உடையவரும், எமது தந்தையும் ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய உமாதேவியும், எங்கும் நிறைந்து விளங்கும் ஒப்பற்ற கந்தனூர் என்னும் திருத்தலத்தில் பராசக்தி புகழும் எமது தந்தையாகிய பரமசிவன் பூசித்து மகிழும் தனிப்பெருந்தலைவரே!

 

     விந்துவால் உண்டான வெவ்வேறான உருவங்களாய், எல்லாத் திசைகளிலும், ஒளி பொருந்திய அசையும் (தாவர) அசையாப் (சங்கம) பொருள்களாய் இவ்வுலகில் தோன்றி இருந்து, பின்பு உடலை விட்டு உயிர் பிரிந்து போனதை என் மனமானது ஆராய்ந்து அறியும். மிகுதியாக தேவரீர் எனக்கு அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து இந்த உலகத்தில் வந்து, நாயினும் கடைப்பட்டவனான (எல்லாப் பிறவிகளையும் பிறந்து எய்த்த) நான் மனம் நொந்து, ஞான நிலையை இந்தக் கணத்திலேயே வந்து அருள் புரிவாயாக என்று அடியேன் உம்மிடம் முறையிடவும், குழந்தைகள் பெற்றோரிடம் அன்போடு தாவிச் சென்று புகழ்ந்தால், தந்தையும் தாயும் அம்மொழிகளைக் கேட்டு மனம் உருகி ஓடி வந்து,  தமது குழந்தையைத் தழுவிக்கொள்ளுவது போன்றதொரு அருள் உமது திருவுள்ளத்தில் தோன்றாதா? (எனக்கு அருளுதல் கூடாதா? விரைந்து அருளுதல் வேண்டும்)

 

விரிவுரை

 

விந்து பேதித்த வடிவங்களாய் ---

 

ஆணினிடத்து உண்டான விந்துவால் வெவ்வேறான வடிவங்களில் உயிர்களானவை உடம்பை எடுத்து வருகின்றன.

 

எத்திசையும் மின் சராசர்க் குலமும் வந்து உலாவி ---

 

சராசரம் ---  சரம் --- அசைகின்ற. அசரம் --- அசையாத.

 

அசையா, இயங்காத வடிவங்களைத் தாவரம் என்பர். இழங்குகின்ற வடிவங்களை சங்கமம் என்பர்.

 

விண்டு போய் விட்ட உடல் சிந்தைதான் உற்று அறியும் ---

 

விள்ளுதல் ---  மலர்தல், உலர்தல், வெடித்தல், நீங்குதல்.

 

விண்டு போதல் --- கழிந்து போதல்.

 

எத்தனை எத்தனையோ வடிவங்களை எடுத்து வந்தது இந்த உயிர். அத்தனையும் காலக் கிரமத்தில் அழிந்து போயின.

 

நாயில் கடையன் ---

 

         நாயில் கடையேன் என்று வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் உள்ளோர் அனைவருமே கூறிச் சென்றுள்ளனர். அதனையே அடிகளார் இங்கும் எடுத்து ஓதினார். "நாயில் கடையான பாவியேனை" என்னும் தொடர் போலத் திருவாசகத்தில் "நாயனையேன்", "நாயில் கடையேன்" என வரும் தொடர்கள் ஆறுபத்தேழு இடங்களில் வருகின்றன.  இங்ஙனம் ஆளுடைய அடிகள் பல இடங்களில் நாயேன், நாயனையேன் என்றும் நாயினும் கடையேன் என்றும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட பொருள்களை உடைய தொடர்களைக் கூறுவது ஏன்?  "நாயில் கடையாம் நாயேனை" என மணிவாசகப் பெருமான் திருவாசகம் குழைத்தபத்தில் கூறியருளியதற்குப் பொருள் யாது என அறிந்துகொள்ளுதல் நலம்.

 

         பெரியோர்கள் மக்களிடத்தில் பெரும்பாலும் இயல்பாய் அமைந்து கிடக்கும் இழிகுணங்களைத் தம்பால் ஏற்றிக் கூறுவர். அதனால், நாயினும் கடையேன் என்று கூறுங்கால் நாயினிடத்தில் இயல்பாக அமைந்து கிடக்கும் குணங்கள் மக்களிடத்தில் அங்ஙனம் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவை எவை என ஆராய்வோம்.

 

1.    தன் தலைவனைப் போலவே பல்லாயிர மக்கள், உடை முதலியவற்றால் புனைந்து கொண்டு வரினும், சிறிதும் ஐயுறாது அவனை அறிந்து கொள்ளும் இயல்பு உடைமை.

 

2.    ஒரு பிடி சோறு ஒரு காலத்தில் ஒருமுறை ஒருவன் உதவினானாயின், அவனைத் தன் வாழ்நாள் உள்ளவரையும் நினைவில் பதித்து வைத்து இருத்தலுடன், அவனை எங்கேனும் காணின், தான் எத்துணைத் துன்ப நிலையில் இருப்பினும், அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது, தன் வாலைக் குழைத்து, இன்முகம் காட்டல் முதலியவற்றால் தனது நன்றி அறிவை அவனுக்குக் காட்டுதல்.

 

3.    தன் தலைவன் ஒரு பணியின்கண் தன்னை ஏவினான் ஆயின், அப்பணி தன்னால் செய்தற்கு அரிதாயினும், அதில் செல்லின் தன் உயிர்க்கு ஈறு நேரும் ஆயினும், அவற்றைச் சிறிதும் பொருட்படுத்தாமல் அப்பணியில் செல்லுதல்.

 

இம் மூன்று பண்புகளும் நாயின்கண் இருத்தல் கண்கூடு.

 

     இனி, இப்பண்புகள் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

 

         மக்களில் சிலர் தலைவன் ஒருவன் உளன் என்னும் உணர்ச்சியே இன்றித் திரிகின்றனர். சிலர் தாமே தலைவர் எனத் தருக்குவர். சிலர் பொருள் முதலியவற்றால் சிறிது சிறந்த ஒருசில மக்களையே தலைவராகக் கருதித் தடுமாறுகின்றனர். சிலர் இறைமைக் குணங்கள் இலர் ஆயினாரைத் தலைவர் எனத் திரிபு உணர்ச்சி கொண்டு திரிகின்றனர். சிலர் 'தலைவன் ஒருவன் இருக்கலாம், ஆனால் அவன் இவன் தான் எனத் துணிந்து கூற இயலாது' என்பர். மற்றொரு சிலர் 'இன்ன இன்ன இலக்கணம் உடையவன் தலைவன் ஆவான்' என அறிந்து வைத்தும்,  "ஆர்ஆர் எனக்கு என்ன போதித்தும் என்ன? என் அறிவினை மயக்க வசமோ?" என்னும் திண்மை இலராய் மதிநுட்பம் நூலோடு அமைந்து, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொல்வன்மை உடையவராய ஒருவர் வந்து, "நீவிர் கருதும் இலக்கணம் உடையவன் தலைவன் அல்லன்" என வேறு சில இலக்கணங்களைக் கூறினாராயின், மயங்கி விடுகின்றனர். இங்ஙனம், மக்கள் தம் தலைவனை உள்ளவாறு உணர்ந்து கொள்ளாது தலைதடுமாறுகின்றார்கள். ஆகலின், தன் தலைவனை நன்கு உணர்ந்து கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.

 

         இனி, இருட்டு அறையில் குருட்டுச் சேய்போல் கிடந்து உழன்ற உயிர்களைத் தன் பெரும் கருணையால் எடுத்து, உடல், கரணம், உலகம் முதலியவற்றை உதவி, அவ் உயிர்கள் நிலைத்தல் பொருட்டு ஒன்றாயும், பொருள்களை அறியும்படி அறிவித்தல் பொருட்டு வேறாயும், அங்ஙனம் அறியினும் அறிந்தவாறே நுகரும் சுதந்தரம் அவைகட்கு இன்மையினால் அவற்றை நுகர்வித்தல் பொருட்டு உடனாயும் நின்று அருளி, ஒவ்வொரு மாத்திரையும் உண்டி முதலியவற்றால் ஓம்பி அருளும் தலைவனது கைம்மாறு இல்லாத நன்றியை, ஏனைய உயிர்களிலும் திறந்து பாராட்டுதற்கு உரியவர் பகுத்தறிவு ஆகிய மன உணர்வைப் பெற்ற மக்களே அன்றோ. அவர்களில் பெரும்பகுதியினர் அங்ஙனம் நினைக்கின்றார்கள் இல்லை. ஆதலின், அவர்கள் ஒரு பொழுது உணவு கொடுத்தவனைத் தன் உயிர் உள்ள அளவும் நினைத்துப் பாராட்டும் நாயினும் கடையர் ஆயினர்.

 

         இனி, அவ் இறைவன் தானே உயிர்கள் தன்னை அறிந்து அடைய ஒட்டாமல் மறைத்து நிற்கும் மலத்தின் இலக்கணங்கள் இவை எனவும், உயிர்களின் இயல்கள் இவை எனவும், தனது தன்மை இது எனவும், நமக்கு அறிவு நூல்கள் வாயிலாக விளக்கி அருளினான். இவ்வாற்றான், இன்ன செயல்களை மேற்கொள்ளக் கடவீர் எனத் தலைவன் பணித்தும், அச் செயல்கள் மக்களால் செய்யக் கூடியனவுமாய் இருந்தும், அவைகளை மேற்கொள்ளாமல், பிற துறைகளில் சென்று உழலும் மக்கள், தன்னால் இயலாதது ஒன்றைத் தன் தலைவன் பணித்தாலும், அதனை விரைந்து மேற்கொள்ளும் நாயினும் கடையர் ஆயினர்.

 

         நான்காவதாக, நாயினிடத்துப் பிறிதொரு அரிய குணம் காணப்படுகின்றது. அதாவது, தன் தலைவன் நேரில் நின்று யாதொரு காரணமும் இன்றி, தனக்கு எத்துணைக் கொடிய இன்னலை விளைப்பினும் அதனை ஒரு பொருட்படுத்தாது, அத்துன்பம் தன் உடலின் கண்ணதாய் இருக்கும் போதும், தன் வாலைக் குழைத்து அவனுக்குத் தன் நன்றி அறிவைக் காட்டுதல் ஆகும். இவ் உண்மையை,

 

யானை அனையவர் நண்பு ஒரீஇ, நாய் அனையார்

கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் -- யானை

அறிந்து அறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல்

மெய்யதா வால் குழைக்கும் நாய்

 

என்னும் நாலடியார்ச் செய்யுளும் நன்கு விளக்கியது.

 

         இனி, இக்குணம் மக்களிடத்தில் எம்மட்டில் காணப்படுகின்றது என்பதைப் பார்ப்போம். கடவுள் நம்பிக்கை உடையராய்ச் சிறிது அன்பினையும் மேற்கொண்ட மக்களில் பெரும்பாலோர் தமக்குத் துன்பம் நேர்ந்துழி, அது தாம் செய்த தீவினை காரணமாக வந்தது என்று அறிந்து வைத்தும், பாழும் கடவுளே! நீதியற்ற கடவுளே! எம்மை இங்ஙனம் துன்புறுத்தல் தகுமா? நின்கண் கருணை இல்லையா? எனக் கதறிப் பதறுவதுடன், அந் நம்பிக்கையையும் இழந்து கடவுள் இல்லை என்னும் கொள்கையை உடையர் ஆதலைக் காண்கின்றோம்.  இதனாலும் மக்கள் நாயினும் கடையர் ஆகின்றனர்.

 

         ஐந்தாவதாக, நாயினிடம், செயலுக்குக் காரணம் காணும் இயல்பு உண்டு. மக்களில் பெரும்பாலோரிடம் அது இல்லை.  இல்லாதது மட்டுமில்லை. திரிபாகக் காணுதலையும் அறிகின்றோம். எங்ஙனம் எனில், ஒரு நாயை ஓர் இளைஞன் மறைவில் நின்று கல்லால் அடிக்கிறான். தன்மீது பட்டதும், தனக்குத் துன்பம் செய்ததும் கல். ஆனால், எந்த நாயும் அந்தக் கல்லைக் கடிப்பது இல்லை. அடித்தவனைக் கண்டால் அவன் மேலே வீழ்ந்து கடிக்கும். இன்றேல் வாளா போய்விடும்.

 

         மக்களுள் யாருக்கேனும் ஒரு துன்பம் வந்தால், அதற்கு மூல காரணம் தாம் முன் செய்த வினை என்று அறியாதது மட்டுமல்ல. அவ்வினையினால் செலுத்தப்பட்டுத் துன்பம் செய்தவர்களிடம் பகைமை பூண்டு, அவர்களைத் துன்புறுத்தக் காண்கின்றோம். 

 

         எனவே, நாயின் மேலே பட்ட கல்லைப் போன்று, துன்புறுத்தியவர்களே காரணமாய் உள்ளவர் என்று தவறாகக் கருதுகின்ற மக்களை விட, உண்மையான காரணத்தை அறிந்து செயல்படுகின்ற நாய் எத்துணைச் சிறந்தது என்பதை அறிக. மக்களின் அத் தவறான செயலைக் குறித்துத் தான், "எய்தவன் இருக்க அம்பை நோவது" என்ற பழமொழியும் எழுந்து வழங்குவது ஆயிற்று.

 

         மேற்காட்டிய பல நற்குணங்களை உடைய நாயினிடத்து, ஒரு இழிகுணம் காணப்படுகின்றது. அதாவது, தன் வயிறு நிறைய உண்டு, தேக்கெறிந்து கக்கிய உணவைச் சிறிதும் அருவருப்பு இல்லாமல் புதியதாகவே நினைந்து உண்ணுதல்.

 

         மக்களும் தாம் நுகர்ந்த பொருள்களையே மீண்டும் மீண்டும் சலிப்பும் அருவருப்பும் இல்லாமல் நுகர்தல் கண்கூடாகக் காணப்படுவதாகும்.

 

         நாய்க்கு உள்ள மற்றொரு இழிகுணம் குறிக்கோள் இல்லாது அலைதல். அது மக்களிடத்தும் காணப்படுவது. இத் தன்மையால் மக்கள் நாய்க்கு ஒப்பிடப்படுகின்றார்கள்.

 

     இன்றைக்குச் சற்று ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், எனது குருவுக்கு, குருவான பெரியவர், திருக்கோயில் ஆசிரியர், அமரர் ந. ரா. முருகவேள் அவர்கள், சைதைத் திருக் காரணீசுவரர் திருக்கோயிலில், வாரந்தோறும் வகுப்பு நடத்தி வந்தார். மாலை 6.30 முதல் இரண்டு மணிநேர சொற்பொழிவு. ஒரு நாள் மாலையில் வகுப்பினை முடித்துப் புறப்பட்டார். அவரை, அவருடைய வீடு வரை சென்று வழிவிட்டு வருகின்ற அந்தப் பணியை நான் மேற்கொண்டிருந்தேன். அன்று அமாவாசை நாள். நாங்கள் புறப்பட்ட சில நிமிடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. எங்கும் ஒரே கும்மிருட்டு. வழக்கமாக, எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள செய்தியைச் சொல்லிக் கொண்டுதான் அவர் நடப்பார். அன்றும் அவ்வாறே சொல்லிக் கொண்டு சென்றார். இடையில் நாய்கள் சில எங்களைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே இருந்தன. நான் நாய்களை அதட்டுவேன். "வேண்டாம், அமைதியாக என்னோடு வா" என்றார். நானும் அவ்வாறே செய்தேன். நாய்களின் குரைப்பு மட்டும் ஓயவில்லை.

 

     வீட்டின் வாயிலில் சென்று உள்ளே நுழையும் முன், "போகும்போது சில சிறிய கற்களைப் பொறுக்கிக் கையில் வைத்துக் கொள். நாய் குரைத்தால், கல்லோடு கல்லைத் தட்டி ஓசையை எழுப்பு. ஒரு கல்லை அதன் மீது எறிவது போல் பாவனை காட்டு, ஒன்றும் செய்யாது, பத்திரமாகப் போ. நாளை என்னைச் சந்திக்கவேண்டும்" என்று சொல்லி அனுப்பினார்.

 

     மறுநாள் அவரைச் சந்தித்தேன். "நேற்று பத்திரமாகப் போனாயா?" என்றார். நான் அவர் சொன்னபடி செய்ததால் ஊறு ஏதும் இல்லை என்று சொன்னேன். ஒர் ஐந்து நிமிடத்தில் நாயின் குணங்களைப் பற்றி, நான்கைந்து பாடல்களைச் சொல்லி எனக்கு விளக்கினார். கல்விக் கடலான அவர், பழகுவதில் குழந்தையைப் போன்றவர். அவர் ஒருமுறை ஒரு செய்தியைச் சொன்னால், அது அப்படியே மனதில் பதிந்துவிடும். அப்படிப்பட்ட மகான் அவர். அவர் அன்று காட்டிய எளிமையை அவ்வபோது நான் நினைத்துப் பார்ப்பேன். அவர் அன்று சொன்னதை,  இப்போது சற்று விளக்கமாகத் தருகின்றேன்.

 

         அருளாளர்கள், "நாயினும் கடையேன்" என்று தம்மைப் பாடும்போதெல்லாம் நாய்க்கு உரிய நல்ல குணங்கள் தம்மிடமும் மக்களிடமும் இல்லாத நிலையைக் காட்டித் தான், "நாயில் கடையேன், நாயினும் இழிந்தவன்" என்றும் பாடினார்கள்.  நாயை அவர்கள் இழித்து உரைக்கவில்லை.

 

         அதே சமயத்தில், நாய்க்கு உள்ள இழிந்த குணங்கள் தம்மிடமும், மக்களிடமும் உள்ளதைக் காட்டி, "நாயைப் போன்றவன்", "நாயனையேன்", "நாயேன்" என்றெல்லாம் பாடி வைத்தார்கள்.

 

         இந்த உண்மையை உணர்ந்து கொள்வது அறிவு உடைமை. எந்தப் பொருளில் பாடினார்கள் என்பதைக் கொஞ்சம் உணர்ந்தாலே இந்த உண்மை நன்கு விளங்கும்.

        

         இன்னொன்றும் இங்கே சொல்லியாக வேண்டும். நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு மலம் தின்னக் குப்பைமேட்டை நாடிச் செல்லும் என்ற வழக்கு மொழியை நாம் எல்லோரும் அறிவோம்.

 

பின்வரும் நாலடியார் பாடல்கள் இதனைத் தெளிவுபடுத்தும்....

 

"அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்கும்கால்

செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.

கவ்வித் தோல் தின்னும் குணுங்கர் நாய், பால் சோற்றின்

செவ்விய கொளல் தேற்றாதாங்கு".

 

இதன் பொருள் ---

 

     இறைச்சியை எடுத்துக் கொண்டு, வீசி எறியப்பட்ட வெறும் தோலைக் கவ்விக் கடித்துத் தின்னும் நாய்க்கு, பால் சோற்றினைக் கொடுத்தால் அதன் அருமையை அது உணராது. அதுபோல, அழுக்காறு முதலிய மனமாசுகள் இல்லாதவர் அறநெறிகளை அறிவுறுத்தும் போது நல்லறிவில்லாப் புல்லறிவாளர் அதனைக் காது கொடுத்தும் கேட்கமாட்டார்.

 

 

"பொற்கலத்து ஊட்டிப் புறம்தரினும் நாய் பிறர்

எச்சிற்கு இமையாது பார்த்து இருக்கும், --- அச்சீர்

பெருமை உடைத்தாக் கொள்ளினும், கீழ் செய்யும்

கருமங்கள் வேறு படும்".

 

இதன் பொருள் ---

 

     பொன்னால் செய்த பாத்திரத்தில், புலிநகம் போன்ற வெண்மையான சோற்றை ஊட்டிப் பாராட்டினாலும், நாயானது பிறர் எறியும் எச்சில் இலைச் சோற்றுக்குக் கண் இமையாமல் விழித்துக் கொண்டு காத்துக் கிடக்கும். அதுபோல, கீழ்மக்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும், அவர்கள் குணமும் செயலும் நல்ல வழியில் செல்லாது, தீ வழியையே நாடும்.

 

     நற்குணம் இல்லாதவர் பேயினது தன்மையை உடையவர் ஆவார். அவரிடத்து நல்லது சொன்னாலும், அவர் கொண்ட பேயின் குணமே மிகுந்து இருக்கும். நல்லனவற்றின் அருமையை நாய் உணராது. ஒரு சந்திப் பானையின் அருமையை நாய் அறியாது, தனது வாயை வைக்கும் என்பதால், அதனைத் தனியே வைத்திருப்பர் என்னும் பொருள்பட, "தண்டதலையார் சதகம்" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

 

தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்

     நெறிநாதர் தாமே தந்தை

ஆய் அறிவார் எமது அருமை! பரவையிடம்

     தூதுசென்றது அறிந்தி டாரோ?

பேய் அறிவார் முழுமூடர்! தமிழ்அருமை

     அறிவாரோ? பேசு வாரோ?

நாய்அறியாது ஒருசந்திச் சட்டிப்பா

     னையின் அந்த நியாயம் தானே!

 

இதன் பொருள் ---

 

     மகள் அருமை தாய் அறிவாள் --- தனது மகளின் அருமையை ஈன்ற தாயே அறிவாள், எமது அருமை தண்டலை நீள்நெறி நாதர் தாமே தந்தை ஆய் அறிவார் --- தனக்கு அடியவரான எங்கள் அருமையைத் திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள  நீள்நெறிநாதரே தந்தையாக இருந்து அறிவார்,  பரவையிடம் தூது சென்றது அறிந்திடாரோ --- சிவபெருமான் தனது அடியவரான சுந்தரர் வேண்ட, பரவை நாச்சியாரிடம் தூது  நடந்ததை உலகத்தவர் அறியமாட்டாரோ?, முழு மூடர் பேய் அறிவார் --- முற்றிலும் அறிவு இல்லாத பேதையர் பேய்த் தன்மையையே அறிவார்,  தமிழ் அருமை அறிவாரோ --- தமிழின் அருமையை அவர் உணர்வாரோ?, பேசுவாரோ --- தமிழைப் பற்றி ஏதாவது அவர் பேசுவாரோ?   ஒரு சந்திச் சட்டிப் பானையின் அந்த நியாயம் நாய் அறியாது --- ஒருபோதுக்குச் சமைக்கும் சட்டிப்பானையின் உயர்வை நாய் அறியாது.

 

     தான் உணர்ந்ததையே அறிந்து இருக்கும் பேய்த் தன்மை கொண்டவர்,  தாம் கொண்டதையே அறிவார். அவருக்குத் தமிழின் அருமை தெரியாது. தெரியாததால் அவர் தமிழைப் பேசவும் மாட்டார். "கொடிறும் பேதையும் கொண்டது விடாது" என்பார் மசிவாசகப் பெருமான்.

 

     ஒரு சந்திப் பானை என்பது முற்காலத்தில் நோன்புக்குச் சமைப்பதற்கு என்று, தனியே வைத்திருக்கும் சமையல் பானை. இதற்கு ஒரு சந்திப் பானை அல்லது ஒரு சந்திச் சட்டி என்று பெயர். நோன்பு முடிந்த பிறகு, அந்தப் பானையை மற்றப் பானைகளோடு வைக்காமல், தனியாகப் பரண் மீது வைத்து விடுவர். அந்தப் பானையின் அருமை அதை வைத்திருப்பவருக்குத் தான் தெரியும்.

 

     இந்தப் பாடலில் பொதிந்துள்ள நுட்பம்.....

 

     நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத் தான் தெரியும். அது எந்தப் பானையிலும் வாயை வைக்கும். அதைப் போலவே, மூடர்கள் எல்லோரையும் ஒரு தன்மையராகவே கருதுவர். இதைக் காட்டத்தான், ‘நாய் அறியுமோ ஒரு சந்திப் பானையை?'  என்றும், பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்றும் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கமாக இந்தப் பாடல் அமைந்தது. ஒருசந்தி - ஒருபோது.

 

"யானை சேனை தேர்ப்பரி யாவும் அணியாய்

யமன்வரும் போது துணையாமோ அறிவாய்,

ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்குப் புத்தி

நாடி வரும்படி நீ நின்று ஆடுபாம்பே".

 

என்பது பாடம்பாட்டி சித்தர் பாடல்....

 

ஞானப் பதவி வந்து தா இக்கணமெ என்று கூற ---

 

ஞானம், உண்மைஞானமாகிய மெய்ஞ்ஞானத்தைக் குறித்தது. அந்த நிலையை அடைவது பதவி எனப்பட்டது.

 

இக் கணம் என்றது இந்தப் பிறிவியிலேயே என்பதைக் குறிக்கும்.

இனி ஒரு பிறவியை எடுத்து உழலாதவண்ணம், இந்தப் பிறவியிலேயே உண்மை நிலையை அடையவேண்டும்.

 

எந்தத் திகையினும், மலையினும், உவரியின்

     எந்தப் படியினும், முகடினும் உள, பல

     எந்தச் சடலமும் உயிர்இயை பிறவியின் .....உழலாதே

இந்தச் சடமுடன் உயிர் நிலைபெற, நளி-

     னம் பொன்கழல் இணைகளில் மருமலர் கொடு

     என் சித்தமும் மனம் உருகி நல் சுருதியின்..முறையோடே

 

சந்தித்து, அரஹர சிவசிவ சரண்என

     கும்பிட்டு, ணைஅடி அவை என தலைமிசை

      தங்க, புளகிதம் எழ, இருவிழி புனல் ...... குதிபாய,

சம்பைக் கொடிஇடை விபுதையின் அழகுமுன்

     அந்தத் திருநடம் இடு சரண் அழகு உற

     சந்தச் சபைதனில் எனது உளம் உருகவும் ..வருவாயே.

 

எனச் சுவாமிமலைத் திருப்புகழில் அடிகளார் வேண்டியுள்ளது காண்க.

 

மைந்தர் தாவிப் புகழ தந்தை தாய் உற்றுருகி வந்து, சேயைத் தழுவல் சிந்தியாதோ ---

 

தாவி --- ஓடிவந்து.

 

உலகில் தாய் தந்தையர் தமது குழந்தைகளின் மழலைச் சொல் கேட்டு உருகி ஓடிவந்து எடுத்து அணைத்துக் கொள்ளுவர். உயிருக்குத் தாயும் தந்தையும் ஆக உள்ள முருகப் பெருமான் திருவருளை வேண்டிய உலகியலை எடுத்துக் காட்டி முறையிடுகின்றார் அடிகளார்.

 

அந்தகாரத்தில் இடி என்ப வாய் விட்டுவரும் அங்கி பார்வைப் பறையர் ---

 

அந்தகாரம் --- நிறைந்த இருள்.

 

அங்கி பார்வை --- சினம் மிகுந்த பார்வை.

 

பறையர் --- இழிகுலத்தவர்.

 

 

எந்தன் ஆவிக்கு உதவு சந்த்ர சேர்வைச் சடையர் ---

 

 

கரி நெடும் புலி தோல் உடையார், னை

     அடிமை கொண்ட சுவாமி, சதாசிவ

     கடவுள், ந்தையர் பாகம் விடா உமை ......அருள்பாலா!

 

எனப் பந்தணைநல்லூர்த் திருப்புகழிலும்,

 

"கமழ் மா இதழ் சடையார்,

அடியேன் துயர் தீர்ந்திட, வெண்

     தழல் மாபொடி அருள்வோர்"

 

எனத் திருவருணைத் திருப்புகழிலும் அடிகளார் கூறி அருளியபடி காண்க.

 

எந்தை பாகத்து உறையும் அந்தமாது எங்குமாய் நிற்கும் ஒரு கந்தனூர் ---

 

தன்னை ஆட்கொண்டு அருளிய தந்தை ஆகிய சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய உமாதேவியும் எழுந்தருளி அருளி பாலிக்கும் திருத்தலம் கந்தனூர். இது புதுக்கோட்டைக்குத் தெற்கில் ஐந்து கல் தொலைவில் உள்ளது.

 

கருத்துரை

 

முருகா! இப்பிறவியிலேயே அடியேன் ஞானத்தைப் பெற்று உய்ய அருள்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...