048. வலி அறிதல் --- 07. ஆற்றின் அளவு அறிந்து

 


திருக்குறள்

பொருட்பால்

 

அ. அரசியல்

 

அதிகாரம் 48 -- வலி அறிதல்

 

     இந்த அதிகாரத்தில் வரும் ஏழாம் திருக்குறளில், "உரிய முறையில் தன்னுடைய பொருளின் அளவை அறிந்து உதவுக. அதுவே பொருளைப் பேணிப் பாதுகாத்து வழங்கும் வழி ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     அளவிற்கு ஏற்பக் கொடுத்தலாவதுஒருவன் தன்னுடைய வருவாயின் எல்லையை இது என்று அறிந்துஅதனை நான்கு பங்காக்கிஅதனுள் இரண்டைத் தனது செலவுக்கு வைத்தும்ஒரு பங்கை ஆபத்துக்கு உதவும் இருப்பாக வைத்தும்எஞ்சியுள்ள கால் பாகத்தினைப் பிறர்க்குக் கொடுத்தல் ஆகும். இதுவேபொருளைப் போற்றி வாழும் வழி ஆகும்.

 

திருக்குறளைக் காண்போம்....

 

ஆற்றின் அளவு அறிந்து ஈகஅது பொருள்

போற்றி வழங்கும் நெறி.             

 

இதற்குப் பரிமேலழகர் உரை ---

 

         ஆற்றின் அளவு அறிந்து ஈக--- ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக

 

     அது பொருள் போற்றி வழங்கும் நெறி--- அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.

 

         (ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசுகுறள்.385) என்புழி உரைத்தாம். எல்லைக்கு ஏற்ப ஈதலாவதுஒன்றான எல்லையை நான்கு கூறாக்கிஅவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கிஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும், 'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக் கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.)

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

 

ஈவது யோக இயம நியமங்கள்

சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி,

ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு

ஈவ பெரும்பிழை என்று கொளீரே. --- திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     பொருளைத் தானம் செய்தல்யோக நெறியில் இயம நியமங்களாகச் சொல்லப்படும் தவிர்வன செய்வன அறிந்து அந் நிலைக்கண் உறைத்து நிற்கும் உரன் உடையோர்க்கே ஆகும். அவ்வாறன்றிஅந்த உரன் இலார்க்குச் செய்தல் பெருங்குற்றமாம் என்பதை உணர்மின்கள்.

 

இறப்பச் சிறிது என்னாது,இல் என்னாது,என்றும்

அறப்பயன் யார்மாட்டும் செய்க,--- முறைப்புதவின்

ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல்

பைய நிறைத்து விடும்.                 --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     இறப்பச் சிறிது என்னாது --- நம்மிடம் இருப்பது மிகவும் சிறியது என்று கருதாமலும்இல் என்னாது --- இல்லை என்று மறுத்து விடாமலும்என்றும் --- எப்போதும்அறப் பயன் யார் மாட்டும் செய்க --- பயனுடைய தான அறத்தை அனைவரிடத்தும் செய்து வருக, (அச்செயல்) முறைப் புதவின் --- வாயில்கள் தோறும்ஐயம் புகும் தவசி கடிஞை போல் --- பிச்சையெடுக்கும் தவசியின் உண்கலத்திற்போலபைய நிறைத்து விடும் --- மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கி விடும்.

 

         சிறிய உதவியாயினும் மறாமற் செய்து வந்தால்,மெல்ல மெல்லப் புண்ணியம் நிறைந்துவிடும்.

 

 

இரப்பவர்க்கு ஈயக் குறைபடும் என்று எண்ணிக்

கரப்பவர் கண்டறியார் கொல்லோ?- பரப்பில்

துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

இறைத்தோறும் ஊறும் கிணறு.      --- பழமொழி நானூறு.

 

இதன் பொருள் ---

 

     பரப்பில் --- கடலிடத்தில்துறை தோணி நின்று உலா(வு)ம் தூங்கு நீர் சேர்ப்ப --- துறையின்கண் தோணிகள் நின்று அசைந்து கொண்டிருக்கும் அசைகின்ற நீரை உடைய கடல் நாடனே!இரப்பவர்க்கு --- தன்னை அடைந்து ஒரு பொருளை வேண்டுவார்க்குஈய குறைபடும் என்று எண்ணி கரப்பவர் --- கொடுப்பதால் தமது செல்வம் குறையும் என்று நினைத்து இல்லையென்று சொல்லித் தமது பொருளை மறைப்பவர்கள்இறை தோறும் ஊறும் கிணறு --- இறைக்குந்தோறும் நீர் ஊறுங் கிணற்றை,  கண்டு அறியார் கொல்லோ --- பார்த்து அறியார் ஆயினார் போலும்.

 

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்,செருவாய்ப்பச்

செய்தவை நாடாச் சிறப்புடைமை,- எய்தப்

பலநாடி நல்லவை கற்றல்,இம்மூன்றும்

நலமாட்சி நல்லவர் கோள்.          ---  திரிகடுகம்.

 

இதன் பொருள் ---

 

     வருவாயுள் கால் வழங்கி வாழ்தல் --- தமக்கு வரும் பொருள்களிலே நான்கில் ஒரு பங்கு அறத்தில் செலவு செய்துவாழ்தலும்செரு வாய்ப்ப செய்தவை நாடாச் சிறப்பு உடைமை --- போரினிடத்துவெற்றி கிடைக்குமாறு தான் செய்த செயல்களைஆராயாது யாவர்க்கும் விளங்கித் தோன்றும் சிறப்பு உடையன் ஆதலும்எய்தப் பல நாடி நல்லவை கற்றல் --- நிரம்பப் பலவற்றையும் ஆராய்ந்துஅவற்றுள் நல்லவற்றைப் படித்தலும்இ மூன்றும் நல மாட்சி நல்லவர் கோள் --- ஆகிய இம் மூன்றும் நற்குண நற்செய்கைகளால் பெருமை பெற்ற நல்லவருடைய கொள்கைகளாம்.

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...