4. நன்மை செய்தவர் நலம் பெறுவர்
-----
தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்
நெறியாரே தயவு செய்வார்!
வன்மவினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்
பிறரையொன்றும் வருத்தல் வேண்டாம்;
கன்மநெறி வரல்வேண்டாம் : வேண்டுவது
பலர்க்கும்உப காரம் ஆகும் :
நன்மைசெய்தார் நலம்பெறுவர்! தீமைசெய்தார்
தீமைபெற்று நலிவர் தாமே.
இதன் பொருள் ---
நன்மை செய்தார் நலம் பெறுவர் - (பிறருக்கு) நலம் புரிந்தவர் (தாமும்) நலம் அடைவர், தீமை செய்தார் தீமை பெற்று நலிவர் - (பிறருக்குத்) தீமை செய்தவர் (தாமும்) தீமை அடைந்து வருந்துவர், (ஆகையால்) வன்ம வினை செயல் வேண்டாம் - (உள்ளத்திலே) வஞ்சம் வைத்திருந்து (பிறருக்குத்) தீங்கு செய்தல் கூடாது, பொய் வேண்டாம் - பொய் பேசுதல் கூடாது, பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம் - மற்றோரைத் துன்புறுத்தல் கூடாது, கன்மநெறி வரல் வேண்டாம் - தீவினை ஈட்டும் வழியிலே நடத்தல் கூடாது, பலர்க்கும் வேண்டுவது உபகாரம் ஆகும் - யாவருக்கும் (செய்ய) வேண்டுவது நன்றியே ஆகும். (ஆகையால்) தன்மமது செயல் வேண்டும் - அறத்தையே புரிதல் வேண்டும், (அவ்வாறு செய்தால்) தண்டலை நீள் நெறியாரே தடவு செய்வார் - தண்டலை நீள் நெறியில் எழுந்தருளிய இறைவரே அருள் புரிவார்.
(வி-ரை) ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது பழமொழி. ‘தண்டலை நீள்நெறி' என்பது தண்டலை என்னும் திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெரய் ஆகும். ‘வேண்டா' என்பது ‘வேண்டாம்' என மருவியது.
No comments:
Post a Comment