மனிதர்களில் விலங்கு

 


மனிதர்களில் விலங்கு

-----

 

     Aristotle the legendary Greek philosopher said, “Man is by nature a social animal; an individual who is unsocial naturally and not accidentally is either beneath our notice or more than human.

 

     ஐந்து அறிவு படைத்த விலங்கில் இருந்து பிறந்தவன்தான் மனிதன். மனிதப் பிறவிக்கு வந்தபோதும்முற்பிறவிகளின் தொடக்கால் விலங்குத் தன்மை மாறாது இருப்பதால் அவனை ஒரு சமூக விலங்கு என்றனர். விலங்கு என்று ஒரு இனத்தைக் குறிப்பட்டுச் சொல்லாமல், "சமூக விலங்கு" என்ற சொல்லக் காரணம் உண்டு. மனிதர்கள் யாவரும் உருவத்தால் மனிதர்களாகவே இருக்கின்றார்கள். புறத் தோற்றத்தை வைத்து, யாரையும் இன்ன விலங்கு என்று சொல்லிவிட முடியாது. சொல்லிவிட்டுத் தப்பிக்கவும் முடியாது.

 

     எனவேஉருவத்தால் ஒத்து இருப்பதாலேயே மக்கள் என்று சொல்லிவிட முடியாது. மக்கள் பண்பாகியபகுத்தறிவு என்று சொல்லப்படும் ஆறாவது அறிவு பொருந்தி இருக்கவேண்டும். பகுத்தறிவு என்பது ஆறாவது அறிவாகிய மன அறிவைக் குறிக்கும். மன அறிவு என்பது, "நல்லதன் நன்மையும்தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்ந்து அறிதல்" என்று தொல்காப்பிய வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது. எனவேதிருவள்ளுவ நாயனார் பின்வருமாறு திருக்குறளால் காட்டினார்...

 

"உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால்வெறுத்தக்க

பண்பு ஒத்தல் ஒப்பதாம் ஒப்பு".

 

     மனிதன் தனக்குள்ள விலங்குத் தன்மையில் இருந்து நீங்கவேண்டுமானால்இலங்கு நூல்களை அவன் படித்து ஒழுகவேண்டும். உள்ளத்தில் உள்ள கசடு அறும்படியாகக் கற்க வேண்டும். கற்ற வழி நிற்றல் வேண்டும்.

 

"விலங்கொடு மக்கள் அனையர்இலங்கு நூல்

கற்றாரோடு ஏனையவர்"          ---  திருக்குறள்.

 

இதன் பொருள் ---

 

     அறிவு துலங்கும் நூல்களைக் கற்றாரோடுஅவற்றைக் கல்லாதவரை ஒப்பு நோக்க விலங்கையும் மக்களையும் போல்வர்.

 

     இலகுதல் --- ஒளி மிகச் செய்தல். விளங்குதல். இலங்கு நூல் --- அறிவு விளக்கம் பெறச் செய்யும் நூல்கள். அறிவில் ஒளி மிகுதலாவது, அறிவில் உள்ள அறியாமை நீங்குதல்.

 

     மனித வடிவில் இருப்பதாலேயே ஒருவனை மனிதன் என்ற கொள்ள முடியாதுஅவரவர்க்கு உள்ள குணங்களை வைத்துஅவர் இன்ன விலங்கு என்பதைத் தெரிந்து கொண்டுஅதற்கேற்ப அவரோடு பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம் என்னும் கருத்து அமைய, "குமரேச சதகம்" என்னும் நூலில் வரும் பாடலைக் காண்போம்...

 

தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி

     தள்ளிச்செய் வோர்குரங்கு;

சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்

     தாம்பயன் இலாதமரமாம்;

 

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு

     வெறியர்குரை ஞமலியாவர்;

மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்

     மேன்மையில் லாதகழுதை;

 

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்

     தூங்கலே சண்டிக்கடா;

சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும்

     துட்டனே கொட்டுதேளாம்;

 

மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை

     வலமாக வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

 

இதன் பொருள் ---

 

     மாம்பழம் தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா---முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக வந்த முருகப் பெருமானே! மயில் ஏறி விளையாடு குகனே--- மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளிச் செய்வோர் குரங்கு---தான் கொண்டது தான் கொள்கை எனக் கொண்டுபெரியோர் கூறும் அறவுரைகளைப் பொருட்படுத்தாது செயல்படுவோர்மனிதர்களில் குரங்கு போன்றவர். சபையில் குறிப்பு அறிய மாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம்---பெரியோர்கள் கூடி இருக்கும் சபையில்குறிப்பை அறிந்து பேசாமல் நிற்பவர்கள் மனிதர்கள் அல்ல. அவர் பயனற்ற மரம் ஆவர். வீம்பினால் எளியவரை எதிர் பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குறை ஞமலி ஆவர்---வேண்டுமென்றே எளியவர்களை எதிர்த்துக் கொண்டு நிற்கும் வெறித்தனம் மிக்கவர்கள்மனிதர்களில் குரைக்கும் நாய் போன்றவர்கள். மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மையில்லாத கழுதை ---தங்களை மிகவும் நாடி வருவோரின் முகத்தையும் ஏறெடுத்தும் பார்க்காத கஞ்சத்தனம் மிக்கவர்கள்மனிதர்களில் இழிந்த கழுதை ஆவர்சோம்பலோடு பெரியோர் சபைக்குள் படுத்திடும் தூங்கலே சண்டிக் கடா--- சான்றோர் கூடியிருக்கும் அவையிலே சோம்பிப் படுத்து இருக்கும் தூங்கு மூஞ்சியேமனிதர்களில் சண்டித்தனம் உள்ள எருமைக்கடா ஆவான். சூதுடன் அடுத்தோர்க்குஇடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம்---மனத்தில் வஞ்சகத்தை வைத்துக் கொண்டுதன்னை நாடி வந்தவர்களுக்குத் துன்பத்தையே செய்யும் கீழ்மகன் தான் மனிதர்களில் கொட்டுகின்ற தேளைப் போன்றவன்.

 

     விளக்கம்--- மனிதர்களில் அறிவு மிக்கவர்அறிவில் குறைந்தவர்அறிவே இல்லாதவர் என்று மூவகை உண்டு. நன்மை தீமைகளை அறிந்தவர் அறிவு மிக்கவர். நன்மை தீமைகளைப் பகுத்து உணர மாட்டாதர் அறிவில் குறைந்தவர். தீமையையே பயிலுபவர்கள் அறிவே இல்லாதவர்கள். அறிவில் சிறந்தவர்கள் சொல்லும் அறவுரைகளைக் கொள்ளவேண்டும். தீமைகளைத் தள்ள வேண்டும். 

 

     பெரியோர் சொல்லும் அறவுரைகளைப் பொருட்படுத்தாமல் தான் நினைத்ததையே செய்பவன் குரங்கைப் போன்றவன் என்றார். மழையில் நனைந்த ஒரு குரங்குக்குமரத்தில் கூடு கட்டி வாழ்ந்த தூக்கணங்குருவி சொன்ன அறிவுரை நன்மையைத் தரவில்லை என்ற கதை யாவரும் அறிந்ததே. 

 

     அவையிலே குறிப்பு அறியும் திறம் இருக்கவேண்டும். குறிப்பறிதல் என்பது கருத்து அறிந்து நடந்து கொள்ளுதல் ஆகும். "குறிப்பறிதல்" என்று ஒரு அதிகாரத்தையே பாடி வைத்தார் திருவள்ளுவ நாயனார். குறிப்பறிய மாட்டாதவன் உணர்ச்சியற்ற மரத்தைப் போன்றவன் என்கின்றார் ஔவைப் பிராட்டியார்.

 

கவையாகிக்கொம்பாகிக்காட்டகத்தேநிற்கும்

அவைல்லநல்லமரங்கள்,--- சவைநடுவே

நீட்டு ஓலைவாசியாநின்றான்,குறிப்பு அறிய

மாட்டாதவன்நல்மரம்.

 

கிளைகளையும் கொம்புகளையும் உடையனவாகி காட்டினுள்ளே நிற்கின்ற அந்த மரங்கள் நல்லமரங்கள் அல்ல.கற்றோர் சபையின் நடுவேஒருவர் நீட்டிய ஓலையைப் படிக்கமாட்டாமல் நின்றவனும்பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே நல்ல மரங்கள்.

 

     நாய் யாரைப் பார்த்தாலும் குரைக்கும். நல்லது கெட்டது அறியாது. போகவிட்டுப் பின்னால் குரைக்கும். கல் எடுத்தால் அடங்கும். வேண்டுமென்றே தற்புகழ்ச்சிக்காகத் தன்னை விடவும் எளியவர்களை எதிர்த்து நிற்பவர்கள் நாயைப் போன்றவர்கள்.

 

     மிக உயரமான பாறைகளிலும் மலைப்பாதைகளிலும் பொருள்களை சுமந்து கொண்டு கழுதைகள் நடப்பதை பார்த்தவர்கள் நிச்சயம் அதைக் குறை சொல்ல மாட்டார்கள். கழுதை ஒரு நாளில் முப்பது நிமிடங்கள் தான் உறங்கும். ஓய்வெடுத்து கொள்ளும். எதைத் தன்மீது வைத்தாலும் சுமந்து செல்லும். ஓய்வு ஒழிவு இல்லாமல்எந்த வழியிலாவது பொருளைத் தேடி,யாருக்கும் உதவாத உலுத்தர்கள் கழுதையைப் போன்றவர்கள்.

 

     பெரியோர்கள் கூடி இருக்கும் சபையானது தூங்கி வழிவதற்கு உரியது அல்ல. விழிப்புணர்வுடன் இருந்து நல்லறிவைத் தேக்கிக் கொள்வதற்கு உரிய இடம். அங்கே தூங்குபவனைச் சண்டிமாடு என்றார்.

 

"தேள் அது தீயில் வீழ்ந்தால்,

     செத்திடாது எடுத்த பேரை,

மீளவே கொடுக்கினாலே

     மெய்யுறக் கொட்டும்பல்லோர்

ஏளனம் பேசித் தீங்கு உற்று

     இருப்பதை எதிர்கண்டாலும்,

கோளினர் தமக்கு நன்மை 

     செய்வது குற்றம் ஆமே".   --- விவேக சிந்தாமணி.

 

     தேளானது நெருப்பிலே விழுந்து விட்டால்அது சாகாதபடிக்கு, அதனைக் காப்பாற்றி எடுத்த பேர்களைமீள தனது வால்புறமாகத் திரும்பிதனது கொடுக்கால் அவர்கள் உடலில் பதியக் கொட்டித் துன்புறுத்தும். அதுபோலபலரும் தமது இழிநிலையை ஏளனமாகப் பேசிகோள் சொல்லும் இயல்பினை உடையவர் துன்பத்தில் இருப்பதைக் கண்டாலும்அந்தத் தீயவருக்கு நன்மை செய்வது கெடுதியாகவே முடியும்.

 

     பிறரைப் பற்றிக் கோள் சொல்லியே பழக்கப்பட்ட ஒருவரைத் திருத்த முடியாது. தனக்கு உபகாரம் செய்தவரைப் பற்றியும் ஒரு நாள் கோள் சொல்லுவார். உபகாரம் செய்வர்க்கே மீளவும் அபகாரம் செய்வார். என்பதால்கோளருக்கு அவர் துன்பத்தில் இருக்கக் கண்டாலும் உதவ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

 

     வஞ்சகச் சூதில், தருமன் தன்னையும் தனது தம்பியரையும் சூதில் ஒட்டித் (பணயமாக வைத்து) தோல்வியுறுகின்றான். திரௌபதியைப் பணையமாக வைத்துச் சூதாடுமாறு தருமனைச் சகுனி தூண்டுகின்றான். இது பொறுக்காமல் மனம் வருந்திய விதுரன், திருதராட்டிரனைப் பார்த்து, "நீ பாண்டவர்களைப் பார்க்கும்போதெல்லாம், அன்பினால் உருகுகின்றாய். உள்ளத்தில் கொண்ட பகைமை உணர்வு காரணமாகஉனது மைந்தர்கள் பாண்டவர்க்குத் தீமை விளைக்கின்ற போது, அதற்கு நீ உடன்பட்டு வாய் பேசாமல் இருப்பது கூடாது. நீ மிருகமும் அல்ல. பறவையும் அல்ல. மனிதனாக இருந்தும், பகுத்தறிவு இல்லாமல், உள்ளத்தில் இரக்கம் என்பதும் இல்லாமல் இருக்கின்ற உன்னோடு நாங்கள் சேர்ந்து இருப்பது எங்களது அறியாமையே ஆகும். உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை" என்று விதுரன் மனம் வருந்தித் திருதராட்டிரனை நோக்கிக் கூறுகின்றான்.

 

 

திருகுநெஞ்சின்வஞ்சராகிஇளைஞர்தீமைசெய்தக்கால்

உருகுகின்றதாதைநீஉடன்படுத்துஇருப்பதோ?

மிருகம்அன்று,பறவைஅன்றுஇரக்கம்இன்றிமேவும்நின்

அருகுவந்துஅணைந்ததுஎங்கள்அறிவிலாமைஆகுமே.

                                                                    --- வில்லிபாரதம்சூதுபோர்ச்சருக்கம்.

 

இதன்பொருள்---

 

     உனது மைந்தர்கள்மாறுபாடு கொண்டு, மனத்திலே வஞ்சனைக் கருத்தை உடையவர்களாய்பாண்டவர்கட்குப் பொல்லாங்கு செய்தபொழுதில்அப்பாண்டவரிடத்து உண்மை அன்புக்கு உருகுபவ ன்போலப் பாவனை காட்டுகிற பெரியதந்தையாகிய நீஅப்பொல்லாங்குக்குச் சம்மதித்திருப்பது தகுதியோநீ மிருகமும் அல்லைபறவையும் அல்லை;  மனிதனாய் இருந்தும் இரக்கம் இல்லாமல் இருக்கிற உனது சமீபத்தில் நாங்கள் வந்து சேர்ந்திருப்பதற்குக் காரணம்எங்களது புத்தியில்லாமையே ஆகும்உன்மீது குற்றஞ் சொல்வதில் பயனில்லை.

 

     தன்னை மறைந்திருந்து கொன்றது தகாது என்று பல நியாயங்களை எடுத்துச் சொன்ன வாலிக்கு, "நல்லது இது தீயது இது என்ற நியாயம் அனைத்தும் உனக்குத் தெரிந்து உள்ளது. அறிவினால் சிறந்தவர்கள் என்று கருதப்படுவோராக இருந்தாலும், செய்யத் தகுவது இது, தகாதது இது என்று தேர்ந்து செய்யாவிட்டால், அவர்கள் விலங்குத் தன்மையை உடையவர்களே. விலங்குப் பிறப்பாக இருந்தாலும், மேலான தருமநெறியில் பிறழாது ஒழுகினால், அவர்கள் தேவர்களினும் மேலானவராக மதித்துப் போற்றப் பெறுவர்".

 

     "குற்றமே செய்யும் இயல்பினை உடைய கீழ்க்குலத்தில் பிறந்தோராக இருந்தாலும், பெருமை வளர்வதற்கு உரிய நல்லறச் செயல்களில் ஈடுபடுவோர் உண்டு. ஆற்றல் மிக்க முனிவர்களிலும், பலவகையான நற்செயல்களில் மிகுந்த தேவர்களிலும், தீய செயல்களைச் செய்தோர் உள்ளனர். நீயோ, குரங்கினத்தில் பிறந்தவனாக இருந்தாலும், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபிரானைக் குறித்து அருந்தவம் இயற்றி, அவர் அருளால் அளவில்லாத ஆற்றலைப் பெற்று இருந்தாய். அப்படி இருந்தும், அறத்திற்கு மாறான செயலை நீ செய்து, அறத்தை அழித்து விட்டாய் என்று கூறி, மேலும் கூறுகின்றார்.

 

இனையது ஆதலின் எக் குலத்து யாவர்க்கும்

வினையினால் வரும் மேன்மையும் கீழ்மையும்;

அனைய தன்மை அறிந்தும் அழித்தனை

மனையின் மாட்சி என்றான் மனு நீதியான்.  ---  கம்பராமாயணம்வாலி வதைப்படலம்.

 

இதன் பதவுரை ---

 

     இனையது ஆதலின் --- உண்மை இத்தன்மையது ஆதலால்எக் குலத்து யாவர்க்கும் --- எந்தக் குலத்தில் பிறந்தவராயினும் அவர்கள் எல்லோர்க்கும்மேன்மையும் கீழ்மையும் --- உயர்வும்இழிவும்வினையினால் வரும் --- அவரவர் செய்யும் செயல்களால் வரும். அனைய தன்மை அறிந்தும் --- அத் தன்மையை நீ உணர்ந்திருந்தும்மனையின் மாட்சி --- பிறன் மனையாளின் கற்பு மாண்பினைஅழித்தனை --- அழித்தாய்என்றான் --- என்று உரைத்தான்மனு நீதியான் --- மனு நீதியில் தவறாதவனாகிய இராமன்.

 

     நற்செயலால் மேன்மையும் தீச்செயலால் கீழ்மையும் வரும். மாட்சி. பெருமை இங்கே சிறப்பினால் கற்பை உணர்த்திற்று. பாவங்கள் பலவற்றுள் பிறன்மனை நயத்தல் என்பது கொடிய பாவமாகும். அத்தகைய கொடிய பாவத்தை வாலி புரிந்ததால்தண்டிக்கத் தான் அம்பு தொடுத்தது குற்றமல்ல என இராமன் உணர்த்தினான். 'அறத்தைக் காத்தலாகிய தொழிலில் மனு விதித்த நெறியிலிருந்து இராமன் தவறுபவன் அல்லன் என்பதை அறிவிக்கவே 'மனுநீதியான்என உரைத்தார் கம்பர்.

 

 

"நன்றுதீது,என்று இயல் தெரிநல் அறிவு

இன்றி வாழ்வது அன்றோ,விலங்கின் இயல்?

நின்ற நல்நெறிநீஅறியா நெறி

ஒன்றும் இன்மைஉன்வாய்மை உணர்த்துமால்". ---  கம்பராமாயணம்வாலிவதைப்படலம்.

 

            தன்பால் குற்றம் இல்லை என வாலி கூறிய மொழிகளை இராமன் மறுத்துஅவன் செய்த செயல் குற்றமுடையதே என்பதனை வலியுறுத்தல்.

 

இதன்பொருள்---

 

            விலங்கின் இயல்--- விலங்குகளின் இயல்பாவதுநன்று தீது என்று--- நல்லது இதுதீயது இது என்றுஇயல் தெரி--- அதனதன் இயல்புகளை உள்ளபடி உணர்கின்றநல்அறிவு இன்றி--- நல்ல அறிவில்லாமல்வாழ்வது அன்றோ--- (மனம் போனவாறுவாழ்வது அல்லவாநின்ற நல்நெறி--- நிலைபெற்ற நல்ல அறநெறிகளில்நீ அறியா நெறி--- நீ ஆராய்ந்து உணராத நீதிநெறி, ஒன்றும் இன்மை--- ஒன்றும் இல்லை என்பதைஉன் வாய்மை உணர்த்தும்--- இப்பொழுது நீ பேசிய உன் வாய்மொழியே உணர்த்தும்.

 

           எல்லா நன்னெறிகளையும் அறிந்தும் அறநெறிக்கு மாறாக நடந்து கொண்டது வாலியின் குற்றம் என உணர்த்தப்பட்டது.  ஏனெனில்அவன் வாய்ச்சொற்களே அவன் அறநெறி எது என்பதை நன்கு அறிந்தவன் என்பதைப் புலப்படுத்திவிட்டது.  அறநெறிக்கு மாறாக நடப்பவன் மனித வடிவில் இருந்தாலும், விலங்குதான்.                             

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...