"தவியாது இரு, நெஞ்சமே! தில்லை மேவிய சங்கரனை,
புவிஆர்ந்து இருக்கின்ற ஞானாகரனை, புராந்தகனை,
அவியா விளக்கை, பொன்னம்பலத்து ஆடியை, ஐந்தெழுத்தால்
செபியாமல் நீ செபித்தால், பிறவா முத்தி சித்திக்குமே."
பொழிப்புரை---- நெஞ்சமே! மனம் இளையாமல் இருப்பாயாக. திருத்தில்லையிலே எழுந்தருளி இருக்கின்ற அம்பலவாணப் பெருமானை, உலக முழுதும் நிறைந்து இருக்கின்ற பரம்பொருளை, ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனை, முப்புரங்களை நீறாக்கியவனை, அழியாத தீபம் போல்பவனை, திருவைந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு நீ செபிக்காமல் செபித்தாயானால் பிறவாமல் இருக்கைக்குக் காரணமாகிய முத்தி உனக்குக் கைகூடும்.
விளக்கம் --- மனமானது இன்பத்தையே எப்போதும் வேண்டி, துன்பத்திலிருந்து விடுபட நினைத்துத் தவித்துக் கொண்டே இருக்கும். அதனால் துன்பம் வந்தபோது இளைத்துப் போகும். எனவே, "தவியாது இரு" என்றார். உயிர்கள் உய்யும் பொருட்டு ஐந்தொழில் ஆற்றுகின்ற நடனத்தைப் புரிபவன் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்றான் என்பதால், "தில்லை மேவிய சங்கரனை" என்றார். அவன் உலகப் பொருள்கள் அனைத்துமாக உள்ளவன்; ஞான சொரூபியாகிய அவன் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகின்றான் என்பதால், "புவி ஆர்ந்து இருக்கின்ற ஞானாகரனை: என்றார். தேவர்களைக் காத்தருள்பவன் என்பதால் "புராந்தகனை" என்றார். புறத்திலே ஏற்றுகின்ற விளக்கானது புறத்திலே உள்ள இருளைப் போக்கி ஒளி தருவது போல், அகத்திலே உள்ள ஆணவ இருளைப் போக்கி, அருள் ஒளியை நிரப்புபவன் என்பதால், "அவியா விளக்கை" என்றார். புறத்திலே ஏற்றிய விளக்கு அவியும். அக விளக்கு அவியாது. "நல் அக விளக்கு அது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான். புறத்திலே தில்லையிலும், அகத்திலே புருவ மத்தியிலும் விளங்குபவனைப் "பொன்னம்பலத்து ஆடியை" என்றார். கருவி கரணங்களைக் கடந்து நின்று திருவைந்தெழுத்து மந்திரத்தை செபிக்கன்ற நிலை வாய்க்க வேண்டும் என்பதால், செபியாமல் செபித்தால் என்றார். "நினைப்பு அற நினைந்தேன்" என்பார் மணிவாசகப் பெருமான். நிட்டை கூடும் நிலை வாய்க்குமானால், முத்தி எளிது.
No comments:
Post a Comment