திருமுட்டம் - 0772. சரம்வெற்றிக் கயல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சரம்வெற்றிக் கயல் (திருமுட்டம்)

முருகா!
விலைமாதர் உறவு தவிர அருள்.


தனனத் தத்தன தானன தானன
     தனனத் தத்தன தானன தானன
     தனனத் தத்தன தானன தானன ...... தனதான


சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
     சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
     தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள்

சனுமெத் தப்பரி வாகிய மாமய
     லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
     தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்

விரகத் துர்க்குண வேசைய ராசையர்
     பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
     விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக

மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
     கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
     விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ

பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
     புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது

புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
     புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா

திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
     சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்

திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
     மகளைப் பொற்றன வாசையொ டாடிய
     திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சரம் வெற்றி, கயலாம் எனும் வேல்விழி,
     சிலை வட்டப் புருவார், குழல் கார்முகில்,
     தனம் முத்துக் கிரியாம் எனும், நூல்இடை ......மடவார்கள்

சனு மெத்தப் பரிவு ஆகிய மாமயல்
     இடும் உத்தித் திகழ் மால்கொடு பாவையர்,
     தகுதத் தக்கிட தோதகு தீத என ...... விளையாடும்,

விரகத் துர்க்குண வேசையர், சையர்,
     பணம் மெத்தப் பறி காரிகள், மாறிகள்,
     விதம் மெத்தக்கொடு மேவிகள், பாவிகள், ......அதிபோகம்

மெலிவு உற்றுக் குறி நாறிகள், பீறிகள்,
     கலகத்தைச் செயும் மோடிகள், பீடிகள்,
     விருது இட்டுக் குடி கேடிகள், சேடிகள், ...உறவுஆமோ?

பொரு வெற்றிக் கழை வார் சிலையான் உடல்
     எரிபட்டுச் சருகாய் விழவே, நகை
     புகுவித்தப் பிறை வாழ் சடையான்இடம் ......ஒருமாது

புகழ் சத்திச் சிலுகா வணம் மீது உறை
     சிவபத்திப் பரமேஸ்வரியாள், திரி
     புவனத்தைப் பரிவாய் முதல் ஈன்உமை ....அருள்பாலா!

திரையில் பொன் கிரி ஆடவும், வாசுகி
     புனைவித்துத் தலை நாள் அமுது ஆர் சுவை
     சிவபத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் ...... அரி ராமர்

திரு உற்றுப் பணி ஆதி வராகர் தம்
     மகளைப் பொன்தன ஆசையொடு ஆடிய
     திருமுட்டப் பதி வாழ் முருகா! சுரர் ...... பெருமாளே.


பதவுரை

      பொரு வெற்றிக் கழை வார்சிலையான் உடல் எரிபட்டுச் சருகாய் விழவே --- காமப் போரில் வெற்றியைத் தரும் நீண்ட கரும்பு வில்லை உடைய மன்மதனின் உடல் எரிந்து உலர்ந்த சருகு போல் விழும்படி

     நகை புகுவித்தப் பிறைவாழ் சடையான் இடம் --- சிரித்து எரி புகுவித்த பிறைச்சந்திரன் வாழும் சடையை உடைய, சிவபெருமானின் இடப்பாகத்தில் உறையும்

      ஒரு மாது --- ஒப்பற்ற மாது,

     புகழ் சத்தி --- புகழப்படும் பராசத்தி,

     சிலுகா வ(ண்)ண(ம்) மீது உறை --- நிலைகுலையாத பான்மை உள்ள,

     சிவபத்திப் பரமேச்வரியாள் --- சிவபக்தி மிகுந்த பரமேசுவரியானவள்,

     திரிபுவனத்தைப் பரிவாய் முதல் ஈன் உமை அருள்பாலா --- மூவுலகங்களையும் அருளுடன் முன்பு படைத்தவளாகிய உமாதேவியார் அருளிய குழந்தையே,

      திரையில் பொன்கிரி ஆடவும்  --- அலை மிகுந்த பாற்கடலில் பொன்மலை ஆகிய மேருமலை மத்தாகச் சுழன்று ஆட,

     வாசுகி புனைவித்து ---  வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கட்டி,

     தலைநாள் --- மேநாளில் வந்து தோன்றிய

     சுவை ஆர் அமுது --- சுவை நிறைந்த அமுதத்தை,   

     சிவபத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் --- சிவன் அடியார்களாகிய தேவர்களுக்கு இது ஆகுக என்று பகிர்ந்து அளித்த திருமால்

     திரு உற்றுப் பணி ஆதிவராகர் தம் மகளை --- இலக்குமி தேவி வழிபட்ட ஆதிவராகப் பெருமானுடைய மகளாகிய வள்ளிநாயகியின்

      பொன்தன ஆசையொடு ஆடிய --- அழகிய மார்பகத்தின் மீது ஆசை கொண்டு அவளுடன் விளையாடிய,

     திருமுட்டப் பதி வாழ் முருகா --- திருமுட்டம் என்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற முருகப் பெருமானே!

     சுரர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      வெற்றி சரம் --- வெல்லுகின்ற அம்பு,

     கயல் ஆம் எனும் வேல்விழி --- மீன் என்றும் வேல் என்றும் உவமிக்கப்படும் கண்கள்,

     சிலை வட்டப் புருவம் --- வில்லைப் போன்று வளைந்த புருவம்,

     ஆர் குழல் கார்முகில் --- மேகம் போன்று கரிய கூந்தல்,

     தனம் முத்துக் கிரி ஆம் எனும் --- முத்து மாலையை அணிந்ததும், மலை போன்றதும் ஆகிய மார்பகங்களும்,

     நூல் இடை மடவார்கள் --- நூல் போன்று நுணுகிய இடையை உடைய விலைமாதர்கள்.

      சனு மெத்தப் பரிவாகிய --- விருப்பத்தோடு, அன்பு மிகுந்து,

     மாமயல் இடும் உத்தித் திகழ் மால் கொடு பாவையர் --- மனமயக்கத்தை விளைவிப்பதாகிய உத்தியைக் கற்ற, ஆசையோடு கூடிய பெண்கள்.

     தகுதத் தக்கிட தோதகு தீதென விளையாடும் விரகத் துர்க்குண வேசையர் --- தகுதத் தக்கிட தோதகு தீதென்ற தக்க ஒலிகளோடு நடனமாடி விளையாடுகின்ற சூழ்ச்சியும், தீய ஒழுக்கமும் உடைய பொதுமகளிர்.

     ஆசையர் --- பொருளில் ஆசையை வைத்தவர்கள்.

      பணம் மெத்தப் பறிகாரிகள் --- பொருளை அதிகமாகப் பறிக்கின்றவர்கள்.

     மாறிகள் --- அடிக்கடி குணம் மாறுபவர்கள்.

     விதம் மெத்தக் கொடு மேவிகள் --- பல விதமான நடை உடை பாவனைகளைக் கொண்டவர்கள்.

     பாவிகள் --- பாவத்தைப் பயில்பவர்கள்.

     அதிபோக மெலிவுற்று --- மிகுதியாகப் போகத்தை அனுபவிப்பதால் உடல் மெலிவு உற்றவர்கள்.

     குறிநாறிகள் பீறிகள் --- தீநாற்றமும் கிழிவும் உடைய குறிகளை உடையவர்கள்.

      கலகத்தைச் செயும் மோடிகள் --- கலகம் விளைவிக்கும் மூதேவிகள்.

     பீடிகள் -- துன்பத்தைச் செய்பவர்கள்.

     விருது இட்டுக் குடிகேடிகள் --- பெருமையாகப் பேசிக் குடியைக் கெடுப்பவர்கள்.

     சேடிகள் --- பணிப்பெண்கள்.

     உறவு ஆமோ --- இத்தகையவர்களின் கூட்டுறவு தகுமோ?  தகாது.

பொழிப்புரை

     காமப் போரில் வெற்றியைத் தரும் நீண்ட கரும்பு வில்லை உடைய மன்மதனின் உடல் எரிந்து உலர்ந்த சருகு போல் விழும்படி சிரித்து எரி புகுவித்த, பிறைச்சந்திரன் வாழும் சடையை உடைய, சிவபெருமானின் இடப்பாகத்தில் உறையும் ஒப்பற்ற மாது. புகழப்படும் பராசத்தி. நிலைகுலையாத பான்மை உள்ள சிவபக்தி மிகுந்த பரமேசுவரியானவள். மூவுலகங்களையும் அருளுடன் முன்பு படைத்தவளாகிய உமாதேவியார் அருளிய குழந்தையே!

     பாற்கடலில் பொன்மலை ஆகிய மேருமலை மத்தாகச் சுழன்று ஆட, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கட்டிக் கடைய,  மேநாளில் வந்து தோன்றிய சுவை நிறைந்த அமுதத்தை   சிவன் அடியார்களாகிய தேவர்களுக்கு ஆகுக என்று பகிர்ந்து அளித்த திருமால். இலக்குமி தேவி வழிபட்ட ஆதிவராகப் பெருமானுடைய மகளாகிய வள்ளிநாயகியின் அழகிய மார்பகத்தின் மீது ஆசை கொண்டு அவளுடன் விளையாடிய,
திருமுட்டம் என்னும் திருப்பதியில் வீற்றிருக்கின்ற முருகப் பெருமானே!

     தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         வெல்லுகின்ற அம்பு என்றும், மீன் என்றும் வேல் என்றும் உவமிக்கப்படும் கண்கள். வில்லைப் போன்று வளைந்த புருவம். மேகம் போன்று கரிய கூந்தல், முத்து மாலையை அணிந்ததும், மலை போன்றதும் ஆகிய மார்பகங்கள். நூல் போன்று நுணுகிய இடையை உடைய விலைமாதர்கள்.  விருப்பத்தோடு, அன்பு மிகுந்து, மனமயக்கத்தை விளைவிப்பதாகிய உத்தியைக் கற்ற, ஆசையோடு கூடிய பெண்கள். தகுதத் தக்கிட தோதகு தீதென்ற தக்க ஒலிகளோடு நடனமாடி விளையாடுகின்ற சூழ்ச்சியும், தீய ஒழுக்கமும் உடைய பொதுமகளிர்.  பொருளில் ஆசையை வைத்தவர்கள். பொருளை அதிகமாகப் பறிக்கின்றவர்கள். அடிக்கடி குணம் மாறுபவர்கள்.  விதவிதமான நடை உடை பாவனைகளைக் கொண்டவர்கள். பாவத்தைப் பயில்பவர்கள்.
மிகுதியாகப் போகத்தை அனுபவிப்பதால் உடல் மெலிவு உற்றவர்கள்.  தீநாற்றமும் கிழிவும் உடைய குறிகளை உடையவர்கள். கலகம் விளைவிக்கும் மூதேவிகள். துன்பத்தைச் செய்பவர்கள். பெருமையாகப் பேசிக் குடியைக் கெடுப்பவர்கள்.
பணிப்பெண்கள். இத்தகையவர்களின் கூட்டுறவு தகுமோ?  தகாது.


விரிவுரை


வெற்றி சரம் ---

சரம் - விடுவது, அசையும் பொருள். விட்டுச் செலுத்தும் ஆயுதம் சரம் எனப்பட்டது. இலக்கைத் தாக்கி வெற்றி கொள்ளுவது.

அம்பு பொன்ற கூர்மையான கண்களால் ஆடவரை மயக்கி, வெற்றி கொள்வர் விலைமாதர்.

கயல் ஆம் எனும் வேல்விழி ---

கயல் - மீன் இனம். மீனின் கண்கள் இங்கும் அங்குமாக பிறழ்வது போல் பிறழ்ந்து நோக்கும் கண்களை உடையவர்கள் விலைமாதர்கள்.

வேல் - வெல் என்னும் முதல் நிலை நீண்ட தொழில் பெயர்.

வேலைப் போன்ற நீண்ட கூரிய விழிகளை உடையவர்கள்.

சிலை வட்டப் புருவம் ---

சிலை - வில். வில்லைப் போன்று வளைந்த புருவம்,

ஆர் குழல் கார்முகில் ---

கார் - கருமை பொருந்திய.  முகில் - மேகம்.

கருமேகம் போன்ற கரிய கூந்தல்,

தனம் முத்துக் கிரி ஆம் எனும் ---

மார்பகங்கள் முத்து மலைப் போன்று உள்ளவை. முத்து மாலை அணிந்து உள்ள, மலை போன்று பருத்த தனங்கள் என்றும் கொள்ளலாம்.

நூல் இடை மடவார்கள் ---

பெண்களின் இடையானது மெலிந்து இருக்கவேண்டும். நூலைப் போன்று மெலிந்துள்ள இடை.

சனு, மெத்தப் பரிவாகிய மாமயல் இடும் உத்தித் திகழ் ---

சனு - விருப்பம், தயவு.

பரிவு - அன்பு.

உத்தி - யுத்தி. சொல், சூழ்ச்சி.

மால் கொடு பாவையர் ---

மயக்கத்தைப் புரியும் பாவையைப் போன்றவர்கள்.  பாவை என்னும் பதுமை மிகவும் அழகாக இருக்கும். கண்டவரை மயக்கும்.

தகுதத் தக்கிட தோதகு தீதென விளையாடும் விரகத் துர்க்குண வேசையர் ---

விரகம் - உபாயம், சூழ்ச்சி.

துருக்குணம் - தீய குணம்.

வேசையர் - பரத்தையர்.

ஆசையர் ---

பொருளில் மிகவும் ஆசையை வைத்தவர்கள்.

பணம் மெத்தப் பறிகாரிகள் ---

அந்த ஆசை காரணமாகத் தம்மினம் வந்தவர்கள் வைத்துள்ள பொருளை அதிகமாகப் பறிக்கின்றவர்கள்.

மாறிகள் ---

அடிக்கடி குணம் மாறி, வந்தவரை எல்லாம் பொருள் தீர்ந்தபின் இதறித் தள்ளி, இனி வருவது யார் என்று தேடும் குணத்தை அடையவர்கள்.

ஒருவரொடு கண்கள், ஒருவரொடு கொங்கை,
     ஒருவரொடு செங்கை ...... உறவாடி,
ஒருவரொடு சிந்தை, ஒருவரொடு நிந்தை,
     ஒருவரொடு இரண்டும் ...... உரையாரை

மருவ, மிக அன்பு பெருக உளது என்று
     மனம் நினையும் இந்த ...... மருள் தீர,
வனசம் என வண்டு தனதனன என்று
     மருவு சரணங்கள் ......  அருளாயோ?           ---  திருப்புகழ்.


விதம் மெத்தக் கொடு மேவிகள் ---

விதவிதமான நடை உடை பாவனைகளால் ஆடவரை மயக்குபவர்கள்.

பாவிகள் ---

பாவத்துக்கு இடமான செயல்களையே புரிகின்றவர்கள்.

அதிபோக மெலிவுற்று குறிநாறிகள் பீறிகள் --- 

மிகுதியாகப் போகத்தை அனுபவிப்பதால் உடல் மெலிவு உற்றவர்கள். ஆனாலும் பொருள் ஆசை மிகுதியால் உள்ளம் மெலிவு அடையாதவர்கள். புண் என்பதால் அவர்களின் குறிகள், தீநாற்றமும் கிழிவும் உடையதாக இருக்கும்.

பெண்ஆகி வந்தது ஒரு மாயப்பிசாசம் பிடித்திட்டு, ன்னைக்
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ணாம் குழி இடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க
எண்ணாது, னைமறந்தேன் இறைவா கச்சி ஏகம்பனே.      --- பட்டினத்தார்.


கலகத்தைச் செயும் மோடிகள் ---

மோடி - மூதேவி.

பீடிகள் --

பீடித்தல் - பிடித்துத் துன்புறுத்தல்.

விருது இட்டுக் குடிகேடிகள் ---

தம்மை நாடி வந்தவரை பெருமை கொள்ளும்படியாகப் புகழ்ந்து பேசி, பொன்னையும் பொருளையும் பறித்து, வறியவராக்கி, அவரது குடியையே கெடுப்பவர்கள்.

சேடிகள் ---

சேடி - ஏவல் செயல் புரிபவள். தோழி.


பொரு வெற்றிக் கழை வார்சிலையான் உடல் எரிபட்டுச் சருகாய் விழவே நகை புகுவித்தப் பிறைவாழ் சடையான் ---

மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிவிழியால் எரித்த வரலாறு

இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர்.  அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமால், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்.

"சிவமூர்த்தியின் பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன் பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன் மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவனாகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை மணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்.

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருமானது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ?
இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெரு மூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே.

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.

மனமதனை அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று ஊங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்தி தேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும். இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி,
"மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான் மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது. 
  
"எதிர்த்திடு மதனைக் கடி முத்தர்" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

மகர கேதனமும், திகழ் செந்தமிழ்
     மலய மாருதமும், பல வெம் பரி-
          மள சிலீமுகமும், பல மஞ்சரி ...... வெறியாடும்,
மதுகர ஆரம் விகுஞ்ச அணியும், கர
     மதுர கார்முகமும், பொர வந்து எழு
          மதன ராஜனை வெந்து விழும்படி ...... முனி,பால   ---  (புகரில்) திருப்புகழ்.

திரையில் பொன்கிரி ஆடவும், வாசுகி புனைவித்து, தலைநாள் சுவை ஆர் அமுது சிவபத்தர்க்கு இது ஆம் எனவே பகிர் அரி ராமர் ---

சிவபத்தர்க்கு இது ஆம் - சிவனடியார்களாகிய தேவர்களுக்கு இந்த அமுது ஆகட்டும் என்று பகிர்ந்து அளித்தவர் இராமாவதாரத்தை எடுத்த திருமால். எண்ணற்ற தேவர்கள் வானில் பொலிவு எய்த சிவபெருமான் ஆலம் உண்டார் என்பதைப் பின்வரும் தேவாரப் பாடலால் அறியலாம்.

உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு
                  ஒருதோழம் தேவர்
விண்ணில்பொலிய அமுதம் அளித்த
                  விடைசேர் கொடியண்ணல்
பண்ணில் சிறைவண்டு அறைபூஞ் சோலைப்
                  புறவம் பதியாக
எண்ணில் சிறந்த இமையோர் ஏத்த
                  உமையோடு இருந்தானே.       ---  திருஞானசம்பந்தர்.


திரு உற்றுப் பணி ஆதிவராகர் தம் மகளை பொன்தன ஆசையொடு ஆடிய திருமுட்டப் பதி வாழ் முருகா ---

திரும்முட்டம் என்னும் திருப்பதி கடலூரிலிருந்து 52 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அமைந்துள்ள இரயில் நிலையம், 20 கிமீ தொலைவில் உள்ள விருத்தாச்சலம் ஆகும். திருமுட்டத்துக்குக் கிழக்கில் 45 கி.மீ. தொலைவில் சிதம்பரம் உள்ளது. வடக்கில் விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்றம். கேற்கே 32 கி. மீ. தொலைவில் காட்டுமன்னார் கோயில். தெற்கில் 24 கி. மீ. தொலைவில் செயங்கொண்டம்.

இத் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள பெருமாள், ஆதவராகப் பெருமாள் என்னும் திருப்பெயர் பெற்றுள்ளார். திருமகள் வழிபட்ட திருத்தலம்.

ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலுக்குப் பின்புறத்தில் அமைந்துள்ளது சிவன் திருக்கோயில். இங்கு எழுந்தருளி உள்ள முருகப் பெருமானையே அடிகளார் பாடியுள்ளார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் உறவு தவிர அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...