சீகாழி - 0776. இரதமான தேன்ஊறல்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இரதமான தேன்ஊறல் (சீகாழி)

முருகா!  
தீயவர் நரகில் வீழ்ந்து நடலை உறுவர்.
அடியேன் மாதர் வசமாகி வீணாகாவண்ணம்
திருவருள் தந்து ஆட்கொள்வீர்.


தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான


இரத மான தேனூற லதர மான மாமாத
     ரெதிரி லாத பூணார ...... முலைமீதே

இனிது போடு மேகாச உடையி னாலு மாலால
     விழியி னாலு மாலாகி ...... யநுராக

விரக மாகி யேபாய லிடைவி டாமல் நாடோறு
     ம்ருகம தாதி சேரோதி ...... நிழல்மூழ்கி

விளையு மோக மாமாயை சுழலு மாறு நாயேனும்
     விழல னாய்வி டாதேநி ...... னருள்தாராய்

அரக ராஎ னாமூடர் திருவெ ணீறி டாமூடர்
     அடிகள் பூசி யாமூடர் ...... கரையேற

அறிவு நூல்க லாமூடர் நெறியி லேநி லாமூடர்
     அறம்வி சாரி யாமூடர் ...... நரகேழிற்

புரள வீழ்வ ரீராறு கரவி நோத சேய்சோதி
     புரண பூர ணாகார ...... முருகோனே

புயலு லாவு சேணாடு பரவி நாளு மீடேறு
     புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இரதம் ஆன தேன் ஊறல் தரம் ஆன மாமாதர்
     எதிர் இலாத பூண்ஆர ...... முலைமீதே,

இனிது போடும் ஏகாச உடையினாலும், ஆலால
     விழியினாலும் மால் ஆகி, ......அநுராக

விரகம் ஆகியே, பாயல் இடை விடாமல் நாள்தோறும்,
     ம்ருகமத ஆதி சேர் ஓதி ...... நிழல்மூழ்கி,

விளையும் மோக மாமாயை சுழலுமாறு, நாயேனும்
     விழலனாய் விடாதே நின் ...... அருள்தாராய்.

அர அரா எனா மூடர், திருவெண் நீறு இடாமூடர்,
     அடிகள் பூசியா மூடர், ...... கரையேற

அறிவு நூல் கலா மூடர், நெறியிலே நிலா மூடர்,
     அறம் விசாரியா மூடர், ...... நரகு ஏழில்

புரள வீழ்வர், ஈராறு கர! விநோத சேய்! சோதி
     புரண பூரண ஆகார ...... முருகோனே!

புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு
     புகலி மேவி வாழ்தேவர் ...... பெருமாளே.


பதவுரை

         அரகரா எனா மூடர் --- பாவங்களைப் போக்கவல்ல இறைவனுடைய திருநாமங்களைக் கூறாத மூடர்களும்,

         திரு வெண் நீறு இடா மூடர் --- தெய்வத் தன்மையைத் தரும் வெண்மையான திருநீற்றினைத் தரித்துக் கொள்ளாத மூடர்களும்,

         அடிகள் பூசியா மூடர் --- தேவரீருடைய திருவடிகளைப் பூசிக்காத மூடர்களும்,

         கரை ஏற அறிவு நூல் கல்லா மூடர் --- பிறவிப் பெருங்கடலினின்றும் முத்திக் கரை ஏறும் பொருட்டு அறிவு நூல்களைக் கற்காத மூடர்களும்,

         நெறியிலே நில்லா மூடர் --- நீதி நெறியிலே நிற்காத மூடர்களும்,

         அறம் விசாரியா மூடர் --- அறத்தை ஆராய்ந்து அறியாத மூடர்களும்,

         நரகு ஏழில் புரள வீழ்வர் --- ஏழு நரகங்களில் புரண்டு துன்புறும் பொருட்டு வீழ்வர்.

         ஈர் ஆறு கர --- பன்னிரண்டு திருக் கரங்களை உடையவரே!

       விநோத --- ஆனந்த சொரூபரே

       சேய் --- இளம் பூரணரே

       சோதி  --- ஒளிமயமானவரே

         புரண --- பழமையானவரே!

        பூரண ஆகார --- எங்கும் நிறைந்த  வடிவினரே!

       முருகோனே --- முருகப் பெருமானே!

         புயல் உலாவு சேணாடு --- மேகங்கள் உலாவுகின்ற விண்ணுலகம்

        பரவி நாளும் ஈடேறு --- புகழ்ந்து என்றும் கடைத் தேறுவதற்கு உரியதாகிய

       புகலி மேவி வாழ் --- சீகாழியில் எழுந்தருளி வாழ்கின்ற,

       தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே

         இரதமான தேன் ஊறல் அதரம் ஆன மா மாதர் --- இனிமையான  தேன் ஊறுகின்ற இதழ்களுடன் கூடிய அழகிய பெண்களது

         எதிர் இலாத பூண் ஆர முலை மீதே இனிது போடும் ஏகாசம் உடையினாலும் --- நிகர் இல்லாத அணிகலன்களோடு கூடிய தனங்கள் மீது அழகாக மூடி உள்ள மேல் ஆடையினாலும்,

       ஆலால விழியினாலும் --- ஆலகால விடம் போன்ற கண்களினாலும்

       மால் ஆகி --- அறிவு மயக்கமுற்று,

         அநுராக விரகம் ஆகியே --- காமப் பற்றுடன் மோகத்தைக் கொண்டு,

        பாயல் இடைவிடாமல் நாடோறும் --- சயனத்தின் மீது நாள்தோறும் ஒழியாமல் படுத்து,

        ம்ருகமத ஆதிசேர் ஓதி நிழல் மூழ்கி --- கஸ்தூரி முதலிய நறுமணங்கள் சேர்ந்துள்ள பெண்களின் கூந்தலின் நிழலில் மூழ்கி,

          விளையும் மோக மா மாயை சுழலுமாறு --- அதனால் மிகுதியாக உண்டாகும் மோகத்தினால் பெரிய மாயையில் சுழலுகின்றவனாய்,

          நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள் தாராய் --- நாயினும் அடியவனாகிய நான் வீணன் ஆகாதவாறு தேவரீருடைய திருவருளைத் தந்தருளுக.


பொழிப்புரை

         பாவங்களைப் போக்கவல்ல இறைவனுடைய திருநாமங்களைக் கூறாத மூடர்களும்,

     தெய்வத் தன்மையைத் தரும் வெண்மையான திருநீற்றினைத் தரித்துக் கொள்ளாத மூடர்களும்,

     தேவரீருடைய திருவடிகளைப் பூசிக்காத மூடர்களும்,

     பிறவிப் பெருங்கடனின்றும் முத்திக்கரை ஏறும் பொருட்டு அறிவு நூல்களைக் கற்காத மூடர்களும்,

     நீதி நெறியிலே நிற்காத மூடர்களும்,

     அறத்தை ஆராய்ந்து அறியாத மூடர்களும்,

     ஏழு நரகங்களில் புரண்டு துன்புறும் பொருட்டு வீழ்வர்.

         பன்னிரண்டு திருக் கரங்களை உடையவரே!

         ஆனந்த சொரூபரே!

         இளம் பூரணரே!

         ஒளிமயமானவரே!

         பழமையானவரே!

         எங்கும் நிறைந்த வடிவினரே!

         முருகப் பெருமானே!

         மேகங்கள் உலாவுகின்ற விண்ணுலகம் புகழ்ந்து என்றும் கடைத் தேறுவதற்கு உரியதாகிய சீகாழியில் எழுந்தருளி வாழ்கின்ற, தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

         இனிமையான தேன் ஊறுகின்ற இதழ்களுடன் கூடிய அழகிய பெண்களது நிகர் இல்லாத அணிகலன்களோடு கூடிய தனங்கள் மீது அழகாக மூடி உள்ள மேல் ஆடையினாலும், ஆலகால விடம் போன்ற கண்களினாலும் மயக்கமுற்று, காமப் பற்றுடன் மோகத்தைக் கொண்டு, சயனத்தின் மீது நாள்தோறும் ஒழியாமல் படுத்து, கஸ்தூரி முதலிய நறுமணங்கள் சேர்ந்துள்ள பெண்களின் கூந்தலின் நிழலில் மூழ்கி, அதனால் மிகுதியாக உண்டாகும் மோகத்தினால் பெரிய மாயையில் சுழலுகின்றவனாய், நாயினும் அடியவனாகிய நான் வீணன் ஆகாதவாறு தேவரீருடைய திருவருளைத் தந்தருளுக.


விரிவுரை


இரதமான தேன் ஊறல் அதரமான மாமாதர் ---

காமுகர்க்குப் பெண்களுடைய அதரபானம் தேன்போல் இனிக்கும்.

பாலொடு தேன்கலந்து அற்றே, பணிமொழி
வால்எயிறு ஊறிய நீர்.                       ---  திருக்குறள்.

ஏகாச உடையினாலும் ---

ஏகாசம் - மேலாடை.

"பொருபூதரம் உரித்து ஏகாசம் இட்டா புராந்தகர்" என்று கந்தர் அலங்காரத்தில், "ஏகாசம்" என்ற சொல் பயின்று இருப்பதைக் காண்க. ஒரு பூதரும் என்று தொடங்கும் பாடல். பொதுப் பெண்கள் அழகிய ஆடையை மேல் மூடி உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுவர்.

கொடுந்தானைக் கோட்டு அழகும் என்பது நாலடியார்.  ஏகாசமான உடை வீசி என்று திருமாகாளம் திருப்புகழிலும் கூறுமாறு காண்க.

"ஏகாசம் இட்ட இருடிகள் போகாமல் ஆகாசம் காவல் என்று உந்தீபற" என்று மணிவாசகம் கூறுமாறும் காண்க.

ஆலால விழியினாலும் ---

ஆலகால விடம் போன்ற கருமையான கண்கள். அன்றியும் நஞ்சு உண்டாரையே கொல்லும். இந்தக் கண் கண்டாரையும் கொல்லும்.

மால் ஆகி --- 

மால் - மயக்கம். விலைமகளிரது மேலாடையினாலும் விழியினாலும் ஆடவர் அறிவு மயங்கும். அம் மயக்கமே பிறப்புக்கு வித்தாகின்றது.

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.                   ---  திருக்குறள்.

அநுராக விகாரமாகி ---

அநுராகம் - காமப் பற்று.  விகாரம் - மிகுந்த வேட்கை.

அரகரா எனா மூடர் ---

அரன் - பாவங்களைப் போக்குபவன். சிவ நாமங்களுக்குள் சிறந்த நாமம் இது. துயரங்கள் இன்றி வாழவேண்டும் என்பதே உயிர்களின் நோக்கம். துயரங்கள் நீங்க வேண்டுமானால் இந்த 'அரகர' என்ற திருநாமம் எங்கும் ஒலிக்கவேண்டும்.

எல்லாம் அரன் நாமமே சூழ்க,
வையகமும் துயர் தீர்கவே...

என்று அருளிச் செய்தார் திருஞானசம்பந்தர்.

புனிதமான அரன் நாமத்தைக் கூறாது அல்லல்படுகின்ற
மாந்தர்களின் அறிவின்மையைக் கருதி அடிகள் வருந்துகின்றனர்.  துன்பத்தைத் தவிர்த்து, இன்பத்தைத் தரவல்லது இத் திருநாமம்.  இதனை அறியாது துன்ப நீக்கத்திற்கு வேறுவேறு சாதனங்களை மேற்கொள்வது, கரும்பு இருக்க இரும்பைக் கடிப்பது போலும் என்க.

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து
     முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை
     இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை,
     ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க
     இரும்பு கடித்து எயத்த ஆறே!            --- அப்பர்.

அரஅர என்று அனுதினமும் உள்ளம் உருகி உரைப்பவர்க்கு அரிய காரியம் அகில உலகங்களிலும் இல்லை.  அமரத்துவத்தை அளிக்க வல்லது. பிறவாத பெற்றியைத் தரும்.

அரகர என்ன அரியது ஒன்றுஇல்லை,
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அரும்பிறப்பு அன்றே.            ---  திருமந்திரம்.

கந்தவுலகிலே முருகவேளுடைய கொலுவில் அடியார்கள் அரகரா என்று ஒலிக்கும் ஒலி கடல்போல் முழங்கும் என்று கொலு வகுப்பிலே அடிகள் கூறுகின்றனர்.

வருசிவன் அடியவர் அரகர எனமுறை
வழங்கு கடல்போல் முழங்க ஒருபால்...       --- கொலு வகுப்பு.

அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று
    அறுசமய நீதி ஒன்றும்              அமறியாமல்
  அசனம் இடுவார்கள் தங்கள் மனைகள் தலைவாசல் நின்று
    அநுதினமும் நாணம் இன்றி            அழிவேனோ.     --- (கருவின்) திருப்புகழ்.

திருவெணீறு இடா மூடர் ---

சிவஞான மயமானது திருநீறு. "சத்தி தான் யாதோ என்னில் தடை இலா ஞானம் ஆகும்" என்ற சிவஞானசித்தியாரது திருவாக்கின்படி, ஞானமே சத்தியாகும். ஆதலின், திருவருள் சத்தி சொரூபமானது. "பராவணம் ஆவது நீறு" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். திருநீற்றினை அணிந்து கொள்வார்க்கு நோயும் பேயும் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும். சர்வமங்கலங்களும் பெருகும். தீவினை கருகும்.

எல்லாவற்றையும் தூய்மை செய்வது பசுவின் சாணமே ஆகும்.  அதனால் ஆகிய திருநீறு, உள்ளத்தையும் உடம்பையும் தூய்மை செய்ய வல்லது. நிறைந்த தவம் புரிந்தோர்க்கே திருநீற்றில் மிகுந்த அன்பு உண்டாகும். தவம் செய்யாத பாவிகட்குத் திருநீற்றில் அன்பு உண்டாகாது.

எத்தகைய பாவங்களைப் புரிந்தவராயினும், பெரியோர்கள் இகழ்கின்ற ஐம்பெரும் பாவங்களைச் செய்தவராயினும், விபூதியை அன்புடன் தரித்து நல்வழிப்படுவாராயின், முன் செய்த பாவங்களினின்றும் விடுபட்டு, செல்வம் பெற்று, உலகமெல்லாம் போற்றும் பெருமை அடைவார்கள்.

யாது பாதகம் புரிந்தவனர் ஆயினும், இகழும்
பாதகங்களில் பஞ்சமா பாதகர் எனினும்,
பூதி போற்றிடில், செல்வராய் உலகெலாம் போற்றத்
தீது தீர்ந்தனர், பவுத்திரர் ஆகியே திகழ்வார்.      ---  உபதேச காண்டம்.

சிவதீட்சை பெற்று ஒவ்வொருவரும் முறைப்படி திருநீறு பூசி, இறைவன் திருவருளைப் பெறவேண்டும்.

திரிபுண்டரமாகத் திருநீறு பூசும்போது, இடையில் துண்டுபடுதல், ஒன்றுடன் ஒன்று சேர்தல், அதிகமாக விலகுதல்,  வளைதல், முதலிய குற்றங்கள் இன்றி அணிதல் வேண்டும். இதற்காக எப்படியாவது பூசிவிட்டு, ஒழுங்குபடுத்தக் கூடாது. நாளடைவில் இது கைகூடும். நெற்றி, மார்பு, தோள் ஆகிய மூன்று இடங்களில் ஆறு அங்குல நீளமும், ஏனைய அங்கங்களில் ஓவ்வோர் அங்குல நீளமுமாகத் தரித்தல் வேண்டும். மூன்று கீற்றாக அழகாக அணிதல் சிறப்பு.

மூன்று வேளையும் இவ்வாறு திருநீறு திரிபுண்டரமாகப் புனைதல் வேண்டும். முடியாத போது, ஒருவேளையேனும் முறைப்படி திருநீற்றினைத் திரிபுண்டரமாகத் தரித்தவர் உருத்திர மூர்த்தியே ஆவார். இவ்வண்ணம் உயர்ந்த திரிபுண்டரமாகத் திருநீற்றினை அணிந்து, பதி தருமம் புரிவோர் நிகரில்லாத மும்மூர்த்தி மயமாவார் என்று வேதங்கள் கூறுகின்றன.

திருநீறு வாங்குதல், அணிதல் முறையை, "குமரேச சதகம்" என்னும் நூலில் விளக்கியிருப்பது காண்க.
 
திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலந் தனிலே இருந்தும்
     பருத்ததிண் ணையிலிருந்தும்

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கியிடினும்
செங்கையொன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ்தம் பலத்தினோடும்

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநில மான அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநர கென்பர்கண்டாய்

வரிவிழி மடந்தைகுற வள்ளிநா யகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.
  
திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகை யாலெடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுய மீதுஒழுக

நித்தம்மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தமாம்
     நீங்காமல் நிமலன் அங்கே

சத்தியொடு நித்தம்விளை யாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யுந்திரு
சஞ்சலம் வராதுபர கதியுதவும் இவரையே
     சத்தியும் சிவனுமென்னலாம்

மத்தினிய மேருஎன வைத்தமு தினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

இத்தகைய சிறந்த சாதனமாகிய திருநீற்றினைப் புனைந்து, திருவருள் நலத்தைப் பெறாதவர்களை மூடர் என்பதில் என்ன வியப்பு?

அடிகள் பூசியா மூடர் ---

இறைவனுடைய திருவடியைப் பூசித்தலே பிறவியின் பயன் ஆகும். இறைவன் தந்த கரங்களால் அவரைப் பூசிக்கவில்லையானால், நன்றி மறந்த பாவம் எய்தும்.

பூஜா என்ற சொல் தமிழில் ஐகார ஈறுபெற்று பூஜை என்று திரிந்தது.
பூ - மலங்களைப் பூர்த்தி செய்வது.
ஜா - சிவஞானத்தை உண்டாக்குவது.

வேதநாயகன் இலிங்க பூசனை செயும் மேலோன்
போதன் மாயவன் முவுகும் தொழும் புனிதன்,
ஓதும் ஆங்கவன் பெருமையார் உரைப்பர், அவ் உரவோன்
பாத தூளியைச் சென்னியில் பலன்பெறத் தரிப்பேன்.  ---  சிவரகசியம்.

பூசை செய்கின்ற நேரமே நம்முடைய நேரம். பூசை செய்கின்ற மனிதப் பிறப்பே உயர்ந்த பிறப்பு. பூசை புரியாத நாள் வீண்நாள் ஆகும்.

உம்பர்கள் சுவாமீ நமோநம
     எம்பெருமானே நமோநம
     ஒண்தொடி மோகா நமோநம    எனநாளும்
உன்புகழே பாடிநான் இனி
அன்புடன் ஆசார பூசைசெய்து
     உய்ந்திட வீண்நாள் படாதுஅருள்     புரிவாயே...
                                                               --- (கொம்பனையார்) திருப்புகழ்.

பூசை செய்யத் தொடங்குமுன் இந்தத் திருப்புகழ் அடிகளைக் கூறி இறைவனைத் தியானிக்க வேண்டும்.

கரை ஏற அறிவு நூல் கலா மூடர் ---

பிறவியாகிய பெருங்கடலில் வாழ்ந்த உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும்.  ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநூல்.  இதனை நீ பயில்வதனால் பயனில்லை.  சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினார் என்பர்.

ஆதலின், அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல்.  இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்".

இதன் பொருள் --- பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினையுடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

"நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு".

இதன் பொருள் ---   பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

"தத்தமது இட்டம் திருட்டம் எனஇவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள்உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று".

இதன் பொருள் ---   தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்",

இதன் பொருள் ---   மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

நெறியிலே நிலா மூடர் ---

நெறி என்பது வழி என்க. ஒரு ஊருக்குப் போகவேண்டும் என்று நடப்பவன், கண்ணில் கண்ட வழிகளில் எதுவாயினும் அதிலே நடக்கமாட்டான். எந்த வழியில் சென்றால் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரலாமோ, அந்த வழியில் தான் நடப்பான்.  அதுபோல், பரகதியை நாடிவந்த நாம், உலகில் காணப்படும் அவநெறிகளில் செல்லாது, தவநெறியில் செல்லுதல் வேண்டும். அத் தவநெறி இறைவன்பால் வேண்டிப் பெறுதல் வேண்டும்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூரில் இறைவர்பால் தவநெறியை வேண்டிப் பெற்றனர்.

"தவநெறி தனை விடு தாண்டு காலியை" என்றார் அடிகள், கூந்தலூர்த் திருப்புகழில்.

கால்போன வழியிலே நடக்கும் பேதையைப் போல், மனம்போன வழியிலே சென்று இடர்ப்படுவோர் மூடர்கள் ஆவார்கள்.

அறம் விசாரியா மூடர் ---

அறம் எது, அறம் அல்லாதது எது என்று ஆராய்ந்து, அறத்தைக் கடைப்பிடித்து, அறப் பண்புடன் வாழ்தல் வேண்டும்.  அறம் உயிர்க்கு உறுதி செய்வது. "அறனை மறவேல்" என்றார் ஔவைப் பிராட்டியார். இறைவனுக்கு அறமே வடிவாகின்றது.

அறமே மறங்கள் முழுதளிக்கும்
         அறமே கடவுள் உலகேற்றும்
அறமே சிவனுக்கு ஒருவடிவம்
         ஆம்சிவனை வழிபடுவோர்க்கு
அறமே எல்லாப் பெரும்பயனும்
         அளிக்கும், பார்க்கும் எவ்விடத்தும்
அறமே அச்சம் தவிர்ப்பதுஎன
         அறைந்தான் சரதாதப முனிவன்.     ---  காஞ்சிப் புராணம்.

இறைவன் சூரபன்மனுக்கு எண்ணில்லாத வரங்களை வழங்கியபோது, “1008 அண்டங்களையும் ஆள்வாய், அறநெறியினின்றும் வழுவாயெனின், நமது சத்தி உன்னை வெல்லும்" என்று அருளிச் செய்தனர். ஆதலின், அறநெறியினின்றும் வழுவுதல் கூடாது.

உலகிற்கு அறவுரை பகர வந்த ஔவையார், தொடக்கத்திலேயே "அறம் செய விரும்பு" என்று கூறியதையும், திருவள்ளுவர் நீத்தார் பெருமை கூறிய பின், அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரத்தினைக் கூறியதையும் உற்று நோக்குக.

அதிகார இயைபு கூறவந்த பரிமேலழகர், "அம் முனிவரான் உணர்த்தப்பட்ட (அறம்பொருள் இன்பம் என்ற) அம் மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன், இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து" கூறுமாறு காண்க.

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு,
ஆக்கம் எவனோ உயிர்க்கு.                   ---  திருக்குறள்.

நரகு ஏழில் புரள வீழ்வர் ---

மேலே கூறிய மூடர்கள் எழு நரகங்களில் புரண்டு துன்புறும் பொருட்டு வீழ்வார்கள்.

புரண ---

புராண என்பது புரண என்று குறுகியது. புராணம் - பழைமை.  சிவமூர்த்தியினது பழைய வடிவம் ஆறுமுக வடிவம் என்க.

பரம குருவாய், அணுவில் அசைவாய்,
     பவன முதல் ...... ஆகியபூதப்
படையும் உடையாய்! சகல வடிவாய்,
     பழைய வடிவு ...... ஆகியவேலா...         --- (இருவர்மயலோ) திருப்புகழ்.

புகலி --- 

சீகாழித் திருத்தலத்திற்கு உரிய பன்னிரு திருநாமங்களுள் ஒன்று புகலி என்பது. உயிர்களுக்கு அதுவே புகலிடம் ஆதலின், புகலி எனப் பெற்றது. உலகம் அழிந்தபோதும் அழியாது அது தோணிபோல் மிதக்கும் திருவுடைய திருத்தலம்.

சீகாழிக்கு உள்ள பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்
பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.    ---  பெரியபுராணம்.

1.    பிரமபுரம்  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.

தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி
காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

சேவுயரும் திண்கொடியான் திருவடியே
         சரண் என்று சிறந்த அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்
         வழிபட்ட நலம் கொள் கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்
         செங்குமுதம் வாய்கள் காட்டக்
காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்
         கண்காட்டும் கழுமலமே

எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.

2.    வேணுபுரம்  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.

3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.

4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.

5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.

6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.

7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.

8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.

9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.

10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.

11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.

12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.

கருத்துரை

முருகா!  தீயவர் நரகில் வீழ்ந்து நடலை உறுவர். அடியேன் மாதர் வசமாகி வீணாகாவண்ணம் திருவருள் தந்து ஆட்கொள்வீர்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...