இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
வளநாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
இருப்பதுவே தக்க தாகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்
றியபகையே வண்மை யாமே.
இதன் பொருள் ---
இழை பொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் – அணிகள் தாங்கிய முலைகளை உடைய உமையம்மையாரைத் தமது திருமேனியின் இடப்பாகத்தில் கொண்ட திருத் தண்டலை இறைவரின் வளம்பொருந்திய நாட்டிலே, எடுத்த ராகம் தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய் இருப்பதுவே தக்கது ஆகும் - தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக் காட்டினும் பாடாமல் இருப்பதே நலம் தரும்; குழை குழைத்த கல்வியினும் கேள்வியினும் கல்லாமை குணமே - தெளிவற்ற கல்வி கேள்விகளை விடக் கல்லாமையே நன்மை தருவதாகும்; நாளும் வழுவழுத்த உறவதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை ஆம் - எப்போதும் மனத் தெளிவற்ற உறவைக் காட்டிலும் நீங்காத சினத்தைப் பொருந்திய பகையே வளம் உடையதாகும்.
No comments:
Post a Comment