திருத் தில்லை - 11

 



"வித்தாரம் பேசினும், சோங்கு ஏறினும், கம்பமீது இருந்து

தத்தா என்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும், தம்முன் தம்பி

ஒத்தாசை பேசினும் ஆவதுஉண்டோ, தில்லையுள் நிறைந்த

கத்தாவின் சொற்படி அல்லாது வேறுஇல்லை கன்மங்களே."


பொழிப்புரை ---  வாக்கு வித்தாரமாகப் பேசினாலும், கப்பல் ஏறிப் போனாலும், கம்பத்தின் மேல் இருந்து தத்தா என்று சொல்லிப் பவுரிக் கூத்து ஆடினாலும், தமையன் தம்பி உதவியாகப் பேசினாலும், ஏதாயினும் ஒரு காரியம் ஆவது உண்டோ? (இல்லை) தில்லயம்பதியில் எழுந்தருளி உள்ள கர்த்தனின் சொல்படியே அல்லாமல் உலகத்தில் நிகழும் தொழில்கள் வேறு இல்லை.


விளக்கம் ---  பிறர் மயங்கும்படி அணிமா முதலிய அட்டமா சித்திகளை உடையவர் என்று விரிவாகப் போசினாலும், யாதொரு பயனும் இல்லை என்பதால், "வித்தாரம் பேசினும்" என்றார்.  


ஆகூழ் என்று சொல்லப்படும் நல்வினைப் பயன் இல்லாதபோது, அவர் மரக்கலம் ஏறிச் சென்று பொருள் தேட முயன்றாலும் சிறிதும் கைகூடாது என்பார், "சோங்கு ஏறினும்" என்றார்.


மூங்கில் கழியின் மீது இருந்து கழைக் கூத்து ஆடினாலும் அடைவது ஒரு பயனும் இல்லை என்பதால், "கம்ப மீது இருந்து தத்தா என்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும்" என்றார்.


தனக்குத் துணையாக அண்ணன் தம்பிமார் பேசினாலும் கூட யாதொரு காரியமும் ஆகாது என்பார், "தம்முன் தம்பி ஒத்தாசை பேசினும் ஆவது உண்டோ" என்றார்.


உலகத்தில் நிகழும் செயல்கள் அனைத்தும் தில்லயம்பதியில் ஆனந்த்த் திருநடம் புரியும் சிவபெருமானின் அருளாணைப் படியே நிகழும் என்பதால், "தில்லையுள் நிறைந்த கத்தாவின் சொற்படியன்றி அல்லாது வேறு இல்லை கன்மங்களே" என்றார்.


இது ஒத்த கருத்துடைய பாடல்கள் பலவற்றை முன்னும் பார்த்து இருக்கின்றோம். 


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...