யாழ்ப்பாணாயன் பட்டினம் - 0770. பூத்தார் சூடும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பூத்தார் சூடும் (யாழ்ப்பாணாயன்பட்டினம்)

முருகா!
அடியேனுக்கு உண்மைப் பொருளை உபதேசித்து அருள்.

தாத்தா தானம் தத்தன தனதன
     தாத்தா தானம் தத்தன தனதன
     தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான

பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
     பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு
     போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் ...... விடுதூதும்

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
     மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது
     பூட்டா மாயங் கற்றமை விழியின ...... ரமுதூறல்

வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
     நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட
     வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத ...... மகிலாரம்

மாப்பூ ணாரங் கச்சணி முலையினர்
     வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
     வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
     கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை
     யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி ...... புவநேசை

ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
     நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
     யாட்டா லீசன் பக்கம துறைபவள் ...... பெறுசேயே

ஏத்தா நாளுந் தர்ப்பண செபமொடு
     நீத்தார் ஞானம் பற்றிய குருபர
     யாப்பா ராயுஞ் சொற்றமி ழருள்தரு ...... முருகோனே

ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
     வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
     யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பூத்தார் சூடும் கொத்து அலர் குழலியர்,
     பார்த்தால் வேலும், கட்கமும், மதன்விடு
     பொர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு, நமன்....விடுதூதும்

போல் தாய், நாளும் கைப்பொருள் உடையவர்
     மேல் தாளார் தம் பற்றிடு ப்ரமையது,
     பூட்டா மாயம் கற்று, மை விழியினர், .....அமுதுஊறல்

வாய்த்தார், பேதம் செப்பு பொய் விரகியர்,
     நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட,
     வாள் தாய் வீசும் கர்ப்புரம், ம்ருகமதம், ...... அகில் ஆரம்

மாப் பூண் ஆரம் கச்சு அணி முலையினர்,
     வேட் பூண் ஆகம் கெட்ட எனை, உனது மெய்
     வாக்கால் ஞானம் பெற்று,னி வழிபட......அருளாயோ?

ஆத்தாள், மால் தங்கைச்சி, கனிகை, உமை,
     கூத்தாடு ஆநந்தச் சிவை, திரிபுரை,
     ஆள், பேய் பூதம் சுற்றிய பயிரவி, ...... புவன ஈசை,

ஆக்கா யாவும் பற்றியெ, திரிபுற
     நோக்கா ஏதும் செற்றவள், திருவிளை-
     யாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் .....பெறுசேயே!

ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு
     நீத்தார் ஞானம் பற்றிய குருபர!
     யாப்பு ஆராயும் சொல்தமிழ் அருள்தரு......முருகோனே!

ஏற்போர் தாம்வந்து இச்சையின் மகிழ்வொடு
     வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை, நெடுமதிள்
     யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய ...... பெருமாளே.


பதவுரை

     ஆத்தாள் --- உலக உயிர்களின் தாய்,

     மால் தங்கைச்சி --- திருமாலின் தங்கை,

     கனிகை --- உலகம் யாவையும் ஈன்றும் கன்னியாகவே இருப்பவள்,

     உமை --- உமாதேவியார்,

     கூத்தாடு ஆநந்த சிவை --- ஆனந்தக் கூத்தாடும் சிவனின் தேவி,

     திரிபுரை --- மூவுலகங்களுக்கும் முதல்வி,

     ஆள் பேய்பூதம் சுற்றிய பயிரவி --- ஆளாக உள்ள பேய்களும் பூதங்களும் சூழ உள்ள, அச்சத்தை விளைவிப்பவள்.

     புவநேசை --- புவனங்களுக்குத் தலைவி,

     ஆக்கா யாவும் பற்றியெ --- எல்லாவற்றையும் ஆக்கியும்

     திரிபு உற நோக்கா ஏதும் செற்றவள் --- வேறுபாடு பொருந்தாமல் எதையும் அழிப்பவள்,

     திரு விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் பெறு சேயே --- திருவிளையாடல் புரிந்து சிவபெருமானின் இடது பக்கத்தில் வாழுகின்றவள் அருளிய குழந்தையே!

     நாளும் ஏத்தா --- நாளும் வழிபாடு செய்து,

     தர்ப்பணம் செபமோடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர --- நீர்க்கடன் இயற்றுதல், ஜெபம் புரிதல் ஆகியவைகளைச் செய்து, உலகப் பற்றினைத் துறந்தவர் உள்ளத்தில் ஞானம் விளங்குமாறு புரிந்த மேலான குருநாதரே!

     யாப்பு ஆராயும் சொல் தமிழ்தரு முருகோனே --- யாப்பு இலக்கணம் கொண்டு ஆராய்ந்து அமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாடல்களத் தந்து அருளிய முருகப் பெருமானே!

     ஏற்போர் தாம் வந்து --- இல்லை என ஏற்பவர்கள் வந்தபோது,

     இச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய் வீசும் --- விருப்பமுடன் வரவேற்று, உள்ளம் மகிழ்ந்து அப்போது வாய்த்த பொருளை வழங்கும் கொடைத் தன்மை உடையோர் வாழுகின்றதும்,

     பொன் ப்ரபை நெடுமதிள் --- அழகிய ஒளி பொருந்திய நீண்ட மதிலை உடையதும் ஆகிய

     யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே --- யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      பூத் தார் சூடும் --- மலர் மாலையை மார்பில் அணிந்து,

     கொத்து அலர் குழலியர் --- பூங்கொத்துக்களைச் சூடிய கூந்தலை உடையவர்கள்.

      பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடும் போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும்போல் தாய் --- பார்வையால், வேலைப் போலவும், வாளைப் போலவும், மன்மதனால் போருக்கு விடப்படும் மலர்க்கணை போலவும், இயமன் விடுத்த தூதர்கள் போலவும் தாவி,

       நாளும் கைப் பொருள் உடையவர் --- நாள்தோறும் கைப் பொருளினை உடையவர்கள் ஆகிய

     மேல் தாளார் தம் பற்றிடு ப்ரமையது பூட்டா --- ஊக்கமும் மேன்மையும் உடையவர்களைத் தம் மீது ஆசைகொண்டு, அறிவு மயங்குமாறு செய்யக் கூடிய,

     மாயம் கற்ற மை விழியினர் --- மாய வித்தைகளைக் கற்றுள்ள மை தீட்டிய கண்ணினர்.

     அமுது ஊறல் வாய்த்தார் --- அமுதம் என்று மயங்கி உணரும்படியான வாய் எச்சிலை உடையவர்கள்.

     பேதம் செப்பு பொய் விரகியர் --- பேதப்படுத்திப் பொய்யாகப் பேசும் உபாயம் கற்றவர்கள்.

      நூல் தேய் நூலின் சிற்றிடை இடர்பட --- நூலினும் மென்மையான இடை வாடும்படி,

     வாள் தாய் வீசும் --- தூய்மை பொருந்திய,

     கர்ப்புர ம்ருகமதம் அகில் --- கருப்பூரம், கத்தூரி, அகில் ஆகிய மணப்பொருள்களையும்,

     ஆரம் --- சந்தனக்குழம்பையும் தரித்து,

     மாப் பூண் ஆரம் --- சிறந்த அணிகலன்களையும் பூண்டு,

     கச்சு அணி முலையினர் --- கச்சு அணிந்த முலைகளை உடையவர்கள் ஆகிய விலைமாதர்கள்பால்,

      வேட் பூண் --- விருப்பம் பூண்டு,

     ஆகம் கெட்ட எனை --- ஆக்கம் இழந்த என்னை,

     உனது மெய் வாக்கால் ஞானம் பெற்று --- உமது உண்மையான திருவாக்கால் உபதேச ஞானத்தைப் பெற்று,

     இனி வழிபட அருளாயோ --- இனி அடியேன் உண்மை ஞானத்தால் உம்மை வழிபடும்படி அருள் புரிய மாட்டாயோ?


பொழிப்புரை

     உலக உயிர்களின் தாய். திருமாலின் தங்கை. உலகம் யாவையும் ஈன்றும் கன்னியாகவே இருப்பவள். உமாதேவியார். ஆனந்தக் கூத்தாடும் சிவனின் தேவி. மூவுலகங்களுக்கும் முதல்வி. ஆளாக உள்ள பேய்களும் பூதங்களும் சூழ உள்ள, அச்சத்தை விளைவிப்பவள். புவனங்களுக்குத் தலைவி. எல்லாவற்றையும் ஆக்கியும் வேறுபாடு பொருந்தாமல் எதையும் அழிப்பவள். திருவிளையாடல் புரிந்து சிவபெருமானின் இடது பக்கத்தில் வாழுகின்றவள் அருளிய குழந்தையே!

     நாளும் வழிபாடு செய்து, நீர்க்கடன் இயற்றுதல், ஜெபம் புரிதல் ஆகியவைகளைச் செய்து, உலகப் பற்றினைத் துறந்தவர் உள்ளத்தில் ஞானம் விளங்குமாறு புரிந்த மேலான குருநாதரே!

     யாப்பு இலக்கணம் கொண்டு, ஆராய்ந்து அமைந்த சொற்களைக் கொண்ட தமிழ்ப் பாடல்களத் தந்து அருளிய முருகப் பெருமானே!

     இல்லை என ஏற்பவர்கள் வந்தபோது, விருப்பமுடன் வரவேற்று, உள்ளம் மகிழ்ந்து அப்போது வாய்த்த பொருளை வழங்கும் கொடைத் தன்மை உடையோர் வாழுகின்றதும்,
அழகிய ஒளி பொருந்திய நீண்ட மதிலை உடையதும் ஆகிய யாழ்ப்பாணாயன் பட்டினத்தில் விரும்பித் திருக்கோயில் கொண்டிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      மலர் மாலையை மார்பில் அணிந்து, பூங்கொத்துக்களைச் சூடிய கூந்தலை உடையவர்கள். பார்வையால், வேலைப் போலவும், வாளைப் போலவும், மன்மதனால் போருக்கு விடப்படும் மலர்க்கணை போலவும், இயமன் விடுத்த தூதர்கள் போலவும் தாவி, நாள்தோறும் கைப் பொருளினை உடையவர்கள் ஆகிய ஊக்கமும் மேன்மையும் உடையவர்களைத் தம் மீது ஆசைகொண்டு, அறிவு மயங்குமாறு செய்யக் கூடிய, மாய வித்தைகளைக் கற்றுள்ள மை தீட்டிய கண்ணினர். அமுதம் என்று மயங்கி உணரும்படியான வாய் எச்சிலை உடையவர்கள். பேதப்படுத்திப் பொய்யாகப் பேசும் உபாயம் கற்றவர்கள். நூலினும் மென்மையான இடை வாடும்படி, தூய்மை பொருந்திய கருப்பூரம், கத்தூரி, அகில் ஆகிய மணப்பொருள்களையும், சந்தனக்குழம்பையும் தரித்து, சிறந்த அணிகலன்களையும் பூண்டு, கச்சு அணிந்த முலைகளை உடையவர்கள் ஆகிய விலைமாதர்கள்பால் விருப்பம் பூண்டு, ஆக்கம் இழந்த என்னை, உமது உண்மையான திருவாக்கால் உபதேச ஞானத்தைப் பெற்று, இனி அடியேன் உண்மை ஞானத்தால் உம்மை வழிபடும்படி அருள் புரிய மாட்டாயோ?

விரிவுரை

பூத் தார் சூடும் ---

தார் - மாலை.

மாலையை மார்பில் சூடிய விலைமாதர்கள்.

கொத்து அலர் குழலியர் ---

குழல் - கூந்தல்.

பூங்கொத்துக்களைச் சூடிய கூந்தலை உடைய விலைமாதர்கள்.

பார்த்தால் வேலும் கட்கமும் மதன் விடும் போர்க்கு ஆர் நீடும் கண் சரமொடு நமன் விடு தூதும் போல் தாய் ---

விலைமாதர்களுடைய கண்களைப் பார்த்தால், அவை வேலைப் போல அகன்றும், வாளைப் போலக் கூர்மை பொருந்தியதாகவும், மன்மதன் தொடுக்கின்ற மலர்க் கணையைப் போலவும் அமைந்துள்ளன. அவை காம வயப்பட்டோரை, எம தூதர்கள் தாவி வந்து துன்புறுத்துவது போல் அமைந்து உள்ளன.

வேல் என்னும் ஞானசத்தி, அஞ்ஞானம் ஆகிய இருளை ஒழித்து, அருள் ஒளியை ஆன்மாவில் பரப்புவது.

அது போல, ஆடவரின் உள்ளத்தில் மிக்குள்ள அறியாமையைப் போக்கி, அறிவை நிறையச் செய்வது பெண்களின் கண்கள் என்பதால் கண்ணுக்கு வேல் உவமையாக்கப்பட்டது. பார்வையலேயே ஆடவரை நெறிப்படுத்துவதற்கு உரியவை பெண்களின் கண்கள். இது இறைவன் படைப்பில் உள்ள அதிசயம்.

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒரு நோக்கு
நோய் நோக்கு, வன்று அந்நோய்க்கு மருந்து.

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

பெண்களின் கண் பார்வையால் இன்பமும் துன்பமும் விளையும். துன்பமாகிய நோயை உண்டாக்குவதும், அந்த நோய்க்கு மருந்தாக அமைவதும் கண்களே என்றால் இறைவன் படைப்பில் உள்ள அதிசயம் தானே!
   
"தண்ணீர் பீளை தவிராது ஒழுகும் கண்ணைப் பார்த்துக் கழுநீர்" என்று திங்கள் சடையோன் திருவருள் இல்லார் கருதுவர் என்கின்றார் பட்டினத்து அடிகள்.

ஆனால், அருளாளர்களுக்கு, அந்தக் கண்கள் தெய்வத் தன்மையோடு தோன்றும். திருமயிலையில், திருஞானசம்பந்தப் பெருமான், இறையருளால் எலும்பைப் பெண்ணாக்கினார். அப்படி உருவாகி வந்த பூம்பாவையாரின் கண்கள் எப்படி விளங்கின? தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடுவதைப் பாருங்கள்...

மண்ணிய மணியின் செய்ய
         வளர் ஒளி மேனியாள் தன்
கண் இணை வனப்புக் காணில்,
         காமரு வதனத் திங்கள்
தண்ணளி விரிந்த சோதி
         வெள்ளத்தில், தகைவின் நீள
ஒள் நிறக் கரிய செய்ய
         கயல் இரண்டு ஒத்து உலாவ.

கடைந்தெடுத்த மாணிக்கத்தினை விடவும் செம்மையான ஒளிபொருந்திய மேனியைக் கொண்ட பூம்பாவையாரின் இரண்டு கண்களின் அழகானது, அழகு மிக்க முகமான சந்திரனின் குளிர்ந்த கதிர்கள் விரிந்த நிலவொளியான வெள்ளத்தில் தடுக்கப்படாத நீளமுடைய ஒள்ளிய நிறமும் கருமையும் செம்மையும் கலந்த இரண்டு கயல் மீன்களைப் போன்று உலாவின என்கின்றார்.

மணிவாசகப் பெருமான் தான் கண்ட சிவமாகிய தலைவியின் கண்களைக் குறித்துத் திருக்கோவையாரில் பாடி இருப்பதைக் காண்போம்..

ஈசற்கு யான் வைத்த அன்பின்
    அகன்று, அவன் வாங்கிய என்
பாசத்தில் கார் என்று, அவன் தில்லை-
    யின் ஒளி போன்று, அவன் தோள்
பூசு அத் திருநீறு என வெளுத்து,
    ஆங்கு அவன் பூங்கழல் யாம்
பேசு அத் திருவார்த்தையில் பெரு-
    நீளம் பெருங்கண்களே.

இதன் பொருள் --- தலைவியின் கண்களானவை, ஈசனிடத்தில் தான் வைத்த அன்பினைப் போல அகன்று இருந்தது. இறைவனால் என்னிடத்தில் இருந்து வாங்கப் பெற்ற ஆணவமலம் போல் கருமை நிறம் கொண்டு இருந்தது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தி இருந்தது. அவனுடைய திருத்தோள்களில் பூசப்பெற்றுள்ள திருநீறு போல வெளுத்து இருந்தது. அவனுடைய திருவடித் தாமரைகளைப் பற்றி நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டு இருந்தது.

ஆனால், விலைமாதரின் கண்கள் காம நோயை உண்டுபண்ணி, தீராத உடல் நோயைத் தந்து, பாடுபட்டுத் தேடிய பொருளையும் இழக்கச் செய்து, உயிரை எப்போதும் தீராத பிறவிப்பிணியில் உய்த்துவிடும்.

கொலை அஞ்சார், பொய்ந் நாணார், மானமும் ஓம்பார்,
களவு ஒன்றோ? ஏனையவும் செய்வார், - பழியோடு
பாவம் இஃது என்னார், பிறிது மற்று என் செய்யார்?
காமம் கதுவபட் டார்.                           

என்றது நீதிநெறி விளக்கம்.

காமவெறி கொண்டவர்கள் கொலை செய்ய அஞ்சமாட்டார்கள். பொய் சொல்ல நாணமாட்டாரகள். மானத்தைக் காத்துக் கொள்ள மாட்டார்கள். திருட்டுத் தொழில் மட்டுமல்ல, மற்ற இழி தொழில்களையும் செய்யத் தலைப்படுவார்கள். பழிக்கும் பாவத்துக்கும் இடமான செயல் ஆயிற்றே என்று தெரிந்துகொள்ள மாட்டார்கள். அவர்களின் எண்ணத்திற்குத் தடையாக எது வந்தாலும், அதை நீக்குவதற்கு, தகாத செயல்கள் செய்யவும் தயங்கமாட்டார்கள் என்கிறது இந்தப் பாடல்.

அவ்வாறு காமம் மீதூரப்பட்டால், அறிவு, பொருள், கல்வி ஆகியவை யாவும் அழிவுறும் என்கின்றார்

நண்டுசிப்பி வேய்கதலி நாசம் உறும் காலத்தில்
கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல், - ஒண்தொடீ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம், அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.             ---  நல்வழி.

நண்டும், சிப்பியும், மூங்கிலும், வாழையும் அழிவு அடையும் காலத்திலே, முறையே தாம் கொண்ட குஞ்சும், முத்தும், அரிசியும், குலையும் ஆகியவற்றை ஈனும். அதுபோல,
அறிவும், செல்வமும், கல்வியும் அழிந்து போகும் காலம் வரும்போது, பிற மகளிர் மேல் ஆசையை வைப்பார்கள் ஆடவர்கள்.

மருவஇனிய சுற்றமும், வான்பொருளும், நல்ல
உருவும், உயர்குலமும் எல்லாம், - திருமடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும், அவள்பிரிந்து
போம்போது அவளொடு போம்.                --- மூதுரை.

தழுவிய இனிய உறவும், மேலான பொருளும், நல்ல அழகும், உயர்வாகிய குலமும் என்னும் இவையெல்லாம், சீதேவி வந்து கூடும் பொழுது, அவளுடனே வந்து கூடும். அவள் நீங்கிப் போகும் பொழுது, அவளுடனே நீங்கிப் போகும்.

பிறப்புக்கு விதை அவா. ஒவ்வொரு பிறப்பை நல்கும். பெண்ணவா பெருந்துன்பத்தைத் தரும். இதிலும், பொதுமகளிர் உறவு திருவையும் தெளிவையும் உருவையும் அழிக்கும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.                   ---  திருக்குறள்.
  
கள்ளைப்போல், அறிவை மயக்கும் தன்மை உடையது விலை மகளிர் உறவு. அதனால் திருவள்ளுவர் வரைவின் மகளிர்என்ற அதிகாரத்துக்குப் பின் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை அமைத்தனர்.

விலைமாது ஒருத்தி, தனது தோழியிடம் கேட்கின்றாள். "தோழி, என்னைப் புணர ஆசைப்பட்டு வருபவர்கள் எனக்கு இன்பத்தைத் தருவதோடு, தமது பொன்னையும் கொடுத்து, எனது பாதத்திலும் விழுவது ஏன்?"

அன்னையே அனைய தோழி,
     அறம்தனை வளர்க்கும் மாதே
உன்னை ஓர் உண்மை கேட்பேன்,
     உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையே புணரு வோர்கள்
     எனக்கும் ஓர் இன்பம் நல்கி,
பொன்னையும் கொடுத்து, பாதப்
     போதினில் வீழ்வது ஏனோ.

இதற்குத் தோழி பகரும் மறுமொழி... "செல்வத்தை நிரம்பப் படைத்து இருந்தும், செம்மையாக அறம் செய்யாதவர்களுடைய செல்வமானது சிதறிப் போகவேண்டும் என்பதற்காகவே, விலைமாதர்களாகிய உம்மையும், கள்ளையும், சூதாட்டத்தையும் பிரமதேவன் படைத்து வைத்தான்."

பொம் எனப் பணைத்து விம்மி
     போர்மதன் மயங்கி வீழும்
கொம்மைசேர் முளையி னாளே,
     கூறுவேன் ஒன்று கேண்மோ,
செம்மையில் அறம் செய்யாதார்
     திரவியம் சிதற வேண்டி
உம்மையும் கள்ளும் சூதும்
     நான்முகன் படைத்த வாறே.     --- விவேகசிந்தாமணி.

விலைமாதருடைய மெல்லிய தோள்கள், அறிவில்லாத மூடர்கள் அழுந்துகின்ற நரகம் என்றும் திருவள்ளுவனார் கூறுகின்றார்.

வரைவிலா மாண்இழையார் மென்தோள், புரைஇலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.

ஆதலின், அம்மகளிர் பின் சென்று அவமே அலைந்து திரியாது, ஆன்றோர் பின்சென்று மாந்தர் உய்தல்வேண்டும்.

நாளும் கைப் பொருள் உடையவர் மேல் தாளார் தம் பற்றிடு ப்ரமையது பூட்டா ---

ப்ரமை, பிரமை - அறிவு மயக்கம்.

பூட்டா - பூட்டுதல், இறுகக் கட்டுதல், அகப்படுத்துதல், விலங்கு மாட்டுதல்.

விலைமாதர்க்குப் பொருள் மேல் ஆசை மிக உண்டு. எனவை, பொருளை வேண்டி, நாள்தோறும் கைப் பொருளினை உடையவர்கள் ஆகிய ஊக்கமும் மேன்மையும் உடையவர்களைத் தம் மீது ஆசைகொண்டு, அறிவு மயங்குமாறு செய்யக் கூடியவர்கள் விலைமாதர்கள்.


மாயம் கற்ற மை விழியினர் ---

மை தீட்டிய கண்கள். விலைமாதர் தமது கண்களை மையினால் அழகுறத் தீட்டிக் கொள்வார்கள்.

மானுடப் பிறவிக்குக் கண்கள் அமைந்தது, குறிப்பறிந்து செயல்படுவதற்காகவே.

அடுத்தது காட்டும் பளிங்கு போல், நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.            ---  திருக்குறள்.

தன்பக்கம் உள்ளளதை எடுத்துகு காட்டுகின்ற படிகத்தைப் போ, நெஞ்சில் உள்ளதைக் காட்டுவது முகம். முகத்தில் அமைந்துள்ள கண், உள்ளக் கருத்தைத் தெளிவாக அறிவிப்பது. எனவை, ஒருவரின் முகக் குறிப்பினைக் கொண்டு அவர்தம் உள்ளக் கருத்தை உணரவேண்டும். இல்லையானால், முகத்தில் உள்ள கண்கள் பயன்றறவை என்றார் திருவள்ளுவ நாயானர்.

குறிப்பில் குறிப்பு உணரா ஆயின்,  உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.                  ---  திருக்குறள்.

ஆனால், விலைமாதர் தமது மை தீட்டிய கண்களினால் ஆடவரை மயக்குகின்ற வித்தையைக் கற்றவர்கள்.

அமுது ஊறல் வாய்த்தார் ---

விலைமாதர் வாயில் ஊறும் எச்சிலை அமுதமாக எண்ணிப் பருகுவர் காமுகர்.
  
பேதம் செப்பு பொய் விரகியர் ---

பொருள் உள்ளவரையில் அன்பு உள்ளவர் போல் காட்டிக் கொள்வர். பொருள் வற்றிப் போவது தெரிந்தும், ஆசையோடு வந்தவரோடு ஏதாவது ஒரு காரணத்தைக் கற்பித்துக் கொண்டு, கலகம் விளைத்து அவரை விரட்டி அடிப்பார்கள். பொருள் தீர்ந்து போனால், புதிதாக வேறு ஒரு ஆடவரைத் தேடி அவருடன் கதைகதையாகப் பேசி, "அவர் உங்களைப் போன்றவர் இல்லை, நீங்கள் எவ்வளவு நல்லவர் என்பது எனக்கே தெரியும்" என்றெல்லாம் பலவாறாக, பேதப்படுத்திப் பேசி மயக்குவதில் வல்லவர்கள்.

உயிர்க்கூடு விடும் அளவும் உமைக் கூடி மருவு தொழில்
     ஒருக்காலும் நெகிழ்வது இலை ...... எனவே, சூள்
உரைத்தே, முன் மருவினரை வெறுத்து, ம திரவியம்
     அது உடைத்தாய் பின் வருகும் அவர் ......எதிரேபோய்ப்

பயில் பேசி, ரவுபகல் அவர்க்கான பதமை பல
     படப்பேசி, உறுபொருள் கொள் ...... விலைமாதர்,
படப்பார வலைபடுதல் தவிர்த்து ஆள, மணிபொருவு
     பதத் தாள மயிலின்மிசை ...... வரவேணும்.      ---  திருப்புகழ்.
   
கலை நெகிழ்க்கவும், மயல் விளைக்கவும்,
     நயம் கொண்டு,  ங்கு இருந்தே
     குணுகி இட்டு, ள பொருள் பறித்து,
முனிந்து, ங்கு ஒன்று கண்டே,
     கலகம் இட்டு அவர் அகல அடித்தபின்,
     வரும் பங்கு அங்கு உணங்க, ர் ...... புதிய பேர் உடனே

கதைகள் செப்பவும் வல சமர்த்திகள்,
     குணம் கண்டும் துளங்கா
     மனிதனில், சிறு பொழுது முற்று உற
நினைந்தும் கண்டு உகந்தே,
     கடி மலர்ப்பதம் அணுகுதற்கு, றிவு
     இலன், பொங்கும் பெரும் பா ......தகனை ஆளுவையோ?
                                                                  --- (விலைஅறுக்கவும்) திருப்புகழ்.

ஆகம் கெட்ட எனை ---

ஆகம் - உடம்பு.

ஆக்கம் என்னும் சொல்லின் இடைக் குறையாகவும் கொள்ளலாம்.

விலைமாதர் கூட்டுறவினால் உடல் நலம் குன்றும். நோய்கள் மலியும்.

"அரிய பெண்கள் நட்பைப் புணர்ந்து, பிணி உழன்று, சுற்றித் திரிந்தது அமையும், உன் க்ருபைச் சித்தம் என்று பெறுவேனோ?" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து,
     அழகுபெறவே நடந்து, ...... இளைஞோனாய்,
அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று,
     அதிவிதம் அதாய் வளர்ந்து, ...... பதினாறாய்,

சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர்
     திருவடிகளே நினைந்து ...... துதியாமல்,
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையாய் உழன்று
     திரியும், டியேனை உன்தன் ...... அடிசேராய்.    ---  திருப்புகழ்.

வாதமொடு, சூலை, கண்டமாலை, குலை நோவு, சந்து
     மாவலி, வியாதி, குன்ம ...... மொடு, காசம்,
வாயு உடனே பரந்த தாமரைகள், பீனசம், பின்
     மாதர்தரு பூஷணங்கள்......    என ஆகும்

பாதக வியாதி புண்கள் ஆனது உடனே தொடர்ந்து,
     பாயலை விடாது மங்க, ...... இவையால், நின்
பாதமலர் ஆனதின் கண் நேயம் அறவே மறந்து,
     பாவ மதுபானம் உண்டு, ...... வெறிமூடி,

ஏதம் உறு பாச பந்தமான வலையோடு உழன்று,
     ஈன மிகு சாதியின்கண் ...... அதிலே,யான்
ஈடு அழிதல் ஆனதின் பின், மூடன் என ஓதும் முன்பு, உன்
     ஈர அருள் கூர வந்து ...... எனை ஆள்வாய்.

என்னும் திருப்புகழில் அடிகளார் விலைமாதர்களால் ஒருவனுக்குக் கிடைக்கும் அணிகலன்கள் குறித்து விளக்கி அருளிச் செய்கின்றார்.

அரிதில் தேடிய பொருளை நல்வழியிற் செலவழிக்காமல், பொருட் பெண்டிருக்கு அளவின்றித் தந்து, அவர் விரும்பிய ஆபரணங்களை எல்லாம் பூட்டியதற்குப் பதிலாக அவர்கள் இவர்களுக்கு வாதம் சூலை முதலிய திருவாபரணங்களைப் பூட்டி அனுப்புவர்.


பூவில் வேசிகள் வீடு சந்தைப் பெரும்பேட்டை,
     புனைமலர் படுக்கைவீடு
பொன் வாசல், கட்டில்பொது அம்பலம், உடுத்த துகில்
     பொருவில் சூதாடுசாலை,

மேவல் ஆகிய கொங்கை கையாடு திரள்பந்து,
     விழிமனம் கவர்தூண்டிலாம்,
மிக்கமொழி நீர்மேல் எழுத்து, அதிக மோகம் ஒரு
     மின்னல், இரு துடை சர்ப்பமாம்,

ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்கும் இடம்,
     அதிக படம் ஆம் மனது கல்,
அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி,
     அவர்க்கு ஆசை வைக்கலாமோ?

மாவடிவு கொண்டே ஒளித்த வரு சூரனை
     வதைத்த வடிவேலாயுதா!
மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.            --- குமரேச சதகம்.

உலகில் பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை ஆகும். மலர்களாலே அழகு செயப்பெற்ற படுக்கை அறையானது பொன்னைப் பறிக்கும் வாயில். படுக்கைக் கட்டில் என்பது  பலருக்கும் பொதுவான இடம்;  அவர்கள் உடுத்த ஆடையானது ஒப்பற்ற சூதாடும் அரங்கு. விருப்பத்தை மிகச் செய்யும் அவர்களின் கொங்கைகள் என்பவை பலரும் கையால் எடுத்து ஆடப்படுகின்ற திரண்ட பந்து. அவர்களின் கண்கள் பலருடைய மனத்தையும் கவர்கின்ற தூண்டில் ஆகும். அவர்கள் வெகுவாகப் பேசும் பேச்சு நீர்மேல் எழுத்தைப் போன்றது. அவர்கள் காட்டும் மிக்க ஆசை ஒரு மின்னல் போன்று  கணப் பொழுதில் மாறக் கூடியது. அவர்களின் இரண்டு துடைகளும் பாம்புகள். விருப்பத்தை மூட்டும் அவரது அல்குலோ என்றால், அது தண்டனையை நிறைவேற்றும் இடம். மிக்க வஞ்சகம் பொருந்திய அவர்கள் உள்ளம் கல் ஆகும். அமுதம் என்று கூறும் அவர்கள் வாய் இதழ் ஆனது ஓவியக் கூடத்திலே பலரும் எச்சில் துப்ப இருக்கும் எச்சில் குழி.  எனவே, இத்தகைய இழிகுணங்கள் பொருந்திய விலைமகளிரிடம் காதல் கொள்வது தகாது.

இனி, ஆக்கம் என்பது வீடுபேற்றைக் குறிக்கும். விலைமாதர் கூட்டுறவால் பாதகங்கள் மிகுந்து, பிறவி ஆலை ஆற்றினில் புகுந்து ஆன்மா இடர் உறும். வீடுபேறு வாய்க்காது. எனவே, "ஆக்கம் கெட்ட என்னை" என்று அடிகளார் அருளினார்.


உனது மெய் வாக்கால் ஞானம் பெற்று, இனி வழிபட அருளாயோ ---

ஞானம் என்பது திருவடி ஞானம் என்னும் ஒப்பற்ற அனுபவ ஞானத்தைக் குறிக்கும். இதனை ஒருவர் தமது முயற்சியாலும், தாம் பெற்ற கல்வி அறிவாலுமே பெறுதல் இயலாது. குருவருள் வாய்க்கவேண்டும். குரு உணர்த்த உணர்தல் வேண்டும். குருவைத் தேடி அலைதல் அவசியமில்லை. குருவருள் வேண்டி இறைவழிபாடு ஆற்றி வருதல் வேண்டும். நமது பக்குவ நிலையை அறிந்து, பரம்பொருளே குருவடிவாக மானுடச் சட்டை தாங்கி வந்து அருள் புரியும்.

சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து
அத்தனை நல்கு அருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர் என்பர், புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.

என்பார் திருமூல நாயனார்.

இதன் பொருள் ---

இயற்கை வடிவாக உள்ள சிவபெருமான் குருவாய் எழுந்தருளி வந்து, ஆருயிர்களை மலம் அகற்றித் தூய்மை செய்து அருளுவவன். அக் குருவே தன் திருவடி இணையையும் நல்கி அருளுவன். இவ் உண்மையினைக் காணும் பேறு இல்லாத புல்லறிவாளராகிய அதிமூடர், நிலையில்லாத மாயாகாரியம் ஆகிய ஊனக்கண் கொண்டு கண்டு சிவகுருவும் நம்மவரில் ஒருவரே என்பர். அருட்கண் பெற்ற புண்ணியப் பேறு உடையார் அத்தனாகிய சிவபெருமான் இவனே என்று, 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிச் சிவசிவ' என்று ஓவாது ஓதி அவன் திருவடியை வணங்குவர்.

பரம்பொருளே குருவாக வந்து அருள் புரியும் என்பதை,

"அறிவுக்கு அறிவு ஆகி, அவ்வுறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்த நிலை நீங்கி,  -  பிறியாக்
கருணைத் திருவுருவாய், காசினிக்கே தோன்றி
குருபரன் என்று ஓர் திருப்பேர் கொண்டு", 

என்னும் கந்தர் கலிவெண்பாவில் அறிவுறுத்தினார் குமரகுருபர அடிகள்.

ஆன்மாவின் அறிவுக்கு அறிவாய் இருந்தும்,  அவ் ஆன்ம அறிவால் அறியப்படாத சிவபெருமானே உலகில் குருவடிவாக எழுந்தருளி வந்து பக்குவ ஆன்மாக்களுக்கு அருள் புரிவர். "அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமை" என்பது மணிவாசகம்.

"குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில்
திருவடி வைத்து, திறம் இது பொருள் என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி,
கோடு ஆயுதத்தால் கொடுவினை களைந்து,
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்"

என வரும் ஔவைப் பிராட்டியார் அருளிய "விநாயகர் அகவல்" வரிகளையும் எண்ணுக.

முருகன், தனிவேல் முனி, நம் குரு .. என்று
அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ
உரு அன்று, அரு அன்று, உளது அன்று, இலது அன்று,
இருள் அன்று, ஒளி அன்று என நின்றதுவே. --- கந்தர் அனுபூதி.

உருவப் பொருளும் அல்ல, அருவப் பொருளும் அல்ல; உள்ள பொருளும் அல்ல, இல்லாத பொருளும் அல்ல; இருளும் அல்ல,
ஒளியாகிய பொருளும் அல்ல; என்று சொல்லும் தன்மையில் உள்ளதே பரம்பொருள் ஆகும். அப் பரம் பொருளே, முருகப் பெருமான் என்றும், ஒப்பற்ற வேலினை ஏந்திய முனிவன் என்றும், அவரே நமது பரம குரு என்றும், அப் பெருமானது திருவருளைக் கொண்டு மட்டுமே அறிய முடியும்.

குரை கடல் உலகினில் உயிர்கொடு போந்து
     கூத்தாடுகின்ற ...... குடில்பேணி,
குகையிடம் மருவிய கருவிழி மாந்தர்
     கோட்டாலை இன்றி, ...... அவிரோதம்

வர, இரு வினை உற, உணர்வொடு தூங்கு-
     வார்க்கே விளங்கும் ...... அநுபூதி
வடிவினை, உனது அழகிய திரு ஆர்ந்த
     வாக்கால் மொழிந்து ...... அருளவேணும்.

குரு உபதேசத்தால், ஞானத்தைப் பெற்று, அந்த ஞானத்தால் இறைவனை வழிபாடு புரிதல் சிறந்தது. ஞானம் என்பது சரியே, கிரியை, யோகம் என்னும் படிநிலைகளில் விளங்கக் கூடியது. நேராக ஞானத்தைப் பெற வழியில்லை.  இறங்குவது மிகவும் எளிது. ஆனால் ஏறுவது என்பது படிப்படியாகவே இயலும்.

பின்வரும் சிவஞான சித்தியார் பாடல் கருத்துக்களை ஆழ்ந்து சிந்திக்கவும்.

ஞானநூல் தனைஓதல் ஓதுவித்தல்
         நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
         இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை;
ஊனம்இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்
         ஒன்றுக்கு ஒன்று உயரும்; இவை ஊட்டுவது போகம்;
ஆனவையால் மேலான ஞானத்தால் அரனை
         அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்.

சிவஞானப் பொருளை விளக்குகின்ற நூல்களைத் தான் ஓதுதலும் பிறர்க்கு ஓதுவித்தலும், நலம் தரும் அந்நூற் பொருள்களை நன்கு உணர்ந்து பிறர்க்கு உரைத்தலும், தான் அதனை ஆசிரியர்பால் கேட்டலும் குறைவிலாத அப்பொருளைத் சிந்தித்தலும் ஆகிய இவை ஐந்தும் சிவபெருமான் திருவடியை அடைவிக்கும் அழகிய ஞான வேள்வி என்று போற்றப்படும். குறைவிலாத கன்மவேள்வி, தவவேள்வி, சிவவேள்வி, தியான வேள்வி, என்ற நான்கும் நூல்களால் கூறப்படுவனவாகும். இவை ஒன்றுக்கொன்று உயர்ந்ததாகக் கூறப்படும். ஆயினும் இவை நான்கானும் பெறுகின்ற பயன் இன்ப நுகர்வே ஆகும். எனவே வீடுபேற்றை அடைய விரும்பும் பெரியோரெல்லாம் மேம்பட்ட ஞான வேள்வியினாலே சிவபெருமானை வழிபடுவர்.


கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
         கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில் ஞானம்;
வீட்டை அடைந் திடுவர் நிட்டை மேவினோர்கள்;
         மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு
ஈட்டிய புண்ணிய நாதர் ஆகி, இன்பம்
         இனிது நுகர்ந்து, அரன் அருளால் இந்தப் பார்மேல்
நாட்டிய நல் குலத்தினில் வந்து அவதரித்து, குருவால்
         ஞானநிட்டை அடைந்து அடைவர் நாதன் தாளே,

ஞானவேள்வியில் நான்கு வகைகள் கூறப்பட்டன. அவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டது கேட்டல், கேட்டலுடன் கேட்ட பொருளைப் பற்றிச் சிந்தித்தலும் சிந்தனையின் பயனாகத் தெளிவு பெறுதலும் அதன் பின்னர் நிட்டை கூடுவதும் என்று இவ்வாறு நான்கு வகையாக ஞானம் நிகழும். நிட்டை கை கூடியவர்கள் மேலாகிய வீட்டின்பத்தினைத் தலைப்படுவர். நிட்டை கைகூடாது முதல் மூன்று படிகளில் நின்று தாம் தாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மேலான உலகங்களுக்குச் சென்று அங்குள்ள இன்பத்தை இனிது நுகர்ந்து மீண்டும் சிவபெருமான் அருளால் இந்த உலகில் நல்ல குடியில் வந்து பிறப்பார்கள். அதன் பின்னர் அருளாசிரியர்களிடம் பயின்று ஞானநிட்டை பொருந்தி இறைவன் திருவடியை அடைவார்கள்.


ஞானத்தால் வீடு என்றே நான்மறைகள் புராணம்
         நல்ல ஆகமம் சொல்ல, அல்லவாம் என்னும்
ஊனத்தார் என் கடவர், அஞ்ஞானத்தால்
         உறுவதுதான் பந்தம், உயர் மெய்ஞ் ஞானந்தான்
ஆனத்தால் அது போவது, அலர் கதிர்முன் இருள்போல்
         அஞ்ஞானம் விடப்பந்தம் அறும், முத்தி ஆகும்,
ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்,
         இறைவன் அடி ஞானமே ஞானம் என்பர்.

எல்லாவற்றிலும் மேலான சிவஞானத்தினாலேயே வீடுபேற்றை அடையமுடியும் என்று நான்மறைகளும் புராணங்களும் சிவாகமங்களும் முழங்குகின்றன. அதற்கு மாறாக வேறு வகை முயற்சிகளாலும் வீடுபேற்றை அடையலாம் எனக் கூறும் புறச் சமயத்தார் கூற்று குறைபாடு உடையது. உயிருக்கு அறியாமையினால் விளைவதே கட்டுநிலை. கட்டுநிலையிலிருந்து விடுபட வேண்டுமானால் உயர்ந்த மெய்ஞ்ஞானம் தோன்றுதல் வேண்டும். மெய்ஞ்ஞானம் தோன்றவே கதிரவன் முன் இருள் போல அறியாமை விலகும். அறியாமை நீங்கிய உடனே பாசப் பிணிப்பு அகலும். வீடுபேறும் வாய்க்கும். மற்றையோர்கூறும் ஞானங்கள் எல்லாம் ஞானம் ஆகாது. சிவபெருமான் திருவடி ஞானமே மெய்ஞ்ஞானம் என்று மேலோர் கூறுவர்.

ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள்,
ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன்,
ஞானத்தால் தொழுவார்கள் தொழக் கண்டு
ஞானத்தாய் உனை நானும் தொழுவனே.      ---   அப்பர்.

ஞானமே வடிவாகிய பரம்பொருளை ஞானத்தால் தொழுதல், ஆன்மாவை உயர்நிலையில் வைக்கும் சிறந்த சாதனம் ஆகும்.
    
ஆத்தாள் ---

தாய், அன்னை, உலக உலக அன்னையாகிய சிவபரம்பரை.

ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
                                                                       ---  அபிராமி அந்தாதி

மால் தங்கைச்சி ---

திருமாலின் தங்கை உமாதேவியார்.

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே.   --- அபிராமி அந்தாதி.

கனிகை ---

"கன்னிகை" என்னும் சொல் "கனிகை" எனக் குறுகி வந்தது.

"அகிலாண்ட கோடிஈன்ற அன்னையே! பின்னையும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூபமயிலே!" எனத் தாயுமான அடிகளார் அருளினார். "சராசரம் யாவையும் ஈன்று அது சூழ்ந்தும் உன்னை இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பது என்னே" என்றார் வள்ளல் பெருமான். "கருத அரிய கடல் ஆடை உலகு, பல அண்டம் கருப்பமாய்ப் பெற்ற கன்னி" என்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

மறிகடல்கள் ஏழையும், திகிரிஇரு நான்கையும்,
மாதிரக் கரி எட்டையும்,
மாநாகம் ஆனதையும், மாமேரு என்பதையும்,
மாகூர்மம் ஆனதையும், ர்

பொறிஅரவு தாங்கி வரு புவனம் ஈரேழையும்,
புத்தேளிர் கூட்டத்தையும்,
பூமகளையும், திகிரி மாயவனையும், அரையில்
புலி ஆடை உடையானையும்,

முறைமுறைகளாய் ஈன்ற முதியவளாய், பழைமை
முறைகள் தெரியாத நின்னை
மூவுலகில் உள்ளவர்கள் வாலை என்று அறியாமல்
மொழிகின்றது ஏது சொல்வாய்,

அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி!
அருள் வாமி! அபிராமியே!           --- அபிராமி பட்டர்.


ஆக்கா யாவும் பற்றியெ, திரிபு உற நோக்கா ஏதும் செற்றவள் ---

ஆக்கா - பற்றுதல், ஆக்குதல், படைத்தல்.

எல்லாவற்றையும் படைத்து, அளித்து, அழிப்ப, மும்மூர்த்திகள் ஆன சிவபெருமானின் தேவி எல்லாவற்றையும் படைத்தவள் ஆகின்றாள்.

திரிபு - வேறுபாடு.

வேறுபாடு கொண்டு பார்க்காமல் எல்லாவற்றையும் காலத்தே அழித்தவள்.

திரு விளையாட்டால் ஈசன் பக்கம் அது உறைபவள் ---

இமயவல்லி இடப்பாகம் பெற்றது

உமையம்மையார், சந்திர சூரியர் சிவபெருமானுடைய திருக்கண்களே என்பதை உலகறியச் செய்யும் பொருட்டு, எம்பெருமானது திருக்கண்களைப் புதைத்தனர். அதனால் உலகங்கள் எல்லாம் இருண்டன. உயிர்கள் அனைத்தும் தடுமாறித் துன்புற்றன. அக்காலை சிவபெருமான் நெற்றிக் கண்களைத் திறந்து ஒளியை உண்டாக்கினர். அது கண்ட அம்பிகை, முக்கட்பெருமானைத் தொழுது, "எம்பெருமானே! உலகமெல்லாம் இருண்டு மருண்டு துன்புறும்படியா, நான் தங்கள் திருக்கண்களைப் புதைத்த பாவம் தீர மண்ணுலகில் சென்று தவம் புரியக் கருதுகின்றேன். அதற்குத் தக்க இடம் அருளிச் செய்வீர்" என்றனர்.

கண்ணுதற்கடவுள், "தேவீ ! உனை வினை வந்து அணுகாது. எனினும், உலகம் உய்யத் தவம் புரியக் கருதினை. மண்ணுலகில் மிகவும் சிறந்த தலம் காஞ்சியே ஆகும். ஆங்கு சென்று தவம் செய்தி" என்று அருளிச் செய்தனர். 

அம்மையார் பாங்கிகளும், அடியார்களும், விநாயகரும், முருகரும் சூழ, கச்சியம்பதி போந்து, வேதமே மாமரமாகி நிற்க, அதன் கீழ் மணலால் இலிங்கம் உண்டாக்கி வழிபாடு செய்தனர்.  அம்மையின் அன்பை உலகறியச் செய்ய இறைவன் கம்பை நதியில் பெருவெள்ளம் வரச்செய்தனர். அதுகண்ட அம்மை தன்னைக் காத்துக் கொள்ளும் கருத்து இன்றி, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது நேராவண்ணம் முலைத் தழும்பும், வளைச் சுவடும் உண்டாக சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டனர்.  இறைவன் அம்மையின் இணையற்ற அன்பின் பெருக்கை நோக்கி உருகி, விடைமீது காட்சி தந்தனர். உமாதேவி இறைவன் திருவடி மீது வீழ்ந்து, "இடப்புறம் தந்து என்னைக் கலந்து அருளும்" என்றனர். பெருமான், "உமையே! இங்கு தவம் புரிந்ததனால் கண் புதைத்த வினை கழிந்தது. இடப்பாகம் வேண்டுதியேல், நினைக்க முத்தியளிக்கும் திருத்தலமாகிய திருவருணைக்குச் சென்று தவம் செய்வாய். ஆங்கு அதனை அருள்வோம்" என்று அருள் புரிந்தனர்.

ஆரணன் திருமால் தேட, அடிமுடி ஒளித்து, ஞானப்
பூரண ஒளியாய் மேல்கீழ் உலகெலாம் பொருந்தி நிற்போம்,
தாரணி யவர்க்கும் மற்றைச் சயிலமாய் இருப்போம், அங்கே
வார் அணி முலையாய்! பாகம் தருகுவோம் வருதி என்றார்.

அருளே வடிவாகிய அம்பிகை தனது பரிவாரங்கள் யாவும் சூழ, இரண்டு காவதம் சென்று ஒரு வெள்ளிடையில் சேர்ந்தனர்.  அங்கே முருகக் கடவுள் வாழைப்பந்தர் இட்டனர். அது கண்ட தாய்,

அன்னையும் குகனை நோக்கி, அரம்பையால் பந்தர் செய்து
பன்னிரு கரமும் சால வருந்தினை எனப் பாராட்டி
இன்னுமோர் கருமம் சந்தி முடிப்பதற்கு இனிய நன்னீர்
கைந்நிறை வேலை ஏவி அழைத்திடு கணத்தில் என்றாள்.

அக்காலை ஆறுமுகப் பெருமான், தம் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தை ஏவி, மேற்பால் உள்ள மலையைப் பிளந்து, அதனின்றும் ஒரு நதியைத் தருவித்தனர். சேய் தருவித்த காரணத்தால், அந்த நதி சேயாறு எனப்படுவதாயிற்று.

வாழைப்பந்தல் என்ற திருத்தலமும் இன்று கண்கூடாக விளங்குகின்றது. அம்மை அந் நதியில் சந்தியாவந்தனம் செய்து, திருவண்ணாமலையை அடைந்தனர். அங்கு தவம் புரியும் முனிவர்களுடன் கௌதமர் அம்மையின் வரவைத் தரிந்து அளவற்ற மகிழ்ச்சி உற்று, எதிர் ஓடி மண்மிசை வீழ்ந்து கண்ணருவியுடன் துதித்து, வாய் குழறி, மெய் பதைத்து நின்றனர்.  அம்மை அன்புருவாய கோதமனாதியர்க்கு அருள் புரிந்து, ஆங்கு ஒரு தவச்சாலை நியமித்து தவம் புரிவாராயினார்.

கொந்தளகம் சடைபிடித்து விரித்து, பொன்தோள்
         குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி,
உந்துமர உரிநிகர் பட்டாடை நீக்கி,
         உரித்தமர உரிசாத்தி, உத்தூ ளத்தால்
விந்தை திருநீறு அணிந்து, கனற்குள் காய்ந்து,
         விளங்கும் ஊசியின் ஒருகால் விரலை ஊன்றி,
அந்திபகல் இறைபதத்தின் மனத்தை ஊன்றி,
         அரியபெரும் தவம்புரிந்தாள் அகிலம் ஈன்றாள்.

ஆங்கு மிகப்பெரும் தவ வலிமை உடைய மகிடாசுரன் தன் சேனைகளுடன் வந்து அம்மை தவத்திற்கு இடையூறு செய்ய, அம்மை துர்க்கையினால் மகிடாசுரனைக் கொல்வித்து அருளினர். இங்ஙனம் பரமேசுவரி நெடிது காலம் மாதவம் புரிந்து, கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி, அண்ணாமலை அண்ணலைத் தொழுது துதித்து நின்றனர்.  அதுசமயம், மலைமேல் ஒரு ஞானசோதி பல்லாயிரம் கோடி சூரியர் உதயம்போல் எழுந்து உலகமெல்லாம் உய்யத் தோன்றியது. அம்மை அதுகண்டு, மெய் சிலிர்த்து, உள்ளம் குளிர்ந்து வணங்கினர். "பெண்ணே! இம்மலையை வலமாக வருக" என்று சிவமூர்த்தி அசரீரியாகக் கூறியருளினர்.  அதுகேட்ட அம்மை ஞானதீபமுடன் விளங்கும் அண்ணாமலையைத் தமது பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க வலம் வருவாராயினார்.

"அம்மே! உமது திருவடி சிவந்தன" என்று கங்கை கை கூப்பி வணங்க, உமாதேவியார், அக்கினி, தெற்கு, நிருதி என்ற திசைகளில் அண்ணாமலையைத் தொழுது மேல்திசையை அடைந்தனர். அங்கு சிவபெருமான் விடைமீது காட்சி தந்து மறைந்தனர். பின்னர், அம்மை வாயு மூலையில் உள்ள அணி அண்ணாமலையைப் பணிந்து குபேர திசை, ஈசான திசைகளிலும் தொழுது, கீழ்த்திசை எய்தினார். தேவர் பூமழை பொழிய, மறைகள் முழங்க, ஆலமுண்ட நீலகண்டப் பெருமான் விடையின்மீது தோன்றி அம்மைக்குத் தன் உருவில் பாதியைத் தந்து கலந்து அருளினார்.

அடுத்த செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம்
தொடுத்த கொன்றை ஓர்புறம், ஒருபுறம் நறுந்தொடையல்,
வடித்த சூலம்ஓர் புறம், ஒருபுறம் மலர்க்குவளை,
திடத்தில்ஆர் கழல் ஒருபுறம், ஒருபுறம் சிலம்பு.

நாளும் ஏத்தா ---

இறைவனை நாளும் வழிபாடு செய்யவேண்டும். அற்றடி வழிபாடு செய்யாத நாள்கள் பயன்றறவை. பிறவாத நாள்கள் ஆகும். எவ்வளவு காலம் வாழ்ந்திருப்போம் என்று தெரியாது.  இப்போது இறப்போம் என்றும் தெரியாது. ஆனபடியால், உயிருடன் இருக்கின்ற நாள்களில் இறைவனை மனமார வழிபாடு புரிதல் வேண்டும்.

மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினை அல்லது இழிவினை அடைகிறது. மனம் ஒயாது தொழிற்படும் இயல்பினை உடையது. உறக்கத்தில் கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில் அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.

மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம். நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.

நீ நாளும் நல் நெஞ்சே! நினை கண்டாய், யார்அறிவார்
சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டு எம் பெருமாற்கே
பூ நாளும் தலைசுமைப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,
நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.      ---  திருஞானசம்பந்தர்.

தர்ப்பணம் செபமோடு நீத்தார் ஞானம் பற்றிய குருபர ---

தர்ப்பணம் - தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பிதிர்ருக்கும் இறுக்கும் நீர்க்கடன்.

செபம் - மந்திரம் ஓதல்.

இறைவனுடைய மூல மந்திரத்தை ஒருமையுடன் தனி இடத்து அமர்ந்து விதிப்படி உரு ஏற ஜெபித்தல் வேண்டும். அவ்வாறு ஜெபிப்பவர்களுடைய சஞ்சித வினைகளாகிய பஞ்சுப் பொறிகள் ஜெபத்தீயால் எரிந்தொழியும்

தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தல் செபம் ஆகும். மந்திரம் என்பதற்கு நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது).

செபித்தல் என்பது மானசம், உபாஞ்சு, வாசகம் என மூவகைப்படும்.

மானச செபம் ஆவது, நாக்கு நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.

உபாஞ்சு எனப்படுவது, தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.

வாசகம் எனப்படுவது, அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.

வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.

சட்டை அணிந்து கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்

திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.
   
உரு ஏறவே ஜெபித்து, ஒருகோடி ஓம சித்தி
     உடன்ஆக, ஆகமத்து ...... உகந்துபேணி,
உணர்வு ஆசை யார் இடத்தும் மருவாது, ஓர் எழுத்தை
     ஒழியாது ஊதை விட்டு ...... இருந்து, நாளும்
தரியாத போதகத்தர் குருஆவர், ஓர் ஒருத்தர்
     தருவார்கள் ஞான வித்தை, ...... தஞ்சம்ஆமோ?       ---  திருப்புகழ்.

யாப்பு ஆராயும் சொல் தமிழ்தரு முருகோனே ---

யாப்பு இலக்கணம் கொண்டு ஆராய்ந்து அமைந்த சொற்களைக் கொண்ட அற்புதமான தேவாரத் தமிழ்ப் பாடல்களத் தந்து அருளியவர் திருஞானசம்பந்தர்.

முருகப்பெருமானது சாரூபம் பெற்ற அபர் சுப்ரமணிய மூர்த்திகளுக்குள் ஒன்று முருகவேளது திருவருட்கலையுடன் சம்பந்தப்பட்டு தோன்றியது. இதனை உணராதார் முருகப் பெருமானே திருஞானசம்பந்தராகத் தோன்றினார் எனக் கூறி இடர்ப்படுவார். முருகவேள் பிறப்பு இறப்பு இல்லாதவர் என்பதை நம் அருணகிரியார், "பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று கூறியுள்ளதால் அறிக.

சுப்ரமண்ய சாரூபம் பெற்றோர் பலர் என்பதை அடியில் கண்ட பிரபல பிரமாணம் வலியுறுத்துமாறு காண்க.

ஒர்ஏழு கோடி பைங்கரர், கோடி
     வயிரவர் ஒன்பது கோடி,
சீர்கெழும் எண்தோள் நீலிகண்மயில் மேற்செல்லும்    
     வேல் உழவர் எண்கோடி,
ஏர்பெறும் இயக்கர் ஒன்றரை கோடி,
     இசைநவில் கின்னரர் கோடி,
கூர்நுதிப் பிறைப்பல் புயங்கம்ஓர்
     மூன்றுகோடி, தானவர்இரு கோடி.        --- காசிகண்டம்.

இவ்வணம் சாருபம் பெற்ற அபர சுப்ரமணிய மூர்த்திகளில் ஒன்றே திருஞானசம்பந்தராக வந்தது. இதை கூர்த்தமதி கொண்டு உணராதார் மூவருக்கு முதல்வனும், மூவரும் பணிகேட்க, முத்தொழிலைத் தந்த முழுமுதற் கடவுளும், ஓங்காரப் பொருளாய் நின்ற தனிப்பெருந் தலைவனுமாகிய பதிப்பொருள் பரஞ்சுடர் வடிவேலண்ணலே திருஞானசம்பந்தராகவும் உக்கிரகுமாரராகவும் பிறந்தார் என எண்ணுகின்றனர். தெய்வ இலக்கணங்கள் யாது யாது உண்டோ அவையனைத்தும் ஒருங்கேயுடைய முருகப்பெருமான் பிறப்பிலி என்பதை அருள் நூல்களைக் கொண்டு நுணுகி ஆராய்ந்து அறிதல் வேண்டும்.

அழிந்து புவனம் ஒழிந்திடினும்
     அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள் குலத்தின் உதித்து, அரனோடு
     அம்மை தோன்றி அளித்த வள்ளச்

செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
     சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன் பிணியும், சமண் பகையும்,
     தேவி துயரும் தீர்த்து அருளி,

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
     மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-
     வாரப் பாடல் சிவன் கேட்க

மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
     முகனே! முத்தம் தருகவே.
முத்துக் குமரா! திருமலையின்
     முருகா! முத்தம் தருகவே.            --- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.

ஏற்போர் தாம் வந்து, இச்சையின் மகிழ்வொடு வாய்ப்பாய் வீசும் ---

இல்லை என்று சொல்லி, ஏற்க வந்தவர்களை வரவேற்று, உள்ளம் மகிழ்ந்து அப்போது வாய்த்த பொருளை வழங்குவது சிறப்பு. அதுவே, இறைடியார்களுக்கு இலக்கணமும் ஆகும்.

"இன்மையால் சென்று இரந்தார்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார் ஆக்கூரில் தான்தோன்றி மாடமே" எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளி இருப்பது காண்க.

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்,
தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும், இரந்தோர்க்கு எந்நாளும்
காலம் பகராதார் காழிந் நகர்தானே.       --- திருஞானசம்பந்தர்.

இதன் பொழிப்புரை --- திருமால், பிரமன் ஆகியோர் அறிய முடியாத மாட்சிமையை உடையவனும், மான்தோலும், முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற மார்பினனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளும் பதி, தம்பால் இரந்தவர்களுக்கு எந்நாளும் பிறிதொரு நாளையோ, நேரத்தையோ குறிக்காது உடனே பொருள் வழங்கும் செல்வர்கள் வாழ்கின்ற சீகாழி நகராகும்.

நம்பர் அடியார் அணைந்தால்
     நல்ல திரு அமுது அளித்தும்,
செம் பொன்னும் நவ மணியும்
     செழும் துகிலும் முதல் ஆன
தம் பரிவினால் அவர்க்குத்
     தகுதியின் வேண்டுவ கொடுத்தும்
உம்பர் பிரான் திருவடிக் கீழ்
     உணர்வு மிக ஒழுகும் நாள்.     --- பெரியபுராணம்.


பொன் ப்ரபை நெடுமதிள் யாழ்ப்பாணாயன் பட்டினம் ---

பொன் - அழகு.

ப்ரபை, பிரபை - ஒளி.

யாழ்ப்பாணாயன் பட்டினம். என்பது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய ஊராகிய திரு எருக்கத்தம்புலியூராக இருக்கலாம் என்று கருதினார் தணிகைமணி அவரகள்.

நடு நாட்டுத் திருத்தலம். தற்போது இராஜேந்திரப்பட்டினம் என்று வழங்குகிறது.

விருத்தாசலம் - ஆண்டிமடம் - ஜெயங்கொண்டான் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் இந்தத் திருத்தலம் இருக்கிறது. அருகில் உள்ள இரயில் நிலையம் விருத்தாசலம். திருமுட்டம் என்கிற வைணவத் தலம் அருகில் உள்ளது. திருமுட்டம் - விருத்தாசலம் பாதையில் சென்றும் திருமுட்டத்தை அடுத்துள்ள இத்தலத்தை அடையலாம்.

இறைவர்         : நீலகண்டேசுவரர், சுவேதார்க்கவனேசுவரர்.
இறைவியார்     : அபீதகுஜநாயகி, நீலமலர்கண்ணிநீலோற்பலாம்பாள்.
தல மரம்          : வெள்ளெருக்கு.
தீர்த்தம்           : நீலோற்பலதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமான் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்றது.

புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர், தன் தந்தை மாத்தியந்தனரிடம் தில்லை நடராஜரின் பெருமையை கேட்டறிந்து, அங்கு வந்து திருமூலநாதரை வழிபட்டு வந்தார். அன்று மலர்ந்த பூக்களைப் பறித்து வந்து இறைவனுக்கு அர்ச்சிப்பது இவரது வழக்கம். பொழுது புலர்ந்தால் வண்டுகள் மலர்களிலுள்ள மகரந்தத்தை உண்பதால் பூக்களின் தூய்மை போய்விடுகிறது என்று நினைத்த அவர், முன் இரவிலேயே மரங்களில் ஏறி பூ பறிக்க புலிக்கால்களையும், அம்மலர்களை ஆராய்ந்து பார்த்து பறிக்க புலியின் கண்களையும் பெற்றார். அதனால் இவருக்கு வியாக்ரபாதர் (வடமொழியில் வியாக்ரம் என்றால் புலி) என்று பெயர் வந்தது. தமிழில் புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்பட்டார். எருக்கினைத் தல விருட்சமாக உடைய புலியூராதலின் திருஎருக்கத்தம்புலியூர் என்று பெயர் பெற்றது.

ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திரப் பேற்றையும், அவனுடைய மகன் இராஜேந்திர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு. இராஜேந்திர சோழ மன்னன் இவ்வாலயத்திற்கு ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கிறான். ஆதலால் இத்தலத்திற்கு "இராஜேந்திரப் பட்டினம்" என்று இவ்வூர் மக்கள் பெயர் சூட்டியதாக வரலாறு.


திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரப்பதி.

         அவதாரத் தலம்   : திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டினம்)
         வழிபாடு             : குரு வழிபாடு.
         முத்தித் தலம்      : திருநல்லூர்ப்பெருமணம்
         குருபூசை நாள்    : வைகாசி - மூலம்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு

திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சைவ சமயத்தவர்களால் போற்றப்படும் நாயன்மார்களுள் ஒருவர். இவர் திரு எருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர். இவர் சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்மூலம் இசைக்க, ஏழிசையிலும் வல்லவரான தம் மனைவியார் மதங்கசூளாமணியாருடன் சோழ நாட்டிலுள்ள திருத்தலங்களை வணங்கி பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையை அடைந்தார். அங்கு திருவாலவாய்த் திருக்கோயிலின் வாயிலை அடைந்து முன் நின்று இறைவனது பொருள்சேர் புகழ்மாலைகளை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். அவ் இன்னிசையைக் கேட்டு மகிழ்ந்த ஆலவாய் இறைவர், அன்றிரவு தம் தொண்டர்க்கு எல்லாம் கனவில் தோன்றித் திருநீலகண்டப் பெரும்பாணரை தமது திருமுன் கொண்டு புகும்படி பணித்தருளினார். அவ்வாறே பாணனார்க்கும் உணர்த்தி அருளினார். இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார். தரையினில் சீதம் தாக்கில் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும் என்று பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.

ஆலாவாய் இறைவரைப் போற்றி அருள் பெற்ற பெரும்பாணர் பல தலங்களையும் வழிபட்டுத் திருவாரூரரை அடைந்தார். அங்கு தமது குல மரபின் படி கோயில் வாயிலின் முன் நின்று இறைவர் புகழ்த்திறங்களை யாழில் இட்டு இசைத்தார். பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, வடதிசையில் வேறொரு வாயிலை வகுத்தருளினார். பாணர் அவ்வழியே புகுந்து ஆரூர்த் திருமூலட்டானத்து அமர்ந்த இறைவர் முன் சென்று ஆளுடைய பிள்ளையாரை வணங்கும் விருப்பினராய் சீகாழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் உறையும் திருத்தலங்களை வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் திருநல்லூர்ப் பெருமணத்தில் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூட அடியார் திருக்கூட்டத்துடன் ஈறில் பெருஞ்சோதியினுட் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்றார்.

கருத்துரை

முருகா! அடியேனுக்கு உண்மைப் பொருளை உபதேசித்து அருள்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...