திரு மயேந்திரப்பள்ளி - 0774. வண்டு அணியும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வண்டு அணியும் (திருமயேந்திரப்பள்ளி)

முருகா!
விலைமாதர் உறவு தவிர அருள்வாய்.


தந்தன தந்தன தாந்த தானன
     தந்தன தந்தன தாந்த தானன
     தந்தன தந்தன தாந்த தானன ...... தனதான


வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
     அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
     வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல

வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
     யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
     வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ......மடவார்பொன்

கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
     குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
     கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர்

கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
     நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
     கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ......முழல்வேனோ

அண்டரு டன்தவ சேந்து மாதவர்
     புண்டரி கன்திரு பாங்கர் கோவென
     அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை

அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
     ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
     அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா

செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
     யென்பணி யன்கன சாம்பல் பூசிய
     செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே

திங்கள்மு கந்தன சாந்து மார்பின
     ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
     சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வண்டு அணியும் கமழ் கூந்தலார், விழி
     அம்பு இயலும் சிலை, போந்த வாள்நுதல்,
     வண்தரளம் திகழ் ஆய்ந்த வார்நகை, ...... குயில்போல

வண் பயிலும் குவடு ஆண்ட மார்முலை
     யின் பொறி அம்குமிழ், ம்பல் தோள்கரம்,
     வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை ......மடவார்,பொன்

கண்ட உடன்களி கூர்ந்து பேசிகள்,
     குண்டுணியும் குரல் சாங்கம் ஓதிகள்,
     கண் சுழலும்படி தாண்டி ஆடிகள், ...... சதிகாரர்,

கஞ்சுளியும் தடி ஈந்து போ என,
     நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள்,
     கம்பையிலும் சடம் மாய்ந்து நாயனும் ......உழல்வேனோ?

அண்டர் உடன் தவசு ஏந்து மாதவர்,
     புண்டரிகன், திரு பாங்கர், கோ என,
     அஞ்சல் எனும்படி போந்து, வீரமொடு ......அசுராரை

அங்கம் ஒடுங்கிட மாண்டு ஒ, ழிகள்
     எண்கிரியும் பொடி சாம்பர் நூறிட,
     அந்தகனும் கயிறு ஆங்கை வீசிட ...... விடும்வேலா!

செண்டு அணியும் சடை, பாந்தள், நீர், மதி,
     என்பு அணியன், கன சாம்பல் பூசிய
     செஞ்சடலன் சுத! சேந்த! வேலவ! ...... முருகோனே!

திங்கள் முகந்தன சாந்து மார்பினள்
     என்தன் உளம்புகு பாங்கி மானொடு
     சிந்தை மகிழ்ந்து மயேந்த்ரம் மேவிய ...... பெருமாளே.


பதவுரை

அண்டர் உடன் --- தேவர்களோடு,

தவசு ஏந்து மாதவர் --- பெரும் தவத்தைப் புரிகின்றவர்களும்.

புண்டரிகன் --- தாமரையிலே வாசம் செய்யும் பிரமதேவனும்,

திரு பாங்கர் --- திருமகள் துணைவனான திருமாலும்,

கோ என ---  கோ என ஒலம் இட்டு அலற,

அஞ்சல் எனும்படி போந்து --- அஞ்சாதீர்கள் என்று சொல்லும்படியாக வெளிப்பட்டு,

வீரமொடு --- வீரத்துடன்,

அசுராரை அங்கம் ஒடுங்கிட ---அரக்கர்களின் உடல்கள் வலி இழந்து ஒடுங்கி,

மாண்டு ஒட --- உயிரை விடும்படியும்,

ஆழிகள் --- கடல்களும்,

எண்கிரியும் --- எட்டுத் திக்கில் உள்ள மலைகளும்,

பொடி சாம்பர் நூறிட --- பொடியாகி அழியவும்,

அந்தகனும் கயிறு ஆங்கு ஐ வீசிட விடும்வேலா --- இயமன் தனது பாசத்தை வீசும்படியாகவும், வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

         செண்டு அணியும் சடை --- மலர்ச் செண்டை அணிந்துள்ள திருச்சடையில்,

       பாந்தள் --- பாம்பு,

       நீர் --- கங்கை நதி,

      மதி --- பிறைச் சந்திரன்,

      என்பு அணியன் --- ஆகியவற்றோடு எலும்பை அணிந்தவரும்,

     கன சாம்பல் பூசிய செம் சடலன் சுத --- பெருமைக்கு உரிய திருநீற்றைப் பூசிய சிவந்த திருமேனியை உடையவரும் ஆன சிவபெருமானின் திருப்புதல்வரே!

     சேந்த --- சிவந்த திருமேனியை உடையவரே!

     வேலவ --- வேலாயுதத்தைத் தரித்தவரே!

     முருகோனே --- முருகப் பெருமானே!

     திங்கள் முகம் --- சந்திரனை ஒத்த திருமுகத்தை உடையவள்,

     தனம் சாந்து மார்பினள் --- சந்தனக் குழம்பைப் பூசிய மார்பினை உடையவள்,

     என்றன் உள்ளம் புகு பாங்கி மானோடு --- அடியேனது உள்ளத்தில் புகுந்து உள்ளவளா, உமது தோழி வள்ளிநாயகியுடன்,

      சிந்தை மகிழ்ந்து --- திருவுள்ளம் மகிழ்ந்து,

     மயேந்திரம் மேவிய பெருமாளே --- திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் எழுந்தருள் இருக்கும் பெருமையில் மிக்கவரே!

      வண்டு அணியும் கமழ் கூந்தலார் --- வண்டுகள் பொருந்தி உள்ள நறுமலர்களை அணிந்த கூந்தலை உடையவர்கள்,

     விழி அம்பு இயலும் --- அம்பினைப் போன்ற கண்களும்,

     சிலை போந்த வாள்நுதல் --- வில்லைப் போன்று வளைந்த ஒளி மிக்க நெற்றியும்,

      வண்தரளம் திகழ் ஆய்ந்த வார்நகை --- வளப்பம் மிக்க முத்துக்களைப் போன்ற வரிசையாக அமைந்துள்ள பற்களும்,

     குயில் போல வண் பயிலும் --- குயிலைப் போன்ற மொழிகளும்,

     குவடு ஆண்ட மார்முலையின் பொறி --- மலை போன்ற மார்பகங்களும், அவற்றின் மேல் படர்ந்துள்ள அழகிய தேமலும்,

     அம் குமிழ் --- அழகிய குமிழம் பூ போன்ற மூக்கும்,

      ஆம்பல் தோள் கரம் --- மூங்கிலைப் போன்ற தோள்களும், கைகளும்,

     வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் --- வஞ்சிக் கொடி என்னும்படியாகவும், நூல் போன்றும் நுண்ணிய இடையும், ஆகிய இவைகளை உடைய விலைமாதர்கள்.

      பொன் கண்ட உடன் களி கூர்ந்து பேசிகள் --- பொருளைப் பார்த்ததும் மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள்.

      குண்டுணியும் குரல் --- கலகத்தை மூட்டுகின்ற சொல்லை உடையவர்கள்.

     சாங்கம் ஓதிகள் --- கவனமாகப் பேசுபவர்கள்.

      கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் --- கண்களைச் சுழற்றி, பார்வையைத் தொலைவில் செலுத்துபவர்கள்.

     சதிகாரர் --- வஞ்சகத்தை உடையவர்கள்.
          
    கஞ்சுளியும் தடி ஈந்து போ என --- (தம்மிடத்தில் வந்தவருக்கு) பிச்சைக்காரர்கள் ஏந்துகின்ற பையையும், தடி ஒன்றையும் கொடுத்துப் போ என்று விரட்டி,

     நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் --- நஞ்சினும் கொடிய வஞ்சகம் நிறைந்த பாவிகள், (ஆகிய இவர்களின்)

      கம்பையிலும் சடம் மாய்ந்து --- அதிகார வம்பில் அகப்பட்டு உடல் வாடி,

     நாயனும் உழல்வேனோ --- நாயினும் கடையவனாகிய அடியேன் திரிவது தகுமோ? தகாது.


பொழிப்புரை

தேவர்களோடு, பெரும் தவத்தைப் புரிகின்றவர்களும். தாமரையிலே வாசம் செய்யும் பிரமதேவனும், திருமகள் துணைவனான திருமாலும், கோ என ஒலம் இட்டு அலற, அஞ்சாதீர்கள் என்று சொல்லும்படியாக வெளிப்பட்டு, வீரத்துடன், அரக்கர்களின் உடல்கள் வலி இழந்து ஒடுங்கி, உயிரை விடும்படியும், கடல்களும், எட்டுத் திக்கில் உள்ள மலைகளும், பொடியாகி அழியவும்,  இயமன் தனது பாசத்தை வீசும்படியாகவும், வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!

         மலர்ச் செண்டை அணிந்துள்ள திருச்சடையில் பாம்பு, கங்கை நதி, பிறைச் சந்திரன், ஆகியவற்றோடு எலும்பை அணிந்தவரும், பெருமைக்கு உரிய திருநீற்றைப் பூசிய சிவந்த திருமேனியை உடையவரும் ஆன சிவபெருமானின் திருப்புதல்வரே!

     சிவந்த திருமேனியை உடையவரே!

     வேலாயுதத்தைத் தரித்தவரே!

     முருகப் பெருமானே!

     சந்திரனை ஒத்த திருமுகத்தை உடையவள், சந்தனக் குழம்பைப் பூசிய மார்பினை உடையவள், அடியேனது உள்ளத்தில் புகுந்து உள்ளவளா, உமது தோழி வள்ளிநாயகியுடன், திருவுள்ளம் மகிழ்ந்து, திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் எழுந்தருள் இருக்கும் பெருமையில் மிக்கவரே!

         வண்டுகள் பொருந்தி உள்ள நறுமலர்களை அணிந்த கூந்தலை உடையவர்கள். அம்பினைப் போன்ற கண்களும், வில்லைப் போன்று வளைந்த ஒளி மிக்க நெற்றியும், வளப்பம் மிக்க முத்துக்களைப் போன்ற வரிசையாக அமைந்துள்ள பற்களும், குயிலைப் போன்ற இனிய மொழிகளும், மலை போன்ற மார்பகங்களும், அவற்றின் மேல் படர்ந்துள்ள அழகிய தேமலும், அழகிய குமிழம் பூ போன்ற மூக்கும், மூங்கிலைப் போன்ற தோள்களும், கைகளும், வஞ்சிக் கொடி என்னும்படியாகவும், நூல் போன்றும் நுண்ணிய இடையும், ஆகிய இவைகளை உடைய விலைமாதர்கள். பொருளைப் பார்த்ததும் மகிழ்ச்சி மிகுந்து பேசுபவர்கள். கலகத்தை மூட்டுகின்ற சொல்லை உடையவர்கள்.
கவனமாகப் பேசுபவர்கள். கண்களைச் சுழற்றி, பார்வையைத் தொலைவில் செலுத்துபவர்கள். வஞ்சகத்தை உடையவர்கள். தம்மிடத்தில் வந்தவருக்கு, பிச்சைக்காரர்கள் ஏந்துகின்ற பையையும், தடி ஒன்றையும் கொடுத்துப் போ என்று விரட்டி, நஞ்சினும் கொடிய வஞ்சகம் நிறைந்த பாவிகள் ஆகிய இவர்களின் அதிகார வம்பில் அகப்பட்டு உடல் வாடி, நாயினும் கடையவனாகிய அடியேன் திரிவது தகுமோ? தகாது.


விரிவுரை


வண்டு அணியும் கமழ் கூந்தலார் ---

பெண்கள் தங்களின் கூந்தலில் அன்றலர்ந்த மணம் நிறைந்த மலர்களைச் சூடிக் கொள்வார்கள். அம் மலர்களில் பொருந்தி உள்ள தேனைப் பருக வண்டுகள் வந்து கூந்தலில் மொய்க்கும்.

விழி அம்பு இயலும் ---

பெண்களின் கண்கள் அம்பினைப் போன்று கூர்த்த பார்வையை உடையனவாக இருக்கும். தமது பார்வையால், ஆடவரைத் தம் வசமாக்குவர்.

சிலை போந்த வாள்நுதல் ---

சிலை - வில். வாள் - ஒளி.

வில்லைப் போன்று வளைந்த ஒளி மிக்க நெற்றி,

வண் தரளம் திகழ் ஆய்ந்த வார்நகை ---

வண், வண்மை - வளப்பம்.

தரளம் - முத்து.

நகை என்பது இங்கே சிரிப்பை உடைய வாயைக் குறித்து நின்றது.

குயில்போல வண் பயிலும் ---

வண், வண்மை - வளப்பம்.

பயிலுதல் - சொல்லுதல், பழகுதல்.

குயிலைப் போல இனிமையான செற்களைப் பயிலுபவர்கள்.


குவடு ஆண்ட மார்முலையின் பொறி ---

குவடு - மலை முகடு.

பொறி - தேமல்.

அம் குமிழ் ---

அழகிய குமிழம் பூ போன்ற மூக்கு,

ஆம்பல் தோள் கரம் ---

ஆம்பல் - மூங்கில்.

மூங்கிலைப் போன்ற தோள்கள், கைகள்,

வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் ---

வஞ்சிக் கொடி போன்று ஒசிந்தும், நூலைப் போன்று மெலிந்தும் பெண்களின் இடையானது இருக்கும். இது சாமுத்திரிகா இலக்கணம்.

பொன் கண்ட உடன் களி கூர்ந்து பேசிகள் ---

பொருள் மீது ஆசை கொண்டு, அதற்காகத் தமது உடம்பை விலை பேசுபவர்கள் விலைமாதர்கள். தம்மடத்தில் வருபவர்களிடம் மிகுந்த பொன் இருந்தால் உள்ளம் மகிழ்ந்து பேசுவார்கள். "பொருள் கவர் சிந்தை அரிவையர்" என்று பிறிதோரிடத்தில் அடிகளார் அருளி இருப்பது காண்க.

பொருளின் மேல் ப்ரிய காம ஆகாரிகள்,
     பரிவு போல் புணர் க்ரீடா பீடிகள்,
     புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்,......கொங்கைமேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்,
     மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்,
     புலையர் மாட்டும் மறாதே கூடிகள், ...... நெஞ்சமாயம்

கருத ஒணாப் பல கோடா கோடிகள்,
     விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள்,
     கலவி சாத்திர நூலே ஓதிகள், ...... தங்கள் ஆசைக்
கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள்,
     அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள்,
     கருணை நோக்கம் இலாமா பாவிகள்.....இன்பம்ஆமோ?  --- திருப்புகழ்.

உயிர்க்கூடு விடும் அளவும் உமைக் கூடி மருவு தொழில்
     ஒருக்காலும் நெகிழ்வது இலை ...... எனவே, சூள்
உரைத்தே, முன் மருவினரை வெறுத்து, ம திரவியம்
     அது உடைத்தாய் பின் வருகும் அவர் ......எதிரேபோய்ப்
பயில் பேசி, ரவுபகல் அவர்க்கான பதமை பல
     படப்பேசி, உறுபொருள் கொள் ...... விலைமாதர்,          --- திருப்புகழ்.


குண்டுணியும் குரல் ---

குண்டு - தாழ்வு.

குண்டுணி - கலகம் மூட்டுபவர், கோள் சொல்பவர்,

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண்டமி ழிருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே.           ---  விவேக சிந்தாமணி.

சாங்கம் ஓதிகள் ---

சாங்கம் - குறைவு இன்மை, சாயல், கிரமம். கவனமாக.

தங்களிடத்தில் ஏதும் குறை இல்லாதது போல, கவனமாகப் பேசுவதில் வல்லவர்கள்.

"இரவுபகல் அவர்க்கான பதமை பலபடப் பேசி, உறுபொருள் கொள் விலைமாதர்" என இவர்களை அடிகாளர் உரைத்திருப்பது காண்க.

கண் சுழலும்படி தாண்டி ஆடிகள் ---

கண்களை இங்கும் அங்குமாகச் சுழல விட்டு, தம்மிடத்தில் வந்தொரோடு உரையாடி, உறவாடிக் கொண்டே இருக்கும்போதே, அவர்களது கண்கள் தாண்டிச் சென்று, இன்னும் யார் வருவது என்று பார்க்கும். அவர்கள் கண்கள் எப்போதும் ஆடிக் கொண்டே இருக்கும். நிலையாக ஓரிடத்தில் நில்லா.


கஞ்சுளியும் தடி ஈந்து போ என நஞ்சை இடும் கவடு ஆர்ந்த பாவிகள் ---

கஞ்சுளி - பிச்சைக்காரர்கள் வைத்துள்ள ஒருவிதமான பை.

வந்தவரிடத்தில் உள்ள பொருளை எல்லாம் கவர்ந்து, அவரை ஓட்டாண்டி ஆக்கி, பொருள் வற்றிய பின்னர், பிச்சைக்காரனுக்கு உள்ள பையையும், ஒரு தடியையும் அவரிடத்தில் கொடுத்து போ என்று விரட்டி அடிப்பார்கள். இன்னும் யார் வருவார் என்று பார்த்து இருப்பார்கள். புதியவர் ஒருவர் வந்தால் அவரோடு கொஞ்சிக் குலாவுவார்கள். பழையவரைக் கைவிட்டு விடுவார்கள். இது நஞ்சை விடவும் கொடிய செயல்.

கலை நெகிழ்க்கவும், மயல் விளைக்கவும்,
     நயம் கொண்டு,  ங்கு இருந்தே
     குணுகி இட்டு, ள பொருள் பறித்து,
முனிந்து, ங்கு ஒன்று கண்டே,
     கலகம் இட்டு அவர் அகல அடித்தபின்,
     வரும் பங்கு அங்கு உணங்க, ர் .....புதிய பேர் உடனே
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள்.....

என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் காட்டி உள்ளமை காண்க.
                               
கம்பையிலும் சடம் மாய்ந்து, நாயனும் உழல்வேனோ ---

கம்பை - அதிகார வம்பு.

சடம் - உடம்பு.
  
திரு பாங்கர் --- 

திருமகள் துணைவனான திருமால்.

"திருவை ஒரு பங்கர்" என்று அடிகளார் பிறிதோர் இடத்தில் அருளி உள்ளது அறிக.

கோ என ---  

கோ --- பேரொலி செய்தல் குறிப்பு. அச்சம் காரணமாக எழுப்பபடும் ஓசை.

"அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ என நின்று வாய் விடவே" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருளி இருத்தல் காண்க.


கன சாம்பல் பூசிய செம் சடலன் ---

கனம் - பெருமை. சடலம் - உடல்.

சாம்பல் - நீறுபட்டது.

பெருமைக்கு உரியது திருநீறு. "பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு" என அருளினார் திருஞானசம்பந்தர்.

சிவபெருமான், "மெய் எலாம் வேண்ணீறு சண்ணித்த மேனியன்" என்பார் அப்பர் பெருமான்.
  
என்றன் உள்ளம் புகு பாங்கிமானோடு சிந்தை மகிழ்ந்து, மயேந்திரம் மேவிய பெருமாளே ---

பாங்கி - தோழி.

மான் - கான் மகளாகிய வள்ளிநாயகி.

முருகப் பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் திருவுள்ளத்தைத் தமது திருக்கோயிலாகக் கொண்டு வள்ளிநாயகியுடன் எழுந்தருளி இருப்பார்.

திருமுறைகளில் திருமயேந்திரப்பள்ளி என வழங்கும். சோழ நாட்டு, காவிரி வடகரைத் திருத்தலம். சிதம்பரத்தில் சீர்காழி சாலையில் கொள்ளிடம் சென்று, அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக சென்று நல்லூர், முதலைமேடு ஆகிய ஊர்களைக் கடந்து திருமயேந்திரப்பள்ளி அடையலாம். அருகில் உள்ள மற்றொரு திருத்தலம் திருநல்லூர்ப் பெருமணம் (ஆச்சாள்புரம்) 3 கி. மி. தொலைவில் உள்ளது. சிதம்பரம், சீர்காழியிலிருந்து மயேந்திரப்பள்ளிக்கு ஆச்சாள்புரம் வழியாக நகரப் பேருந்துகள் செல்கின்றன. மகேந்திரப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1/2 கி.மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.

இறைவர் : திருமேனியழகர், சோமசுந்தரர்.
இறைவியார் : வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை.
தல மரம்      : கண்டமரம், தாழை.
தீர்த்தம்       : மயேந்திர தீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவு தவிர அருள்வாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...