தனிமை கழிய அறிவு தரவேணும்

 


தனிமை கழிய அறிவு தரவேணும்

-----

 

            உலகில் மிக கொடுமையாகத் தோன்றுவது தனிமை. தனிமைப் படுத்தப்படுகிறவர்களின் உடலில் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.  அதிச்சியூட்டும் உண்மை என்னவென்றால்உடல் பருமன் முதலியவற்றால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை விடதனிமையாய் இருப்பவர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் என்று சொல்லப்படுகிறது. தனியாக இருக்கும் மனிதர்கள் வாதத்தால் அதிகமாகத் துன்புறுகின்றனர். பாதிக்கப்படுகின்றனர். சமூகத்தில் இருந்து விலகி இருக்கும் இவர்களுக்கு விரைவான இறப்பும் நேரிடுகிறது.

 

            தனிமை என்பது தனிமையாதல் அல்லது தனிமைப்படுத்திக் கொள்ளுதல் அல்லது தனிமைப்படுத்தப்படுதல் ஆகும். இது விரும்பத்தக்கதாக இருக்கலாம். தனிமைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. இந்த இரு வார்த்தைகள் முறையேமகிழ்ச்சி மற்றும் வலி எனபடும்.

 

            மோசமான உறவுகளிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளத் தனிமை தேவைப்படும்.  இனைறய காலச் சூழலில்கொரோனா போன்ற தொற்றுநோய்களில் இருந்து காத்துக் கொள்ளவும் தனிமை தேவை. 

 

            முதுமைக் காலத்தில் நாம் விரும்பிய ஒவ்வொன்றும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து விலகிவிடும். "இல்லும் இளையோரும் மெல்ல அயலாக" என்பார் அருணகிரிநாதர். அதுவும் மரணபக்குவம் வருகின்ற நாள் நெருங்க நெருங்கயாரும் தம்மை நெருங்கமாட்டார்கள். "வெம்பும் உயிருக்கு ஓர் உறவாய் வேளை நமனும் வருவானேல்தம்பி தமையர் துணை ஆமோதனயர் மனைவி வருவாரோ?" என்பார் வள்ளல் பெருமான்.

 

            "தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே எடுத்துக் கொண்டால் அது இனிக்கும்மற்றவர்கள் நமக்குக் கொடுத்தால் அது கசக்கும்." என்ற வரிகளை அண்மையில் படிக்க நேர்ந்தது. அதன் விளைவே இந்த இடுகை.

 

            தனிமையைத் தீர்த்துக் கொள்வதற்கு ஒரு தனித்துணை உண்டு. அது இறைவன்தான் என்று கண்டுவேண்டினர் நமது அருளாளர்கள். புறத்தே உள்ள பொன் பொருள் உறவுகள் போன்றவை நம்மை விட்டுச் சிறிது சிறிதாக விலகுவதால்புறத்தனிமை உண்டாகின்றது. அன்பு காட்டியவர் யாரும் இல்லாது போய்அன்பு காட்டுவார் யாரும் இல்லாத நிலையில்புறத்தனிமையை நினைத்தேவருந்தி வருந்திஉள்ளத் தனிமையும் கூடி வாட்டுகின்றது. இந்தபுறத்தனிமைஅகத்தனிமை ஆகிய இரு தனிமைகளும் மனித மனத்தை வெகுவாக வாட்டுகின்றன. வாட்டுகின்ற கொடுமையான தனிமையைப் போக்குவதற்கு உள்ள ஒப்பற்ற துணை இறைவன் திருவடிகளே ஆகும். எனவே, "என்னை உனது திருவடிகளில் சேர்த்துஎனது தனிமையைத் தீர்த்து அருள்வாயாக" என்று மணிவாசகப் பெருமான் பின்வருமாறு வேண்டுகின்றார்.

 

"ஒருவனே போற்றி! ஒப்பில்

            அப்பனே போற்றி! வானோர்

குருவனே போற்றி! எங்கள்

            கோமளக் கொழுந்து போற்றி!

"வருக" என்று என்னை நின்பால்

            வாங்கிட வேண்டும் போற்றி!

தருகநின் பாதம் போற்றி!

            தமியனேன் தனிமை தீர்த்தே".       --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

            தனி முதல்வனே! உனக்கு வணக்கம். ஒப்பு இல்லாத உயிர்த் தந்தையே! உனக்கு வணக்கம். தேவர்களுக்குக் குருவானவனே! உனக்கு வணக்கம். எங்களுடைய அழகிய சோதியே! உனக்கு வணக்கம்! வருக என்று உன்னிடத்து என்னை அழைத்து ஏற்றுக்கொள்ள வேண்டும்உனக்கு வணக்கம். துணை ஏதும் இல்லாமல் நான் அனுபவிக்கும் (தாவிப் படரக் கொழுகொம்பு இல்லாமல் தவிக்கின்ற பாவியின் தனி மனமானது அனுபவித்து வரும் கொடுமையான) தனிமையை நீக்கிஉன்னுடைய திருவடித் துணையைத் தந்து அருளவேண்டும். உனக்கு வணக்கம்.

 

            தனிமைப்படுத்தப்பட்ட மனமானதுதாவிப் படர ஒரு கொழுகொம்பு இல்லாத கொடியினைப் போலத் தவித்துத் துன்புறும். எனவேதிருவடித் தாமரையில் சேர்த்துக் காத்து அருளவேண்டும் என்கின்றார் அருணகிரிநாதர்.

 

"காவிக் கமலக் கழலுடன் சேர்த்து என்னைக் காத்தருளாய்!

தூவிக் குலமயில் வாகனனே! துணை ஏதும் இன்றித்

தாவிப்படரக் கொழுகொம்பு இலாத தனிக்கொடி போல்

பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே".     --- கந்தர் அலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

            தேவரீரின் சிவந்த தாமரை மலர் போன்றவையும் கழலுடன் கூடிவையுமான திருவடிகளுடன் அடியேனைச் சேர்த்துக் காப்பாற்றி அருள்வீராக! இறகுகளுடன் கூடிய மேன்மையான மயிலை வாகனமாக உடையவரே! உதவி சிறிதும் இல்லாமல் தாவிப் படர்வதற்குக் கொழு கொம்பு இல்லாத தனித்த கொடியைப் போல பாவியாகிய அடியேனுடைய துணையற்ற மனமானது தளர்ந்து வாட்டமுற்றுத் துடிக்கின்றது.

 

            எனது தனிமையானது கழியுமாறு மெய்யறிவைத் தந்து அருளவேண்டும் என்று அருணகிரிநாதர் ஒரு திருப்புகழில் வேண்டுகின்றார். எத்தனையோ அன்பு புரிந்து நம்மால் உபசரிக்கப்படும் உறவினரும்அன்பு காட்டி நம்மை உபசரிக்கும் உறவினரும்மிகமிக அருமையாக நாம் கட்டிப் பாதுகாத்த மாளிகையும்இரவு பகலாகத் தேடி அமைத்த செல்வமும்அரிய அரச பதவியும் ஆகிய எல்லாம் ஒரு கணத்தில் பிரிந்து அயலாகி விடுகின்றன. எத்தைனையோ காலமாகத் தேடிய அருமையிலும் அருமையாக வைத்துப் போற்றிய பொருள்கள் யாவும் நமக்கு அந்நியமாகப் போய்விடுகின்றன. அந்திம காலத்தில் எமன் ஒருவன்தான் ஒருவான். அவனது வருகை நமக்கு எவ்விதத்தும் இனிமையைத் தராது.

 

            பல லட்ச ரூபாய் செலவில் ஒருவன் ஒரு பெரிய மாளிகையைப் புதுக்கினான். சிறந்த கட்டில்ஆசனங்கள்மெத்தைவிளக்குகள்பாத்திரங்கள்பண்டங்கள் எல்லாவற்றையும் தொகுத்து வைத்தான். அவன் இறந்த பிறகுஎதிர் வீட்டில் போய் ஓர் ஏழை மகனாகப் பிறந்துவிட்டான். பிறகுஇந்த மாளிகையும் உடைமைகளும் அவனுக்குச் சொந்தமாக ஆகுமாஎதிர் வீட்டில் பிறந்தவனை இந்த வீட்டில் நுழையத் தான் அனுமதிப்பார்களாஇங்கிருந்த மனைவியுடன் தான் பேச முடியுமாஎல்லாம் இவனுக்கு அயலாகி விட்டன. எல்லாம் கனவாகிக் கழிந்தன. பல ஆண்டுகள் பாடுபட்டுத் தேடிய அத்தனையும் ஒரு நொடியில் அயலாகி விடுகின்றன. ஆதலால்இறை அருளைத் தேடாமல்பொருளையே தேடித் திரியக் கூடாது. தேடிய பொருளில் பற்று வைக்கவும் கூடாது. எல்லாம் இறைவன் தந்தது என்று கருதி அறவழியில் அவற்றைப் பகிர்ந்து தந்துஇறைவன் திருவருளைச் சிந்தித்து வந்தித்து ஆறுதலாக இருக்கவேண்டும். இப்படி வாழ்ந்தால்தனிமையும் இனிமையாகும். 

 

"பற்று அற்றால் தனிமை இனிமை. 

பற்று வைத்தால் தனிமை கொடுமை"

 

திருப்புகழைப் பார்ப்போம்.

 

"தமரும்அமரும் மனையும்இனிய

     தனமும் அரசும் ...... அயல் ஆகத்

தறுகண் மறலி முறுகு கயிறு

     தலையை வளைய ...... எறியாதே,

 

கமல விமல மரகத மணி

     கனக மருவும் ...... இருபாதம்

கருத அருளிஎனது தனிமை

     கழியஅறிவு ...... தரவேணும்".

 

குமர! சமர முருக! பரம!

     குலவு பழநி ...... மலையோனே!

கொடிய பகடு முடிய முடுகு

     குறவர் சிறுமி ...... மணவாளா!

 

அமரர் இடரும் அவுணர் உடலும்

     அழிய அமர் செய்து ...... அருள்வோனே!

அறமும்நிறமும் மயிலும்அயிலும்,

     அழகும் உடைய ...... பெருமாளே".

 

இதன் பொருள் ---

 

            குமாரக் கடவுளே! போரில் வல்ல முருகப் பெருமானே! பரம் பொருளே! சிறந்த பழநிமலைப் பரமனே! கொடும் வேகமுடைய மதயானையை வரும்படிச் செய்துவள்ளியம்மையை மணந்த மணவாளரே! தேவர்கள் துயரும் அசுரர்களுடைய உடல்களும் அழியுமாறு போர் புரிந்தருளியவரே! அறமும்ஒளியும்வேலும்மணியும்அழகும் படைத்த பெருமிதம் உடையவரே!

 

            உறவினரும்விரும்புகின்ற மாளிகையையும் இனிய செல்வமும் என்னைவிட்டு நீங்குமாறுஅஞ்சுதல் இல்லாத இயமன் வலிய பாசக் கயிற்றை எனது தலையைச் சுற்றி எறியாதவாறுதாமரை மலர் போன்றதும் தூய்மையுடையதும் மரகதமணியும் பொன்னாபரணமும் பூண்டதும் ஆகிய உமது திருவடிகளை அடியேன் சிந்திக்குமாறு அருள்புரிந்துஉம்மைக் கூடாமல் நிற்கும் எனது தனித்த அவல நிலைமை தீர மெய்யறிவைத் தந்தருள்வீர்.

 

            தனித்துணையாக உயிருக்கு எப்போது வருகின்ற இறைவன் இருக்கஅவனை நினைக்காமல்உலக வாழ்வில் செருக்குக் கொண்டுதலையால் நடத்தல் கூடாது. அவ்வாறு வாழ்ந்த என்னையும் விட்டுவிடல் ஆகாது என்கின்றர் மணிவாசகர்.

 

"தனித்துணை நீ நிற்கயான் தருக்கித் 

            தலையால் நடந்த

வினைத் துணையேனை விடுதிகண்டாய்

            *வினையேனுடைய

மனத் துணையே!* என்தன் வாழ்முதலே! எனக்கு

            எய்ப்பில் வைப்பே!

தினைத் துணையேனும் பொறேன் துயர் 

            ஆக்கையின் திண்வலையே".        --- திருவாசகம்.

 

            துயரத்தைத் தருகின்ற இந்த உடம்பு என்னும் உறுதியான வலையில் உயிரானது இருந்து கொண்டுவெளிவர முடியாமல் தவிக்கின்றது. வினையை ஒழிக்கின்ற தனி (ஒப்பற்ற) துணையாக உள்ள இறைவனை நினைக்காமல்உலக வாழ்வில் செருக்கிவினையை விளைக்கின்றவற்றை நினைத்தல் கூடாது. என்றால்அவற்றை மறந்து விடுதல் கூடாது என்பதல்ல. அவற்றில் பற்று வைக்காமல் வாழுதல் வேண்டும்.

 

            இறையருளால் மட்டுமே கிடைக்கக் கூடிய மெய்யறிவு பெற்று இருந்தால்மனத்துணையாக இறைவன் தமது உள்ளத்தில் வீற்றிருப்பதால்வாழும் காலத்தில் தனிமையும் கூட இனிமையாகும். அதை அருளுமாறு வேண்டுகின்றார் அருணகிரிநாதர். "இருபாதம் கருத அருளிஎனது தனிமை கழிய அறிவு தரவேணும்" என்றார்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...