அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பக்கம்உற நேரான (பொது)
முருகா!
உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன்,
உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அருள் புரிவாய்.
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ...... தனதான
பக்கமுற நேரான மக்களுட னேமாதர்
பத்தியுடன் மேல்மூடி ...... யினிதான
பட்டினுட னேமாலை யிட்டுநெடி தோர்பாடை
பற்றியணை வோர்கூவி ...... யலைநீரிற்
புக்குமுழு காநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிட வேயாவி ...... பிரியாமுன்
பொற்கழலை நாடோறு முட்பரிவி னாலோது
புத்திநெடி தாம்வாழ்வு ...... புரிவாயே
இக்கனுக வேநாடு முக்கணர்ம காதேவர்
எப்பொருளு மாமீசர் ...... பெருவாழ்வே
எட்டவரி தோர்வேலை வற்றமுது சூர்மாள
எட்டியெதி ரேயேறு ...... மிகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில்முனி வோர்சூழ
மத்தமயில் மீதேறி ...... வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பக்கம் உற நேரான மக்கள் உடனே, மாதர்
பத்தியுடன் மேல்மூடி, ...... இனிதான
பட்டின் உடனே மாலை இட்டு, நெடிது ஓர் பாடை
பற்றி, அணைவோர் கூவி, ...... அலைநீரில்
புக்கு, முழுகா, நீடு துக்கமது போய், வேறு
பொன் தீ இடவே, ஆவி ...... பிரியாமுன்,
பொற்கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது
புத்தி நெடிது ஆம் வாழ்வு ...... புரிவாயே.
இக்கன் உகவே நாடு முக்கணர், மகாதேவர்,
எப்பொருளும் ஆம் ஈசர் ...... பெருவாழ்வே!
எட்ட அரிது ஓர் வேலை வற்ற, முது சூர்மாள,
எட்டி எதிரே ஏறும் ...... இகல்வேலா!
மக்களொடு வான்நாடர், திக்கில் முனிவோர் சூழ,
மத்த மயில் மீது ஏறி ...... வருவோனே!
வைத்தநிதி போல்நாடி, நித்தம் அடியார் வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே.
பதவுரை
இக்கன் உகவே நாடு முக்கணர் --- கரும்பு வில்லினை உடைய மன்மதன் எரிந்து பொடி ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவரும்,
மகா தேவர் --- தேவர்களுக்கு எல்லாம் தேவர் ஆக இருப்பவரும்,
எப்பொருளும் ஆம் --- எல்லாப் பொருளும் ஆனவரும் ஆகிய,
ஈசர் பெரு வாழ்வே --- சிவபரம்பொருள் தந்தருளிய பெருஞ்செல்வமே!
எட்ட அரிது ஓர் வேலை வற்ற --- ஆழம் காண அரிதாகிய கடல் வற்றிப் போகுமாறும்,
முதுசூர் மாள --- சூரபதுமன் ஆதியோர் மாளவும்,
எட்டி எதிரே ஏறும் இகல் வேலா --- மேற்சென்று போருக்கு எழுந்த வல்லமை வாய்ந்த வேலாயுதரே!
மக்களோடு வான்நாடர் திக்கில் முனிவோர் சூழ மத்த மயில் மீது ஏறி வருவோனே --- மண்ணுலகில் உள்ளோரும், விண்ணுலகில் உள்ளோரும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து போற்ற, அதிக உற்சாகமான மயிலின்மேல் ஏறி வருபவரே!
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே --- சேமவைப்பாக வைக்கப்பட்ட பொருள் போலக் கருதி வழிபடும் நாள்தோறும் அடியார்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர் --- பக்கத்தில் சூழ்ந்து உள்ள ஒழுக்கம் நிறைந்த மக்களும், பெண்டிரும்,
பத்தியுடன் மேல் மூடி இனிதான பட்டின் உடனே --- முறையான அலங்காரத்தோடு உடலை (பிணத்தை) மேன்மையான பட்டாடையால் மூடியும்,
மாலை இட்டு –-- மாலை இட்டும்,
நெடிது ஓர் பாடை பற்றி --- நீண்டதொரு பாடையில் கிடத்தி,
அணைவோர் கூடி --- அணைபவர்கள் எல்லோரும் கூடி,
அலை நீரில் புக்கு முழுகா, நீடு துக்கம் அது போய் --- அலை வீசும் நீர்நிலையில் சென்று முழுகி, நீண்ட துக்கமும் தீரவே,
வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் --- மாற்றார்கள் போல, உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்டும்படியாக, உயிரானது உடலில் இருந்து நீங்கும் முன்னரே,
பொற்கழலை நாள்தோறும் உள் பரிவினால் ஓது புத்தி நெடிது ஆம் வாழ்வு புரிவாயே --- தேவரீரது அழகிய திருவடிகளை நாளும் தினமும் உள்ளன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுவீராக.
பொழிப்புரை
கரும்பினை வில்லாக உடைய மன்மதன் எரிந்து பொடி ஆகும்படி நெற்றிக்கண்ணை விழித்தவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவர் ஆக இருப்பவரும், எல்லாப் பொருளும் ஆனவரும் ஆகிய, சிவபரம்பொருள் தந்தருளிய பெருஞ்செல்வமே!
ஆழம் காண அரிதாகிய கடல் வற்றிப் போகுமாறும், சூரபதுமன் ஆதியோர் மாளவும், மேற்சென்று போருக்கு எழுந்த வல்லமை வாய்ந்த வேலாயுதரே!
மண்ணுலகில் உள்ளோரும், விண்ணுலகில் உள்ளோரும், பல திசைகளிலும் உள்ள முனிவர்களும் சூழ்ந்து போற்ற, அதிக உற்சாகமான மயிலின்மேல் ஏறி வருபவரே!
சேமநிதி எனக் கருதி தேவரீரை நாள்தோறும் வழிபடும் அடியவர்களை வாழவைத்த கருணைத்திறம் நீங்காத பெருமையில் மிக்கவரே!
பக்கத்தில் சூழ்ந்து உள்ள ஒழுக்கம் நிறைந்த மக்களும், பெண்டிரும், முறையான அலங்காரத்தோடு உடலை (பிணத்தை) மேன்மையான பட்டாடையால் மூடி, மாலை இட்டு, நீண்டதொரு பாடையில் கிடத்தி, அணைபவர்கள் எல்லோரும் கூடி அலை வீசும் நீர்நிலையில் சென்று முழுகி, நீண்ட துக்கமும் தீரவே, மாற்றார்கள் போல உடலின் மீது பொன்னிறமான நெருப்பை மூட்டும்படியாக, உயிரானது உடலில் இருந்து நீங்கும் முன்னரே, தேவரீரது அழகிய திருவடிகளை நாளும் தினமும் உள்ளன்புடன் ஓதுகின்ற அறிவு பெருகும் வாழ்க்கையைத் தந்து அருளுவீராக.
விரிவுரை
இக்கன் உகவே நாடு முக்கணர் ---
இக்கு – கரும்பு. இக்கன் – கரும்பினை வில்லாக உடைய மன்மதன்.
உகுதல் – உதிர்தல், சிதறுதல், சாதல்.
முக்கண்ணர் என்னும் சொல் முக்கணர் என வந்தது.
முக்கண் பரம்பொருள் இக்கனைப் பொடி ஆக்கிய வரலாறு
இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார்.
"தந்தையே! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.
சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒருகணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது.
இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவிக்கின்றனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபதுமன் தேவர்களை ஏவல்கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார். இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர்தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.
இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றால், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"
"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி
மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்
தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,
ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும் நீரார்"
"சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபதுமனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாகும். உலகம் எல்லாம் தொன்மைபோல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன்மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார். இதுவே செய்யத் தக்கது" என்றார்.
அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார். திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார். மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன? அருள் புரிவீர்" என்று வேண்டி நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை மணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.
"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்
மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,
அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே
எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்".
பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருமானது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா? மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.
"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுதும் உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் ஒருவரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".
"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".
"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"
"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"
"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"
"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"
"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"
"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் சிவபரம்பொருள் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"
"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"
"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யானை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள், உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"
"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."
இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடைய விண்ணவரிடம் கூறுவதைப் போல் என்னிடம் கூறினாய். நீ சொன்னவை எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவுபெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு யாராவது ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமம் ஆகாது. ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம், தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.
"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,
ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு
ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்
பாவம் அலது பழியும் ஒழியாதே".
பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபதுமனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்சபாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.
அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.
பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு. ஆராய்ந்து சொல்" என்றார்.
மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.
பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம். யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.
மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்திதேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்திதேவர் விடை கொடுத்தார்.
மன்மதன் திருநந்திதேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும். இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.
இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.
எட்ட அரிது ஓர் வேலை வற்ற, முதுசூர் மாள, எட்டி எதிரே ஏறும் இகல் வேலா ---
எட்ட அரிது ஆகிய வேலை - ஆழம் காண அரிதாகிய கடல்.
வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி மாறாத பெருமாளே ---
வைத்த நிதி – பிற்காலத்தில் உதவும்படியாக வைக்கப்பட்ட நிதி. தளர்வு உண்டாகும்போது அல்லது முதுமையில் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்வதற்காக சேர்த்து வைக்கும் பொருள். இளைத்தபோது உதவும் சேமநிதி. “உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு” என்று பாடுவார் வள்ளற்பெருமான். இறைவன் உயிர்களுக்குச் சேமநிதியாக உள்ளான். இறைவனைச் சேமநிதயாக எண்ணி அடியார்கள் வழிபடுகின்றார்கள். இறைவனை அடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்தவர்கள், உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.
“மாறாத" என்று அடிகளார் கூறுவது சிந்திக்கத் தக்கது. இறைவன் கருணையானது என்றும் மாறாத இயல்பு உடையது. “மாறு இல்லாத மாக் கருணை வெள்ளமே” என்பார் மணிவாசகப் பெருமான். “மாறாக் கருணை தரும் பாத வனசத் துணை” என்பார் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள். மனிதன் வைத்த அன்பு மாறும். இறைவன் திருக்கருணை என்றும் மாறாத இயல்பை உடையது என்பதால் “மாறாத" என்றார் அடிகளார். “அப்பா எனக்கு எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்பது வள்ளற்பெருமான் வாக்கு. “வச்ச பொருள் நமக்கு ஆகும் என்று” என்பது அப்பர் தேவாரம். “வைப்பு எனவே நினைந்து உனைப் புகழ்வேனா?” என்று பழநித் திருப்புகழில் அடிகாளர் பாடி உள்ளதும் அறிக.
"வைத்த நிதியே" மணியே என்று வருந்தி, தம்
சித்தம் நைந்து, சிவனே என்பார் சிந்தையார்,
கொத்துஆர் சந்தும் குரவும் வாரிக் கொணர்ந்து உந்து
முத்தாறு உடைய முதல்வர் கோயில் முதுகுன்றே.” --- திருஞானசம்பந்தர்.
"வைத்த பொருள்" நமக்குஆம் என்று சொல்லி மனத்து அடைத்து,
சித்தம் ஒருக்கி, சிவாயநம என்று இருக்கின் அல்லால்,
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள்பெறல் ஆமோ? அறிவு இலாப் பேதைநெஞ்சே. --- அப்பர்.
பல் அடியார் பணிக்குப் பரிவானை,
பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை,
செல் அடியே நெருங்கித் திறம்பாது
சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை,
"நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை"
நான்உறு குறை அறிந்து அருள் புரிவானை.
வல் அடியார் மனத்து இச்சை உளானை,
வலிவலம் தனில் வந்துகண் டேனே. --- சுந்தரர்.
"காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க".... --- திருவாசகம்.
தனித்துணை நீ நிற்க, யான் தருக்கித் தலையால் நடந்த
வினைத்துணை யேனை விடுதிகண்டாய், வினையேனுடைய
மனத்துணை யே,என்தன் வாழ்முதலே, எனக்கு "எய்ப்பில் வைப்பே!"
தினைத்துணை யேனும் பொறேன், துயர்ஆக்கையின் திண்வலையே. --- திருவாசகம்.
"உற்ற இடத்தில் உதவநமக்கு
உடையோர் வைத்த வைப்பு" அதனை,
கற்ற மனத்தில் புகும் கருணைக்
கனியை விடைமேல் காட்டுவிக்கும்,
அற்றம் அடைந்த நெஞ்சே! நீ
அஞ்சேல், என்மேல் ஆணைகண்டாய்,
செற்றம் அகற்றித் திறல்அளிக்கும்,
சிவாயநம என்று இடு நீறே. --- திருவருட்பா.
உலக வாழ்க்கையின் உழலும் என் நெஞ்சம்
ஒன்று கோடியாய் சென்று சென்று உலைந்தே,
கலக மாயையில் கவிழ்க்கின்றது, எளியேன்
கலுழ்கின்றேன், செயக்கடவது ஒன்று அறியேன்
"இலகும் அன்பர் தம் எய்ப்பினில் வைப்பே"
இன்ப வெள்ளமே, என்னுடை உயிரே,
திலகமே, திரு ஒற்றி எம் உறவே,
செல்வமே, பரசிவ பரம்பொருளே. --- திருவருட்பா.
பக்கம் உற நேரான மக்களுடனே மாதர்......... வேறு பொன் தீ இடவே ஆவி பிரியா முன் ---
உடம்பை விட்டு உயிர் பிரிந்ததும், மனைவியும் மக்களும், உற்றாரும், பிறரும் கூடி இருந்து அழுவர். பிணத்தை நன்றாக அலங்காரம் செய்வர். “மையினால் கண் எழுதி, மாலை சூட்டி” என்பார் அப்பர் பெருமான். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்றுப் பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்துவிடுகிறது. சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் திக்கு இரையாக்குவார்கள். அவ்வாறு உடலுக்குத் தீயினை மூட்டிய உறவினரும் மற்றோரும் தீட்டுப்போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள். அந்த நிலை வரும் முன்னர் இறைவனது திருவடியை நாள்தோறும் வழிபட்டு, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளவேண்டும்.
“ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிண மென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி கினைப் பொழிந் தார்களே.” -- திருமந்திரம்.
“ஊன்,ஆரும் உள்பிணியும் மானா கவித்த உடல்,
ஊதாரி பட்டு ஒழிய ...... உயிர்போனால்,
ஊரார் குவித்து வர,ஆஆ எனக் குறுகி
ஓயா முழக்கம் எழ ...... அழுது ஓய,
நானா விதச் சிவிகை மேலே கிடத்தி, அது
நாறாது, எடுத்து அடவி ...... எரிஊடே,
நாணாமல் வைத்து விட,நீறு ஆம் என் இப்பிறவி
நாடாது, எனக்கு உன்அருள் ...... புரிவாயே.” -- திருப்புகழ்.
கருத்துரை
முருகா! உடம்பில் இருந்து உயிர் நீங்குமுன், உமது திருவடியை வழிபட்டு நல்வாழ்வு பெற அருள் புரிவாய்.
No comments:
Post a Comment