நன்மை செய்தவர் நலம் பெறுவர்

 


                 4. நன்மை செய்தவர்  நலம் பெறுவர்

                                      -----


தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்

     நெறியாரே தயவு செய்வார்!

வன்மவினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்

     பிறரையொன்றும் வருத்தல் வேண்டாம்;

கன்மநெறி வரல்வேண்டாம் : வேண்டுவது

     பலர்க்கும்உப காரம் ஆகும் :

நன்மைசெய்தார் நலம்பெறுவர்! தீமைசெய்தார்

     தீமைபெற்று நலிவர் தாமே.


இதன் பொருள் ---


நன்மை செய்தார் நலம் பெறுவர் - (பிறருக்கு) நலம் புரிந்தவர் (தாமும்) நலம் அடைவர், தீமை செய்தார் தீமை பெற்று நலிவர் - (பிறருக்குத்) தீமை செய்தவர் (தாமும்) தீமை அடைந்து வருந்துவர், (ஆகையால்) வன்ம வினை செயல் வேண்டாம் - (உள்ளத்திலே) வஞ்சம் வைத்திருந்து (பிறருக்குத்) தீங்கு செய்தல் கூடாது,  பொய் வேண்டாம் - பொய் பேசுதல் கூடாது, பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம் - மற்றோரைத்  துன்புறுத்தல் கூடாது, கன்மநெறி வரல் வேண்டாம் - தீவினை ஈட்டும் வழியிலே நடத்தல் கூடாது, பலர்க்கும் வேண்டுவது உபகாரம் ஆகும் - யாவருக்கும் (செய்ய) வேண்டுவது நன்றியே ஆகும். (ஆகையால்) தன்மமது செயல் வேண்டும் - அறத்தையே புரிதல் வேண்டும், (அவ்வாறு செய்தால்) தண்டலை நீள் நெறியாரே தடவு செய்வார் - தண்டலை நீள் நெறியில் எழுந்தருளிய இறைவரே அருள் புரிவார்.


      (வி-ரை) ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது பழமொழி. ‘தண்டலை நீள்நெறி' என்பது தண்டலை என்னும் திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெரய் ஆகும். ‘வேண்டா' என்பது ‘வேண்டாம்' என மருவியது.


No comments:

Post a Comment

கொக்கு எனவே நினைத்தனையோ?

  6. கொக்கெனவே நினைத்தனையோ? முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்      கையர்மகிமை மொழியப் போமோ! ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே      ட...