அறிவுடைமையே பெருஞ்செல்வம்

 

 

அறிவு உடைமையே அருஞ்செல்வம்

---

 

     திருக்குறளில் "புல்லறிவாண்மை" என்னும் ஓர் அதிகாரம். புல்லறிவாண்மை என்பது, அறிவில் சிறுமையையே பெருமையாகக் கருதி நடந்துகொள்ளுதல் ஆகும். அதாவது, சிற்றறிவினனாக இருந்துகொண்டே, தன்னைப் பேரறிவு உடையவனாக மதித்து, உயர்ந்தோர் சொல்லும் உறுதிக் சொல்லை மனத்துள் கொள்ளாமை ஆகும்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவனுக்கு வறுமை பலவற்றுள்ளும் மிகுந்த வறுமையாவது, நல்லறிவு இல்லாமையே ஆகும். பொருள் இன்மையை உலகத்தார் வறுமையாகக் கொள்ளமாட்டார்" என்கின்றார் நாயனார்.

 

     அறிவுடைய ஒருவன் தனக்கு வறுமை வந்து சேர்ந்த காலத்தில், தனக்கு உண்டான வறுமை காரணமாகத் தீய வழியில் செல்லாது, இம்மையில் புகழையும், மறுமையில் போகத்தையும் அடைதல் கூடும். எனவே, உயர்ந்தோர் அவனது வறுமை நிலையை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார். ஆனால், அற்ப அறிவினர் என்னும் புல்லறிவாளர், செல்வத்தைப் பெற்ற காலத்தில், தமது அற்ப அறிவால் நன்னெறியில் செல்லாது, தீய நெறியில் ஒழுகி, இம்மையில் புகழையும், மறுமையில் போகத்தையும் ஒருங்கே இழந்து நிற்பார்கள்.

 

     எனவே, நல்லறிவு ஒன்றே எல்லாப் பொருளும் உடைய செல்வம் உடைமை ஆகும் என்பதை அறிவுறுத்த,

 

அறிவு இன்மை இன்மையுள் இன்மை, பிறிது இன்மை

இன்மையா வையாது உலகு.             

 

என்னும் திருக்குறளை அருளிச் செய்தார் நாயனார்.

 

     பொருட்செல்வம் மதிக்கத் தக்க பெரிய செல்வம் அல்ல. பொருள் ஆகிய செல்வம் கீழ்மக்களிடமும் உள்ளது. "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்று நாயனார் பிறிதொரு திருக்குறளில் அருளியது அறிக.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதைகை காணலாம்.

 

நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால்

பெண்அவாய் ஆண்இழந்த பேடி அணியாளோ,

கண்அவாத் தக்க கலம்.              --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     எண்ணுங்கால் --- ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை --- ஒருவனுக்கு நுட்ப அறிவில்லாமையே வறுமை ஆகும்; அஃது உடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் --- அந் நுட்ப அறிவினை உடையவனாய் இருத்தலே அவனுக்கு மிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் --- மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கிய பேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளுதல் உண்டு அன்றோ? அதனை ஒத்ததே அறிவிலார் ஏனைச் செல்வம் உடையராய் இருந்து மகிழ்தல் ஆகும்.

 

         நுண்ணுணர்வு இல்லாமை, ஏனைய எவை இருப்பினும் இல்லாமையையே தரும்.

 

         அணிகலன்களை ஒரு பெண் ஆனவள் அணிந்து கொண்டால் பார்ப்பவர் மகிழ்வர். பெண் அணிதற்குரிய அணிகலன்களைப் பேடியும் அணிந்து வீண் மகிழ்வு கொள்ளுதல் இகழ்ச்சிக்கு உரியது. நுண்ணுணர்வினர் அடைந்து பயன் பெறுதற்குரிய செல்வத்தை, அது இல்லாதார் பெற்று மகிழ்வது பயனற்றது.

 

 

அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்,

பிறிதினால் மாண்டது எவனாம்? - பொறியின்

மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன

அணி எல்லாம் ஆடையின் பின்.    --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பொறியின் --- சாணையால் கழுவுதலை உடைய, மணி பொன்னும் --- இரத்தினாபரணமும் பொன்னாபரணமும், சாந்தமும் மாலையும் இன்ன அணி எல்லாம் --- சந்தனக் கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும், ஆடையின் பின் --- அழகுறச் செய்வதில் உடையின் பின்னே வைத்து எண்ணத் தக்கனவாம். ஆதலால், அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் --- அறிவினாலாகிய பெருமை ஒரு சிறிதும் பெறாத ஒருவன், பிறிதினால் மாண்டது எவனாம் --- செல்வத்தைப் பெற்றதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்?

 

         செல்வம் உடையோரினும், அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.

 

         ஆடை உடுத்தாத ஒருவனை அணிகலன்கள் மட்டுமே அழகுறச் செய்யாமை போல, அறிவில்லானைச் செல்வம் பெருமை உறச் செய்யாது என்பதாம்.

 


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...