தேவனூர் - 0747. காண ஒணாதது




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

காணணொணாதது (தேவனூர்)

தேவனூர் முருகா!
சொரூப இலக்கணத்துக்கு உரிய பரம்பொருள் தேவரீரே.


தான தானன தனனா தனதன
     தான தானன தனனா தனதன
     தான தானன தனனா தனதன ...... தந்ததான


காணணொ ணாதது உருவோ டருவது
     பேசொ ணாதது உரையே தருவது
     காணு நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக்

காய பாசம தனிலே யுறைவது
     மாய மாயுட லறியா வகையது
     காய மானவ ரெதிரே யவரென ...... வந்துபேசிப்

பேணொ ணாதது வெளியே யொளியது
     மாய னாரய னறியா வகையது
     பேத பேதமொ டுலகாய் வளர்வது ...... விந்துநாதப்

பேரு மாய்கலை யறிவாய் துரியவ
     தீத மானது வினையேன் முடிதவ
     பேறு மாயருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே

வீணொ ணாதென அமையா தசுரரை
     நூறி யேயுயிர் நமனீ கொளுவென
     வேல்க டாவிய கரனே யுமைமுலை ......யுண்டகோவே

வேத நான்முக மறையோ னொடும்விளை
     யாடி யேகுடு மியிலே கரமொடு
     வீற மோதின மறவா குறவர்கு ...... றிஞ்சியூடே

சேணொ ணாயிடு மிதண்மே லரிவையை
     மேவி யேமயல் கொளலீ லைகள்செய்து
     சேர நாடிய திருடா வருடரு ...... கந்தவேளே

சேரொ ணாவகை வெளியே திரியுமெய்ஞ்
     ஞான யோகிக ளுளமே யுறைதரு
     தேவ னூர்வரு குமரா வமரர்கள் ...... தம்பிரானே.


பதம் பிரித்தல்


காண ஒணாதது, உருவோடு அரு அது,
     பேச ஒணாதது, உரையே தருவது,
     காணும் நான்மறை முடிவாய் நிறைவது, .....பஞ்சபூதக்

காய பாசம் அதனிலே உறைவது,
     மாயமாய் உடல் அறியா வகையது,
     காயம் ஆனவர் எதிரே அவர் என ...... வந்துபேசிப்

பேண ஒணாதது, வெளியே ஒளியது,
     மாயனார் அயன் அறியா வகையது,
     பேத அபேதமொடு உலகாய் வளர்வது, ...... விந்துநாதப்

பேருமாய் கலை அறிவாய் துரிய
     அதீதம் ஆனது, வினையேன் முடி தவ
     பேறுமாய் அருள் நிறைவாய் விளைவது, ...ஒன்றுநீயே.

வீண் ஒணாது என அமையாத அசுரரை
     நூறியே, உயிர் நமன் நீ கொளு என
     வேல் கடாவிய கரனே! உமைமுலை ....உண்டகோவே!

வேத நான்முக மறையோனனொடும் விளை-
     யாடியே, குடுமியிலே கரமொடு
     வீற மோதின மறவா! குறவர் ...... குறிஞ்சியூடே

சேண் ஒணாயிடும் இதண் மேல் அரிவையை
     மேவியே, மயல் கொள லீலைகள் செய்து
     சேர நாடிய திருடா! அருள் தரு ...... கந்தவேளே!

சேர ஒணாவகை வெளியே திரியும் மெய்ஞ்
     ஞான யோகிகள் உளமே உறை தரு
     தேவனூர் வரு குமரா! அமரர்கள் ...... தம்பிரானே.


பதவுரை

         வீண் ஒணாது என அமையாத அசுரரை நூறியே --- போர் புரிதல் வீணான காரியம் என்பதால் அது கூடாதென விலக்கி, மனம் அடங்காத அசுரர்களைப் பொடியாக்கி,

         உயிர் நமன் நீ கொளு என --- அவர்கள் உயிரை "நீ கொள்வாயாக" என்று இயமனிடம் சொல்லி,

         வேல் கடாவிய கரனே --- வேலாயுதத்தை விடுத்தருளிய திருக்கரத்தை உடையவரே!

         உமைமுலை உண்ட கோவே --- உமாதேவியாரின் திருமுலைப்பாலை அருந்திய தலைவரே!

         வேத நான்முக மறையோனொடும் விளையாடியே --- வேதங்களை ஓதிய நான்கு முகங்களை உடைய பிரமதேவனுடன் வேடிக்கையாக விளையாடி,

         குடுமியிலே கரமொடு வீற மோதின மறவ --- அவனுடைய சென்னியிலே உமது திருக்கையால் கிழியும்படி பலமாகக் குட்டிய வீரரே!

         குறவர் குறிஞ்சி ஊடே --- குறவர்கள் வாழும் குறிஞ்சி நிலத்தின் கண்ணே

         சேணொ ணாயிடும் இதண்மேல் அரிவையை மேவியே --- மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பரண் மீது இருந்த பெண் ஆகிய வள்ளியம்மையாரை விரும்பி அடைந்து,

         மயல் கொள லீலைகள் செய்து சேர நாடிய திருடா ---  அந்த அம்மையிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து, அவரை அடைய விரும்பிய கள்வரே!

         அருள் தரு கந்தவேளே --- ஆன்ம கோடிகளுக்குத் திருவருள் பாலிக்கும் கந்தப் பெருமானே!

         சேர ஒணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யயோகிகள் --- பாச பந்தங்களின் வாசனை தம்மிடம் வந்து மீண்டும் நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் உண்மை அறிஞராகிய சிவயோகிகளது

         உளமே உறை தரு --- திருவுள்ளக் கோயிலில் எப்போதும் வாழுகின்றவரே!

         தேவனூர் வரு குமரா --- தேவனூர் என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

         அமரர்கள் தம்பிரானே --- தேவர்கள் போற்றும் தலைவரே!

         காண ஒணாதது --- மன வாக்குக் காயம் என்னும் முக்கரணங்களாலும் காண்பதற்கு முடியாதது,  

         உருவோடு அரு அது --- உருவமும் அருவமுமாக இருப்பது,

         பேச ஒணாதது --- வாக்கினால் இத் தன்மைத்து என்று பேசுதற்கு முடியாதது,

         உரையே தருவது --- தமது தடத்த இலக்கணத்தை ஆகமப் பிரமாணத்தால் ஆராய இடம் தருவது,

         காணும் நான்மறை முடிவாய் நிறைவது --- உண்மையைக் காணுகின்ற நான்கு மறைகளுக்கும் முடிவான பொருளாய் விளங்கி நிறைந்து நிற்பது,

         பஞ்சபூதக் காய பாசம் அதனிலே உறைவது --- ஐந்து பூதங்களினால் ஆன இந்த உடம்பிலே உயிர்க்கு உயிராய் இருப்பது,

         மாயமாய் --- மாயப் பொருளாக உள்ளது,

     உடல் அறியா வகையது --- உடல் என்னும் இந்தக் கருவியால் அறிய முடியாத வகையில் இருப்பது,

         காயமானவர் எதிரே --- காயத்தை உடைய மனிதர்கள் எதிரே,
    
     அவர் என வந்து பேசிப் பேண ஒணாதது --- அவர்களைப் போலவே மனித உருக் கொண்டு வந்து உபதேச மொழிகளைப் பேசிடினும், மனிதருள் ஒருவராக மதிக்க முடியாதது,

         வெளியே ஒளியது --- சிதாகாச வெளியிலே ஒளிப்  பிழம்பாகத் திகழ்வது,

         மாயனார் அயன் அறியா வகையது --- திருமால், பிரமா இவர்களால் அறியமுடியாத வகையில் இருப்பது,

         பேத அபேதமொடு உலகாய் வளர்வது --- உலக உயிர்களோடு கலந்தும் கலவாமலும் இருப்பது,

         விந்து நாதப் பேரும் மாய் --- விந்து, நாதம் என்னும் பேரும் மாய்ந்து,

         கலை அறிவாய் --- நூல்களின் சாரமாகி,

         துரிய அதீதமானது --- துரிய நிலையைக் கடந்தது,

         வினையேன் முடி தவப் பேறுமாய் --- இருவினையில் கிடந்து தடுமாறுகின்ற அடியேன் முன் புரிந்த சரியை, கிரியை, யோகங்களின் தவத்தின் பயனுமாய்,

         அருள் நிறைவாய் விளைவது --- திருவருள் நிறைவாக விளங்குகின்றது,

         ஒன்று --- இங்ஙனம் எல்லாம் விளங்குவன யாவும் ஒன்றே,

       நீயே --- அது தேவரீரே.

பொழிப்புரை

      போர் புரிதல் வீணான காரியம் என்பதால், அது கூடாதென விலக்கியும்,  மனம் அடங்காத அசுரரைப் பொடியாக்கி, யமனிடம், அவர்கள் உயிரை "நீ கொள்வாயாக" என்று வேலாயுதத்தை விடுத்தருளிய திருக்கரத்தை உடையவரே!

      உமாதேவியாரின் திருமுலைப்பாலை அருந்திய தலைவரே!

       வேதங்களை ஓதிய நான்கு முகங்களை உடைய பிரமதேவனுடன் வேடிக்கையாக விளையாடல் புரிந்து, அவனுடைய சென்னியிலே உமது திருக்கையால் கிழியும்படி பலமாகக் குட்டிய வீரரே!

      குறவர்கள் வாழும் குறிஞ்சி நிலத்தின் கண்ணே, மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பரண் மீது இருந்த பெண் ஆகிய  வள்ளியம்மையாரை விரும்பி அடைந்து,  அந்த அம்மையிடம் காதல் மயக்கம் தரும் திருவிளையாடல்கள் செய்து, அவரை அடைய விரும்பிய கள்வரே!

      ஆன்ம கோடிகளுக்குத் திருவருள் பாலிக்கும் கந்தப் பெருமானே!

      பாச பந்தங்களின் வாசனை தம்மிடம் வந்து மீண்டும் நெருங்க முடியாதபடி வெளியிலே திரிந்து கொண்டிருக்கும் உண்மை அறிஞராகிய சிவயோகிகளது திருவுள்ளக் கோயிலில் எப்போதும் வாழுகின்றவரே!

      தேவனூர் என்ற திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே!

      தேவர்கள் போற்றும் தலைவரே!

      மன வாக்குக் காயம் என்னும் முக்கரணங்களாலும் காண்பதற்கு முடியாதது,  

     உருவமும் அருவமுமாக இருப்பது.

     வாக்கினால் இத் தன்மைத்து என்று பேசுதற்கு முடியாதது.

     தமது தடத்த இலக்கணத்தை ஆகமப் பிரமாணத்தால் ஆராய இடம் தருவது.

     உண்மையைக் காணுகின்ற நான்கு வேதங்களுக்கும் முடிவான பொருளாய் விளங்கி நிறைந்து நிற்பது.

     ஐந்து பூதங்களினால் ஆன இந்த உடம்பிலே உயிர்க்கு உயிராய் இருப்பது.

    மாயப் பொருளாக இப்பெரும் உடலால் அறிய முடியாத வகையில் இருப்பது, சரீரத்தை உடைய மனிதர்கள் எதிரே, அவர்களைப் போலவே மனித உருக் கொண்டு வந்து உபதேச மொழிகளைப் பேசிடினும், மனிதருள் ஒருவராக மதிக்க முடியாதது.

     சிதாகாச வெளியிலே ஒளிப்பிழம்பாகத் திகழ்வது.

    திருமால், பிரமா இவர்களால் அறியமுடியாத வகையில் இருப்பது.

     உலக உயிர்களோடு கலந்தும் கலவாமலும் இருப்பது.

    விந்து, நாதம் என்னும் பேரும் மாய்ந்து, நூல்களின் சாரமாகி, துரிய நிலையைக் கடந்தது.

      இருவினையில் கிடந்து தடுமாறுகின்ற அடியேன் முன் புரிந்த சரியை, கிரியை, யோகங்களின் தவத்தின் பயனுமாய், திருவருள் நிறைவாக விளங்குகின்றது.

     இங்ஙனம் எல்லாம் விளங்குவன யாவும் ஒன்றே.  அது தேவரீரே.


விரிவுரை

காண ஒணாதது ---

கடவுள் என்ற சொல்லுக்கு கடந்தது என்பது பொருள்.  கண்ணினால் உருவத்தை மட்டுமே அறியலாம். ஓசையைக் கேட்க முடியாது. காதினால் ஓசையை மட்டும் கேட்கலாம்.  உருவத்தைக் கண்ணால் அறிய முடியாது. இவ்வண்ணமே ஒவ்வொரு புலனால் ஒவ்வொன்றையே அறிய முடியும்.  இறைவன் ஓசை, ஒளி, சுவை, நாற்றம், ஊறு என்ற ஐந்தில் ஒன்றாக இருப்பார் எனில், இந்த ஐம்புலன்களால் அறியலாகும். அவர் இந்த ஐந்துமே அன்றி தத்துவம் கடந்த தனிப் பரம்பொருள்.  பொறி புலன்களால் அறியப்படாதவர். அருகில் நின்று இறைவனைக் காண்கின்றனர் அமரர். ஆனால், அவர்கள் கட்புலன் இறைவனைக் காணும் ஆற்றல் சிறிதும் இன்றி தடைபட்டுத் தவிக்கின்றது.

நோக்கினும் நுழைகிலை, நுவலுகின்றது ஓர்
வாக்கினும் அமைகிலை, மதிப்ப ஒண்கிலை,
நீக்க அரும் நிலைமையின் நிற்றி, எந்தை, நீ
ஆக்கிய மாயம் ஈது அறிகிலேம் அரோ.       --- கந்தபுராணம்.

விண்ணிலும், மண்ணிலும், பொன்னிலும், பெண்ணிலும், மக்களிலும், தன்னிலும் வைத்துள்ள பற்றுக்கள் அனைத்தும் நீக்கிய தத்துவ ஞானிகளாலும் கூட, ஞானக் கண்ணாலேயே காண முடியும். திருவருட்கண் ஒன்றாலேயே இறைவனைக் காண இயலும். அவனருளாலே தான் அவனைக் காண இயலும்.

வயிரமே ஆனாலும்,  அது பட்டை தீட்டப்படவேண்டும். பட்டை தீட்டுவதற்கு ஒருவன் வேண்டும். பட்டை தீட்டப்பட்டாலும், அதற்குப் புறம்பாக ஒரு ஒளிப் பொருள் இருந்தால் தான், அந்த ஒளியின் துணையைக் கொண்டு அது ஒளிவிடும்.  அது போல ஆன்மா முதலில் பக்குவம் அடையவேண்டும். அது இறையருளால் இயலும். பக்குவம் அடைந்த பின், இறையருள் துணைக் கொண்டே இறையருளை உணர முடியும்.

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
     மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால்,
ஒப்புஉடையன் அல்லன்; ஒருவன் அல்லன்;
     ஓர்ஊரன் அல்லன்; ஓர் உவமன்இல்லி,
அப்படியும் அந்நிற மும்அவ் வண்ணமும்
     அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால்,
இப்படியன் இந்நிறத்தின் இவ்வண் ணத்தன்
     இவன்இறைவன் என்றுஎழுதிக் காட்ட ஒணாதே.--- அப்பர்.


உருவோடு அரு அது ---

இறைவனுக்கு உருவநிலை, அருவநிலை, உருவருவநிலை என்ற மூன்றும் உண்டு.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்..       --- கந்தர் அநுபூதி.

உருவும் ஆகுவன் அருவமும் ஆகுவன்
உருவும் அற்றதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய்
பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடற் பாலர்.    --- கந்தபுராணம்.

பேச ஒணாதது ---

இறைவன் "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்". ஆதலின், இக் கரும வாக்கினால் இத் தன்மையன் என்று அளவு இட்டு உரைக்க இயலாது.

மறைகளின் முடிவால் வாக்கால், மனத்தினால் அளக்கொணாமல்
நிறைவுடன் யாண்டும் ஆகி நின்றிடு நிமலமூர்த்தி
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின்
வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்து அருளினானே.     --- கந்தபுராணம்.

வாசித்துக் காண ஒணாதது,
பூசித்துக் கூட ஒணாதது,
வாய்விட்டுப் பேச ஒணாதது....            ---  திருப்புகழ்.

உரையே தருவது ---

இறைவனுக்கு இரண்டு தன்மை உண்டு. ஒன்று சொரூப லட்சணம். மற்றொன்று தடத்த லட்சணம். வேதாகமங்கள் எல்லாம் விதந்து ஓதுவது பரம்பொருளின் தடத்த லட்சணத்தையே. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவராம் இறைவர், இந்த உலகத்து உயிர்கள் உய்ய, பதிகரணம் வாய்க்கப் பெற்ற ஒரு சிலரைத் தொழிற்படுத்தி, தனது தன்மையை உரைக்கச் செய்வர்.

காணும் நான்மறை முடிவாய் நிறைவது ---

உண்மையைக் காண்பது வேதம். அவ் வேதங்களின் சிகரமாக நிறைந்திருப்பவர் இறைவர். வேதத்தின் முடிவு உபநிடதம். அது ஞானகாண்டம் ஆகும். ஞானந்தான் உருவாகிய நாயகனாகிய முருகன் அவ் வேத சிகரப் பொருளாக விளங்குகின்றனன்.

நாலந்த வேதத்தின்    பொருளோனே
நான்என்று மார்தட்டும் பெருமாளே... --- (நீலங்கொள்) திருப்புகழ்.

பஞ்ச பூதக் காய பாசம் அதனிலே உறைவது ---

இவ்வுடம்பு ஐம்பூதங்களின் பரிணாமம் ஆகும். உயிரை உய்விக்கும் பொருட்டு இறைவன் இந்தப் புலால் உடம்புக்கு உள்ளே உறைகின்றனன்.

உய்யஎன் உள்ளத்துள் ஒங்காரமாய் நின்ற
மெய்யா, விமலா, விடைப்பாகா....              ---  திருவாசகம்.

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்
பொன்நெடும் கோயிலாப் புகுந்துஎன்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட
ஈசனே மாசிலாமணியே....                    ---  திருவாசகம்.


காயமானவர் எதிரே அவர் என வந்து பேசிப் பேச ஒணாதது ---

உடம்பு எடுத்தவர்களுக்கு முன்னைப் பக்குவ காலத்திலே அவர்களைப் போலவே மானுடச் சட்டை தாங்கி இறைவன் வந்து, தத்துவம் கடந்த உபதேச மொழிகளைப் பேசுவர்.  அவ்வாறு பேசினாலும், அம் மனிதவர்க்கத்திலே ஒருவராக நினைக்கலாகாதவர்.

மணிவாசகருக்கு திருப்பெருந்துறையில், குருந்தடியில் இறைவன் குருமூர்த்தமாக வந்து அருள் புரிந்ததும், அருணையில் அருணகிரியார்க்கு இறைவன் குரு வடிவமாக வந்து மௌன மறையை உபதேசித்ததும் இங்கு சிந்தித்தற்கு உரியன.

வெளியே ஒளி அது ---

துரியம் கடந்த பரவெளியில் ஞான ஒளியாகத் திகழ்வது.

மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்...            --- (ஓலமறைகள்) திருப்புகழ்.

மாயனார் அயன் அறியா வகையது ---

மாயனார் - திருமால்.  அயன் - பிரமன்.

திருமாலும் அயனும் நாம ரூப குணங்களை உடையவராதலின், அவரால் நாம ரூப குணங்கள் இல்லாத பரம்பொருளை அறிய முடியாது.

முருகவேளுக்கு நாமம், வண்ணம், வடிவு, செயல், குணம் முதலியன யாவும் சொரூப நிலையில் இல்லை.

ஊர்இலான், குணம் குறிஇலான், செயலின் உரைக்கும்
பேர்இலான், ஒரு முன்இலான், பின்இலான், பிறிதுஓர்
சார்இலான், வரல் போக்குஇலான், மேல்இலான், தனக்கு
நேர்இலான், உயிர்க் கடவுளாய் என்னுளே நின்றான்.      --- கந்தபுராணம்.

ஆதலின், அவரை திருமாலும் அயனும் காண்கின்றிலர்.  "மால்அயனுக்கு அரியானே" என்பார் "காலனிடத்து" எனத் தொடங்கும் திருப்புகழில்.

பேத அபேதமொடு உலகாய் வளர்வது ---

இறைவன் உலகு உயிர்களோடு கலந்தும் கலவாமல் உறைகின்றனன். பொருள் தன்மையால் கண்ணும் கதிரவனும் போல வேறாக நிற்கின்றனன். உயிர்க்கு உயிராம் தன்மையால், கண் ஒளியும் ஆன்ம போதமும் போல உடனுமாய் நிற்கின்றனன். கலப்பினால் உடலும் உயிரும் போல ஒன்றாய் நிற்கின்றனன்.

விந்து நாத பேருமாய் கலையறிவாய் ---

விந்து நாதமும் கடந்த வெளியில் விளங்குவதாகிய இறைவன் தத்துவாதீதனாம். ஆதலின், விந்துநாதம் என்னும் பேரும் அற்ற இடத்தில் அறிவு வடிவாய் விளங்குகின்றனர். "நாத விந்து கலாதீ" என்றார் அடிகளார்.

"மக்கட்குக் கூற அறிதானது" எனத் தொடங்கும் காஞ்சிபுரத் திருப்புகழ்ப் பாடல், "ஓலமறைகள் அறைகின்ற ஒன்று அது" எனத் தொடங்கும் திருவானைக்காத் திருப்புகழ்ப் பாடல், "வேதத்தில் கேள்வி இலாதது" எனத் தொடங்கும் திருக்குற்றாலத்
திருப்புகழ்ப் பாடல், "சுருதி ஊடு கேளாது" எனத் தொடங்கும் பொதுத் திருப்புகழ்ப் பாடல் ஆகியவற்றையும், இத் திருப்புகழ்ப் பாடலோடு வைத்து ஓதி உணர்க.


வினையேன் முடி தவப்பேறுமாய் ---

வினையினால் தடுமாறும் ஆன்மாக்கள் புரியும் தவத்தின் பயனாக இருப்பவர் இறைவர்.

ஒன்று நீயே ---

எல்லாமாய் இருப்பவர் முருகக் கடவுளே. அவருக்கு அன்னியமாக வேறு இல்லை. இறைவருடைய இயற்கை நிலையை நன்கு விளக்குவது இப் பாடல்.


வீணொணாதென அமையாத அசுரரை நூறி ---

தேவர்கள் சென்று முருகவேளிடம் தமக்கு அசுரரால் நேர்ந்த துன்பங்களைக் கூறி முறையிட்டனர். எந்தை கந்தவேள் அமரரை அவுணர் துன்புறுத்தினால் நமக்கென்ன என்று வாளா இராமல், எளியாரை வலியார் துன்புறுத்தினால், வலியாரை அடக்குவது இறைவனது தன்மையாதலின், தேவசேனாதிபதியாகச் சென்று அவுணரை மாய்த்து அமரருக்கு அருள் புரிந்தனர்.

உயிர் நமன் நீ கொளு என வேல் கடாவிய கரனே ---

சூரபன்மனுடைய ஆட்சியில் இயமன் அவுணர்களது உயிரைப் பற்றக் கூடாது. அது அவனுடைய ஆணை. ஆதலினால், முருகவேள் இயமனை நோக்கி, "உயிரைக் கொண்டு போ" என்று கட்டளை இட்டு அருளினர். முருகப் பெருமானுடைய ஆணையைத் தாங்கிய இயமன், அவுணரது உயிர்களைப் பற்றுவானாயினன்.

 
மறையோனொடு விளையாடியே குடுமியிலே கரமொடு வீற மோதின மறவா ---

திருக்கயிலாய மலைக்கு சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த பிரமதேவன் தருக்குற்றுச் சென்றான். ஆதலின், மூவருக்கும் தேவருக்கும் தனிப்பெரும் தலைவராகிய கந்தக் கடவுள், பிரமனை அழைத்து பிரணவப் பொருள் கேட்டு, அதனை அறியாது விழித்த வேதனை, வேதனை அடையுமாறு குட்டிச் சிறையிட்டனர்.

எவர்தமக்கு ஞானகுரு ஏகாம்பரேசர்,
அவர்தமக்கு ஞானகுரு யாரோ? - உவரியணை
கட்டினோன் பார்த்திருக்கக் காதலவன் தலையில்
குட்டினோன் தானே குரு.                ---  காளமேகம்.

வனஜ ஜாதனை அன்று முனிந்தற
வலியபார விலங்கிடு புங்கவன்           ---  பூதவேதாள வகுப்பு.

அயனைக் குட்டிச் சிறை புரிந்த வரலாறு

குமாரக்கடவுள் திருவிளையாடல் பல புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடும் சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கைலாய மலையை நண்ணினர். பிரமனை ஒழிந்த எல்லாக் கணர்களும், யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத் திரும்பினார்கள். ஆங்குக் கோபுரவாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும் புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமரநாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன எழுந்தருளி இருந்தனர். பிரமனை ஒழிந்த மற்ற எல்லோரும் வந்து முருகப் பெருமானது அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.

பிரமதேவர் குமரக் கடவுளைக் கண்டு வணங்காது, “இவன் ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப் பெருமான் சிவன் வேறு தான் வேறன்று, மணியும் ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.

தருக்குடன் செல்லுஞ் சதுர்முகனை அழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன்.

கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.

பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன்.

முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர்.

பிரமன் “உணர்ந்திருக்கிறேன்” என்றனன்.

“நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல் வேதமாகிய இருக் வேத்தைக் கூறு,” என்று குகமூர்த்தி கூறினர்.

சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன்.

உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி! நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.

தாமரைத்தலை இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத்தலை எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்றுஉடைக் குமரவேள், நிற்றிமுன் கழறும்
ஓம் எனப்படு மொழிப்பொருள் இயம்புக,ன்று உரைத்தான்.    ---கந்தபுராணம்.

ஆறு திருமுகங்களில் ஒரு திருமுகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன் வினவுதலும், பிரமன் அக்குடிலை மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன. சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய ஆணவம் அகன்றது. வெட்கத்தால் தலைகுனிந்தனன். "நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை யஉணராமற் போனோமே?" என்று ஏங்கினன். சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான் கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை உணராது மருண்டு நின்றனன்.

குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர்.

பிரமன் “ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.

அது கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப் பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும் புரிகின்றனையோ? பேதாய்!” என்று நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.

சிட்டி செய்வதுஇத் தன்மை யதோ?னச் செவ்வேள்
 குட்டினான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க”     ---கந்தபுராணம்.

பிரமதேவனது அகங்காரம் முழுதும் தொலைந்து புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன் பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக் கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.

அயனைக் குட்டிய பெருமாளே”       -- (பரவை) திருப்புகழ்.

ஆர ணன்றனை வாதாடி ஓருரை
 ஓது கின்றென வாராது எனாஅவன்
 ஆண வங்கெட வேகாவலாம்அதில்      இடும்வேலா"      --- (வாரணந்) திருப்புகழ்.

      “.......................................படைப்போன்
அகந்தை உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
     உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித் தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
     குட்டிச் சிறைஇருத்தும் கோமானே”                      --- கந்தர் கலிவெண்பா.


இதண் மேல் அரிவையை …....  சேர நாடிய திருடா ---

வள்ளிமலையில் தினைப்புனத்தில் பரண்மீது தினைப்புனம் காவல் புரிந்த வள்ளியம்மைபால் முருகவேள் சென்று பலப்பல
திருவிளையாடல் புரிந்து மருவினர். ஞானமே வடிவாகியவரும், காமனை எரித்த கனல் கண்ணிலே உதித்த அருட்பெருஞ்சோதி ஆகிய பரம்பொருள் இன்ப சத்தியாகிய வள்ளியம்மையை மணந்தது ஆன்மாக்கள் இன்புறும் பொருட்டே.

செம்மான் மகளைத் திருடும் திருடன்,
பெம்மான் முருகன், பிறவான் இறவான்,
"சும்மாஇரு சொல்அற" என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.       ---  கந்தர் அநுபூதி.


சேர ஒணாவகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் ---

கருவி கரணங்களினின்றும் கழன்ற சிவயோகிகள், மீண்டும் அவைகளின் வாசனை வந்து தம்மைப் பற்றாவண்ணம் அருள்வெளியிலே உலவுவர்.

வேதாகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்த தண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும்இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே, தெரியாது ஒரு பூதர்க்குமே.          --- கந்தர் அலங்காரம்.

கருத்துரை

அவுணகுல காலரே! அயனைச் சிறை புரிந்த வீரரே! வள்ளி மணவாளரே!  தேவனூர் முருகா!, சொரூப இலக்கணத்துக்கு உரிய பரம்பொருள் தேவரீரே.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...