திருத் தில்லை - 8

 


"அடியவர்க்கு எளியவர் அம்பலவாணர் அடி பணிந்தால்,

மடியாமல் செல்வ வரம் பெறலாம், வையம் ஏழ் அளந்த

நெடியோனும் வேதனும் காணாத நித்த, நிமலன்அருள்

குடிகாணும் நாங்கள், அவர்காணும் எங்கள் குலதெய்வமே."


பொழிப்புரை ---  தனது அடியவர்க்கு எளியராய் இருப்பவர் அம்பலவாணர். அவர் திருவடிகளை வணங்கினால், இம்மை நலத்தோடு, இறவாத முத்தி நலத்தையும் பெறுகின்ற வரத்தைப் பெறலாம். உலகம் அளந்த திருமாலும், பிரமனும் கண்டு அறியாத நித்தியப் பொருளாக உள்ளவனும், இயல்பாகவே மலங்கள் அற்றவனும் ஆகிய சிவபெருமானுக்கே நாங்கள் அருட்குடிகள் ஆவோம். அவரே எங்களுக்குத் தெய்வமும் ஆவார்.


விளக்கம் ---  அடியவர்க்கு எளியவர் அம்பலவாணர் என்பது,


"கார்ஆனை ஈர்உரிவைப் போர்வை யானைக்

காமருபூங் கச்சியே கம்பன் தன்னை

ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை

அமரர்களுக்கு அறிவரிய அளவு இலானைப்

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்

பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்

பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே."


என்னும் அப்பர் திருத்தாண்டகத்தாலும்,


"தேவ தேவன்மெய்ச் சேவகன்

தென்பெ ருந்துறை நாயகன்

மூவ ராலும் அறியொ ணாமுத

லாய ஆனந்த மூர்த்தியான்

யாவ ராயினும் அன்ப ரன்றி

அறியொ ணாமலர்ச் சோதியான்

தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்

சென்னி மன்னிச் சுடருமே."


என்னும் மணிவாசகத்தாலும், இன்ன பிற அருட்பாடல்களாலும் தெளிவாகும்.


பெருமான் திருவடியை வணங்கினால், இம்மை நலங்களோடு, வீட்டின்பத்தையும் பெறலாம் என்பது,


"பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்புஎன்று இவையிரண்டும்

உறவினொடும் ஒழியச்சென்று, உலகுஉடைய ஒருமுதலைச்

செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி

மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே."


என்னும் மணிவாசகத்தாலும்,


"இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் தீர்த்திடும்

எம்மை ஆளும் இடைமருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே."


என வரும் அப்பர் திருக்குறுந்தொகையாலும், இன்ன பிற பாடல்களாலும் அறியலாம்.


தாமரையாகிய திருவடியைத் தேட வேண்டியது அன்னம்.  சடையாகிய காட்டைத் தேட வேண்டியது பன்றி. அவ்வாறு இல்லாமல், மாறுபட்டு பிரமனும் திருமாலும், அன்னமும் பன்றியுமாக உருவெடுத்துப் பன்றி தாமரையாகிய திருவடியையும், அன்னம் சடையாகிய காட்டையும் தேடிச் சென்று காணமுடியாமல் அலந்தனர்.  ஆனால், அவனுக்கு அன்பு செய்திடும் அன்பர்களுக்கு எளிவந்து காட்சி கொடுப்பதோடு, எல்லா நலங்களையும் அருளுவான் சிவபெருமான்.


No comments:

Post a Comment

திருத் தில்லை - 14

  "ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப் போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில், சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துண...